ஜந்து – புதிய நாவல்

பத்திரிகை உலகம் – பத்திரிகையாளர்களின்  வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை  சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே  கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான்.

ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை. எத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், எக்காலத்துக்கும் பொதுவானவை.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் தொடங்கி, இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையிலான காலக்கட்டம், தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு மிக முக்கியமான தருணம். அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்ததொரு கட்டமைப்பு,  தனது அனைத்து ஆற்றல்களையும் பெருமைகளையும் ஆளுமையையும் உதிர்த்துவிட்டு முற்றிலும் வேறொரு தோற்றம் கொள்ளத் தொடங்கியதன் அடிப்படைகளை இந்நாவல் ஆராய்கிறது.

ஜந்துவில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் அத்தியாயம்தோறும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். யாருக்குமே உருவம் கிடையாது. குணமோ, குணமற்ற தன்மையோ கிடையாது. பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மூன்றுமே நிகழும்போதே இல்லாமலும் போய்விடுகின்றன. நல்லது-கெட்டது என்ற இருமைக்கு வெளியேதான் அவர்கள் அத்தனை பேருமே உலவுகிறார்கள்.  பிரளயத்தில் படைப்பனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பின்பு புதையுண்ட நாகரிகத்தின் உயிருள்ள எச்சங்களாக அவர்களேதான் மீண்டெழுந்தும் வருகிறார்கள். எனவே ஒரு தோற்றத்தில் பிரம்மமாகவும் இன்னொரு தோற்றத்தில் கரப்பான்பூச்சியாகவும் காட்சியளிக்கிறார்கள்.

ஜந்துவின் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு தனிச் சிறுகதை போலவும் மொத்தமாகப் படித்து முடிக்கும்போது ஒரு நாவலாகவும் தோற்றமளிக்கிறது. வாசிக்கும்போது எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் அத்தியாயம்தோறும் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஜந்து ஒரு நகைச்சுவை நாவலல்ல. குரூரங்களின் மீது மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைக்கு அங்கதமே பொருத்தமான ஆயுதம் என்று மௌனமாக இது உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

பின்னுரையில் சி. சரவண கார்த்திகேயன்

‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்றஎண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப்பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப்புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் செயல்படுவது இக்கதையில்ரசிக்க ரசிக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை மிகைச் சம்பவங்களை, மீஆசாமிகளைநம்பகமாகச் சொன்னது ஒரு சாதனைதான்!

ஜந்து நாவல் ஆகஸ்ட் 12, 2024 அன்று வெளியாகிறது. முன்பதிவுச் சலுகை விலையில் வாங்க இங்கே செல்க.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி