நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்?
இப்போது வரத் தொடங்கிவிட்டது.
நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம்.
அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே அமேசான் – கிண்டிலில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அச்சுப்புத்தகங்களைவிடக் கணிசமாக விலை குறைவு.
எப்போது மறு பதிப்பு, அச்சில் ஏன் இல்லை, ஏன் இத்தனை விலை என்ற பேச்சுக்கெல்லாம் இனி இடமில்லை. உங்களிடம் ஒரு மின் நூல் படிப்பானோ, அல்லது உங்கள் மொபைலில் கிண்டில் செயலியோ இருந்தால் போதும். நீங்கள் விரும்பிய புத்தகத்தை, விரும்பிய கணத்தில் வாங்கி வாசிக்கலாம்! அச்சு நூல்களைவிடக் கணிசமாகக் குறைந்த விலை. நீங்கள் கிண்டில் அன்லிமிடட் சந்தாதாரி என்றால் பெரும்பாலான நூல்களை இலவசமாகவே தரவிறக்கி வாசிக்க முடியும்.
திருட்டு பிடிஎஃப்கள் நிறைந்த பேருலகில் அதிகாரபூர்வ தமிழ் மின்னூல்களுக்கு இது தொடக்ககாலம்தான். ஆனால் சிறப்பானதொரு தொடக்கமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்ற 2016ம் வருட சென்னைப் புத்தகக் காட்சியில் கிண்டில் அரங்கைக் கண்டபோதே இது விரைவில் சாத்தியமாகவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இன்று நடந்திருக்கிறது.
சாத்தியமாக்கிய கிழக்குக்கு என் வாழ்த்தும் நன்றியும்.
கிண்டிலில் பதிப்பாகத் தற்போது கிடைக்கும் என் நூல்கள் இவை. விரைவில் அனைத்து நூல்களும் இங்கே இருக்கும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.