ஒருவர் பலி

என் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வருகிற ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குள், நடுச்சாலையில் நான்கு இடங்களில் ‘ஒருவர் பலி’ என்று மஞ்சள் பெயிண்டில் எழுதியிருக்கிறார்கள். வெறுமனே எழுதியிருந்தாலும் சரி. மேலே கீழே எலும்புக்கூடு பொம்மையெல்லாம் போட்டு சுற்றிலும் ஓர் அபாய வட்டம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் விபத்து நடந்தது, நீ வண்டி ஓட்டும்போது கவனம் என்று எச்சரிக்கும் நோக்கம்தான். ஆனால் காலைப் பொழுதில் இந்த அபாய வட்டங்களின்மீது வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போது ஒவ்வொரு முறையும் துணுக்குற்றுப் போகிறேன்.
அவருக்கு ஒரு பெயர் இருக்கும். அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்கும். எங்காவது வேலை பார்த்துக்கொண்டிருப்பார். லட்சியங்கள் இருக்கும். கனவுகள் இருக்கும். கஷ்டங்கள் இருக்கும். எதையோ நினைத்துக்கொண்டு வண்டி ஓட்டி, எதிலோ மோதியிருப்பார். அல்லது யாராவது அவர்மீது மோதியிருக்கலாம்.
ஒரு கணம். ஒருவர் பலி. எடுத்துப் போட்டுவிட்டு மஞ்சள் பெயிண்டில் எழுதி வட்டம் போட்டுவிடுகிறார்கள்.
அதே சாலையில் பயணம் போகும் அவரது உற்றார் உறவினர்கள் அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துப் போவார்களே. அந்த மஞ்சள் வட்டத்தின்மீது வண்டிகள் போகும்போதெல்லாம் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து மீண்டும் மீண்டும் விபத்துக் காட்சி கண்முன் வந்து வேதனை செய்யுமல்லவா?
தவிரவும் பலி என்கிற சொல் தருகிற அழுத்தம், பயணத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த பதற்றத்தைத் தரும். நீ ஜாக்கிரதை என்பதுதான் சொல்லவரும் விஷயம் எனும்போது ‘விபத்துப் பகுதி’ அல்லது ‘மெதுவாகச் செல்லவும்’ என்று எழுதி வைத்தால் போதாதா? அன்னிக்கி அவன் செத்தான், இன்னிக்கி நீ சாவப்போற என்பது போல் ஏன் அச்சுறுத்த வேண்டும்?
இதனை எங்கே யாரிடம் சொன்னால் திருத்தம் நிகழும் என்று தெரியவில்லை. ஒரு போக்குவரத்துக் காவலரிடம் பேசிப்பார்த்தேன். வேற வேலை இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விட்டார்.
ஒரு சில தனி நபர் வலைத்தளங்களில் எழுதப்படுகிற விஷயங்கள், தவறாமல் அச்செடுக்கப்பட்டு முதலமைச்சரின் செயலகத்துக்கு அனுப்பப்படுவதாகக் கேள்விப்பட்டேன். தேவையிருப்பின் உரிய விஷயங்களின்மீது நடவடிக்கை எடுக்க, உரிய துறைகளுக்கு அது அனுப்பப்படுவதாகவும்.
ஒருவேளை காரியம் நடக்குமோ என்கிற எண்ணத்தில் இங்கே எழுதி வைக்கிறேன்.

என் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வருகிற ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குள், நடுச்சாலையில் நான்கு இடங்களில் ‘ஒருவர் பலி’ என்று மஞ்சள் பெயிண்டில் எழுதியிருக்கிறார்கள். வெறுமனே எழுதியிருந்தாலும் சரி. மேலே கீழே எலும்புக்கூடு பொம்மையெல்லாம் போட்டு சுற்றிலும் ஓர் அபாய வட்டம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் விபத்து நடந்தது, நீ வண்டி ஓட்டும்போது கவனம் என்று எச்சரிக்கும் நோக்கம்தான். ஆனால் காலைப் பொழுதில் இந்த அபாய வட்டங்களின்மீது வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போது ஒவ்வொரு முறையும் துணுக்குற்றுப் போகிறேன்.

அவருக்கு ஒரு பெயர் இருக்கும். அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்கும். எங்காவது வேலை பார்த்துக்கொண்டிருப்பார். லட்சியங்கள் இருக்கும். கனவுகள் இருக்கும். கஷ்டங்கள் இருக்கும். எதையோ நினைத்துக்கொண்டு வண்டி ஓட்டி, எதிலோ மோதியிருப்பார். அல்லது யாராவது அவர்மீது மோதியிருக்கலாம்.

ஒரு கணம். ஒருவர் பலி. எடுத்துப் போட்டுவிட்டு மஞ்சள் பெயிண்டில் எழுதி வட்டம் போட்டுவிடுகிறார்கள்.

அதே சாலையில் பயணம் போகும் அவரது உற்றார் உறவினர்கள் அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துப் போவார்களே. அந்த மஞ்சள் வட்டத்தின்மீது வண்டிகள் போகும்போதெல்லாம் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து மீண்டும் மீண்டும் விபத்துக் காட்சி கண்முன் வந்து வேதனை செய்யுமல்லவா?

தவிரவும் பலி என்கிற சொல் தருகிற அழுத்தம், பயணத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த பதற்றத்தைத் தரும். நீ ஜாக்கிரதை என்பதுதான் சொல்லவரும் விஷயம் எனும்போது ‘விபத்துப் பகுதி’ அல்லது ‘மெதுவாகச் செல்லவும்’ என்று எழுதி வைத்தால் போதாதா? அன்னிக்கி அவன் செத்தான், இன்னிக்கி நீ சாவப்போற என்பது போல் ஏன் அச்சுறுத்த வேண்டும்?

இதனை எங்கே யாரிடம் சொன்னால் திருத்தம் நிகழும் என்று தெரியவில்லை. ஒரு போக்குவரத்துக் காவலரிடம் பேசிப்பார்த்தேன். வேற வேலை இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

ஒரு சில தனி நபர் வலைத்தளங்களில் எழுதப்படுகிற விஷயங்கள், தவறாமல் அச்செடுக்கப்பட்டு முதலமைச்சரின் செயலகத்துக்கு அனுப்பப்படுவதாகக் கேள்விப்பட்டேன். தேவையிருப்பின் உரிய விஷயங்களின்மீது நடவடிக்கை எடுக்க, உரிய துறைகளுக்கு அது அனுப்பப்படுவதாகவும்.

ஒருவேளை காரியம் நடக்குமோ என்கிற எண்ணத்தில் இங்கே எழுதி வைக்கிறேன்.

Share

4 comments

  • //முதலமைச்சரின் செயலகத்துக்கு அனுப்பப்படுவதாகக் கேள்விப்பட்டேன். //

    இந்தப் பதிவைப் படிப்பதற்குப் பதிலாக, உங்களில் வேறு அரசியல் பதிவைப் படித்துவிட்டு, ‘நடவடிக்கை’ எடுத்துறாம பார்த்துக்கோங்க ஐயா.

  • முன்பெல்லாம் ஒருவர் பலி என்பதற்கு பதிலாக 301-ஏ என்று பீனல் கோட் செக்‌ஷனை எழுதி வைத்திருப்பார்கள். அதுவே துணுக்குறச் செய்யும். பலி என்ற வார்த்தையை படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது 🙁

  • “இந்த அபாய வட்டங்களின்மீது வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போது ஒவ்வொரு முறையும் துணுக்குற்றுப் போகிறேன்”

    ‘தீவிர’ எழுத்தாளராகிய உங்களுக்கே பயமா !! 😉

  • I agree the idea is insenitive and the method tasteless. But if the shock value deters rash/careless driving and saves a few lives, I think it is worth it.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter