சர்வநாச பட்டன் – 2

அதிகாரம் 2: கடவுள்

  1. ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும்.
  1. அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு,  மாவை ஊற்ற வேண்டியதுதான்.
  1. மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம்.
  1. மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதற்கொரு ஆர்மி ஆரம்பித்துவிடுவேன்.
  1. எத்தனைக் கோடி சம்பாதித்து என்ன. வெங்கடாசலபதி உட்காருவதற்கு ஒரு நாற்காலி போட ஆந்திரத்தில் ஒரு நாதி கிடையாது.
  1. கடவுளே ஆனால்தான் என்ன. ஒன்று, பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு கல்யாணம் செய்திருக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி கான்செப்டைக் கடைப்பிடித்தால் ஊரில் ஒரு பயல் மதிப்பதில்லை.
  1. எப்படியும் தடுத்தாட்கொண்டுவிடுவான் என்பது நிச்சயமாகிவிட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் நான் தடுக்கி விழத் தயார். ஆனால் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி, கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்.
  1. நான் ஒரு சுத்த ஆத்திகன். கடவுளைத் தவிர மற்ற அத்தனை பேருக்கும் இது தெரியும்.
  1. கடவுளைப் பார்த்தேன் என்று கடைசியாகச் சொன்னது ராமகிருஷ்ண பரமஹம்சர்தான் என்று நினைக்கிறேன். எதற்கு ரிஸ்க் என்றுதான் பிறகு வந்தவர்களெல்லாம் நானே கடவுள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி