தமிழ் ஹிந்து நாளிதழில் நாளை முதல் (03/12/16) ஒரு பத்தி தொடங்குகிறேன். ருசியியல் என்ற தலைப்பில். சமையலின் ருசியும் வாழ்வின் ருசியும் வேறுவேறல்ல என்பது என் தீர்மானம். அந்தந்த தினத்தின் மனநிலையே அன்றன்றைய சமையலின் ருசியைத் தீர்மானிக்கிறது என்பதைப் பன்னெடுங்காலமாக கவனித்து வந்திருக்கிறேன்.
வாழ்வையும் உணவையும் மனமார நேசிப்பவன் நான். தவிரவும் உண்ணும் விஷயத்தில் ஒரு முழு வட்டம் சுற்றி மீண்ட அனுபவம் உள்ளபடியால் இதனை எழுதுவது எனக்குத் தனித்த சந்தோஷம்.
முன்னர் குமுதம் ரிப்போர்ட்டரில் உணவின் வரலாறு எழுதியதை நினைவுகூர்கிறேன். அதற்காக நிறைய உழைத்தேன். எக்கச்சக்கமாகப் படித்தேன். பலபேரிடம் பேசி, பேட்டி கண்டு என்னென்னவோ செய்தேன். பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு ஆவணத் தொடருக்கு எழுதியபோதும் இப்படித்தான்.
இப்போது இந்தத் தொடருக்கு அதெல்லாம் இல்லை. இது முற்றிலும் சொந்த அனுபவம் சார்ந்த வெளிப்பாடாகவே இருக்கும்.
தொடரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள். எழுத்தின் ருசி, வாசிப்பவர் திருப்தியில்தான் பூரணமெய்துகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.