வெட்டி முறித்த காதை

பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில் குமுட்டி அடுப்பு ஏற்றி வைத்த மாதிரி இருந்தது. என்ன பயங்கரம்!

எழுத்து வேகம் கணிசமாக மட்டுப்பட்டிருக்கிறது. மூச்சைப் பிடித்துக்கொண்டு சீரியல் வேலைகளை எப்படியோ முடித்துவிடுகிறேன். மற்றதை எப்படிச் சரி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் வெட்டியாக இல்லை. வரிசையாக என்னுடைய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் ஏற்றும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. என்கோடிங் கன்வர்ஷன் குஸ்திகள் தீவிரமடைந்துள்ளன. இடையே ரிலாக்ஸ் செய்ய ஃபோட்டோஸ்கேபில் அட்டைகள் வடிவமைக்கிறேன். தரத்தில் சமரசமில்லாத, வடிவ நேர்த்தி பிசகாத, கூடியவரை பிழைகளற்ற மின்நூல்களைத் தரவேண்டும் என்ற எண்ணமே இதனை விடாமல் செய்ய வைக்கிறது. (இதனால்தான் திருப்தி தராத அட்டைப்படங்களைத் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டிருக்கிறேன்.)

மறுபுறம் செல்வமுரளி உதவியுடன் எனது இணையத் தளத்தை நிறைய சுத்தம் செய்தேன். குறிப்பாகப் புத்தகப் பகுதியை ஒழுங்கு செய்ய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இனி எனது ரைட்டர்பாரா தளத்திலேயே நீங்கள் புத்தகங்களைப் பார்வையிட்டு அங்கிருந்தே நேரடியாக அமேசானில் மின்நூல்களை வாங்கலாம். ப்ரிண்ட் வர்ஷன் இருக்குமானால் அதையும் சேர்த்து வாங்கலாம். [பாதி நூல்களை மின்னூல்களாக்கிவிட்டேன். இன்னும் சிறிது மிச்சம் உள்ளது. அவையும் விரைவில் கிண்டிலில் வந்துவிடும்]

தளத்தின் புத்தகப் பகுதியை ஒழுங்கு செய்ய நினைத்து, மொத்தத் தளத்திலும் கைவைத்து சீர்திருத்தும்படியானது. எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தியுறாத என்னை சகித்துக்கொண்டு பொறுமையாக இந்தப் பணியைச் செய்துகொடுத்த செல்வமுரளிக்கு என் மனமார்ந்த நன்றி. இவரது யூனியம்மா ஃபாண்ட்களைத்தான் மின்நூல்களின் அட்டைப்படங்களில் தலைப்பு வைக்கப் பயன்படுத்துகிறேன். எங்கோ கிருஷ்ணகிரி பக்கத்தில் குக்கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு இணையக் கட்டுமானப் பணியின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து எழும் இந்த இளைஞரை மிகவும் விரும்புகிறேன். இவரை எனக்கு அடையாளம் காட்டிய என் நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கு நியாயமாக நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவர் கோபிப்பார்; வேண்டாம்.

நண்பர்களிடம் நான் வேண்டுவது ஒன்றுதான். எனது இணையத் தளத்துக்கு ஒரு பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி, கம்ப்யூட்டர் / லேப்டாப், மொபைல்/ டேப் / மேக்புக் என சாத்தியமுள்ள அனைத்துக் கருவிகள் வழியாகவும் ஆராய்ந்து பாருங்கள். இன்னும் என்னெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அவற்றைச் சொல்லுங்கள்.(writerpara@gmail.com)

இந்தத் தளத்தின் புத்தகப் பகுதி ஒரு நூலகம் போல இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இங்கிருந்தபடியே அமேசானில் நீங்கள் புத்தகத்தை அச்சுப் பதிப்பாகவும் மின்நூலாகவும் வாங்க ஒரே க்ளிக் வசதிக்கு விருப்பப்பட்டேன். அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது.

இந்த சீசனுக்கான தள ஆப்பரேஷன் பணிகளை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். முதலில் கல்கியில் எழுதிக்கொண்டிருக்கும் புல்புல்தாராவை முடித்துவிட்டு Fake Idஐ முடிப்பதில் மும்முரமாக வேண்டும். ஆண்டிறுதிக்குள் இன்னொரு நாவலும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். (தலைப்பு: ‘அல்லா அழைக்கிறார்; அன்ரிசர்வ்டில் வாருங்கள்.’) யாராவது ஸ்பான்சர் செய்து என்னை மங்கோலியாவுக்கோ சைபீரியாவுக்கோ அனுப்பிவைத்தால் நடக்கும்.

மற்றபடி நான் சௌக்கியம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி