ம்ஹும். மக்களுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லை போலிருக்கிறது. இரண்டாம் நாளுக்குரிய வழக்கமான கூட்டத்தில் பேர்பாதிக்கும் குறைவு. நேற்றைய பதிவில் நான் குறையாகச் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. டாய்லெட்டில் நாற்றமில்லை, கண்காட்சி அரங்க வளாகத்தின் நுழைவாயில் அருகே ஒரு குடிதண்ணீர் கேன். நிச்சயமாக பபாசி அமைப்பாளர்கள் வலைப்பதிவு வாசித்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமேபோல் சமூகப்பிரக்ஞை அவர்களுக்கும் இருக்கிறது. வாழ்க.
வலப்புறமிருந்து ஆறு வரிசைகளை இன்றைக்கு ஒரு கடை விடாமல் சுற்றிப்பார்த்தேன். பளிச்சென்று முதலில் கவனத்தில் பட்ட விஷயம், கருத்தைக் கவரும் விதத்தில் இந்த வருடம் பெரிய அளவில் புதுப் புத்தகங்கள் ஏதும் வரவில்லை என்பது. எப்போதும் ஏதாவது ஒரு குண்டு வெளியீட்டின் மூலம் சுண்டி இழுக்கும் விடியலின் இந்த வருட வெளியீடு ‘1989 – சமூக அரசியல் நிகழ்வுகள்’ என்னும் நூல். இட ஒதுக்கீடு, ஜெயலலிதா, கருணாநிதி என்று நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் விமரிசனங்கள். சற்றே புதுமையான முயற்சியாகத் தோன்றிய இந்த நூலை வாசிப்பது கொஞ்சம் கஷ்டமென்று தோன்றியது. நின்ற வாக்கில் பத்துப் பக்கம் படித்தேன். பிறகு ஆர். முத்துக்குமார் ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றான்.
போனவாரம் தினமலரில் ஒரு புத்தக மதிப்புரை வாசித்தேன். சரி, வாங்கலாம் என்று நினைத்து கண்ணதாசன் பதிப்பகத்துக்குச் சென்றபோது நூலின் பெயர் மறந்துவிட்டது. ஆனால் நூலாசிரியர் வீர் சங்வி. அது நினைவிருந்தது. வெளியிட்டது கண்ணதாசன் தான். அதிலும் சந்தேகமில்லை. அவர் பெயரைச் சொல்லி, அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்டேன். தெரியல சார், தேடிப்பாருங்க என்றார்கள். இருபது நிமிடங்களுக்கு மேல் தேடியும் அகப்படாமல், திரும்பவும் அங்கிருந்தவரிடம் வீர் சங்வியைப் பற்றி விசாரித்தபோது, அப்படியொரு பெயரையே கேள்விப்பட்டதில்லை என்றார். ஒரு கேட்லாக்கைக் கொடுத்து, இதுல இருக்கா பாருங்க என்றார். ம்ஹும். இல்லை. நிறைய அகதா கிறிஸ்டி ரக மொழிபெயர்ப்புகள் பளபளப்பாக மலைபோல் அடுக்கப்பட்டிருந்தன. அகதா கிறிஸ்டிக்குப் போட்டி ஆச்சார்ய ரஜனீஷ். இலக்கியம் நீங்கலாகப் பிற துறைகளில் மொழிபெயர்ப்புகள் சக்கைபோடு போடுகின்றன.
மாலை நேர மனமகிழ் விழாவில் இன்றைக்குப் பட்டிமன்றப் பேச்சாளர் கு. ஞானசம்பந்தன். வழக்கம்போல் மூன்று வரிக்கொரு ஜோக், இடையிடையே குற்றாலக் குறவஞ்சி, பெரும்பாணாற்றுப்படை, குடும்பக் கதைகள், குட்டி கிச்சுகிச்சுக்கள். ஒரு சாம்பிள்: அந்தக் கடை காப்பி ஏன் இத்தனை கறுப்பாக இருக்கிறது? அதுதான் பாலக் காட்டார் கடையாச்சே?
ம.தி.மு.க. ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் முருகேஷ், வெண்ணிலா, ந.வே. அருள், பழைய குமுதம் நண்பர்கள் சிலர் [அவர்களது ஸ்டாலில் ஞாநியின் புத்தகத்தை வெளியிட்டார்கள்], இயக்குநர் முருகதாஸ், இயக்குநர் சி.வி. ராஜேந்திரன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் – இன்றைய தரிசனம்.
வலையுலகம் அறிந்த நண்பர் அருண் வைத்தியநாதனை இன்று சந்தித்தேன். சிநேகா, பிரசன்னாவை வைத்து அச்சமுண்டு அச்சமுண்டு படம் எடுத்துக்கொண்டிருப்பவர். உட்கார இடமில்லாமல் ஒரு மரத்தடியில் நானும் பத்ரியும் அவருடன் நின்றபடி ஒரு மணிநேரத்துக்கு மேல் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் முகங்கள் + ஹாலிவுட் டெக்னீஷியன்கள் என்னும் புதிய கலவையில் உருவாகும் அவரது திரைப்படம் பற்றி நிறைய பேசினார். [இசை கார்த்திக் ராஜா] படமெடுப்பதில் ஹாலிவுட்காரர்கள் காட்டும் ப்ரொஃபஷனலிசம் பற்றி அவர் சொன்னதையெல்லாம் நமது மதிப்புக்குரிய இயக்குநர்கள் கேட்டிருக்கவேண்டும். என்னத்தைச் சொல்ல? கொஞ்சம் சினிமா உலகோடு தொடர்பு உள்ளவன் என்கிற வகையில் அருண் விவரித்த பல விஷயங்கள் எனக்கு மேஜிக்கல் ரியலிசமாகவே பட்டன.
ஒரு விஷயம். அருண் மாதிரி நல்ல கனவுகளுடன் சினிமாவுக்கு வருபவர்கள் குறைவு. இவர்கள் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றுகிறார்களோ இல்லையோ, அது இவர்களை மாற்றிவிடாமல் இருந்தால் சரி.
[பி.கு: இந்தப் பதிவு ஏன் நேற்றே எழுதப்படவில்லை, இன்று முதல் என்னுடைய புத்தகக் கண்காட்சிப் பதிவுகள் வருவதில் என்ன/ஏன் சிக்கல் என்பது போன்ற சில விவரங்களை அடுத்த பதிவில் வாசிக்கவும்.]
the episode on each day your visit in book exhibition is very nice to read. keep it up sir.