நன்றி, திரு. ஹெமிங்வே!

எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே:

  • எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.
  • உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்று தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று காலியாகும்வரை காத்திருக்கக்கூடாது. சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போதே, சரியான ஓர் இடத்தைத் தொட்டவுடன், இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். நிறுத்தியபின் அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. இவ்வாறு எழுதினால் நீ எழுதுவது சுவாரசியமாக இருக்கும்.
  • எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்கமுடியுமோ அதையெல்லாம் நீக்கிவிடவேண்டும்.
  • எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால் சோர்வடைந்துவிடக் கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டும். சமாளிக்க முடியும்.  A farewell to armsன் முதல் பகுதியை நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி எழுதியிருப்பேன்.  முதல் தடவை எழுதுவதெல்லாமே குப்பையாகத்தான் இருக்கும். திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய வேண்டும்.
  • உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தையதிலிருந்து மேம்பட்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.
  • உங்களுக்குத் தெரியாதது பற்றி எழுதக்கூடாது. நீங்கள் எழுதக்கூடிய ஊரைப்பற்றியும் மனிதர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.  அவ்வாறில்லையெனில் உங்கள் கதை வெற்றுவெளியில் நடப்பதுபோலாகிவிடும். எழுத எழுத புதிய விஷயங்களைத் தானே கண்டுகொள்வீர்கள்.
  • மேலான படைப்புகளெல்லாம் முன் திட்டங்களின்றித் தொடங்கப்பட்டவையே.
  • எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது.அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால், மறைந்த எழுத்தாளர்களுடன் தான் போட்டியிடவேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லமுடியும்.
  • இதுவரை எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒருமுறையேனும் வாசித்துவிடுங்கள். என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உண்டானால், முன்னதைவிட சிறப்பாக எழுதமுடியாத பட்சத்தில் அதை விட்டுவிடவேண்டும்.
  • கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் திருடப்படுவதை சிறப்பாக செய்யமுடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும்.
  • யாருடைய பாணியையும் பின்பற்றாதீர்கள். உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமானால், அது அதிர்ஷ்டமே.
  • நிறைய எழுதவேண்டுமானால் தீவிரம் முக்கியம். கலையின் உச்சம், புனைவில்தான் உள்ளது.

– எர்னஸ்ட் ஹெமிங்வே

Share

14 comments

  • ஹெமிங்வேயுடைய “கிழவனும் கடலும்” மொழிப்பெயர்ப்பு படித்துள்ளேன். மற்றப் புத்தகங்களை வாசிக்கவேண்டும். எழுத்தாளர்களுக்கு அவர் தந்திருக்கும் இந்த அறிவுரைகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்படவேண்டியது. இம்மாதிரி வேறு பிரபல எழுத்தாளர்களின் டிப்ஸ் இருந்தாலும் போடுங்கள்.

  • பாரா,

    நிச்சியம் உபயோகமான தொகுப்பு. நன்றிகள். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் இந்த விதிகளை (அல்லது சிலவற்றை) நீங்கள் பின்பற்றுகிறீர்களா? ஹெமிங்க்வே சொல்லியுள்ளவை இலக்கியவாதிகளுக்கு மட்டும்தானா? எழுத்தார்வம் கொண்டு பல துறைகளில் எழுதுபவர்கள் அனைத்துப்பேருக்குமே பொருந்துமா? நமது தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இவ்வாறு அடுத்தத் தலைமுறைகளுக்கு உதவும்படியாக ஏதாவது குறிப்புகள் எழுதியிருக்கின்றார்களா? அறிய ஆவலாயுள்ளேன். நன்றி.

  • அன்புள்ள கேஆரெஸ்,

    எழுதத்தொடங்கிய காலத்தில் பெரியவர்கள் யார் என்ன சொன்னாலும் ஆமென் என்று கேட்டுக்கொண்டு கடைப்பிடிக்கப் பார்த்திருக்கிறேன். என்னுடைய இப்போதைய உண்மையான கருத்தைக் கேட்பீர்களானால், போதனைகளால் பயனில்லை. எழுத்து என்பது கடுமையாக வேலை வாங்கும் ஒரு தொழில்நுட்பம். அந்தத் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட நிலையில் கலை கூடுமானால் சந்தோஷம். சாத்தியமாகாவிட்டாலும் ஒரு நேர்மையான முயற்சி தரக்கூடிய சகல சந்தோஷங்களையும் அது தரவே செய்யும். திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பது என்கிற ஒரு விஷயத்தை மட்டும் மாற்றுக்கருத்தின்றி ஏற்கலாம். எனக்கு இப்போதும் அது ஒரு சுகமான விளையாட்டு. எதையாவது எழுத ஆரம்பித்து, பாதியில் நிறுத்த நேர்ந்தால் (எத்தனை பக்கங்களானாலும் சரி. சமயத்தில் 100 பக்கங்கள்கூட!) மீண்டும் முதல் வரியிலிருந்து புதிதாக எழுதத் தொடங்குவது என்பது இன்றளவும் நான் கடைபிடிக்கும் ஒரு வழக்கம். இதில் எனக்குச் சிரமம் ஏதுமில்லை. முழுக்க எழுதி முடித்தபின் அனைத்து வர்ஷன்களையும் எடுத்து வைத்துக்கொண்டு எல்லாவற்றிலுமுள்ள நல்ல வரிகளை இணைத்து புதிய – ஃபைனல் வர்ஷன் உருவாக்குவது மேலும் கிளர்ச்சி தரக்கூடிய ஓர் அனுபவம்.

    மற்றபடி ஹெமிங்வே நான் எப்போதும் ரசிக்கும் எழுத்தாளர். இது எப்போதோ எடுத்து வைத்த குறிப்பு. யாருக்காவது பிடித்திருக்குமானால் சந்தோஷம்.

  • //சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போதே, சரியான ஓர் இடத்தைத்
    தொட்டவுடன், இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று
    தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். நிறுத்தியபின்
    அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. இவ்வாறு எழுதினால் நீ
    எழுதுவது சுவாரசியமாக இருக்கும்//

    மேற்கூறிய வரிகளில் ஏன் சுவாரசியமாக எழுதிக் கொண்டிருப்பதை
    நிறுத்த சொல்கிறார் என்பது விளங்கவில்லை. உவமைகள் கொடுத்து
    விளக்கனால் பயனுடையதாக இருக்கும்.

    நன்றி.

  • அருமையான குறிப்புகளுக்கு நன்றி…

    //எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்கமுடியுமோ அதையெல்லாம் நீக்கிவிடவேண்டும். //

    இப்படி செய்ததால், பல நேரங்களில் ஒரு சிறிய கதைக்கு பெரிய விளக்கம் கொடுக்கும்படி ஆகிவிடுகிறது…:-((

  • இந்த வலைத்தளத்தின் நடு column (content column), IEல் கீழே இறங்கித் தெரிகிறது. கீழே என்றால், கீஈஈஈஈஈஈழே. இலையின் வலது மூலையில் பச்சடி, இடது மூலையில் ஊறுகாய், கீழ்ப்பகுதியில் சாதம் மாதிரி.

  • சுக்ருபா,

    இத்தளத்தின் தொழில்நுட்ப நிர்வாகி கணேஷ் சந்திரா, ஐ.ஈ.யில்தான் இதனைப் பார்க்கிறார். ஏதாவது பிரச்னை என்றால் சரி செய்திருக்கக்கூடும். நான் ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிப்பவன். எனக்குப் பிரச்னை இல்லை. கூகுள் க்ரோமிலும் சரியாகவே உள்ளது. எதற்கும் உன்னுடைய செட்டிங்ஸை ஒருமுறை சரிபார்த்துவிடேன். ஸ்கிரீன் ரெஸொல்யூஷன் ஆயிரத்தி இருவத்தி நாலுக்கு எழுநூற்று அறுபத்தெட்டு பிக்சல்கள் இருக்கிறதா என்று பார்! 😉

  • God promiseஆ IEல சரியா தெரியல. உபுண்டு, bon echoல வெறும் resolutionல கூட பார்த்துட்டேன். நல்லா தெரிஞ்சுது.

  • Just saw the Hemingway matter.( Actually I do not know how came to stumble into your website!)
    This mornign I came across another interesting matter about his book “Men Without Women” ( Published in 1927 by Scribner’s, USA)
    A copy of this book – original price $2 -was sold for $8000 by an used book dealer last month!
    The same book is priced at $25,000 by another dealer since it has Hemingway’s signature!

    I hope to visit your website now and then.

    Kadugu

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி