சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்

உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி.
சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை உருவாக்கிய அக்கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுள் நண்பர் பி.கே. சிவகுமார் எழுதிய பதில் இன்னும் நினைவிருக்கிறது.
பிறகு அவருக்கு பதில் சொல்லும் விதமாக இன்னொரு கட்டுரையே எழுதவேண்டியதானது. நான் எழுதிய முதல் கட்டுரை, அதற்கு வந்த எதிர்வினைகள் இன்று என் கைவசம் இல்லை. கணேஷ் சந்திரா கொஞ்சம் மெனக்கெட்டால் சர்வரில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், சிவகுமாருக்கு நான் எழுதிய பதில் கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு பகுதி:
//தமிழ்நாட்டில் போராட்டமே கிடையாது; எப்படி நாவல் வரும் என்கிற அர்த்தத்தில் முன்பொருமுறை சுஜாதா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இது ஓரளவு உண்மைதான். ஆனால் முழு உண்மையல்ல. நாம் சுரணையற்றுப் போய்விட்டதால்தான் சமகால நடப்புகளில் பாதிப்புறாமல் இருக்கின்றோம். அறிவுத்துறை சார்ந்த, சமூக நடப்புகள் சார்ந்த, அரசியல் சார்ந்த, வரலாறு சார்ந்த எந்த ஒரு பதிவும் தமிழ்ப் புனைகதை வெளிக்கு அப்பால்தான் இன்றுவரை இயங்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மார்குவேஸ் தம் கதைகளில் சுட்டிக்காட்டும் லத்தீன் அமெரிக்க ஆட்சியாளர்களைப் போல நம்மால் ஒரு ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஏன் இதுவரை செய்யமுடியாமல் இருக்கிறது? கொலம்பிய ராணுவ ஜெனரல்களுக்கு ஜெயலலிதா எந்த வகையில் சளைத்தவர்? வடகிழக்கில் தினசரி பத்துப் பிணங்கள் விழுகின்றன. ஆனால் வீடுகளில் தினசரி சரோவின் மாமியார் செய்யும் கொடுமைகள்தான் பேசப்படுகின்றன. சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவந்தது நான் தான்; நான் தான் என்று ஆளாளுக்கு தினசரிகளில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் ஆண்குறிகளின் அளவுகளை விஸ்தாரமாக வருணித்தும், சக படைப்பாளிகளின் மனநோய் அளவு குறித்தும் மாந்திரிகக் கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித் தமிழ்ப் புனைவுவெளி பயனற்றுப் போய்க்கொண்டிருக்கிறபடியால், ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதைத் தேர்ந்தெடுக்கத் தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.//
சிறுகதைகளிலிருந்து கட்டுரை வடிவத்துக்குப் புலம் பெயர்வதை முன்வைத்துத் தொடங்கிய விவாதம் அது. மேற்குறிப்பிட்ட பத்தியில் இருக்கும் செய்திகளைக் கொண்டு இந்த விவாதம் நடைபெற்ற காலகட்டத்தை நீங்கள் யூகிக்கலாம்.
எனது கருத்தில் இப்போதும் பெரிய மாறுதல்கள் இல்லை என்றபோதும், தமிழில் சிறுகதை எழுதும் ஆர்வம் முற்றிலும் வற்றிவிடவில்லை என்பதை அவ்வப்போது கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நேற்றைய பயிலரங்கம் இன்னொரு முறை அதனை அழுத்தம் திருத்தமாக எனக்கு எடுத்துக் காட்டியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வலைப்பதிவாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். நான்கு அமர்வுகளிலும் கவனமாக ஈடுபட்டு, கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.
உண்மையில், சிறுகதை என்றில்லை; எந்த ஒரு கலை வடிவமும் தன்னியல்பாக வருவதுதான். சொல்லிக்கொடுப்பது என்பது அர்த்தமில்லாதது. ஆனால் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அது புதிதாக எழுத வருவோருக்கு ஓரெல்லை வரை நிச்சயம் உதவும். எனக்கு உதவியிருக்கிறது. இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாமிருதம் அவர்கள் எனக்கு எழுதிய பதினைந்து பைசா தபால் அட்டைகள், திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் குடியிருந்த சி.சு. செல்லப்பா, எழுதலாம் என்று வெறுமனே ஆசைப்பட்டு, ஏராளமான தயக்கங்களுடன் சந்திக்கப் போனவனைப் பொருட்படுத்தி அருகே உட்காரவைத்து அன்பாகப் பேசிய மொழிகள், எடுத்துக்கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்ன சில பழைய பிரதிகள், நான் சும்மா கிறுக்கிய குப்பைகளைக் கூடப் புகழ்ந்து பாராட்டி உற்சாகப்படுத்தி மேலும் மேலும் எழுதவைத்த கவிஞர் நா.சீ. வரதராஜனின் பெருந்தன்மை, நாவலின் கட்டுமானம் பற்றிய எனது குழப்பங்களைச் சொல்லிக் கேட்டபோது, ஒரு சிற்றிதழில் அப்படியே பிரசுரிக்கலாம் என்னும் தரத்தில் விரிவான விளக்கங்களுடன் கடிதம் எழுதித் தெளிவித்த ஜெயமோகனின் பிரியம் – கருத்தளவில் நாளை எத்தனை தூரம் பிரிந்து போக நேர்ந்தாலும் கடைசி வரை மறக்கமுடியாத விஷயங்களல்லவா?
இந்தப் பயிலரங்கில் என்னைத் தவிர பேசிய மூவரும் [பாஸ்கர் சக்தி, யுவன் சந்திரசேகர், சா. தேவதாஸ்] பொதுவாகத் தம்முடைய அனுபவங்களை முன்வைத்துப் பேச, நான் ‘வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?’ என்னும் தலைப்பில் பேசினேன். அறிவுஜீவிகளுக்கும் அறிவுஜீவிகளாக ஆக விரும்புவோருக்கும் பயிலரங்குக்கு முன்னமேயே இத்தலைப்பு பற்றிய சங்கடங்கள் இருந்தது தெரிந்தது. வெகுஜன இதழ்கள், வெகுஜன எழுத்தாளர்கள் என்றாலே ஓர் இளப்பமான பார்வை பார்ப்பதென்பதை [ஆனால் ரகசியமாக ரசித்துப் படித்துவிட்டு, ஆசாமி செத்த பிறகு உன்னைப்போல் ஒருவரையும் உலகெங்கும் கண்டதில்லை என்று விருத்தம் பாடிவிடுவார்கள்.] வழக்கமாகக் கொண்டோரைப் பல்லாண்டு காலமாக நான் சந்தித்தே வந்திருக்கிறேன். எனக்கு இது பற்றிய பெரிய வருத்தங்கள் எப்போதும் இருந்ததில்லை. எழுதிக்கொண்டிருப்போருக்கு விமரிசனங்கள் உதவிகரமாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் பிழையில்லை. அடித்து உட்கார வைப்பதே நோக்கம் என்றால் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவதுதான் நாம் உய்ய வழி. என் நண்பர் பத்ரி அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லுவார். தயவுசெய்து உங்கள் வலைத்தளத்தின் மேல் பகுதியில் பெரிதாக,  ‘நான் ஒரு வணிக எழுத்தாளன்’ என்று ஒரு பேனர் கட்டி வைத்துவிடுங்களேன் என்று. கொஞ்சம் டி. ராஜேந்தர் டைப் டைரக்டோரியல் டச்சாக இருக்குமே என்றுதான் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கிறேன். நம் எழுத்து நன்றாக இருக்கிறது, பத்திரிகைகள் விரும்பிப் பிரசுரிக்கின்றன, வாசகர்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்பது மகா பாவமா? அப்படியென்றால் நானொரு மகாபாவியாக இருப்பதில் மிகுந்த சந்தோஷமே.
குப்பைகள் எங்குமுண்டு. நல்ல சரக்குகளும் அவ்வண்ணமே. எந்த இடம் என்பதைக் காட்டிலும் நாம் எப்படி எழுதுகிறோம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் உருப்படும் வழி. எனது பேச்சிலும் நேற்று இதனைத்தான் வலியுறுத்தினேன். லா.ச.ரா., தி. ஜானகிராமன், அசோகமித்திரன், இ.பா., சுப்பிரமணிய ராஜு போன்றவர்கள் சிற்றிதழ்களில் எழுதியதைக் காட்டிலும் பெரும் பத்திரிகைகளில் எழுதியவை அநேகம். என்ன கெட்டுப்போய்விட்டார்கள்? நல்ல எழுத்து இன்னும் பத்து பேருக்குக் கூடுதலாகப் போய்ச்சேர்வது பாவகாரியமா? சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகளாகவே அறியப்பட்டு வந்த இன்றைய பல இலக்கியவாதிகள், ‘பிரபல இலக்கியவாதிகளா’க அடையாளம் காணப்பட்டது அவர்கள் வார இதழ்களில் எழுதத் தொடங்கிய பின்னரே அல்லவா?
புதிதாக எழுத வருவோருக்கு இந்த மயக்கங்கள் இல்லாதிருப்பது கொஞ்சம் நல்லது என்பது என் அபிப்பிராயம். அதைத்தான் சொன்னேன். நண்பர்கள் பெரும்பாலும் நல்ல கோணத்திலேயே எடுத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
நிகழ்ச்சிக்குப் பிறகு கொஞ்சநேரம் சில வலைப்பதிவாளர்களுடன் தனியே உரையாடிய அனுபவமும் பிடித்திருந்தது. புதிய இணைய எழுத்தாளர்களை இப்படி மொத்தமாக இதுவரை நான் சந்தித்ததே இல்லை. பொதுவாக போண்டா மீட்டிங்குகளைத் தவிர்ப்பவன் என்பதால் [நேற்றுகூட மதிய நேரத் தேநீர் இடைவேளையில் போண்டா இருந்ததென்று நினைக்கிறேன். தவிர்த்துவிட்டேன் என்பதறிக.] வலைப்பதிவாளர்களுடன் அறிமுகமில்லாதிருந்தது. ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக் கதைகளைப் படித்துவிட்டு அவரைப் பற்றிக் கச்சாமுச்சாவென்று அபிப்பிராயம் வைத்திருப்பவர்கள் அவரை நேரில் சந்திக்கவேண்டும். எத்தனை தன்மையான, எளிமையான, அன்பான மனிதராக இருக்கிறார்! வம்புப் பின்னூட்டங்களாலேயே பிரபலமான வால்பையனிடம் எத்தனை விஷயம் இருக்கிறது! நர்சிம் என்கிற இளைஞரின் செயல்வேகமும் ஆர்வப் பரபரப்பும் எழுத்து சார்ந்த அக்கறையும் வெகு நிச்சயமாக நாளைக்கு அவர் ஒரு நல்ல எழுத்தாளராகப் போகிறார் என்பதை எனக்கு எடுத்துக்காட்டின. எங்கோ தொலைதூரங்களில் இருந்து இந்தப் பயிலரங்குக்காகவே வந்திருந்த வெயிலான், பரிசல்காரன், இன்னும் பலபேர்.
[ஆனால் பெண்கள் வெகு குறைவு. மூன்று பேர்தான் கண்ணில் பட்டார்கள். அதிலொருவர் பழைய ராயர் க்ளப் மாமி. இன்னொருவர் எங்குமிருக்கும் மாகாளி பராசக்தி. மூன்றாவது பெண்மணியை நானறியேன்.] வெகுஜன இதழ்களில் குறைந்திருக்கும் நல்ல சிறுகதைகளின் எண்ணிக்கை இவர்கள்மூலம் இனி அதிகரிக்குமானால் முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகவே இருப்பேன். சிறுகதைதான் என்றில்லை. என்னவிதமாகவும் எழுதிப்பார்க்கும் ஆர்வம்தான் முதல் அவசியம்.
ஆனால் எழுத்துக்கு அடிப்படை, ஒழுக்கம். இந்த ஒழுக்கம், சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் பொதுவான தனிமனித ஒழுக்கங்களல்ல. எழுத்துக்கான ஒழுக்கம் என்பது  வேறு. உண்மையிலேயே எழுத்தில் மேன்மையுற்று, எழுத்தை ஆளும் அந்தஸ்துக்கு வருவதற்காகக் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாய ஒழுக்கங்கள்.
இதுபற்றியும் தனியே பேசிக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் சொன்னேன். அர்த்தமுடனும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் அழகாகவும் எளிமையாகவும் எழுதக்கூடியவர்களுக்கு இன்றைய தேதியில் தமிழ் ஊடகங்களில் கௌரவமான இடமும் ஏராளமான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. சரியான முயற்சியும் கடும் உழைப்பும் மட்டுமே தேவை. நான் எப்போதும் எல்லா இடங்களிலும் சொல்வதுபோல் கிழக்கில் அவர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் சொன்னேன். அபத்தப் பின்னூட்டங்களிலும் வெத்து கும்மிகளிலும் வீண் அக்கப்போர்களிலும் திறமைகளை வீணாக்காதீர்கள் என்று சொன்னேன்.
தீர்மானமான, தெளிவான, நல்ல முடிவோடு நேற்று விடைபெற்றுச் சென்ற அந்த இளைஞர்களில் பத்து பேராவது உத்வேகம் குன்றாமல் திரும்ப வருவார்கள் என்று நினைக்கிறேன்.
பின்குறிப்பு: நேற்றைய பயிலரங்கின் அனைத்து அமர்வுகளையும் பத்ரி ஒளிப்படமாக எடுத்திருக்கிறார். விரைவில் அதை இணையத்தில் ஏற்றி உரலளிப்பார். கிடைத்ததும் இங்கு தெரிவிக்கிறேன்.

உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை உருவாக்கிய அக்கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுள் நண்பர் பி.கே. சிவகுமார் எழுதிய பதில் இன்னும் நினைவிருக்கிறது.

பிறகு அவருக்கு பதில் சொல்லும் விதமாக இன்னொரு கட்டுரையே எழுதவேண்டியதானது. நான் எழுதிய முதல் கட்டுரை, அதற்கு வந்த எதிர்வினைகள் இன்று என் கைவசம் இல்லை. கணேஷ் சந்திரா கொஞ்சம் மெனக்கெட்டால் சர்வரில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.  தமிழ் சிறுகதைகள் தழைக்கவேண்டுமென்று சர்வலோக சஞ்சாரியுடன் இணைந்து தனித்தளமெல்லாம் நடத்துபவருக்கு இது ஒரு பெரிய காரியமும் இல்லை.

ஆனால், சிவகுமாருக்கு நான் எழுதிய பதில் கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு பகுதி:

தமிழ்நாட்டில் போராட்டமே கிடையாது; எப்படி நாவல் வரும் என்கிற அர்த்தத்தில் முன்பொருமுறை சுஜாதா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இது ஓரளவு உண்மைதான். ஆனால் முழு உண்மையல்ல. நாம் சுரணையற்றுப் போய்விட்டதால்தான் சமகால நடப்புகளில் பாதிப்புறாமல் இருக்கின்றோம். அறிவுத்துறை சார்ந்த, சமூக நடப்புகள் சார்ந்த, அரசியல் சார்ந்த, வரலாறு சார்ந்த எந்த ஒரு பதிவும் தமிழ்ப் புனைகதை வெளிக்கு அப்பால்தான் இன்றுவரை இயங்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மார்குவேஸ் தம் கதைகளில் சுட்டிக்காட்டும் லத்தீன் அமெரிக்க ஆட்சியாளர்களைப் போல நம்மால் ஒரு ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஏன் இதுவரை செய்யமுடியாமல் இருக்கிறது? கொலம்பிய ராணுவ ஜெனரல்களுக்கு ஜெயலலிதா எந்த வகையில் சளைத்தவர்? வடகிழக்கில் தினசரி பத்துப் பிணங்கள் விழுகின்றன. ஆனால் வீடுகளில் தினசரி சரோவின் மாமியார் செய்யும் கொடுமைகள்தான் பேசப்படுகின்றன. சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவந்தது நான் தான்; நான் தான் என்று ஆளாளுக்கு தினசரிகளில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் ஆண்குறிகளின் அளவுகளை விஸ்தாரமாக வருணித்தும், சக படைப்பாளிகளின் மனநோய் அளவு குறித்தும் மாந்திரிகக் கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித் தமிழ்ப் புனைவுவெளி பயனற்றுப் போய்க்கொண்டிருக்கிறபடியால், ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதைத் தேர்ந்தெடுக்கத் தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

சிறுகதைகளிலிருந்து கட்டுரை வடிவத்துக்குப் புலம் பெயர்வதை முன்வைத்துத் தொடங்கிய விவாதம் அது. மேற்குறிப்பிட்ட பத்தியில் இருக்கும் செய்திகளைக் கொண்டு இந்த விவாதம் நடைபெற்ற காலகட்டத்தை நீங்கள் யூகிக்கலாம்.

எனது கருத்தில் இப்போதும் பெரிய மாறுதல்கள் இல்லை என்றபோதும், தமிழில் சிறுகதை எழுதும் ஆர்வம் முற்றிலும் வற்றிவிடவில்லை என்பதை அவ்வப்போது கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நேற்றைய பயிலரங்கம் இன்னொரு முறை அதனை அழுத்தம் திருத்தமாக எனக்கு எடுத்துக் காட்டியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வலைப்பதிவாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். நான்கு அமர்வுகளிலும் கவனமாக ஈடுபட்டு, கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.

உண்மையில், சிறுகதை என்றில்லை; எந்த ஒரு கலை வடிவமும் தன்னியல்பாக வருவதுதான். சொல்லிக்கொடுப்பது என்பது அர்த்தமில்லாதது. ஆனால் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அது புதிதாக எழுத வருவோருக்கு ஓரெல்லை வரை நிச்சயம் உதவும். எனக்கு உதவியிருக்கிறது. இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாமிருதம் அவர்கள் எனக்கு எழுதிய பதினைந்து பைசா தபால் அட்டைகள், திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் குடியிருந்த சி.சு. செல்லப்பா, எழுதலாம் என்று வெறுமனே ஆசைப்பட்டு, ஏராளமான தயக்கங்களுடன் சந்திக்கப் போனவனைப் பொருட்படுத்தி அருகே உட்காரவைத்து அன்பாகப் பேசிய மொழிகள், எடுத்துக்கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்ன சில பழைய பிரதிகள், நான் சும்மா கிறுக்கிய குப்பைகளைக் கூடப் புகழ்ந்து பாராட்டி உற்சாகப்படுத்தி மேலும் மேலும் எழுதவைத்த கவிஞர் நா.சீ. வரதராஜனின் பெருந்தன்மை, நாவலின் கட்டுமானம் பற்றிய எனது குழப்பங்களைச் சொல்லிக் கேட்டபோது, ஒரு சிற்றிதழில் அப்படியே பிரசுரிக்கலாம் என்னும் தரத்தில் விரிவான விளக்கங்களுடன் கடிதம் எழுதித் தெளிவித்த ஜெயமோகனின் பிரியம் – கருத்தளவில் நாளை எத்தனை தூரம் பிரிந்து போக நேர்ந்தாலும் கடைசி வரை மறக்கமுடியாத விஷயங்களல்லவா?

இந்தப் பயிலரங்கில் என்னைத் தவிர பேசிய மூவரும் [பாஸ்கர் சக்தி, யுவன் சந்திரசேகர், சா. தேவதாஸ்] பொதுவாகத் தம்முடைய அனுபவங்களை முன்வைத்துப் பேச, நான் ‘வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?’ என்னும் தலைப்பில் பேசினேன். அறிவுஜீவிகளுக்கும் அறிவுஜீவிகளாக ஆக விரும்புவோருக்கும் பயிலரங்குக்கு முன்னமேயே இத்தலைப்பு பற்றிய சங்கடங்கள் இருந்தது தெரிந்தது. வெகுஜன இதழ்கள், வெகுஜன எழுத்தாளர்கள் என்றாலே ஓர் இளப்பமான பார்வை பார்ப்பதென்பதை [ஆனால் ரகசியமாக ரசித்துப் படித்துவிட்டு, ஆசாமி செத்த பிறகு உன்னைப்போல் ஒருவரையும் உலகெங்கும் கண்டதில்லை என்று விருத்தம் பாடிவிடுவார்கள்.] வழக்கமாகக் கொண்டோரைப் பல்லாண்டு காலமாக நான் சந்தித்தே வந்திருக்கிறேன். எனக்கு இது பற்றிய பெரிய வருத்தங்கள் எப்போதும் இருந்ததில்லை. எழுதிக்கொண்டிருப்போருக்கு விமரிசனங்கள் உதவிகரமாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் பிழையில்லை. அடித்து உட்கார வைப்பதே நோக்கம் என்றால் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவதுதான் நாம் உய்ய வழி. என் நண்பர் பத்ரி அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லுவார். தயவுசெய்து உங்கள் வலைத்தளத்தின் மேல் பகுதியில் பெரிதாக,  ‘நான் ஒரு வணிக எழுத்தாளன்’ என்று ஒரு பேனர் கட்டி வைத்துவிடுங்களேன் என்று. கொஞ்சம் டி. ராஜேந்தர் டைப் டைரக்டோரியல் டச்சாக இருக்குமே என்றுதான் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கிறேன். நம் எழுத்து நன்றாக இருக்கிறது, பத்திரிகைகள் விரும்பிப் பிரசுரிக்கின்றன, வாசகர்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்பது மகா பாவமா? அப்படியென்றால் நானொரு மகாபாவியாக இருப்பதில் மிகுந்த சந்தோஷமே.

குப்பைகள் எங்குமுண்டு. நல்ல சரக்குகளும் அவ்வண்ணமே. எந்த இடம் என்பதைக் காட்டிலும் நாம் எப்படி எழுதுகிறோம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் உருப்படும் வழி. எனது பேச்சிலும் நேற்று இதனைத்தான் வலியுறுத்தினேன். லா.ச.ரா., தி. ஜானகிராமன், அசோகமித்திரன், இ.பா., சுப்பிரமணிய ராஜு போன்றவர்கள் சிற்றிதழ்களில் எழுதியதைக் காட்டிலும் பெரும் பத்திரிகைகளில் எழுதியவை அநேகம். என்ன கெட்டுப்போய்விட்டார்கள்? நல்ல எழுத்து இன்னும் பத்து பேருக்குக் கூடுதலாகப் போய்ச்சேர்வது பாவகாரியமா? சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகளாகவே அறியப்பட்டு வந்த இன்றைய பல இலக்கியவாதிகள், ‘பிரபல இலக்கியவாதிகளா’க அடையாளம் காணப்பட்டது அவர்கள் வார இதழ்களில் எழுதத் தொடங்கிய பின்னரே அல்லவா?

புதிதாக எழுத வருவோருக்கு இந்த மயக்கங்கள் இல்லாதிருப்பது கொஞ்சம் நல்லது என்பது என் அபிப்பிராயம். அதைத்தான் சொன்னேன். நண்பர்கள் பெரும்பாலும் நல்ல கோணத்திலேயே எடுத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

நிகழ்ச்சிக்குப் பிறகு கொஞ்சநேரம் சில வலைப்பதிவாளர்களுடன் தனியே உரையாடிய அனுபவமும் பிடித்திருந்தது. புதிய இணைய எழுத்தாளர்களை இப்படி மொத்தமாக இதுவரை நான் சந்தித்ததே இல்லை. பொதுவாக போண்டா மீட்டிங்குகளைத் தவிர்ப்பவன் என்பதால் [நேற்றுகூட மதிய நேரத் தேநீர் இடைவேளையில் போண்டா இருந்ததென்று நினைக்கிறேன். தவிர்த்துவிட்டேன் என்பதறிக.] வலைப்பதிவாளர்களுடன் அறிமுகமில்லாதிருந்தது. ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக் கதைகளைப் படித்துவிட்டு /அல்லது கேள்விப்பட்டுவிட்டு அவரைப் பற்றிக் கச்சாமுச்சாவென்று அபிப்பிராயம் வைத்திருப்பவர்கள் அவரை நேரில் சந்திக்கவேண்டும். எத்தனை தன்மையான, எளிமையான, அன்பான மனிதராக இருக்கிறார்! வம்புப் பின்னூட்டங்களாலேயே பிரபலமான வால்பையனிடம் எத்தனை விஷயம் இருக்கிறது! நர்சிம் என்கிற இளைஞரின் செயல்வேகமும் ஆர்வப் பரபரப்பும் எழுத்து சார்ந்த அக்கறையும் வெகு நிச்சயமாக நாளைக்கு அவர் ஒரு நல்ல எழுத்தாளராகப் போகிறார் என்பதை எனக்கு எடுத்துக்காட்டின. எங்கோ தொலைதூரங்களில் இருந்து இந்தப் பயிலரங்குக்காகவே வந்திருந்த வெயிலான், பரிசல்காரன், இன்னும் பலபேர்.

[ஆனால் பெண்கள் வெகு குறைவு. மூன்று பேர்தான் கண்ணில் பட்டார்கள். அதிலொருவர் இப்போது பாப் கட்டிங்குக்கு மாறிவிட்ட பழைய ராயர் க்ளப் மாமி. இன்னொருவர் எங்குமிருக்கும் மாகாளி பராசக்தி. மூன்றாவது பெண்மணியை நானறியேன்.] வெகுஜன இதழ்களில் குறைந்திருக்கும் நல்ல சிறுகதைகளின் எண்ணிக்கை இவர்கள்மூலம் இனி அதிகரிக்குமானால் முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகவே இருப்பேன். சிறுகதைதான் என்றில்லை. என்னவிதமாகவும் எழுதிப்பார்க்கும் ஆர்வம்தான் முதல் அவசியம்.

ஆனால் எழுத்துக்கு அடிப்படை, ஒழுக்கம். இந்த ஒழுக்கம், சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் பொதுவான தனிமனித ஒழுக்கங்களல்ல. எழுத்துக்கான ஒழுக்கம் என்பது  வேறு. உண்மையிலேயே எழுத்தில் மேன்மையுற்று, எழுத்தை ஆளும் அந்தஸ்துக்கு வருவதற்காகக் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாய ஒழுக்கங்கள்.

இதுபற்றியும் தனியே பேசிக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் சொன்னேன். அர்த்தமுடனும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் அழகாகவும் எளிமையாகவும் எழுதக்கூடியவர்களுக்கு இன்றைய தேதியில் தமிழ் ஊடகங்களில் கௌரவமான இடமும் ஏராளமான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. சரியான முயற்சியும் கடும் உழைப்பும் மட்டுமே தேவை. நான் எப்போதும் எல்லா இடங்களிலும் சொல்வதுபோல் கிழக்கில் அவர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் சொன்னேன். அபத்தப் பின்னூட்டங்களிலும் வெத்து கும்மிகளிலும் வீண் அக்கப்போர்களிலும் திறமைகளை வீணாக்காதீர்கள் என்று சொன்னேன்.

தீர்மானமான, தெளிவான, நல்ல முடிவோடு நேற்று விடைபெற்றுச் சென்ற அந்த இளைஞர்களில் பத்து பேராவது உத்வேகம் குன்றாமல் திரும்ப வருவார்கள் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு: நேற்றைய பயிலரங்கின் அனைத்து அமர்வுகளையும் பத்ரி ஒளிப்படமாக எடுத்திருக்கிறார். விரைவில் அதை இணையத்தில் ஏற்றி உரலளிப்பார். கிடைத்ததும் இங்கு தெரிவிக்கிறேன்.

Share

17 comments

  • உபயோகமாய் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது என்ற மன நிறைவு பதிவில் தெரிகிறது இன்னும் வரப்போகும் வீடியோ ஆடியோ பதிவுகளினை ஆர்வத்துடன் எதிர்நோக்கி…!

    வெண்பா பட்டறை எப்போ…? :))

  • ‘எழுதத் தூண்டுகையில் மட்டுமே எழுதுவேன்…’
    ‘வேலைப் பளு அதிகமா இருக்கு..’
    ‘நேரமே கிடைக்கறதில்ல…’

    இதுபோன்றும், இன்னபிற காரணங்களையும் சொன்ன, சொல்லிக் கொண்டிருக்கிற எனக்கு உங்கள் பேச்சில் பல பதில்கள் கிடைத்தது.

    //தீர்மானமான, தெளிவான, நல்ல முடிவோடு நேற்று விடைபெற்றுச் சென்ற அந்த இளைஞர்களில் பத்து பேராவது உத்வேகம் குன்றாமல் திரும்ப வருவார்கள் என்று நினைக்கிறேன்//

    உண்மை. மற்ற ஒன்பது பேருக்கும் என் வாழ்த்துகள்!

  • //அக்கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுள் நண்பர் பி.கே. சிவகுமார் எழுதிய பதில் இன்னும் நினைவிருக்கிறது. //

    ஐயா, எனக்கே மறந்துவிட்டது. நினைவுபடுத்தியமைக்கு நன்றி. இப்போதும் எப்போது இது நடந்தது என்று நினைவுக்கு வரவில்லை. வயதாவதின் விளைவு!? என்ன பதில் எழுதினேன் என்றும் இரண்டு வரிகள் எழுதியிருந்தால், என் நிலைப்பாட்டில் இப்போது ஏதும் மாற்றமிருக்கிறதா என்று பார்த்திருக்க உதவியிருக்கும். முடிந்தால் நான் என்ன சொன்னேன் அப்போது என்றும் குன்ஸாகவேனும் எழுத வேண்டுகிறேன். நன்றி. – பி.கே. சிவகுமார்

    • டியர் சிவகுமார்

      எனக்குக் கருத்தைத் தவிர வரிகள் சரியாக நினைவில்லை. ஆனால் எப்போதும்போல் எதிர்த்துத்தான் எழுதியிருந்தீர்கள் 😉 கொஞ்சம் பொறுங்கள். கணேஷ் அல்லது பாபா உதவுவார்கள்!

  • /எழுத்துக்கான ஒழுக்கம் என்பது வேறு. உண்மையிலேயே எழுத்தில் மேன்மையுற்று, எழுத்தை ஆளும் அந்தஸ்துக்கு வருவதற்காகக் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாய ஒழுக்கங்கள்./

    என்னவென்று சொல்லுங்கள்.

  • என்னை நினைவு படுத்தி உங்கள் வலையில் எழுதியதற்கு ரொம்ப நன்றி ஐயா!

    உங்களுடன் நடந்த உரையாடலும், அந்த பயிற்சி அரங்கமும் எனக்கு உள்ளுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை!

    விரைவில் நல்ல சிறுகதைகளுடன் உங்களை சந்திக்கிறேன்!

  • மாகாளியா..சரி..;)))) குருவே சரணம் ;))))

    நல்ல சிறுகதைகள் மற்றும் கவிதைகளுடன்:))))) உங்களை சந்திக்கிறேன்!

  • அபத்தப் பின்னூட்டங்களிலும் வெத்து கும்மிகளிலும் வீண் அக்கப்போர்களிலும் திறமைகளை வீணாக்காதீர்கள் என்று சொன்னேன்.

  • //கடிதம் எழுதித் தெளிவித்த ஜெயமோகனின் பிரியம்

    இணையத்தில் இது இருக்கிறதா? உரல் தந்து உதவ முடியுமா? நன்றி

    • திரு ஹரி, அந்தக் கடிதப் பரிமாற்றங்களெல்லாம் எனக்கு [அநேகமாக அவருக்கும்] இணையப் பரிச்சயம் உண்டாவதற்கு வெகு காலம் முன்னால் நடந்தவை. அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

  • நீங்கள் முன்பு போல சிறுகதைகளும், நாவல்களும் எழுதலாமே ராகவன்… வரலாற்றில் மட்டும் நிறைய கவனம் செலுத்துவது ஞாயமா?

    அன்புடன்,
    கிருஷ்ணப் பிரபு,
    சென்னை

  • //எந்த ஒரு கலை வடிவமும் தன்னியல்பாக வருவதுதான். சொல்லிக்கொடுப்பது என்பது அர்த்தமில்லாதது. ஆனால் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அது புதிதாக எழுத வருவோருக்கு ஓரெல்லை வரை நிச்சயம் உதவும்//

    /எழுத்தில் மேன்மையுற்று, எழுத்தை ஆளும் அந்தஸ்துக்கு வருவதற்காகக் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாய ஒழுக்கங்கள்.//

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி