கபடவேடதாரி – விமரிசனப் போட்டி FAQ

1. எங்கே படிப்பது?

bynge appல் வாசிக்கலாம். வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள். புதன் மற்றும் சனிக் கிழமைகளில் வெளியாகும்.

2. appஐ எங்கே பெறுவது?

இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. இலவசமாகத் தரவிறக்கலாம். கூகுள் அல்லது ஃபேஸ்புக் ஐடியின் மூலம் லாகின் செய்தால் போதுமானது. விரைவில் iOSக்கும் வந்துவிடும். (தொடர் முடிவடைவதற்குள்ளாகவாவது.)

3. விமரிசனம் எழுதும் போட்டி குறித்து?

50 முதல் 200 சொற்கள் வரை இருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் எழுத வேண்டும். 50 அத்தியாயங்கள் வெளியாகி முடியும்போது 50 விமரிசனங்கள் இருக்க வேண்டும். அப்போது போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

4. விமரிசனத்தை எங்கே எழுத?

bynge appல் கபடவேடதாரியின் ஒவ்வொரு அத்தியாயத்தின் அடியிலும் கமெண்ட்ஸ் பகுதியில் பிரசுரிக்கவும். பிறகு அதையே ஃபேஸ்புக்கில் #கபடவேடதாரி_போட்டி என்ற tag உடன் மறு பிரசுரம் செய்தால் போதும். என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் என்னை tag செய்தாலும் போதும்.

5. அனைத்து அத்தியாயங்களுக்கும் விமரிசனம் எழுதியே தீர வேண்டுமா? ஒன்றிரண்டு விடுபட்டால் என்ன?

விடுபட்டால் போட்டியில் சேராது. அவ்வளவுதான்.

6. விமரிசனங்களை எழுத கெடு நேரம் உண்டா?

அதெல்லாம் இல்லை. நாவல் தொடர் நிறைவடைவதற்குள் எப்போது வெளியானாலும் சம்மதமே.

7. எத்தனை விமரிசனங்கள் தேர்வாகும்? கொண்டாட்டம் என்ன?

சிறந்த பத்து விமரிசனங்கள் (10 X 50) தேர்வாகும். தேர்வாகும் பத்துப் பேரும் அடுத்த ஜனவரியில் நடைபெறும் கபடவேடதாரி புத்தக வெளியீட்டு விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள். நூலின் முதல் பிரதிகளை அவர்களே பெறுவார்கள். ஒரு மாலைப் பொழுதை விருந்தும் விசேஷமுமாக நாம் உரையாடிக் களிப்போம்.

8. மற்ற நாவல்களுக்கெல்லாம் இப்படி ஏதும் செய்யாமல் இதற்கு மட்டும் ஏன் இப்படி?

மற்றதெல்லாம் என் கதை. இது உங்கள் கதை.

9. நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் வெளியாவதை அறிவது எப்படி?

app download செய்திருந்தீர்கள் என்றால் அறிவிப்பு அதில் வரும். இல்லாவிட்டால் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமை பாருங்கள். அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது என் ஃபேஸ்புக் ப்ரொஃபைல். எப்படியும் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் இங்கே அறிவிப்பு வரும். எதுவுமே இல்லாவிட்டாலும் வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து கபடவேடதாரி உங்கள் நினைவில் நிற்பான். அவனே அழைத்துச் செல்வான். அதுவும் இல்லாவிட்டால் பிரச்னையே இல்லை. விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கலாம்.

10. வருகிற அத்தனைப் பேரின் அத்தனை விமரிசனங்களையும் எப்படித் தொகுப்பீர்கள்? சிரமம் இல்லையா?

ஆம். சிரமம்தான். போட்டியில் பங்குபெற ஆர்வமுள்ள நண்பர்கள் இதன் கமெண்ட்ஸில் பெயரைப் பதிவு செய்துவிட்டால் குறித்துக்கொள்வேன். கவனிக்க வசதியாக இருக்கும். பெயரைக் கொடுத்துவிட்டுப் பிறகு எழுதாமல் போனாலும் ஒன்றும் பிரச்னை இல்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி