அண்ணன், அண்ணியை எப்படி அழைப்பார்?

நேற்று ஒரு வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கேள்வி பதில் பகுதியில் வாசகரொருவர் கேட்டிருந்த கேள்வி: ‘அருமை அண்ணன் விஜய், அருமை அண்ணியாரை வீட்டில் எவ்வாறு அழைக்கிறார் என்று கண்டறிந்து சொல்ல முடியுமா?’

இதற்கு பதிலளிப்பவர், நடிகர் விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான இன்னொரு பத்திரிகையாளரிடம் இது பற்றி அக்கறையாக விசாரித்து, தகவல் பிழையில்லாமல் அருமையான பதில் ஒன்றைத் தந்திருந்தார்.

அது அவ்வளவு முக்கியமில்லை. என் வியப்பு, இந்த ஆர்வங்களின்மீது. விஜய் தன் மனைவியை எப்படி அழைப்பார் என்பதை அறிந்துகொண்டே தீரவேண்டும் என்கிற தீர்மானம் அவருக்கு எப்படி, எப்போது, எதனால் ஏற்பட்டிருக்கும்? அவர் தீவிர விஜய் ரசிகராக இருக்கலாம். அல்லது பிறந்தநாள் போன்ற தினங்களில் விஜய் மேற்கொள்ளும் ஒரு சில நற்பணிகளால் [தையல் மெஷின், ரத்த தானம் இன்னபிற.] பயன்பெற்றவராக இருக்கக்கூடும். அல்லது பூர்வ ஜென்மத் தொடர்பு ஏதேனும் இருக்கலாம்.

எதுவானாலும் என் வினா ஒன்றுதான். விஜயைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதில் எனக்குப் பிரச்னையில்லை. அவர் தம் மனைவியை எப்படி அழைப்பார் என்று அறியவேண்டிய மனநெருக்கடி எவ்வாறு ஏற்பட்டிருக்கும்? செல்லமே, அன்பே, மானே, தேனே, மயிலே, ஸ்வீட்டி, டியர் என்று என்ன பதில் சொல்லியிருந்தால் இந்த வாசக ரசிகர் உளம் பூரித்திருப்பார்? அதேபோலத் தன் மனைவியையும் அழைத்து இன்புறுவதற்காக இருக்குமா? அருமை அண்ணன் விஜயின் நகலாகத் தன்னை மனத்துக்குள் உருவகப்படுத்தி வைத்திருப்பாரா?

இது அவரது மனைவிக்குத் தெரிந்திருக்குமா? அவர் விரும்புவாரா? அல்லது தன் கணவரது ரசனையின் நீட்டல் விகாரத்தால் துணுக்குற்று சற்றே விலக நினைப்பாரா?

விஜயின் மனைவி பெயர் சங்கீதா. சிறிய பெயர்தான். சிறந்த பெயரும்கூட. அவர் அப்படியே அழைக்க விரும்பலாம். எப்போதாவது சற்றே மாற்றி அழைக்கலாம். முன்சொன்ன விஜய்க்கு நெருக்கமான பத்திரிகையாளர் அளித்த தகவலின்படி அவர் ‘கீத்’ என்று அழைப்பார் என்று தெரிகிறது. இதைத் தெரிந்துகொண்டு, கேள்வி கேட்ட அந்த வாசகர் என்ன சாதிக்கப்போகிறார் என்பதுதான் என் கவலை.

தன் மனைவியை அவர் அப்படி அழைப்பாரா? அவர் பெயர் சங்கீதாவாக இல்லாமல் நிசும்பசூதனியாக இருக்கும்பட்சத்தில்? பிரச்னையாகும் சாத்தியங்கள் அதிகமல்லவா? தனக்கான பிரத்தியேகச் செல்லப்பெயரை உருவாக்குவதில் அவருக்கு என்ன கஷ்டம் இருந்துவிடப் போகிறது? ஒருவேளை அருமை அண்ணன் விஜயைக் காட்டிலுமே சிறந்த செல்ல விளிச் சொல்லை அவர் கண்டடையலாமே?

அதைவிட, இந்த வினா விடையை அருமை அண்ணியார் வாசிக்க நேர்ந்தால் என்ன நினைப்பார்? ரசிகரின் பரிசுத்தமான அன்பு அவருக்கு விளங்குமா? அண்ணன் காட்டிய வழியம்மா என்று ரூட் மாறாமல் பயணம் மேற்கொள்ளத் தவிக்கும் அவரது தணியா தாகத்துக்கு அவரால் அரை ஸ்பூன் நீரூற்ற இயலுமா?

பத்திரிகைகளுக்குக் கேள்விகள் அனுப்பும் வாசகர்களில் பல விதங்களுண்டு என்பது எனக்குத் தெரியும். தரமான, சிறந்த கேள்விகள் முதல் வேண்டுமென்றே கோக்குமாக்கான கேள்விகள் வரை அனுப்பும் ஒரு நூறு பேர் நிரந்தரமாக உலவும் மாநிலம் இது. பதிலறியும் ஆவல் ஏதுமன்றி, எப்படியாவது இதழில் தம் பெயர் இடம்பெற்றால் போதும் என்பதற்காகவே வினவுவோரும் உண்டு.

ஆனால் மேற்கண்ட வாசகர் இந்த எந்தப் பகுப்பினுள்ளும் அடங்காதவராக எனக்குத் தெரிகிறார். அவரது இந்தக் கேள்வி, ஒரு விடையைப் பெற்று சாந்நித்தியம் அடைந்துவிட்டது. எனவே அவர் இதே ரகமாகத் தனக்குள்ள பிற சந்தேகங்களை இனி கேட்கத் தொடங்கினால் என்னாகும்? உதாரணமாகச் சில வினாக்களைக் கற்பனையாக எண்ணிப்பார்ப்பதே கலவரமூட்டக்கூடியதாக இருக்கிறது. பொதுவில் பகிர்ந்துகொள்ளச் சங்கடமாக இருக்கிறது.

இத்தகைய வினாக்களுக்கும் பதிலளித்து ஊக்குவிக்கும் பத்திரிகைகளை நினைத்தால் தமிழ் மக்களின் தலையெழுத்தின்பால் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டுவிடுகிறது. மேற்படி வாசக ரசிகர் இன்னும் திருமணமாகாதவராக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஏனோ திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

அவருக்குத் திருமணமே ஆகாதுபோனாலும் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது.

Share

25 comments

  • அந்த வார இதழ் ராணியா?
    இல்லை  அந்துமணியா?
    இது தமிழனின் சாப கேடு. அந்த வாசகர் சாப விமோசனம் பெட்டர்.
    What to say!
    We are building temples for Kushbu and Choosing MLAs like MGR, Karunanithi, Jaya, Vijayakanth ….
    Soon Vijay may be….
    இது தமிழனின் சாப கேடு.

  • தமிழகத்திலும் பைத்தியங்கள் உண்டு என்பது அறிந்ததுதானே. இதை வைத்து ஒரு பதிவு போடத் துணிந்த உங்களை என்ன செய்வது? btw குஷ்பு சுந்தர் சியை 'மாமா' என்றுதான் அழைப்பாரேமே? உண்மையா? 🙂

  • ஒருவேளை அருமை அண்ணன் விஜய் அவரது அண்ணியாரை எப்படிக் கூப்பிடுவார் என்று வாசக அன்பர் கேட்டிருப்பாரோ? அதுவும் குறிப்பாக “வீட்டில்”. ஹிஹி! 

  • அடுத்தவன் வீட்டில் எட்டி பார்க்கும் மனோபாவம் தான் இது…   அதை மேலும் வளர்ப்பதில் இந்த பத்திரிக்கைகளின் பங்கு அதிகம்..   இப்படி ஒரு கேள்வி உன்மையா கேட்கபட்டதா அல்லது அந்த பத்திரிக்கையே  கேள்வியும் நானே பதிலும் நானே என்று உருவாக்கியதா… யாரரிவார்..
    ஆனால் அதை படித்த விஜய் ரசிகர்கள் நிச்சயம் சக ரசிகர்களிடம் பாருடா தலைவர் வீட்டுகாரரை ……. கூப்பிடுவாங்களாம் …….. பத்திரிக்கையில் வந்துள்ளது என்று பேசவும் அதனால் அந்த பத்திரிக்கையை பலர் நாடவும் வழிவகுத்திருக்கும்..
    இது தமிழனின் சாப கேடு…இல்லை  நமது சாபகேடு…  ஆமா யாரு தமிழன்.

  • //அவருக்குத் திருமணமே ஆகாதுபோனாலும் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது//
    இது வரமா, சாபமா?

  • கரகாட்டகாரனில் கவுண்ட்ஸ் “என்னைப் பாத்து எப்டிறா அந்த கேள்வி கேக்கலாம்” என்று எகிறி எகிறி செந்திலை உதைப்பதைபோல ரவுண்டுகட்டு ஆட்டம் போடறீங்களே!
     
    இதெல்லாம் பத்திரிக்கையில் கேள்வி பதில் ஆரம்பித்த காலத்திலிருந்தே இருக்கு! ரசினி தாத்தா சொன்னது போல ஆனுப்பவிக்கணும், ஆராயக்கூடாது!

  • ராகவன்,
    உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத அதே சமயம் சம்பந்தம் இருப்பது போன்ற ஒரு விஷயத்தை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
    தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஜூனியர் போஸ்ட் இதழுக்கு நான் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம் இது.
    அப்போதும் – இப்போதும் – எப்போதும் தன்னை கவிஞர்களின் அரசராகக் குறிப்பிடுவதை பெருமையாகக் கருதும் திரைப்பட – இலக்கிய – கலந்து கட்டிய கவிஞர் அவர். அவரது மனைவியும் ஒரு கவிஞர்தான். பேட்டிக்காக கவிதாயினியைச் சந்தித்தேன். 
    என் கேள்விகளைக் குறிப்பெடுத்துக்கொண்டவர், பதில்களை தானே எழுதி அனுப்புவதாகச் சொன்னார். அவரது கவிதைத் தமிழ் கட்டுரைக்கு பலம் சேர்க்கக்கூடும் என்பதால் சரி சொல்லிவிட்டு வந்தேன்.
    சொன்னது போலவே, முத்து முத்தான கையெழுத்துக்களால் தன் பதில்களை எழுதி அனுப்பிவைத்தார் விகடன் அலுவலகத்துக்கு. 
    ஆச்சு.. எல்லாம் முடிந்துவிட்டது. பேட்டிக்கட்டுரை அச்சுக்கோர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, ஃப்லிம் போடப்பட்டு.. இதோ இன்னும் சில நிமிடங்களில் கம கம மை மணத்தோடு ஃப்ர்ஸ்ட் மெஷின் காப்பி வந்து விழப்போகிறது. கவிதாயினி போனில் என்னைப்பிடித்தார்.
    ”கொஞ்சம் அவசரம்.. கணவர் ஊருக்குப் போயிருந்தார். இன்றுதான் வந்தார். உங்கள் கேள்விகளையும் என் பதில்களையும் அவருக்குக் காட்டினேன். சில திருத்தங்கள் சொன்னார். குறிப்பெடுத்துக்கொள்கிறீர்களா?” என்றார்.
    அச்சச்சோ! ப்ளேட்கூட போட்டாச்சே மேடம்!’ என நான் பதறினேன். அதைவிட அதிகமாகப் பதறினார் அவர்.. ”தயவு செய்து எப்படியாச்சும் இந்த திருத்தங்களை செஞ்சிடுங்களேன்” என்றார்.
    அலுவலகத்தில் கெஞ்சிக்கூத்தாடி ஸ்பெஷல் அனுமதி வாங்கி, அவர் சொன்ன திருத்தங்களுடன் புதிதாக ப்ளேட் போட்டு, புத்தகம் அச்சேறியது.
    மொத்தம் இரண்டே இரண்டு திருத்தங்கள்..
    ஒன்று.. ‘ஊரிலிருந்து அவர் திரும்பி வந்திருந்தார்’ என்று மனைவி எழுதியிருந்ததை ‘ஊரிலிருந்து அவர் விமானத்தில் திரும்பி வந்திருந்தார்’ என கணவர் திருத்தியிருந்தார்.
    இரண்டாவது திருத்தம்.. ‘அன்றுதான் கணவர் தொலைபேசியில் பேசினார்’ என மனைவி எழுதியிருந்ததை, ‘அன்றுதான் கவிஞர் தொலைபேசியில் பேசினார்’ என கணவர் திருத்தியிருந்தார்!

    • கௌதம், கவிஞரையும் தெரிந்தது. இங்கே நீங்கள் இதனைக் குறிப்பிட்டிருப்பதன் காரணமும் புரிந்தது! நன்றி.

  • அண்ணன் அண்ணியை எப்படி அழைப்பார் என்ற கேள்வியும் அவசியம் தான் ஸாரே சில இடங்களில்.
     
    உதாரணத்திற்கு தலைவர் ஒரு பெண்ணை துணைவி என்று அழைக்கிறாரா அல்லது மனைவி என்று அழைக்கிறாரா இல்லை இரண்டுக்கும் பொதுவாக மகளின் தாய் என்று அழைக்கிறாரா என்ற கேள்வி மிகுந்த சிக்கலானது. தேவையற்றது என சிலர் நினைத்தாலும், பதில் வருவதைப் பொறுத்தே அடுத்தகட்ட பரிவர்த்தனை தொடரும்.

  • 'கோ விடைகள்' என்ற பொருளில் ஒரு பிரபல பத்திரிக்கையில் வந்த இந்த வாரக் கேள்விகள் இரண்டு. 
     
    வடையைப் பாயாசத்தில் ஊற வைத்து சாப்பிடுவது உண்டா?
    -வெங்கண்ணா, ஈரோடு.
    நானெல்லாம் அப்பளம் சுவாமி.
     
    ஓர் அசைவ ஜோக் ப்ளீஸ்?
    -வி.பி.ஆலாலசுந்தரம், இடையார்பாளையம்.
    புருஷனும் பெண்டாட்டியும் தங்களோட பசு மாட்டுக்கு செனை போடப் போனாங்க. கடைசியா மாட்டுக்காரர்கிட்ட விசாரிச்சா அந்தப் பொம்பளை. ‘‘காளைக்குத் தினமும் டூட்டி இருக்குமா?’’ மாட்டுக்காரர் சொன்னார். ‘‘ஆமாம்மா. வருஷத்துக்கு 500 தடவை.’’
    உடனே தன்னோட புருஷனை இளக்காரமாப் பார்த்தா. அந்த ஆளு கொஞ்சம் டம்மி பீஸு. வருஷத்துக்கு ஒண்ணோ ரெண்டோதான். ‘‘மாட்டுக்காரர் சொன்னது காதுல விழுந்துச்சா?’’ன்னு நக்கலாக் கேட்டா.
    அதுக்கு புருஷன்காரன் சொன்னான். ‘‘நல்லாவே விழுந்துச்சு. 500-ம் ஒரே பசு மாட்டோடவான்னு நீ கேளு.’’.

  • அந்த வார இதழ் கேள்விக்கு பதில் வாங்கிபோட்டதைவிடமோசம்.நீங்கள்  அதை இவ்வளவு நீளமாக எழுதுவது.சாப்பாடு,ஷாப்பிங் போன்ற விஷ்யங்களை விவரித்து எழதும்போதே திசை மாறிபயணம் செய்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுந்தது. இப்போது தீர்ந்துவிட்டது நன்றி
    ரமணன் சென்னை96

  • பெற்ற பிள்ளையை தம்பி என்று அழைப்பதால், அவரும் அவ்வாறு கேட்டிருக்கலாம் இல்லையா?? எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு பொற்காசு கொடுத்து விடுங்கள். சாபம் வேண்டாமே ..:)

  • இந்த மாதிரி கேள்விகள் வரவில்லை என்றால் பத்திரிக்கைகளுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.

    BTW ரஜினி தன் மனைவியை 'ஜில்லு' என்று அழைப்பார் 🙂

  • இதை படித்த போது சட்டுனு நினைவுக்கு வந்தது.
    கவுண்டமணி: உன்ன இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்க சொல்றது யாருடா?
    செந்தில்: என் மூளை அண்ணே..
    கவுண்டமணி: மூளைய என்ன பின்னாடி பக்கமா வெச்சிருக்க?

  • That question is a  method  for getting trivia.Trivia is important for some,not so important for some.If the same question were to about some writers and their respective wives what difference it would have made. Tamil magazines encourage such questions and answers. This is not new.We had Indu Nesan when Thyagaraja Bhavathar was acting in films. Such gossip and peeping into the key hole attitude get amplified by media.If you see Times of India in the web you would understand how it promotes such trivia and gossip about actors.Outlook mentions Page3 people.Tehelka has a whole page in each issue for such stuff .So writer para dont pretend that you are from Mars whereas we including the person who asked the question are from a different planet where only morons and idiots live. On a different level such trivia would find place in biographies/autobiographies with some background information.Perhaps one may find more such trivia including names of pets.Perhaps you may find some such trivia in the biographies/books published by NHM.All said and done, the person who asked that question might be a doctor or a post-graduate or a good human being, who also happens to be an ardent fan of an actor. Such trivia might be used in a different context in a different sense. Pet names sometimes reveal ones likings and passions. The editor-in-chief of Outlook has a dog whose name is Editor. This is a trivia but time and again he writes about Editor in his column. Sometimes by such writing he is hinting at something. If at all anything one finds such trivia in many places in the web including idly vadai,writings of S.Ramakrishnan,Jeyamohan,Charu Nivedita and in many tamil blogs. "திரும்பவந்தபோது எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். ஞாநி உங்களை தேடினார் என்றார் பத்மா. உலகிலேயே மனைவியால் ஞானியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மனிதர் இவர்தான் என்று நான் சொன்னேன். இல்லல்ல நான் சங்கர்னுதான் சொல்லுவேன். இப்ப அடையாளம் தெரியணும்கிறதுக்காக ஞானீன்னு சொல்றேன் என்றார் பத்மா" . Charu and Jeyamohan write pages after pages with such trivia and when have you labelled them as trivia. S.Ramakrishnan adds sentiment to trivia or makes a story out of a trivia http://www.sramakrishnan.com/view.asp?id=367&PS=1
    So give up the holier than thou attitude.As a writer you need all types of readers not just the ones who think that they are intellectually superior to the common man/woman. Finally you are also part and parcel of the Tamil media that encourages such questions.

  • ”அந்தக் கவிஞர் இல்லத்திற்கு தொலைபேசியில் அழைத்தால், எதார்த்தமாக தொலைபேசியை கவிஞர் எடுத்தாலும் “வணக்கம்! கவிப்பேரரசு இல்லம்” என்றுதான் ஆரம்பிப்பார்” என்று நான் கேள்விப்பட்டது பொய்யாகக்கூட இருக்கலாம் என்றிருந்தேன். உண்மையாகவே இருக்கக்கூடும் என்று இப்பொழுது தோன்றுகிறது!

  • மிகவும் முக்கியமான உண்மையை அறிந்தேன், தூர்தர்ஷன் வினாடி வினாவில் கேட்டாலும் கேட்பார்கள் விஜய் காங்கிரசில்  சேர்ந்துவிட்டால் :).
    அவர் அதாவது விஜயால் கீத் என்று அழைக்கப்படுபவர் விஜயை எப்படி அழைப்பார்?. இந்தப் பதிலையும் பெற்றுத் தந்தால் உங்களுக்கு ஒரு டன் அபரஞ்சி சோப் வாங்கித்தருகிறேன் 🙂

  • பாரா,இந்த மாதிரி உப்பு சப்பில்லாத பதிவில் காரமான மிளகு போல நண்பன் கௌதமனின் பின்னூட்டம்…
    சிரிப்பாக இருந்தாலும் மனிதர்களின் ஈகோ எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைக் காட்டியது என் தோழனின் பின்னூட்டம்..
    கௌதமா,இது போன்ற அனுபங்களை தொடர்ந்து எழுதலாமே..

  • அதாவது உங்கள் தரத்திற்கான பதிவு இல்லை இது..டுடே இதழில் அம்புலிமாமா கதை மாதிரி இருக்கிறது..

  • தமிழன் என்று சொல்லடா…
    தலை நிமிர்ந்து நில்லடா…

    கவிஞர் என்று சொ………….
    ………………………………………….

  • //குஷ்பு சுந்தர் சியை 'மாமா' என்றுதான் அழைப்பாரேமே? உண்மையா? //
     
    குஷ்பு முதலில் பிரபுவை மாமா என்று அழைத்தாராம்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி