முடிந்தது

பிரபாகரன் - தோற்றம் - 26 நவம்பர் 1954; மறுதோற்றம் - 18 மே 2009பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை. ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள் நகர்ந்தாலும் அடிப்படையில் ஒரு நம்பிக்கை அனைவருக்குமே மிச்சமிருந்தது. எப்படியாவது பிரபாகரன் தனது ‘தனி ஈழம்’ என்னும் லட்சியத்தில் வெற்றி கண்டுவிடுவார் என்கிற நம்பிக்கை.

அந்த நம்பிக்கை இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது. தனது கடைசிச் சொட்டு எதிர்பார்ப்பை மிச்சம் வைத்து, ஆயுதங்களைக் கீழே போட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேச்சுக்கு அழைத்த பிரபாகரனும் அவரது படையினரும் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இருபத்தியாறு ஆண்டு கால யுத்தம். இனி ஒன்றுமில்லை. ஈழம் என்பது துக்கம் சுமந்த கனவாக இனி தமிழர்களின் மனங்களில் மட்டும் வாழும்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே காத்திருந்திருக்கிறார்கள். கடந்த ஞாயிறு மதியம் பிரபாகரன் மரணம் என்று முதலில் ஒரு வதந்தியை வெளியே அனுப்பிவிட்டு இறுதித் தாக்குதலைத் தொடங்கிய இலங்கை ராணுவத்துக்கு அதிக அவகாசம் வேண்டியிருக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான சதுர கிலோமீட்டர்களை அங்குலம் அங்குலமாகக் கடந்து அவர்கள் அப்போது ஒரு கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நெருங்கிவிட்டிருந்தார்கள்.

யாரும் எங்கும் தப்பிக்க முடியாத சூழ்நிலை. திங்கள் அதிகாலை அப்படித் தப்பிக்க நினைத்த பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆண்டனியின் உடல் கரயாமுள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், புலிகளின் அமைதிப் பேச்சுவார்த்தைப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூத்த கமாண்டர் ரமேஷ், காவல்துறைத் தலைவர் இளங்கோ, உளவுப்பிரிவைச் சேர்ந்த கபில், சார்ல்ஸ் ஆண்டனியின் நெருங்கிய சகா என்று சொல்லப்படும் சுதர்மன் என்று அடுத்தடுத்து இறந்துகொண்டிருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்க, ஞாயிறு மாலை தனது சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் மூலம் ‘ஆயுதங்களைக் கீழே போடுகிறோம். பேச்சுவார்த்தைக்கு உதவுங்கள்’ என்று உலக நாடுகளை நோக்கி பிரபாகரன் விடுத்த இறுதி வேண்டுகோள் தன் அர்த்தம் இழந்து, இறந்து போனது.

தன் மூத்த மகன் இறந்ததற்கோ, ஆண்டாண்டு காலமாகத் தன் நிழல்போல் உடனிருந்து பணியாற்றிய தளபதிகள் இறந்துகொண்டிருந்ததற்கோ நின்று ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமுடியாத அவசரத்தில் இருந்த பிரபாகரன், திங்கள் அன்று காலை தான் இறுதியாக வெளியேற ஒரு முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் திருகோணமலைக்கு ஏற்கெனவே தப்பிச் சென்றுவிட்டார், கிழக்கு மாகாணத்தில் உள்ள யால காட்டுப்பகுதியில் பத்திரமாக இருக்கிறார், மியான்மருக்குச் சென்று இரு வாரங்கள் ஆகிவிட்டன என்பது போன்ற வதந்திகள் அனைத்தும் தம் அர்த்தத்தை இழந்தன. பிரபாகரன் இறுதிவரை யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்தில் மட்டுமே இருந்திருக்கிறார். நேரடியாக யுத்தத்தில் பங்குகொண்டு, படையை வழிநடத்தியிருக்கிறார். இறுதிக் கணம் வரை போராடித்தான் இறந்திருக்கிறார்.

இனி அங்கே இருக்கவே முடியாது என்னும் நிலை வந்து, வெளியேற முடிவு செய்தபோது காலம் கடந்து விட்டிருந்தது. அது அத்தனை எளிய செயலாக அப்போது இல்லை.  மிக நெருக்கத்தில் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டிருந்த நிலையில், அதிரடியாக அவர்களுக்கு நடுவே புகுந்து வெளியேறினால் மட்டுமே உண்டு. மிக மிக அரிய வாய்ப்பு அமைந்தால் மட்டுமே தப்பிக்க இயலும். அநேகமாக அப்படியொரு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் அம்முயற்சியை அவர் மேற்கொள்ளத் துணிந்திருக்கிறார்.

ஒரு சிறு வேன், ஒரு ஆம்புலன்ஸ் வண்டி. ஒன்றில் பிரபாகரனும் பொட்டு அம்மான் மற்றும் கடற்புலித் தளபதி சூசை ஆகியோர் ஏறிக்கொள்ள, இன்னொன்றில் வேறு சில முக்கியத் தளபதிகள் ஏறினார்கள்.

வெறும் இருநூறு மீட்டர் தொலைவில் வந்துவிட்ட ராணுவத்தைப் பிளந்துகொண்டு வண்டி தப்பித்துச் சென்றாகவேண்டும் என்பது திட்டம். அப்படித் தப்பிக்கும்போதுதான் ராணுவம் சுட்டது. ஆம்புலன்ஸில் இருந்த பிரபாகரன், இதர தளபதிகள் அத்தனை பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள். இது வந்த செய்தி.

கொழும்பு குதித்துக் கூத்தாடிக்கொண்டிருக்கிறது. வீதியெங்கும் பட்டாசு வெடிச்சத்தம். எங்கு பார்த்தாலும் சிங்கள – பவுத்தக் கொடிகள் படபடக்கின்றன. காட்சிகள் துண்டுத்துண்டு சலனப்படங்களாக இணையத்திலேயே கிடைக்கின்றன. எங்கும் கொலைவெறி சந்தோஷக் கூக்குரல். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட செய்தி வெளியான பிறகும் இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அதனை வெளியிடத் தாமதித்துக்கொண்டிருந்ததற்கு ஒரே காரணம்தான்.  அதிபர்தான் அறிவிக்கவேண்டும்.

இருபத்தியாறு வருட கால யுத்தத்தின் இறுதிக் கணங்களில், தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டு,  போர் நிறுத்தம் செய்கிறோம் என்று கடந்த ஞாயிறன்று தான் அறிவித்தது நகைப்புக்குரியதாகவே கருதப்படும் என்பது பிரபாகரனுக்குத் தெரியும். ஆனாலும் கேட்கவேண்டியது அவர் கடமை. ஓர் இனத்தின் பிரதிநிதியாக அவர் போரிட்டுக்கொண்டிருந்தார். இதுநாள் வரை இறந்தவர்கள் எண்ணிக்கையைக் கழித்துவிட்டாலும், ஈழத்தில் இப்போதிருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழ்கிற சுமார் முப்பத்தி ஐந்து லட்சம் தமிழர்களுக்கும் அவர் ஒருத்தர்தான் முகம்.

பிரபாகரனை விரும்புகிறவர்கள், வெறுப்பவர்கள், விமரிசிப்பவர்கள், ஏற்பவர்கள், மௌனம் காப்பவர்கள் – எத்தனை விதமானவர்களாக அவர்கள் இருந்தாலும் இதனை யாரும் நிராகரிக்க மாட்டார்கள். பிரபாகரனும் அவரது போராட்டமும் இல்லாதிருந்தால் ஈழம் குறித்து இன்று உலகம் சற்றும் சிந்தித்திருக்காது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மாபெரும் மனித இனப் படுகொலைகள் மிக ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வடக்கு, கிழக்கு மாநிலங்கள் திறந்தவெளி சவ அடக்க மைதானங்களாகியிருக்கும்.

ராஜபக்‌ஷே இப்படியொரு மகத்தான தருணத்தைத் தன் வாழ்நாளில் ஒருபோதும் சந்தித்திருக்க முடியாது. ஜி 11 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜோர்டன் சென்றிருந்தவர் கடந்த ஞாயிறு காலை அவசர அவசரமாக கொழும்பு திரும்பி, விமானத்தை விட்டு இறங்கியதுமே மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அன்று மாலையே நாட்டு மக்களுக்கு நற்செய்தி உரையாற்றுவதாக அறிவித்தார். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டதாக அப்போதே பரவியிருந்த வதந்தி அவருக்கும் கிடைத்திருந்தது. அது வதந்திதான் என்று தெரிந்ததும்தான் உரையைச் செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிப்போட்டார்.  வதந்தியை உண்மையாக்கிவிடும் வேட்கையுடன் ராணுவம் மிகத் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது.

தாக்குதல் மகத்தான வெற்றி. ஆசைப்பட்டபடியே பிரபாகரனைக் கொன்றுவிட்டார்கள். இனி ஈழப் போராட்டம் என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. போராட யார் இருக்கிறார்கள் அல்லது யார் முன்வருவார்கள்?  பல்லாண்டு காலம் பாடுபட்டு விடுதலைப் புலிகள் போராடி வென்று வைத்திருந்த தமிழர் நிலப்பகுதிகள் அனைத்தையும் ஓரிடம் மிச்சமில்லாமல் பிடித்துவிட்டார்கள்.

நிலம் போனாலும் போராளிகளாவது உயிர் பிழைக்கலாமே என்றுதான் புலிகள் தரப்பில் இறுதி முயற்சியாகச் சில தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிலரேனும் வெளியேறிப் போக வழி கிட்டுமா என்று பார்க்கிற முயற்சி அது.

எதுவும் பலனில்லாமல் போய்விட்டது. தீவிரவாதத்தின் பிடியிலிருந்து தேசத்தை விடுவித்துவிட்டதாக அரசும் ராணுவமும் உரத்துச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், எடுக்க ஆளில்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர் உடல்கள் வன்னியில் வானம் பார்த்துக் கிடக்கின்றன. இடைவிடாது வெடித்த பீரங்கிகளின் சத்த எதிரொலி அடங்கியபாடில்லை. எங்கும் அழுகை, எங்கும் ஓலம். திடீர் திடீரென்று வானளாவ எழுந்த தீப்பிழம்பும் பின்னணியில் வெடிக்கிற குண்டுச் சத்தங்களும். ஆங்காங்கே கை உடைந்து, கால் உடைந்து, கட்டுகளுடன், ரத்தமுடன் தூக்கிச் செல்லப்படும் மனித உடல்கள். ஞாயிறன்று முல்லைத் தீவிலிருந்து  ஒளிபரப்பு செய்த இலங்கைத் தொலைக்காட்சி ரூபவாஹினி காட்டிய காட்சிகள் இந்நூற்றாண்டின் மகத்தான பேரவலம்.

லட்சக்கணக்கில் பலிவாங்கி ஒரு முடிவைத் தொட்டிருக்கிறது இந்த யுத்தம். கொலைகள் பற்றிக் கேட்டால் அமெரிக்காவின் உலகு தழுவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத் தனது செயலை முன்னிறுத்தித் தப்பித்துக்கொள்வது ராஜபக்‌ஷேவுக்கு மிக எளிய செயல். அப்படிக் கேட்கக்கூட ஆளில்லாத அளவுக்குப் புலிகள் தமது இறுதிக் காலத்தில் உலகெங்கும் ஆதரவை இழந்திருந்ததுதான் இதில் மாபெரும் வலி தரக்கூடிய அம்சம்.

எங்கே சறுக்கினார்கள்? எந்தக் கணக்கு தவறாகிப் போனது?

நிதானமாகப் பிறகு அலசி ஆராயலாம். ஆனால் கிளிநொச்சி விழுந்த சமயத்தில் போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருந்ததையும் புலிகள் அப்போது ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொள்ளாததையும் மட்டுமேனும் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. இன்றைக்குப் பிரபாகரன் விடுத்த அமைதிப் பேச்சு அழைப்பை அன்றைக்குச் செய்திருந்தால் குறைந்தது இன்னும் சில ஆயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும்.

நிகழ்ந்ததை மீள்பார்வை பார்க்கும் தருணம் இதுவல்ல. இதற்கு முன்பும் பிரபாகரன் இறந்துவிட்டதாக இருமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்கத்துக்குள் கலவரம், மாத்தையா பிரபாகரனைக் கொன்றுவிட்டுத் தலைவராகிவிட்டார் என்று முன்பொரு சமயம் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். வவுனியாவுக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்னும் கிராமத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவே செய்தி வந்தது. பிறகு 2004ம் ஆண்டு சுனாமியில் சிக்கி இறந்தார், உடல் கிடைத்தது என்று சிலோன் வானொலி அறிவித்தது.

திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அந்தப் பொய்ச்செய்திகளுக்கும் இப்போதைய செய்திக்கும் வித்தியாசம் உண்டு.  தற்காப்புக்காகக்கூட எதிர்த்தாக்குதல் நடத்த இயலாத நெருக்கடிக்குப் பிரபாகரன் தள்ளப்பட்டுவிட்ட சூழ்நிலை திங்களன்று அதிகாலையே வெட்டவெளிச்சமாகிவிட்டது. எதிரியின் கரங்களில் சிக்குவதைக் காட்டிலும் சயனைட் அருந்தி இறக்கலாம் என்று அவரும் அவரது தளபதிகளும் முடிவு செய்திருந்ததாகச் செய்திகள் சொல்கின்றன.  பாதுகாப்பு வளையப் பகுதியில் பல புலிகள் இவ்வாறு இறந்தும் கிடப்பதாகத் தெரிகிறது.

கடந்தவாரம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவி வெளியிட்ட சில விவரங்களை இங்கே நினைவுகூரலாம். நிலைமை கைமீறும் கணத்தில் தலைவர் தற்கொலை செய்துகொள்வார். என் வழியும் அதுதான். நமது கடைசி சந்திப்பு இதுதான் என்று தன்னிடம் கணவர் சொல்லி விடைபெற்றதாகத் திருமதி சூசை அப்போது சொன்னார்.

எல்லாம் கைமீறிய நிலை. இனி எழுதவோ பேசவோ ஒன்றுமில்லை. ஒரு மாபெரும் இனத்தின் இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலான போராட்டம் மகத்தான தோல்வியில் முடிவது பற்றிய வேதனை ஒன்றுதான் மிச்சம்.

பிரபாகரன் கதை முடிந்துவிட்டதாக சிங்கள அரசு கொக்கரிக்கலாம். அவர் தனி மனிதர் என்னும் நிலையிலிருந்து ஒரு சித்தாந்தமாகிப் போய் வெகுகாலம் ஆகிவிட்டது என்பது அவர்களுக்கு நிச்சயம் புரிய வாய்ப்பில்லை.

[குமுதம் ரிப்போர்ட்டர்]
Share

21 comments

  • //நிதானமாகப் பிறகு அலசி ஆராயலாம்.//
    //நிகழ்ந்ததை மீள்பார்வை பார்க்கும் தருணம் இதுவல்ல.//

    இந்த இரண்டு வரிகளுக்கும் இடையில் இருக்கும் வரிகள், இரண்டையும் அர்த்தமில்லாமல் செய்து விட்டன.

  • பாரா

    தகவல் வருத்தமாக உள்ளது. பல இணைய தளங்களில் இன்னும் உறுதி செய்ய படாமல் இருக்கிறதே?!

    மயிலாடுதுறை சிவா…

  • இக்கட்டுரை வெளியானபிறகு வருகிற சில செய்திகள்:

    * பிரபாகரன் இறக்கவில்லை. தப்பித்துவிட்டார் என்பதே உறுதி.பரப்பப்பட்டிருக்கும் செய்தி, தவறானது.
    * சார்ல்ஸ் ஆண்டனி என்று மீடியா காட்டுவது பிரபாகரனின் மகன் அல்ல. கடற்புலி தளபதிகளில் ஒருவரான சார்ல்ஸ் என்பவர்.
    *சூசை உள்ளிட்ட சில தளபதிகளும் தப்பித்து இருக்கிறார்கள்.கொல்லப்பட்டதாகச் சொன்னது உண்மையல்ல.

    -எந்தத் தகவலையும் இப்போது ஊர்ஜிதப்படுத்த இயலவில்லை.

  • —கிளிநொச்சி விழுந்த சமயத்தில் போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருந்ததையும் புலிகள் அப்போது ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொள்ளாததையும் மட்டுமேனும் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது.

    அப்படியா??

    அப்பொழுது வாசித்த செய்தி:

    War on LTTE enters decisive stage after fall of Kilinochchi (News Analysis): “N. Srikantha, a parliamentarian of Tamil National Alliance, known to be a proxy of the LTTE, has warned that the fall of Kilinochchi would be “the beginning of a prolonged guerrilla war”.

    “This will not be the end of the war. There will be no victor or vanquished in a war of this nature. Even at this stage the LTTE holds a sizable land area and we appeal to the government to act sensibly and agree to a ceasefire as a prelude to a political settlement,” Srikantha said.”

  • திரு ராகவன்,

    தமிழ் போராட்டாத்தை புறம் கூறும் பலர் இருக்கையில், தெளிவாக அதனை அறிந்து வைத்திருக்கும் வெகு சிலரில் ஒருவர் என உங்களை பார்க்கிறேன்.

    உங்கள் பின்னூட்டத்தில் வரும் செய்தியை கொண்டு, தயவு செய்து தங்கள் தலைப்பை, உங்கள் பதிவிலிருந்தாவது மாற்றவும் (குமுதம் இதழில் இனிமேல் இயாலாது என அறிகிறேன்).

    ஈழத்தமிழர்கள் நெஞ்சுரத்தொடு போராடுவார்கள் ஏனேனில் போரட்டத்திற்க்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது.

  • பாரா!
    உங்ளை விசயம் தெரிந்த மனிதர் என்றும், எழுத்தாளர் என்றும் என்னைப் போன்ற சிலர் நம்பியிருந்ததை, இந்த ஆக்கம் கெடுத்து விட்டது.

    நான் புலி ஆதரவாளன் அல்ல, அதேவேளை நீங்கள் புலிகளைப் புரிந்தவரும் அல்ல.

    தமிழகத்தின் போலி அரசில்வாதியல்ல பிரபாகரன். நீங்களும், உங்களை அற்புதமான ஆய்வாளனாக நம்புகிறவர்களும் இதை நம்ப மறுத்தால், அதிக நேரமல்ல இன்னும், இன்னும் சில நாட்பொழுதுகள் காத்திருங்கள்.

    நன்றி

  • திரு பிரபாகரனின் தைரியத்திற்கும், போராடும் குணத்திற்கும், தன்னலமற்ற முயற்சிகளுக்கும் அஞ்சலிகள். இலங்கை தமிழ் மக்களுக்கு சமஉரிமை கிடைக்க ஆண்டவனை வேண்டுவோமாக.

  • //எந்தத் தகவலையும் இப்போது ஊர்ஜிதப்படுத்த இயலவில்லை.//

    ராகவன்,

    உங்களைப் போன்ற அனுபவமுள்ள பத்திரிகையாளர் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாமலேயே பரபரப்பான தலைப்பிட்டு பதிவெழுதுவதை குறைந்த பட்சம் இணையத்திலாவது தவிர்க்கலாமே?

    மற்றபடி இது உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளுடன் கூடிய கட்டுரை. நீங்களே சொன்னது போல் பிரபாகரன் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் உள்ளன. பிரபாகரனின் பலத்தையும் பலவீனத்தையும் பற்றி எல்லா சந்தடியும் அடங்கின பிறகு நிதானமாக ஒரு நீண்ட கட்டுரை எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

  • இருக்கும் பாரத்தை எப்படி தான் கொட்டுவது ? அதீத அழுத்தம் , ஒரு கட்டுரை கூட எழுதாவிடில் இன்னும் சிரமம். ஊர்ஜிதப்படுத்தி பின் எழுதுவதற்கு வெறும் வரலாறாக யாரும் இதை பார்ப்பதில்லை , உணர்வோட இணைந்தால்தான் வார்த்தைகளில் அந்த ரணம் வடிவம் பெறுகிறது

  • you are worshiping and glorifying a coward as a great hero in your column. You are regretting for a man who, knowing fully well fighting a losing battle,by holding millions of innocent fellow tamilians as shield and seeing them killed till lost minute and try to escape to save his life by crossing over dead bodies of thousands of his own men who have committed suicide as per his commend !
    Be a good journalist and do not glorify and portray a shameless coward as great hero
    VRN

  • //நிதானமாகப் பிறகு அலசி ஆராயலாம். ஆனால் கிளிநொச்சி விழுந்த சமயத்தில் போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருந்ததையும் புலிகள் அப்போது ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொள்ளாததையும் மட்டுமேனும் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது.//

    அவர் என்றைக்கு ராஜிவ்காந்தியை கொன்று இந்திய ஆதரவை இழந்தாரோ அன்று ஆரம்பித்த வீழ்ச்சி இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் வருந்த ஒன்றும் இல்லை.

  • மாலனிடமிருந்து வந்தது:

    உங்கள் குழுதம் ரிப்போர்ட்டர் கட்டுரையைத் தாங்கிய பதிவைப் பார்த்தேன், அதற்கு நான் எழுதிய பின்னூட்டத்தை உங்கள் பதிவு சரியாக ஏற்கவில்லை. மொழிப்பிரசினை >> குறிகளை அது html எனப்புரிந்து கொள்கிறது போலும். எனவே அது இத்துடன்: படிக்கலாம் பிரசுரிக்கலாம்

    >>பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள்.<< சுட்டு அல்ல, குண்டு வீசி. வான் வழியேயும் கடல் வழியேயும் குண்டு வீசி. எறிகணைகளை ஏவி >>இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.<< இனியாவது அரசியல் தீர்வுகள் ஏற்பட வழி பிறந்திருக்கிறது >>இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை.<< இந்த நூற்றாண்டில்? இந்த நூற்றாண்டு துவங்கி 9 ஆண்டுகள்தான் ஆகிறது. இன்னும் 91 ஆண்டுகள் இருக்கின்றன. என்னவெல்லாமோ நடக்கலாம். அதற்குள் எப்படி முடிவு கட்டுகிறீர்கள்? நாஸ்ட்ரடமஸ் ஆகிவிட்டீர்களா பாரா? அதிர்ச்சி ஏன்? ஆயுதப் போராட்டம் வெற்றி பெறக் கூடிய விளிம்பில் இருந்ததைப் போலவும், IPLலில் கடைசிப் பந்தில் கதை முடிந்து விட்டதைப் போலவும் அல்லவா பேசுகிறீர்கள். கிளிநொச்சி, அப்புறம் புதுக்குடியிருப்பு என ராணுவம் முன்னேறிக் கொண்டுதானே இருந்தது.? தோல்விக்கான சாத்தியங்கள் இருக்கத்தானே செய்தது? >>ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள் நகர்ந்தாலும் அடிப்படையில் ஒரு நம்பிக்கை அனைவருக்குமே மிச்சமிருந்தது. எப்படியாவது பிரபாகரன் தனது ‘தனி ஈழம்’ என்னும் லட்சியத்தில் வெற்றி கண்டுவிடுவார் என்கிற நம்பிக்கை.<< 'எப்படியாவது' காண்பதாக இருந்தால் எப்போதோ கண்டிருக்க முடியும். ஆனால் அவர் நம்பிக்கை வைத்தது ஆயுதப் போராட்டத்தில் மட்டும்தான் >>அந்த நம்பிக்கை இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது. தனது கடைசிச் சொட்டு எதிர்பார்ப்பை மிச்சம் வைத்து, ஆயுதங்களைக் கீழே போட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேச்சுக்கு அழைத்த பிரபாகரனும் அவரது படையினரும் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள்.<< கடைசி நிமிடம் வரைக் காத்திருந்து ஆயுதங்களைக் கீழே போடுவானேன்? சற்று முன்னாலேயே போட்டிருந்தால் பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே? இருபத்தியாறு ஆண்டு கால யுத்தம். இனி ஒன்றுமில்லை. ஈழம் என்பது துக்கம் சுமந்த கனவாக இனி தமிழர்களின் மனங்களில் மட்டும் வாழும். 🙁 >>இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே காத்திருந்திருக்கிறார்கள். கடந்த ஞாயிறு மதியம் பிரபாகரன் மரணம் என்று முதலில் ஒரு வதந்தியை வெளியே அனுப்பிவிட்டு இறுதித் தாக்குதலைத் தொடங்கிய இலங்கை ராணுவத்துக்கு அதிக அவகாசம் வேண்டியிருக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான சதுர கிலோமீட்டர்களை அங்குலம் அங்குலமாகக் கடந்து அவர்கள் அப்போது ஒரு கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நெருங்கிவிட்டிருந்தார்கள்.<< முடிவுகள் வரை காத்திருக்க அவசியம் என்ன? வாக்குப் பதிவு முடிந்த உடனேயே ஆரம்பித்திருக்கலாமே, அது முடிவை எப்படி பாதித்திருக்கும்? உண்மையில் இங்கே வாக்குப் பதிவு நடக்கும் போது கூட அங்கே தாக்குதல் நடந்து கொண்டுதான் இருந்தது. இங்குள்ள ஊடகங்கள் தேர்தலில் மும்மரமாக இருந்தன. பூனை கண்ணை முடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்து விடுமா? >>யாரும் எங்கும் தப்பிக்க முடியாத சூழ்நிலை. திங்கள் அதிகாலை அப்படித் தப்பிக்க நினைத்த பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆண்டனியின் உடல் கரயாமுள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.<< புலிகளும் அவர்களது பினாமிகளும் மறுக்கிறார்களே? >>புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், புலிகளின் அமைதிப் பேச்சுவார்த்தைப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூத்த கமாண்டர் ரமேஷ், காவல்துறைத் தலைவர் இளங்கோ, உளவுப்பிரிவைச் சேர்ந்த கபில், சார்ல்ஸ் ஆண்டனியின் நெருங்கிய சகா என்று சொல்லப்படும் சுதர்மன் என்று அடுத்தடுத்து இறந்துகொண்டிருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்க, ஞாயிறு மாலை தனது சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் மூலம் ‘ஆயுதங்களைக் கீழே போடுகிறோம். பேச்சுவார்த்தைக்கு உதவுங்கள்’ என்று உலக நாடுகளை நோக்கி பிரபாகரன் விடுத்த இறுதி வேண்டுகோள் தன் அர்த்தம் இழந்து, இறந்து போனது.<< உலக நாடுகளிடம் பலனளிக்கத்தக்க வகையில் பேச அவர்களிடம் என்ன சாதனம் அல்லது ஆட்கள் இருந்தார்கள்? >>தன் மூத்த மகன் இறந்ததற்கோ, ஆண்டாண்டு காலமாகத் தன் நிழல்போல் உடனிருந்து பணியாற்றிய தளபதிகள் இறந்துகொண்டிருந்ததற்கோ நின்று ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமுடியாத அவசரத்தில் இருந்த பிரபாகரன், திங்கள் அன்று காலை தான் இறுதியாக வெளியேற ஒரு முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் திருகோணமலைக்கு ஏற்கெனவே தப்பிச் சென்றுவிட்டார், கிழக்கு மாகாணத்தில் உள்ள யால காட்டுப்பகுதியில் பத்திரமாக இருக்கிறார், மியான்மருக்குச் சென்று இரு வாரங்கள் ஆகிவிட்டன என்பது போன்ற வதந்திகள் அனைத்தும் தம் அர்த்தத்தை இழந்தன. பிரபாகரன் இறுதிவரை யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்தில் மட்டுமே இருந்திருக்கிறார். நேரடியாக யுத்தத்தில் பங்குகொண்டு, படையை வழிநடத்தியிருக்கிறார். இறுதிக் கணம் வரை போராடித்தான் இறந்திருக்கிறார்.<< இத்தனை ஆண்டுகளாக இத்தனை ஆயிரம் மக்கள் போரிட்டு இறப்பதற்கு வழி நடத்தியவர் கடைசி நிமிடத்தில் தான் மட்டும் உயிர் பிழைக்கத் தப்பி போவார் என எதிர்பார்ப்பதே அவரை சிறுமைப் படுத்துவதாகும். >>இனி அங்கே இருக்கவே முடியாது என்னும் நிலை வந்து, வெளியேற முடிவு செய்தபோது காலம் கடந்து விட்டிருந்தது. அது அத்தனை எளிய செயலாக அப்போது இல்லை. மிக நெருக்கத்தில் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டிருந்த நிலையில், அதிரடியாக அவர்களுக்கு நடுவே புகுந்து வெளியேறினால் மட்டுமே உண்டு. மிக மிக அரிய வாய்ப்பு அமைந்தால் மட்டுமே தப்பிக்க இயலும். அநேகமாக அப்படியொரு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் அம்முயற்சியை அவர் மேற்கொள்ளத் துணிந்திருக்கிறார்.

    ஒரு சிறு வேன், ஒரு ஆம்புலன்ஸ் வண்டி. ஒன்றில் பிரபாகரனும் பொட்டு அம்மான் மற்றும் கடற்புலித் தளபதி சூசை ஆகியோர் ஏறிக்கொள்ள, இன்னொன்றில் வேறு சில முக்கியத் தளபதிகள் ஏறினார்கள்.

    வெறும் இருநூறு மீட்டர் தொலைவில் வந்துவிட்ட ராணுவத்தைப் பிளந்துகொண்டு வண்டி தப்பித்துச் சென்றாகவேண்டும் என்பது திட்டம். அப்படித் தப்பிக்கும்போதுதான் ராணுவம் சுட்டது. ஆம்புலன்ஸில் இருந்த பிரபாகரன், இதர தளபதிகள் அத்தனை பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள். இது வந்த செய்தி.<< எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் சொன்னது >>கொழும்பு குதித்துக் கூத்தாடிக்கொண்டிருக்கிறது. வீதியெங்கும் பட்டாசு வெடிச்சத்தம். எங்கு பார்த்தாலும் சிங்கள – பவுத்தக் கொடிகள் படபடக்கின்றன. காட்சிகள் துண்டுத்துண்டு சலனப்படங்களாக இணையத்திலேயே கிடைக்கின்றன. எங்கும் கொலைவெறி சந்தோஷக் கூக்குரல். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட செய்தி வெளியான பிறகும் இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அதனை வெளியிடத் தாமதித்துக்கொண்டிருந்ததற்கு ஒரே காரணம்தான். அதிபர்தான் அறிவிக்கவேண்டும்.<< அது உறுதியாகததும் ஓர் காரணம் >>இருபத்தியாறு வருட கால யுத்தத்தின் இறுதிக் கணங்களில், தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டு, போர் நிறுத்தம் செய்கிறோம் என்று கடந்த ஞாயிறன்று தான் அறிவித்தது நகைப்புக்குரியதாகவே கருதப்படும் என்பது பிரபாகரனுக்குத் தெரியும். ஆனாலும் கேட்கவேண்டியது அவர் கடமை<<. கடைசி நிமிடப் போர் நிறுத்தம் மக்களைக் காக்கவா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? >>ஓர் இனத்தின் பிரதிநிதியாக அவர் போரிட்டுக்கொண்டிருந்தார். இதுநாள் வரை இறந்தவர்கள் எண்ணிக்கையைக் கழித்துவிட்டாலும், ஈழத்தில் இப்போதிருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழ்கிற சுமார் முப்பத்தி ஐந்து லட்சம் தமிழர்களுக்கும் அவர் ஒருத்தர்தான் முகம்.<< அப்படி ஒரு சித்திரம் துப்பாக்கிகள் வழியே கட்டமைக்கப்பட்டது. இலங்கையில் உள்ள எல்லாத் தமிழர்களும் அவரை மட்டுமே தலைவராக ஏற்கவில்லை >>பிரபாகரனை விரும்புகிறவர்கள், வெறுப்பவர்கள், விமரிசிப்பவர்கள், ஏற்பவர்கள், மௌனம் காப்பவர்கள் – எத்தனை விதமானவர்களாக அவர்கள் இருந்தாலும்

    இதனை யாரும் நிராகரிக்க மாட்டார்கள். பிரபாகரனும் அவரது போராட்டமும் இல்லாதிருந்தால் ஈழம் குறித்து இன்று உலகம் சற்றும் சிந்தித்திருக்காது.<< இப்போது உலகம் 'ஈழம்' பற்றி சிந்திக்கிறது என்பது கற்பனை. அப்படி சிந்தித்திருந்தால் போர் உக்கிரம் அடைந்த போது உலகநாடுகள் தலையிட்டிருக்கலாமே? உலகம் விரும்பியது தமிழர்களுக்கான உரிமைகள், அமைதி இவையே. ஈழம் அல்ல >>இருபத்தியோராம் நூற்றாண்டின் மாபெரும் மனித இனப் படுகொலைகள் மிக ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வடக்கு, கிழக்கு மாநிலங்கள் திறந்தவெளி சவ அடக்க மைதானங்களாகியிருக்கும்<< கிழக்குப் பகுதி 'விடுதலை' அடைந்த பின் 'மாபெரும் மனித இனப் படுகொலைகள்' எத்தனை நடந்து விட்டன? விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த போது 'துரோகிகள்' பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டார்களா? அல்லது ரகசியமாகக் கொல்லப்பட்டார்களா? . >>ராஜபக்‌ஷே இப்படியொரு மகத்தான தருணத்தைத் தன் வாழ்நாளில் ஒருபோதும் சந்தித்திருக்க முடியாது. ஜி 11 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜோர்டன் சென்றிருந்தவர் கடந்த ஞாயிறு காலை அவசர அவசரமாக கொழும்பு திரும்பி, விமானத்தை விட்டு இறங்கியதுமே மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அன்று மாலையே நாட்டு மக்களுக்கு நற்செய்தி உரையாற்றுவதாக அறிவித்தார். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டதாக அப்போதே பரவியிருந்த வதந்தி அவருக்கும் கிடைத்திருந்தது. அது வதந்திதான் என்று தெரிந்ததும்தான் உரையைச் செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிப்போட்டார். வதந்தியை உண்மையாக்கிவிடும் வேட்கையுடன் ராணுவம் மிகத் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது.<< எனவே உங்கள் கணக்குப்படி பிரபாகரன் மரணம் செவ்வாய்க் கிழமைக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் பதிவு திங்களன்று எழுதப்பட்டிருக்கிறது! >>தாக்குதல் மகத்தான வெற்றி. ஆசைப்பட்டபடியே பிரபாகரனைக் கொன்றுவிட்டார்கள். இனி ஈழப் போராட்டம் என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. போராட யார் இருக்கிறார்கள் அல்லது யார் முன்வருவார்கள்? பல்லாண்டு காலம் பாடுபட்டு விடுதலைப் புலிகள் போராடி வென்று வைத்திருந்த தமிழர் நிலப்பகுதிகள் அனைத்தையும் ஓரிடம் மிச்சமில்லாமல் பிடித்துவிட்டார்கள்.<< நிலத்தைத்தான் இழந்தோம், பலத்தை அல்ல என்று அவர்கள் சொல்வது குறித்து உங்கள் கருத்தென்ன? >>நிலம் போனாலும் போராளிகளாவது உயிர் பிழைக்கலாமே என்றுதான் புலிகள் தரப்பில் இறுதி முயற்சியாகச் சில தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிலரேனும் வெளியேறிப் போக வழி கிட்டுமா என்று பார்க்கிற முயற்சி அது.<< கடைசிவரை தற்கொலைத் தாக்குல்களை அவர்கள் கை விடவில்லை என்பதைப் பதிவு செய்ததற்கு நன்றி >>எதுவும் பலனில்லாமல் போய்விட்டது. தீவிரவாதத்தின் பிடியிலிருந்து தேசத்தை விடுவித்துவிட்டதாக அரசும் ராணுவமும் உரத்துச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், எடுக்க ஆளில்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர் உடல்கள் வன்னியில் வானம் பார்த்துக் கிடக்கின்றன. இடைவிடாது வெடித்த பீரங்கிகளின் சத்த எதிரொலி அடங்கியபாடில்லை. எங்கும் அழுகை, எங்கும் ஓலம். திடீர் திடீரென்று வானளாவ எழுந்த தீப்பிழம்பும் பின்னணியில் வெடிக்கிற குண்டுச் சத்தங்களும். ஆங்காங்கே கை உடைந்து, கால் உடைந்து, கட்டுகளுடன், ரத்தமுடன் தூக்கிச் செல்லப்படும் மனித உடல்கள். ஞாயிறன்று முல்லைத் தீவிலிருந்து ஒளிபரப்பு செய்த இலங்கைத் தொலைக்காட்சி ரூபவாஹினி காட்டிய காட்சிகள் இந்நூற்றாண்டின் மகத்தான பேரவலம்.

    லட்சக்கணக்கில் பலிவாங்கி ஒரு முடிவைத் தொட்டிருக்கிறது இந்த யுத்தம். கொலைகள் பற்றிக் கேட்டால் அமெரிக்காவின் உலகு தழுவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத் தனது செயலை முன்னிறுத்தித் தப்பித்துக்கொள்வது ராஜபக்‌ஷேவுக்கு மிக எளிய செயல். அப்படிக் கேட்கக்கூட ஆளில்லாத அளவுக்குப் புலிகள் தமது இறுதிக் காலத்தில் உலகெங்கும் ஆதரவை இழந்திருந்ததுதான் இதில் மாபெரும் வலி தரக்கூடிய அம்சம்.

    எங்கே சறுக்கினார்கள்? எந்தக் கணக்கு தவறாகிப் போனது?

    நிதானமாகப் பிறகு அலசி ஆராயலாம்.<< அதை ஆராயுங்கள் முதலில். அது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டும். குறைந்த பட்சம் உங்களின் இந்தக் கட்டுரையில் உள்ள மிகை வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவாவது உதவும் ஆனால் கிளிநொச்சி விழுந்த சமயத்தில் போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருந்ததையும் புலிகள் அப்போது ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொள்ளாததையும் மட்டுமேனும் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. இன்றைக்குப் பிரபாகரன் விடுத்த அமைதிப் பேச்சு அழைப்பை அன்றைக்குச் செய்திருந்தால் குறைந்தது இன்னும் சில ஆயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும்.<< காண்க: பாஸ்டன் பாலாவின் பின்னோட்டம் >>நிகழ்ந்ததை மீள்பார்வை பார்க்கும் தருணம் இதுவல்ல.<< பின் எப்போது? >>இதற்கு முன்பும் பிரபாகரன் இறந்துவிட்டதாக இருமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்கத்துக்குள் கலவரம், மாத்தையா பிரபாகரனைக் கொன்றுவிட்டுத் தலைவராகிவிட்டார் என்று முன்பொரு சமயம் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். வவுனியாவுக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்னும் கிராமத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவே செய்தி வந்தது. பிறகு 2004ம் ஆண்டு சுனாமியில் சிக்கி இறந்தார், உடல் கிடைத்தது என்று சிலோன் வானொலி அறிவித்தது.

    திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அந்தப் பொய்ச்செய்திகளுக்கும் இப்போதைய செய்திக்கும் வித்தியாசம் உண்டு. தற்காப்புக்காகக்கூட எதிர்த்தாக்குதல் நடத்த இயலாத நெருக்கடிக்குப் பிரபாகரன் தள்ளப்பட்டுவிட்ட சூழ்நிலை திங்களன்று அதிகாலையே வெட்டவெளிச்சமாகிவிட்டது. எதிரியின் கரங்களில் சிக்குவதைக் காட்டிலும் சயனைட் அருந்தி இறக்கலாம் என்று அவரும் அவரது தளபதிகளும் முடிவு செய்திருந்ததாகச் செய்திகள் சொல்கின்றன. பாதுகாப்பு வளையப் பகுதியில் பல புலிகள் இவ்வாறு இறந்தும் கிடப்பதாகத் தெரிகிறது.

    கடந்தவாரம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவி வெளியிட்ட சில விவரங்களை இங்கே நினைவுகூரலாம். நிலைமை கைமீறும் கணத்தில் தலைவர் தற்கொலை செய்துகொள்வார். என் வழியும் அதுதான். நமது கடைசி சந்திப்பு இதுதான் என்று தன்னிடம் கணவர் சொல்லி விடைபெற்றதாகத் திருமதி சூசை அப்போது சொன்னார்.<< பிரபாகரனின் மனைவியும், குழந்தைகளும் கூட இறந்து விட்டார்கள் என ராணுவம் சொல்கிறது. அது உண்மையாக இருக்குமானால், பிரபாகரன் இறந்ததும் உண்மை என்றால் எல்லோரும் சயனைட் அருந்தியிருக்க வாய்பிருக்கிறது. முழுத் தகவல்களும் வரட்டும். பின் இரங்கற் குறிப்பு எழுதலாம். >>எல்லாம் கைமீறிய நிலை. இனி எழுதவோ பேசவோ ஒன்றுமில்லை. ஒரு மாபெரும் இனத்தின் இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலான போராட்டம் மகத்தான தோல்வியில் முடிவது பற்றிய வேதனை ஒன்றுதான் மிச்சம்.<< வேதனைகளை மீறி ஏன் தோற்றது என யோசியுங்கள். விடுதலைப் புலிகளின் அணுகுமுறை சரிதானா, அவர்களின் தவறுகள் என்ன, நீங்கள் அடிக்கடி சொல்கிற 'இந்த நூற்றாண்டில்' வெறும் ஆயுதம் மட்டுமே பலமா என்றெல்லாம் யோசியுங்கள். இலங்கைத் தமிழருக்குத் தனி நாடு ஒன்றுதான் தீர்வா? ஆயுதப் போரட்டம் துவங்கும் முன் தமிழர்கள் அரசியலில் பங்கு கொள்ள தடை இருந்ததா? தமிழர்கள் MPகளாக அமைச்சர்களாக இருந்திருக்கிறார்களா? தமிழர்கள் கல்வி கற்கத் தடை இருந்ததா? யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் இருந்ததா? அரசு வேலையில் சேர தடை இருந்ததா? அரசு அலுவல்களில், கரன்சி நோட்டில், தபால் தலையில் தமிழ் இருந்ததா? இந்தியாவில் அப்படி இருக்கிறதா? அப்படி இல்லாத போதும் ஏன் தமிழகத் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்? எல்லாவற்றையும் யோசியுங்கள். அதை மறந்துவிட்டு வீரவணக்கம் போட்டு ஆயுதக் கலாசாரத்திற்கு லாலி பாடாதீர்கள். >>பிரபாகரன் கதை முடிந்துவிட்டதாக சிங்கள அரசு கொக்கரிக்கலாம். அவர் தனி மனிதர் என்னும் நிலையிலிருந்து ஒரு சித்தாந்தமாகிப் போய் வெகுகாலம் ஆகிவிட்டது என்பது அவர்களுக்கு நிச்சயம் புரிய வாய்ப்பில்லை.<< அப்படியானால் அந்தத் தனி நபர் போனாலும் சித்தாந்தம் வாழும் அல்லவா? அப்புறம் ஏன் "இனி ஈழப் போராட்டம் என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. போராட யார் இருக்கிறார்கள் அல்லது யார் முன்வருவார்கள்?" என்ற புலம்பல்? ஒரு பதிவுக்குள் எத்தனை குழப்பம்? பாரா, இதை எழுதியது நீரா?

  • //இனியாவது அரசியல் தீர்வுகள் ஏற்பட வழி பிறந்திருக்கிறது//

    மாலன் சார்!

    இந்த வரிகளை புரிந்துகொள்ள இயலவில்லை. புலிகள் இருந்ததால் அரசியல் தீர்வுகள் ஏற்பட வழி ஏற்படவில்லை என்ற உங்கள் கூற்று சரியானது என்று எடுத்துக் கொண்டால் புலிகளுக்கு முன்னால் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகாலமும் தமிழர்கள் அரசியல் தீர்வுக்கு அகிம்சை வழியில் போராடினார்களே, அப்பொழுதே தீர்வு கிடைத்திருக்க வேண்டுமல்லவா?

    சிங்களவர்களை எந்த அடிப்படையில் நீங்கள் நம்புகிறீர்கள். குறைந்தபட்ச மனிதநேயமோ அல்லது அரசியல் தார்மீகமோ அவர்களுக்கு இருப்பதாக நீங்கள் நம்பினால் உங்களுக்கு அடுத்த சிங்களரத்னா விருது கிடைக்க வாழ்த்துகள்! 🙁

  • சூசையின் மனைவி கருணாவின் உடன் பிறந்த தங்கை என்று சொல்கிறார்களே ….. அது எந்த அளவிற்கு உண்மை?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி