மூன்று காப்பியங்கள்

தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இலக்கியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை மிக முக்கியமானவை.

இந்த ஐந்து காப்பியங்களுள் வளையாபதியும் குண்டலகேசியும் இன்று நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இரண்டிலும் மிகச்சில பாடல்கள் மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கிற பாடல்களை வைத்து இந்தக் காப்பியங்கள் எதை, யாரைப் பற்றிப் பேசுகின்றன என்று அறுதியிடுவது சிரமம்.
ஆனால் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை மூன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கின்றன.

கதை வளமும் காவியச் சுவையும் கவித்துவ எழிலும் மிக்க இந்த அற்புதமான இலக்கியங்களுக்கு நல்ல தமிழ் உரைகளும் இருக்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய வாசகர்கள் வாசித்து, பொருள் புரிந்து காப்பியத்தை ரசிக்கச் செய்யக்கூடிய விதத்தில் அவை இல்லை. பண்டித மொழி அல்லது பாடப்புத்தக மொழியில் எழுதப்பட்டிருக்கும் உரை நூல்களைத் தற்கால வாசகர்கள் அநேகமாகத் தொடுவதே இல்லை.

உரை நூல்களின் தன்மையால் இப்பேரிலக்கியங்கள் சமகால, எதிர்கால வாசகர்களுக்குக் கிட்டாமலேயே போய்விடக்கூடாது என்று கிழக்கு பதிப்பகம் தீவிரமாகக் கருதியதன் விளைவுதான் நாவல் வடிவில் காப்பியங்கள் என்னும் புதிய திட்டம்.

காப்பியங்களின் மூல ஆசிரியர்கள் எழுதியிருப்பதற்குமேல் இம்மியும் இந்நாவல் வடிவில் இருக்காது. அதே சமயம் தற்காலத் தமிழ் உரைநடையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி, வாசிப்பை எளிமையான, ரசமான, விறுவிறுப்பான அனுபவமாக மாற்றும் ரசவாதத்தை இதில் எழுத்தாளர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

தற்கால நாவல் ஒன்றை வாசிப்பது போலவே நீங்கள் இக்காப்பியங்களை வாசிக்க இயலும். ரசிக்க இயலும். கதையின் தன்மையை, போக்கை, கட்டுக்கோப்பை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதனை முற்றிலும் ரசித்து வியந்தபிறகு நிச்சயமாக மூல நூலை வாசிக்கும் வேட்கை உங்களை ஆட்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நமது புராதனமான இலக்கியங்களைக் கட்டிக்காப்பது மட்டுமல்ல; காலம் தோறும் தோன்றும் புதிய வாசகர்களுக்கு அவற்றைக் கடத்திச் செல்லவேண்டியதும் நமது கடமை என்று கிழக்கு நம்புகிறது. அதற்கான முதல் படியாக இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

சாகாவரம் பெற்ற காப்பியங்களை முதலில் நாவல் வடிவத்தில் சுவாரசியமாகப் படியுங்கள். பிறகு மூல நூலைத் தேடிச் செல்லுங்கள்.

தமிழ், என்றுமுள தமிழாக விளங்குதற்கு நாம் செய்யக்கூடிய எளிய கடமை இதுவே.

மேலும் விவரங்களுக்கு:

மணிமேகலை | சீவக சிந்தாமணி | சிலப்பதிகாரம்

Share

10 comments

  • நன்றி பாரா, இதே போல ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்’, தேவாரம், திருவாசகம் போன்றவற்றிற்கும் இலகுதமிழில் படிக்க உரையுடன் வெளியிட்டால் நன்று. இந்தக்கால(?) வாசகர்களிடம் இந்த படைப்புகளையும் சேர்க்கும் முயற்சியில் கிழக்கு ஈடுபட்டால் நன்றி.

  • Dear Pa.Ra sir,

    Excellent Excellent work from kizhakkuu again..
    This is exactly true. Thought some ppl has interest on tamil literature, they cant study due to the language complexity.
    I will definitly read all the books and also the origin books also..
    Thanks a lot..

  • ஆங்கிலத்தில் No Fear Shakespeare என்று ஒரு வரிசை உள்ளது. நூலில் இடப்புறம் மூல வடிவமும், வலப்புறம் எளிய வடிவமும் ஆக அருமையாக இருக்கிறது.

    வேடிக்கை என்னவென்றால் சிலப்பதிகாரம் கூட ஆங்கிலத்தில் எளிய வடிவில் ஏற்கனவே கிடைக்கிறது. (லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம், ஓரியன்ட் லாங்மன்) தமிழில் தான் தாமதம்!

  • மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும்.

    இது தேவையற்ற வேலை என்பதோடு அந்தக் காப்பியங்களின் சிறப்பை நீர்த்துப் போகச் செய்யும் என்பது என் எண்ணம்.

    நமது இலக்கியங்களில் கருத்து மட்டுமல்ல,சொல் நயம்,வாக்கிய நயம்,சொல் வளம்-வகாபுலரி- போன்ற பலவும் இருக்கின்றன..இவற்றில் மற்றவற்றை எல்லாம் விடுங்கள்,கருத்தை மட்டுமாவது இது போன்ற பதிப்புகள் அளிக்க இயலுமா என்ன?

    இராமன் காட்டுக்குப் போனான்,இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்,இராமன் போய் சண்டை போட்டு சீதையை மீட்டுக் கொண்டு வந்தான் என்ற கதையை அறிந்து கொள்ளவா இராமாயணம் படிக்கிறோம்?
    சொல்லப்போனால் இராமயணக் கதை ஒரு குறியீடு மட்டுமே..(கம்பன்-புதிய பார்வை-அசஞா படித்துப் பார்க்கவும்)

    இந்த இப்பிறப்புக்கு இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய் என்ற சொற்றொடரின் அழகும் சூழலும் திண்ணமும் உங்கள் மொழிபெயர்ப்பு நூல்களில் எங்காவது வருமா?

    எதிர்காலத் தலைமுறை மணிமேகலையா-சொக்கன் எழுதியதைப் படித்திருக்கிறேனே என்ற சொல்லி முடித்துவிடக் கூடிய அபாயத்தை கிழக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

  • மொழிபெயர்ப்பு என்று அவசரத்தில் சொல்லி விட்டேன்;
    ‘கதை பெயர்ப்பு’ என்று சொல்லியிருக்க வேண்டும்…

  • Dear Para

    I endorse Alex’s views.I remember reading an advertisement from vardhaman publications about their book on “Naalaayira divya prabhandham.” I dont know how good it is.

    Kizakku padhippagam is doing a good job.But in my opinion ,your books are expensively priced-especially devan’s books.Alliance publications brought them at far cheaper prices.

    Raju-dubai

  • வாழ்த்துகள். பயணம் சிறக்கட்டும். அடுத்த பொள்ளாச்சி மகாலிங்கம் வரிசையில்………….

  • அறிவன சொல்லி இருப்பதற்கு இது மாற்றுக் கருத்து: நூலின் மூலத்தில் படிப்பது எல்லாருக்கும் இயலாத காரியம்.இலக்கியத்தை எளிமைப் படுத்த முடியாதுதான். அப்படிச் செய்தால் அதன் அழகு கெட்டுப் போய் விடும். ஆனால் படிக்காமலே இருப்பதற்கு எளிமையான தமிழ் வடிவில் படிக்கலாமே?

    உலகெங்கும் இப்படி எளிமைப் படுத்தும் இயக்கம் இருக்கிறது.

    மொழி பெயர்க்கடும், இல்லை கதை பெயர்க்கட்டும்.நோக்கம் நல்லது. தொண்டு தொடர வேண்டும், அவ்வளவுதான்.

    திருக்குறளுக்குத் தான் எவ்வளவு உரைகள்? பரிமேலழகர் முதல் சுஜாதா வரை? அந்ததக்காலங்களில் வழங்கி வந்த இயல்பு நடையில் உரை எழுதுவது ஒன்றும் புதியது அல்ல.நோக்கம் ஒன்றுதான். இலக்கியம் எல்லாரையும் போய்ச் சேர வேண்டும்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி