பெரிய வெற்றி, பெரிய தோல்வி

தேர்தல் முடிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சி மற்றும் கிளர்ச்சிகள் சற்று அடங்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதிமுகவின் இவ்வெற்றியை நான் முன்பே எதிர்பார்த்தேன் என்று கட்சிக்காரர்கள் அல்லாத வேறு யார் சொன்னாலும் நம்ப முடியாது. கட்சிக்காரர்களேகூட கண்மூடித்தனமான ஆராதிப்பு மனநிலையால் உந்தப்பட்டு சொல்லியிருப்பார்களே தவிர இதில் அறிவியல்பூர்வம் என்பதற்கு இடமே இல்லை. அறிவியல்பூர்வமான கருத்துக் கணிப்பு நடத்தியவர்களெல்லாம்கூட முடிவு வெளியான அன்று காலை பத்து மணி சுமாருக்குக் காணாமல் போய்விட்டார்கள்.

ஜெயலலிதாவின் இந்த அசுர வெற்றி, முற்றிலும் திமுக மீதான வெறுப்பின் விளைவு என்பது தெளிவாகியிருக்கிறது. சற்றும் குறையாத விலைவாசி, தொடர் மின்வெட்டு, அடி மட்டத்திலிருந்து ஆரம்பித்து அதிகாரப் படிக்கட்டின் உயர்நிலைகள்வரை அனைத்துத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஊழல், லஞ்ச லாவண்யங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், ஈழத்தமிழர் விஷயத்தில், தமிழக மீனவர்கள் விஷயத்தில் நம்பவைத்து ஏமாற்றியது, பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என்று ஒவ்வொரு ஊடகமாக ஆதிக்கத்தைப் பரவவிட்டு மொத்தமாக கபளீகரம் செய்ய நினைத்தது, இதையே ஊடகமல்லாத பிற துறைகளுக்கும் விதியாக்க நினைத்தது, அரசியலைக் கட்சிமயமாக்கியது, கட்சியைக் குடும்ப மயமாக்கியது, குடும்பத்துக்குள் பேயாட்டம் ஆடிய பூசல், எந்த விஷயத்திலும் ஒரு தீர்மானத்துக்கு வரவிடாத கலைஞரின் முதுமை, தளர்ச்சி, பாசப் போராட்டங்கள், அனைத்துக்கும் சிகரமாக ஸ்பெக்ட்ரம், அதில் அவரது மகளின் பங்களிப்பு.

திமுகவின் தோல்விக்குக் காரணங்களை வரிசைப்படுத்துவது எளிது. தோல்வி தமக்குப் புதிதல்ல என்று கலைஞரேகூட விரைவில் கடிதம் எழுதுவார். ஆனால் இது வழக்கமான தேர்தல் தோல்வியல்ல. ஒரு மக்குப்பையன் பரீட்சை எழுதி பூஜ்ஜியம் பெறுவதற்கு ஒப்பான தோல்வி.

திரும்பவும் நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஜெயலலிதாவை ஜெயிக்கவைக்கவேண்டுமென்பது தமிழக மக்களின் விருப்பமல்ல. அதுவும் இத்தனை பெரிய ராட்சச பலத்துடன். திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தின் விளைவே இத்தேர்தல் முடிவுகள். ஜெயலலிதா, வேறு வழியில்லாமல் இப்பிரம்மாண்ட வெற்றியைச் சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார். அவ்வளவே. ஏனெனில், அவரை விரும்பி அமர்த்துமளவுக்குக் கடந்த காலங்களில் அவர் எந்த ஒரு கட்டத்திலும் மக்களை நெருங்கி வரவில்லை. ஐந்தாண்டுகளில் அவர் போயஸ் தோட்டத்தில் இருந்த தினங்களைவிடக் கொடநாட்டில் இருந்த நாள்களே அதிகம். எப்போதாவது ஓர் அறிக்கை. நமது எம்ஜியாரில் சில நிர்வாகி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள். வழக்கு விசாரணை என்று ஓரிருநாள் செய்தி. ஒத்திவைப்பு என்று இன்னும் சில நாள் செய்தி.

மற்றபடி ஜெயலலிதா பெரிய அளவில் எதற்காக வீதி இறங்கிப் போராடியிருக்கிறார்? ஒரு பெரிய கட்சியின் தலைவியாக, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழகத்தில் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டிருக்கிறாரா? இதை அவர் நிதானமாக யோசித்து மனத்தில் இருத்திக்கொண்டு தமது பணிகளைத் தொடங்குவது அவருக்கும் அவரது கட்சியின் எதிர்காலத்துக்கும் நல்லது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் தேமுதிக இத்தேர்தலின் இன்னொரு ஆச்சரியம். இதுவும்கூட திமுக எதிர்ப்பு அலையில் அடித்து வரப்பட்டதுதானே தவிர விஜயகாந்த் ஒரு மாபெரும் மக்கள் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. ஆனால், நிச்சயமாகக் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் ஜெயலலிதாவைக் காட்டிலும் அதிகமாக மக்கள் பிரச்னையைப் பேசியிருக்கிறார். போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். மறுக்கமுடியாது. அவரது சுமார் நூறு அறிக்கைகளை மொத்தமாகப் படிக்கச் சமீபத்தில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நிறைய உளறுகிறார் என்றாலும் எந்தப் பிரச்னையிலிருந்தும் தள்ளி நிற்க விரும்பாத ஒரு குணம் அவருக்கு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விஜயகாந்த், நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல முட்டுக்கொடுக்கும் சக்தியாக விளங்க முடியும். ஆனால் எனக்கென்னமோ ஜெயலலிதா அவரை வெகுகாலம் விட்டுவைப்பார் என்று தோன்றவில்லை. சொல்லப்போனால் கலைஞரைவிட விஜயகாந்தையே பெரும் அபாயமாக அவர் இப்போது நினைக்க ஆரம்பித்திருக்கலாம். அடுத்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத செயல்திட்டமாக, தேமுதிகவை காலி பண்ணுவதே இருக்கும் என்று தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற சந்தர்ப்பவாத உதிரிகள் இந்தத் தேர்தலில் நிர்த்தாட்சண்யமாக அடித்துத் துரத்தப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்தாண்டுக் காலம் கொசுத்தொல்லை இல்லாமல் மக்கள் வாழலாம். நவீன யுகத்தின் கேவல அரசியலுக்கு எப்படியெல்லாம் இலக்கணம் வகுக்கலாம் என்று யோசித்து யோசித்துச் செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் அறுபத்தி மூன்றில் ஐந்து இடங்களை வென்றது எனக்குச் சற்று ஏமாற்றமே. காங்கிரசும் விடுதலை சிறுத்தைகள் வரிசையில் நின்றிருக்கவேண்டும் என்று உளமார விரும்பினேன். தங்கபாலு போன்ற அரசியல்வாதிகளுக்கும் அவர்களது வழிகாட்டலில் வளரும் கட்சிகளுக்கும் இனி தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவர்களது அறமற்ற அரசியல் பட்டி தொட்டியெங்கும் நாறி, காங்கிரஸை ஒரு ஷகிலா பட அளவுக்கே மதிக்கமுடியும் என்று தீர்ப்பாகிவிட்டதில் சந்தோஷமே.

கலைஞர் ஒரு காரியம் செய்யலாம். இதற்குமேலும் தாமதிக்காமல் அரசியலில் இருந்து விடைபெறலாம். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்துவிட்டு முற்றிலும் ஒதுங்கி நிற்கலாம். இது இன்னொரு வகையிலும் நல்லது. சகோதரச் சண்டை எந்த எல்லைவரை போகும் என்பதைப் பதவியில் இல்லாத இந்த ஐந்தாண்டுகளில் தெளிவாகப் பார்த்து, கவனித்து, உரிய வைத்தியம் பார்க்கலாம். திமுக என்னும் கட்சி தமக்குப் பிறகும் தமிழகத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பக்கூடியவராக இருந்தால் அவர் இதைத்தான் இப்போது செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது சகோதரர்கள் முட்டிக்கொண்டு கட்சி இரண்டாகப் பிளக்குமானாலும் ஒரு வகையில் நல்லதே. பொய்யான மாயக்கனவுகளில் மூழ்கித் திளைத்து, உருண்டு விழுந்து எலும்பு நொறுங்குவதைவிட, உண்மையை அதன் முழுத் தகிப்புடன் நேருக்கு நேர் எதிர்கொள்வதே கலைஞருக்கு, அவரது நீண்டநெடுநாள் அரசியல் அனுபவத்துக்கு கௌரவம் சேர்க்கக்கூடியது.

ஒரு கட்சியை நடத்தத் தெரிந்தவருக்குக் குடும்பத்தை நடத்தத் தெரியாமல் போய்விட்டது என்று நாளைய சரித்திரம் பஞ்ச் லைன் எழுத இடம் கொடுக்காதிருக்கவேண்டியதே இப்போது அவர்முன் உள்ள மாபெரும் பொறுப்பு.

Share

56 comments

  • “அவரது மகளின் பங்களிப்பு” இல்லை, ‘பங்கெடுப்பு’.

  • நான் முன்பே எதிர்பார்த்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்பதையும் அதை விட நான் கட்சிக்காரன் இல்லை என்பதையும் கண்டிப்பாக நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 😉

    • மாயவரத்தான், நீங்கள் கட்சிக்காரர் இல்லை. கட்சியே நீங்கள்தான் என்பதை ட்விட்டரில் தெரிந்துகொண்டேன். எனக்கென்னவோ நமது எம்ஜியாரை உங்கள் கையில் கொடுத்தால் உருப்படும் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

  • ஆட்சி மீது வெறுப்பும் விருப்பும் கலந்தே இருக்கும். ஆனால் எங்கெல்லாம் வெறுப்பு இருந்ததோ அது திமுக மீது குவிப்பாக இருந்தது.. எல்லா வெறுப்பு ஃபாக்டர்களும் சரியான விகிதாச்சாரத்தில் வேலை செய்ததாகவே தோன்றுகிறது.. வெறுப்பு சங்கதி வேலை செய்து தேர்தல் தோல்வி கண்டதில் மிகச் சிறந்த உதாரணம் ஜெ வின் முதல் ஐந்து ஆண்டுகள். அதே மீண்டும் நடந்துள்ளது

  • //இது வழக்கமான தேர்தல் தோல்வியல்ல. ஒரு மக்குப்பையன் பரீட்சை எழுதி பூஜ்ஜியம் பெறுவதற்கு ஒப்பான தோல்வி.//

    இதை இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது, திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் கடைக்கோடி தமிழன்வரை நேரடியாக பலனடைந்திருக்கிறான். அப்படியிருக்க திமுகவை மக்குப்பையன் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக செய்து நூறு நல்லதுகளை நாலு கெட்டதுகள் ஒட்டுமொத்தமாக பாழாக்கின என்றுவேண்டுமானால் சொல்லலாம். தன் குடும்பத்திற்காக கட்சியை பணயம் வைத்து , கலைஞர் எடுத்த தவறான முடிவுகளும் , என்னதான் நல்லாட்சி புரிந்தாலும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாத்திப்போடு ஓட்ட என்கிற மக்களின் முட்டாள்த்தனமான மனநிலையுங்கூட இத்தோல்விக்கு காரணமாக கருதலாம்.. மற்றபடி திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் கொலைவெறியோடு ஓட்டுப்போட்டதாக சொல்வதெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாதது.

    அன்புடன்

    யுவகிருஷ்ணாவுக்காக அதிஷா!

    அதிஷா

  • Sir, “அடுத்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத செயல்திட்டமாக, தேமுதிகவை காலி பண்ணுவதே இருக்கும்” மற்றும்
    “ஒரு கட்சியை நடத்தத் தெரிந்தவருக்குக் குடும்பத்தை நடத்தத் தெரியாமல் போய்விட்டது “.,போன்ற வரிகள் சூப்பர்…

  • மின்வெட்டை சாமாளிக்க மேற்கொள்ளப்பட்ட நீண்ட காலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு போதிய அறிவு இல்லை என்றும் சொல்லலாம்.

    மீண்டும்

    யுவகிருஷ்ணாவுக்காக அதிஷா

  • இந்த பிரம்மாண்ட ஊழல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கைகள் எடுக்கத் தயங்காதவர் ஜெயலலிதா மட்டுமே என்பதால் அதிமுக வுக்கு இந்த வெற்றி சாத்தியமாயிருக்குமோ

  • நன்று. உங்கள் ஆசையை ஆலோசனையாக சொல்லி இருக்கிறீர்கள். இந்தத் தோல்விக்கெல்லாம் அவர் அரசியலை விட்டு விலகிவிடும் அளவுக்கு தொட்டாற்சுருங்கி அல்ல என்று எனக்கும் சொல்ல ஆசைதான். ஆனால் என்ன சொல்ல? அவர் வயசு என்னை யோசிக்க வைக்கிறது. அவரது உழைப்புக்கு, அனுபவத்துக்கு, விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு, சாதுரியத்துக்கு இன்ன எல்லாவித குணங்களுக்கும் அவரது குடும்ப ஆட்சி மட்டுமே சாவு மணி அடித்துவிட்டது துர்ப்பாக்கியம்தான். கலைஞரை மற்றும் அவரையொத்த அரசியல் செய்வபர்களை கருவறுக்க்வென்றே சமயம் பார்த்திருந்த “சக்திகளுக்கு” இது வாகான நேரம். அடித்து விளையாடட்டும்.
    :-). குடும்ப ஆட்சி, உ.பி.ச, மனைவி மற்றும் மச்சான்கள் மூலம் தொடருவதை கண்குளிரக் காண, அதைக் கண்டும் காணாதபடி பேண, நீங்களெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். வாழக வளமுடன் 🙂

    //கலைஞர் ஒரு காரியம் செய்யலாம். இதற்குமேலும் தாமதிக்காமல் அரசியலில் இருந்து விடைபெறலாம். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்துவிட்டு முற்றிலும் ஒதுங்கி நிற்கலாம். இது இன்னொரு வகையிலும் நல்லது. சகோதரச் சண்டை எந்த எல்லைவரை போகும் என்பதைப் பதவியில் இல்லாத இந்த ஐந்தாண்டுகளில் தெளிவாகப் பார்த்து, கவனித்து, உரிய வைத்தியம் பார்க்கலாம். திமுக என்னும் கட்சி தமக்குப் பிறகும் தமிழகத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பக்கூடியவராக இருந்தால் அவர் இதைத்தான் இப்போது செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது சகோதரர்கள் முட்டிக்கொண்டு கட்சி இரண்டாகப் பிளக்குமானாலும் ஒரு வகையில் நல்லதே. பொய்யான மாயக்கனவுகளில் மூழ்கித் திளைத்து, உருண்டு விழுந்து எலும்பு நொறுங்குவதைவிட, உண்மையை அதன் முழுத் தகிப்புடன் நேருக்கு நேர் எதிர்கொள்வதே கலைஞருக்கு, அவரது நீண்டநெடுநாள் அரசியல் அனுபவத்துக்கு கௌரவம் சேர்க்கக்கூடியது.//

  • எந்த ஒரு உண்மையான கட்சி தொண்டனுக்கும் தனது கட்சி சீர்கெட்டு இருப்பதை பார்த்து சகித்து கொண்டிருக்க முடியாது. நான் தேர்தலுக்கு முன்பே நிறைய காங்கிரஸ் நிர்வாகிகாளுடன் பேசி இருக்கிறேன் அதில் நிறைய ஆட்கள் காங்கிரஸில் சீட் கேட்டிருந்தவர்கள் அவர்களே கூட தோற்றுப்போய்விடுவோம் இருந்தாலும் நாமும் களத்துக்கு வருவதுதான் முக்கியம் என்றார்கள் இன்னும் நிறைய நிர்வாகிகள் காங்கிரஸ் 0 பூஜ்ஜியம் வாங்க வேண்டும் அப்போது தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸை கவனிக்கும் என்றார்கள்.அது போலத்தான் நானும் பாராவை பார்க்கிறேன் தமிழக காங்கிரஸில் அவர் பொருப்பில் இல்லாவிட்டாலும் அவருக்குள் ஒரு காங்கிரஸ் காரன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை இந்த கட்டுரையில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

    காங்கிரஸின் உண்மையான எல்லாத் தொண்டனும் நினைத்ததை போன்றுதான் பாராவும் விருப்பட்டார் என்றால் அவரும் எங்கள பேரியக்கத்தின் ஒர் அங்கம்தான்.

    காங்கிரஸின் உண்மைதொண்டன் பாரா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • //என்னதான் நல்லாட்சி புரிந்தாலும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாத்திப்போடு ஓட்ட என்கிற மக்களின் முட்டாள்த்தனமான மனநிலையுங்கூட இத்தோல்விக்கு காரணமாக கருதலாம்//

    யுவகிருஷ்ணாவுக்கான அதிஷா,

    இது சரியான கூற்று! இதே முட்டாள்தனமான மனநிலையினால்தான் 1996 மற்றும் 2006’ல் கலைஞர் ஆட்சியை பிடித்தாரா? என்பதை தெளிவாகக் கூறுமாறு தங்களை பணிக்கிறேன்! கிறேன்!! றேன்!!!

  • //விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு//

    ஹிஹி மிஸ்டர் மூக்கு சுந்தர்.

    (அது சரி.. நீங்களும் அவருக்கு சொந்தக்காரர் தானே!)

  • கீழே விழுந்தாலும் மண் ஓட்ட வில்லை போல் உள்ளது
    அதிஷாவின் வாதம்.நூறு நல்லது என்று எதை சொல்கிறார்?
    அவர் தலைவரை போன்று மக்கள் எலோரும் சோற்றில்
    அடித்த பிண்டங்கள் என்று நினைத்து விட்டாரோ?

  • யார் அரசியலுக்கு வந்தாலும் அரசியல்வாதிகளை 2 பிரிவாகதான் பிரிக்க முடியும் 1 அயோக்கியன் 2 மோசமான அயோக்கியன். இனி அரசியலுக்கு வர்ரவனெல்லாம் முன்னாடி இருந்தவர்களே தேவலாம் என நினைக்கும் படி கடைஞ்செடுத்த அயோக்கினா தான் இருப்பாங்க. மாட்டிகாம கொள்ளையடிக்கறது. கொள்ளையடிச்சிட்டு மாட்டிக்காம தப்பிக்கறதுல கில்லாடிகள் வருவாங்க. நல்லாட்சி என்பது எங்க தலைவர் எம்.ஜி.ஆரோட முடிஞ்சி போச்சி. 2,3 மணி நேர பவர் கட்டுக்கே மக்கள் இப்படி பேசுறாங்களே. வருங்காலத்தில் 24மணி நேர பவர்கட், 1வார பவர்கட்டேல்லாம் வர போகுதே அப்ப மக்கள் என்ன செய்ய போறாங்க ? பாப்போம், என்ன இப்படி பேசுறேன்னு பாக்காதீங்க கடந்த காலம் எப்படி இருந்தது நிகழ்காலம் எப்படி இருக்குங்கறத வச்சே எதிர்காலம் எப்படி இருக்கும்கறத சொல்லிடலாம்.

  • ஒவ்வொரு எழுத்தும் சும்மா நறுக் நறுக்!!!
    //அடுத்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத செயல்திட்டமாக, தேமுதிகவை காலி பண்ணுவதே இருக்கும் என்று தோன்றுகிறது.//
    ஐயா உங்க வாக்கு பலிக்கணும்!
    சினிமாகாரனை விட்டா நம்மை ஆள ஒரு நாய்க்கும் அருகதை இல்லையா?
    தமிழ்நாடு இனீ மெல்ல சாகும்!

    //இவர்களது அறமற்ற அரசியல் பட்டி தொட்டியெங்கும் நாறி, காங்கிரஸை ஒரு ஷகிலா பட அளவுக்கே மதிக்கமுடியும் என்று தீர்ப்பாகிவிட்டதில் சந்தோஷமே.//

  • //@மாயவரத்தான் கட்சிக்காரர் இல்லை. @மாயவரத்தான் கட்சிக்காரர் இல்லை. @மாயவரத்தான் கட்சிக்காரர் இல்லை. @மாயவரத்தான் கட்சிக்காரர் இல்லை. @மாயவரத்தான் கட்சிக்காரர் இல்லை. @மாயவரத்தான் கட்சிக்காரர் இல்லை.//

    நாங்க நம்பிட்டோம்! 😉
    வலைதள வாரிய தலைவர் மாயவரத்தான் அண்ணன் வாழ்க!

  • நாம் என்ன தான் இங்கே கரடியாய்க் கத்தினாலும் சம்பந்தப்பட்டவர் காதில்
    விழப் போவதில்லை, விழுந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதுமில்லை!…
    பாசக் கிளிகள் படத்தைப் பார்த்து எத்தனை பேர் கதறினார்கள்…..கலைஞர் கொஞ்சமாவது செவி மடுத்தாரா?….அடுத்து பெண் சிங்கம் என்றார்!…..சினிமாவையே விடாதவர் பதவியை எப்படி விடுவார்!…..
    ஸ்டாலின் தாத்தா ஆயிட்டாருன்னு யாராவது அவருக்கு சொல்லுங்கப்பா!…..

  • என்னைப்போன்ற பலரது எண்ணங்களை மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். நன்றி. ஒரு கார்பரேட் கம்பெனியில் அப்ரைசல் செய்யும்போது, போன முறை ‘உன்னத’ ரேட்டிங் வாங்கியவர்கள் இந்த முறை ‘மிக சுமார்’ ரேட்டிங் வாங்குவது சகஜமாக இருக்கிறது. ஆனால், அதையே ஒரு வாக்காளன் செய்யும் பொது, கட்சி நிறமும் குணமும் போர்த்தப்படுகிறது. 🙁

    இதையும் கொஞ்சம் பாருங்களேன் – (நான் எழுதியது)

    https://www.facebook.com/note.php?note_id=198712053507333

    https://www.facebook.com/note.php?note_id=199243096787562

  • ஊழலா ? அப்படி ஏதாவது நடந்ததா? ஊடங்கங்கள் ஊததி ஊதி பொய்யை பரப்புகின்றன என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கட்சி சார்பாக ஆங்கில ஊடங்களில் பேச வரும் குஷ்பு பற்றி என்ன நினைக்கிறீங்க?

    http://www.virutcham.com/2011/05/குஷ்புவும்-ஆங்கில-ஊடகங்க/

  • //மற்றபடி ஜெயலலிதா பெரிய அளவில் எதற்காக வீதி இறங்கிப் போராடியிருக்கிறார்? //

    லேட்டா வந்தாலும் லேட்ஸ்ட்டா என்ட்ரி ஆகி ஜோக்கர் என்று முத்திரை குத்தி வைத்திருந்த சுப்ரமணிய சாமி தூக்கிப் போட்ட துருப்புச் சீட்டை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றினார் ராணி என்று கூட இதைச் சொல்லலாம் இல்லையா.

  • எல்லாம் எழுதுறீங்க!….நீலக் காகத்தைத் தவிர!……

  • @மிஸ்டர் நாக்ஸ் – ஜெ செய்திராத ஊழலா.. அதுவும் திமுக போல தலையில் துண்டைப்போட்டுகிட்டு விஞ்ஞானரீதியில் எல்லாம் திருடினாலுங்கூட பரவாயில்லை. தைரியமாக வெட்டவெளிச்சமாக பெட்ரமாக்ஸ் லைட்டு போட்டு ஊரைக்கூட்டி வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து ஊழல் செய்தவர்தானே ஜெ! அவரிடம் மானாவாரியாக உதை வாங்கும் போதெல்லாம்தான் கலைஞரின் அருமை புரிகிறது இந்த முட்டாள் ஜனங்களுக்கு!

    மீண்டும் யுவாவுக்காக நண்பேன்ங்க! 😉

  • @SAN – பாஸ் மக்கள் நிஜமாகவே கொஞ்சம் மறைகழண்ட கேஸாகத்தான் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் விக்கலுக்கு தண்ணி குடிக்காம விஷத்த குடிப்பாய்ங்களா?

  • இக்கட்டுரைக்கு பதிலெழுதும் நண்பர்கள் கவனத்துக்கு. இந்தத் தளம் தொடங்கிய நாளாக இன்றுதான் என் விருப்பத்துக்கு முரணாக சுமார் இருபது முதல் முப்பது கமெண்ட்களை டெலீட் செய்யவேண்டியிருந்தது. வீட்டை விட்டுப் புறப்படும்போது சட்டை, பேண்ட் அல்லது வேட்டி-மேல் துண்டு அணிந்து செல்லவேண்டுமென்பது குறைந்தபட்ச நாகரிகம் என்பதுபோல் எழுத்துக்கும் ஒரு குறைந்தபட்ச நாகரிகம் உண்டு. தனி நபர்களை, இயக்கங்களை, சம்பவங்களை – எதையும் விமரிசிப்பது தவறல்ல. ஆனால் மொழி நாகரிகம் அவசியம். அருவருப்பான, குமட்டலை வரச்செய்யும் கமெண்ட்களை தயவுசெய்து இங்கே எழுதாதீர்கள். எத்தனை முறை ரீ-பப்ளிஷ் செய்தாலும் அவை பிரசுரமாகா. தொடர்ந்து கேவலமான கமெண்ட்கள் வந்துகொண்டிருந்தால் இப்பகுதியை மூடிவைக்கவேண்டி வரும்.

  • எல்லா கட்சிகளையும் அலசிவிட்டீர்கள், மதிமுக வின் நிலை எப்படியிருக்கும்? என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத செயல்திட்டமாக, தேமுதிகவையும் மதிமுகவையும் சேர்த்து காலி பண்ணுவதே இருக்கும் என்று தோன்றுகிறது….. கருணாநிதி ஓய்வு எடுத்தால் இனி ஸ்டாலின் முதல்மைச்சர் ஆவது பகல் கனவுதான்…..

    BTW:
    ஓவ்வருநாளும் நீலக்காகத்தை எதிர்பார்த்து ஏமாறுகின்றோம்….. ஞாயிறு பறக்கும் என்றீர்கள், இன்னும் பறக்கவில்லை… நீங்களும் அரசியலில் ஈடுபடலாமே?????? 🙂

    • ஒரு வாசகன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்: நீலக்காகம் அடுத்த சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன். இன்னும் எடிட் செய்யவில்லை. போதுமான அளவு திருப்தி தராததால் தாமதமாகிக்கொண்டிருக்கிறது.

  • //இவர்களது அறமற்ற அரசியல் பட்டி தொட்டியெங்கும் நாறி, காங்கிரஸை ஒரு ஷகிலா பட அளவுக்கே மதிக்கமுடியும் என்று தீர்ப்பாகிவிட்டதில் சந்தோஷமே.//

    வண்மையாக கண்டிக்கிறேன். இந்த வரிகளை.

    வீட்டை விட்டுப் புறப்படும்போது சட்டை, பேண்ட் அல்லது வேட்டி-மேல் துண்டு அணிந்து செல்லவேண்டுமென்பது குறைந்தபட்ச நாகரிகம் என்பதுபோல் எழுத்துக்கும் ஒரு குறைந்தபட்ச நாகரிகம் உண்டு. தனி நபர்களை, இயக்கங்களை, சம்பவங்களை – எதையும் விமரிசிப்பது தவறல்ல. ஆனால் மொழி நாகரிகம் அவசியம்.

    • திரு காமராஜ், நான் உபயோகித்த மொழியில் எந்தப் பிழையும் இருப்பதாக நான் கருதவில்லை. சொல்ல நினைத்ததைச் சரியான சொற்களிலேயே வெளிப்படுத்தியிருக்கிறேன். நான் மொழி நாகரிகம் என்று குறிப்பிட்டது, மூத்திரச் சந்து சொற்களை உபயோகிக்காதிருப்பது குறித்து.

  • //பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற சந்தர்ப்பவாத உதிரிகள் இந்தத் தேர்தலில் நிர்த்தாட்சண்யமாக அடித்துத் துரத்தப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.//

    இது நிசமாகவே சந்தோஷப்பட வேண்டிய விஷயமா என்று தெரியவில்லை. கொள்கைகளை மறந்து , இன்னொரு கருணாநிதியாக முயற்சி செய்த ராமதாஸும், என்ன காரணத்துக்காகவோ, கலைஞரை, வல்லவரு நல்லவரு என்று விடாமல் தூக்கிப் பிடித்து சப்பை கட்டுக் கட்டிக் கொண்டிருந்த திருமாவளவனும் தேர்தல் தோல்வி மூலம் தண்டிக்கப்படவேண்டியவர்களே. ஆனால், இந்தத் தோல்வி, பா.ம.க மற்றும் வி.சி கட்சிகள் தொடங்கப்பட்டதற்கான காரணங்களை இல்லாமல் ஆக்கிவிடாது.

  • 1.மீண்டும் “க” வருவது “க” கையிலும் “ஜெ” காலிலும் தான் உள்ளது.

    2.”வி”க்கு இது ஒரு அரிய வாய்ப்பு!சரியாக பயன் படுத்திக்கொண்டால் 2016 இல் தனியாகவே “வி” காண்பிக்கலாம்.இல்லையெனில் “வீ” க்கு போக வேண்டியதுதான்!

    3.”வி” ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது “ஜெ”யிடம்.அவர் நிச்சயமாக தள்ள முயற்சிப்பார்.மேலும் “க” வும் “கா” வும் அவராய் இழுக்க முயல்வர்.என்ன முயற்சித்தாலும் மயங்கி விட கூடாது.

    4.”க” “க” முறையாக அவருடைய பிரம்மாஸ்திரத்தை எடுப்பார்.(கூடிய விரைவில்)அதற்கு “வீ ” மிகவும் துணை போவார்.

    5.”ஜெ” “ச”விலிருந்து விலகி இரண்டு “சோ”விடமும் (வல்லினம்,மெல்லினம்)நெருங்க முயற்சிப்பார்.ஆனால் வல்லினம் அவரை மெல்லினத்துடன் சேராமல் பார்த்துக்கொள்வார்.

    6.மொத்தத்தில் தமிழக வாக்காளர்கள் போலி ஸ்டாலினை நிராகரித்து விட்டது தெரிகிறது. ஆனால் தேர்ந்தெடுத்துள்ளது நிஜத்தையா என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தெரியும்!

  • “மற்றபடி திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் கொலைவெறியோடு ஓட்டுப்போட்டதாக சொல்வதெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாதது.”

    வேறென்ன ? ஜெ.வை ஆட்சிபீடத்தில் அமர்த்தி அழகுபார்க்கவேண்டுமென்று தமிழகமே தவமிருந்தது என்றா சொல்வீர்கள் ?

    இந்த தேர்தலில் விளைந்த நல்ல விஷயங்களாக நீங்கள் பார்க்கும் பா.ம.க தோல்வி (வி.சி தோல்வி நல்லது என்று என்னால் ஒப்புக்கொள்ள இயலாது, அவர்களுக்கு வலுவான அரசியல் குரல் தமிழகத்தில் வேண்டும் என்பதே என் எண்ணம்), காங்கிரஸின் கேவலமான தோல்வி போன்றவற்றை நானும் மகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறேன்.

    வணிகர்களான மாறன்கள் (இளையவர் “அன்னை”-யை Aunty என்றுதான் விளிப்பாராமே ?) காங்கிரஸில் ஐக்கியமாகப்போவதாக செய்தி படித்தேன். மு.க தனது வயதான காலத்தில் விதைத்ததை அறுக்கப்போகிறார் போல தெரிகிறது.

    மற்றபடி கட்சி தொடர்பான உங்களது ஆலோசனை அவ்வளவு உசிதமாக இல்லை. அப்படி நிகழ்ந்தால் தந்தைக்குள்ள அனைத்து சாமர்த்தியங்களும் இருந்தாலன்றி தனயனால் தி.மு.க, ம.தி.மு.க போலாவதை தடுக்க இயலாது. ஜெ-வுக்கு இவ்விஷயத்தில் வேலையே இல்லாமல் போகும். இதே விஷயத்தை பதவியில் இருக்கும்போதே செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். (ஞாநி எழுதியதை இப்போது நினைவுகூர்வாராக இருக்கும்)

    ஜெ-வின் கல்யாண குணங்கள் அவரை மாறவிடாது என்பதால் அவரது ஆட்சி முந்தைய அவரது ஆட்சியைவிட மேம்பட்டதாக இருக்காது என்பதே என் கணிப்பு. ராஜகுரு வேறு பின்னணியில். (நெருப்பு, சாக்கடை வசனத்தை இப்போது அவரால் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை) பார்ப்போம்.

    அன்புடன்
    முத்து

  • Makkalai “muttalgal” endru solradhu thalaivar style mattum illai..thondargalukum style pola.

    Thondargalal thelivaga sidhika mudivadhillai..makkalal mudigiradhu..makkal aatchiyil makkal sindhanaiye sariyana sindhanai..maatru karuthu irundhal makkal karuthai mattrum alavu karuthaaga iruka vendum.

  • “கருணாநிதி ஓய்வு எடுத்தால் இனி ஸ்டாலின் முதல்மைச்சர் ஆவது பகல் கனவுதான்”

    அந்தக் கவலையே வேண்டாம். ஜெ இவ்விஷ்யத்தில் மிக மிக நன்றி மறவாதவர். திரு.மு.க வெள்ளித்தட்டில் வைத்து அவருக்குக் கொடுத்த வாய்ப்பை மறவாது தங்கத்தட்டிலேயே வைத்து திருப்பித்தருவார்.

  • “என்னதான் நல்லாட்சி புரிந்தாலும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாத்திப்போடு ஓட்ட என்கிற மக்களின் முட்டாள்த்தனமான மனநிலையுங்கூட இத்தோல்விக்கு காரணமாக கருதலாம்”

    பிறகு எப்படி எம்.ஜி.ஆர் மட்டும் ஆட்சிக்கட்டில் ஏறின நாள்முதல் மறைவு வரை இறங்காமலே இருந்தார் ? அப்போது ஓட்டுப்போட்ட மக்களுக்கு புத்திசாலியான மனநிலை இருந்ததோ ?

  • கண்பத்,

    மிகவும் ரசித்தேன். 4-ல் உள்ள வீ யாருங்க ?

  • திமுகவின் தோல்வியை நானும் எதிர்பார்த்தேன்.எல்லோரையும் போல.
    பாலில் சிறிது மயக்கமருந்து கொடுத்து ஓய்வெடுங்கள் சிறிது காலம் என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.ஆனால் கள்ளிப்பால் புகட்டுவார்கள்
    என்று கனவிலும் நினைக்கவில்லை.
    போகட்டும்.கள்ளிப்பால் அருந்திய பின்னும் உயிர் பிழைத்தவர்கள் இல்லையா என்ன?

  • பாராட்டிற்கு நன்றி முத்து!

    விளக்கம் கேட்டதற்கு அதை விட நன்றி!!

    4 லில் உள்ள “வீ”=வீரமணி!
    இப்போ பிரம்மாஸ்திரம் எதுன்னு தெரிஞ்சுடுத்தோன்னோ!!

  • @ அதிஷ…எவ்வளாவு அடிச்சாலும் வலிக்காத மாதரியே இருக்கீங்க, நீங்க ரொம்ப நல்லவருங்க. திமுக செய்து நூறு நல்லதுகளை நாலு கெட்டதுகள் ஒட்டுமொத்தமாக பாழாக்கின. திமுக எந்த ஒரு திட்டத்தை எடுத்தாலும் தனக்கு கட்டிங் இல்லாத திட்டத்தை தொடாது. நாலு கெட்டதுகள் அல்ல நானூறு கெட்டதுகள். ஆனால் நாலு பிரதான கெட்டதுகள் அவையாவன கனிமொழி ராசாத்தி, அண்ணாண் அஞ்சாநெஞ்சன் அழகிரி, ஸ்டாலின், மற்றும் பிற குடும்பத்தார்கள்.

    2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது, 3 ஆண்டக்கு பிறகு 2009ல் வந்த நடாளுமன்ற தெர்தலில் திமுக கூட்டணி 29 இடங்கள் பெற்றது. எதிர்ப்பு அலைக்கு 3 ஆண்டுகள் எதேஷ்டம். ஆனால் குத்துங்க எசமான் குத்துங்கன்னு திமுகாவுக்கு குத்தினாங்களே ஏன். மக்கள் சோற்றாலடித்த பிண்டங்களாயிருந்தால் ஏன் மாற்றிப் போடவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த தேர்தலில் மக்கள் பரம அடி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த காலத்திய அரசியல் நிகழ்வுகளை ஆராயுங்கள். திமுக மெத்தனப் போக்கும் மக்களின் புத்திசாலித்தனமும் தானே புரியும். நீங்க சொல்வது போல் மாத்தி போடும் மனநிலை, நல்லாட்சி எல்லாம் வீண் பேச்சு.

    இதிலிருந்து திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் கொலைவெறியோடு ஓட்டுப்போட்டதாக சொல்வதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

  • //மின்வெட்டை சாமாளிக்க மேற்கொள்ளப்பட்ட நீண்ட காலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு போதிய அறிவு இல்லை என்றும் சொல்லலாம்.

    மீண்டும்

    யுவகிருஷ்ணாவுக்காக அதிஷா//
    இது எங்குமே கேள்விப்படாத விஷயம். என்ன அந்த நீண்ட கால திட்டங்கள்?

  • //சற்றும் குறையாத விலைவாசி, தொடர் மின்வெட்டு, அடி மட்டத்திலிருந்து ஆரம்பித்து அதிகாரப் படிக்கட்டின் உயர்நிலைகள்வரை அனைத்துத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஊழல், லஞ்ச லாவண்யங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்//

    இந்த பட்டியலில் அப்படியே மு.க அவர்களின் கை வண்ணத்தில் வெளிவந்த திரை படங்களையும் சேர்த்த கொள்ளுங்கள்!

  • பாரா

    உங்கள் எழுத்துகளை நான் நிறைய படித்து இருக்கிறேன். இந்த பதிவும் நன்றாக உள்ளது. ஆனால் ஒரு கருத்தில் நான் வேறுபடுகிறேன்.

    இராமதாசு மற்றும் திருமா – இருவரும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்திகள். திமுக எதிர்ப்பு அலையில் அவர்கள் தோற்று போனது மிக மிக வருத்தமான விசயம். ஈழத்து ஆதரவாளர்கள், தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர்கள். அதிலும் குறிப்பாக தலித் மக்களின் விடுதலைக்கு 25 ஆண்டுகள் போராடி வருபவர். எழுச்சி தலைவன் என்பதை மறுக்க முடியாது. தலித் மக்களின் அங்கீகாரம் முக்கியம் அல்லவா? பொதுவாக மக்கள் பிரச்சினைகளில், ஈழத்து விடுதலை, தமிழ் தேசியம் இப்படிப் பட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து போராடி வருகின்ற திருமாவின் சட்டசபை அங்கீகாரம் முக்கியம் அல்லவா?

    இவர்கள் தோற்று போனது வருத்தப் பட வேண்டிய விசயம். மகிழ்ந்தால் ” மேட்டிமை” அல்லவா?

    நன்றி

    மயிலாடுதுறை சிவா…

  • தி மு க தோற்றது மிக நல்லது .ஆனால் அ தி மு க அப்படி ஒன்றும் நல்ல
    ஆட்சி தந்துவிடாது.உ பி ச கூட்டம் ,மற்றும் உறவினர்கள் தலையீட்டால்
    மேலும் கீழ் தரமான ஆட்சி தான் நடைபெறும்.
    பாட்டாளி மக்கள் கட்சி ,மற்றும் உதிரிகள் போனது நல்லதுதான் .
    எனினும் மற்றொரு உதிரியான தே மு தி க வந்துவிட்டது .
    நம்ம தலைஎழுத்து .எஹிப்த் ,துனிசியா ,லெபனான் ,சிரியா போன்ற
    நாடுகளில் நடைபெற்ற கிளர்ச்சி வந்தால் தான் உண்டு .
    நல்ல தலைவர்கள் இனி உருவாவது தற்சமயம் சிரமம் தான் போல
    உள்ளது.

  • // ஒரு கட்சியை நடத்தத் தெரிந்தவருக்குக் குடும்பத்தை நடத்தத் தெரியாமல் போய்விட்டது என்று நாளைய சரித்திரம் பஞ்ச் லைன் எழுத இடம் கொடுக்காதிருக்கவேண்டியதே இப்போது அவர்முன் உள்ள மாபெரும் பொறுப்பு //

    அன்பான நண்பர் திரு பாரா – அவருக்கு தெரியவில்லை என்பது அல்ல இது. அவர் தெரிந்தேதான் செய்திருக்கிறார். ஜோசப்பு ஸ்டாலின் மற்றும் சிலபல கொடுங்கோலர்கள் கொலை தாண்டவம் ஆடியபொழுது பலர் சொன்னது – “ஸ்டாலினுக்கு தெரியாமல் செய்கிறார்கள், அவருக்கு மட்டும் இதெல்லாம் தெரிந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது” — இது எல்லோரும் நம்ப விரும்பிய பொய்!! அவ்வளவே!!!

    கலைஞருக்கு எல்லாம் தெரியும். ஏதோ அவரின் வாரிசுகள் அவருக்கு தெரியாமல் ஆடினார்கள் என்று நினைப்பது நம்மின் அறியா தன்ம்மையை
    மட்டுமே காட்டுகிறது! அதற்க்கு மேல் ஒரு படி போய், அவர் அத்தகைய நடவடிக்கைகளை ரசித்தார், ஊக்கப்படுத்தினார் என்று சொனால் அது மிகையாகாது! அது தெள்ளத்தெளிவாக தெரிகிற ஒன்று! தி மூ காவின் மேலும் கலைஞரின் மேலும் அபிமானம் வைத்தவர்களின் கண்களின் வேண்டுமானால் இது புலப்படாமல் போகலாம்!! ஆனால் நடந்தது என்னவோ அவரின் ஆசீர்வாதங்களுடன் நடந்த ஒன்றுதான்! எப்படி ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமண வைபோகத்தை மக்கள் ரசித்து, ஆஹா தாயுள்ளம் பாரீர் என்று நினைப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டாரோ, அதேபோல்தான் கலைஞரின் வாரிசு வைபோக கற்பனையும்!!

    அவரின் பார்வையில், அனுமானத்தில், தன்னின் வாரிசுகளின் வலம் வரும் வைபவம் ஒரு நல்ல “தரமான” குடும்பஸ்தனின் ஸ்திரமான குடும்ப அமைப்பின் விளம்பரம் என்பதுதான். அதை செய்வதனால் மக்கள் கண்முன் தன்னின் குடும்பம் நன்றாக உள்ளது, ஆதலால் அவரும் நல்லவர், அவரின் ஆட்சியும் நல்லதை செய்கிறது என்ற பிம்பம் உண்டாகிவிட்டது என்று நம்பத்தொடங்கி விட்டார்!! அதுதான் உண்மை.

    தன்னின் குடும்பத்தின் அத்து மீறல்கள் அதாவது சமுதாயத்தின் மீதான அத்துமீறல்களை சிறிதளவும் அவர் கண்டு கொள்ளவில்லை, ஏனென்றால் அவர் அதை தவறாகவே எடுத்து கொள்ளவில்லை. அவர் அத்து மீறலாக கண்ட ஒரே விடயம், மாறன் சகோதரர்கள் தன்னின் மகனை பற்றி எழுதிய ஒன்றைதான்!! அது மட்டும்தான் குடும்ப அத்துமீறல்! மற்றவை “நல்லதொரு”
    குடும்பத்தின் “எடுத்துக்காட்டான” வாழ்க்கை முறை!!!!

    இந்த ஆழத்தை புரியாமல் வியாக்கியானம் செய்பவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் ஆனாலும் அதிகார மேடையில் ருசிகண்ட மனிதர்களின் மனதை புரிந்து கொள்ளாதவர்கள்!!!

  • நண்பர் திரு பாரா – இந்த அலசல்களில் திரு அதிஷா போன்றவர்களின் அறிவார்ந்த தாமாஷுகள் வேறு!!!

    திரு லக்கி போன்றவர்கள்தான் நாக்கில் நரம்பில்லாது பேசுவார்கள் என்று நினைத்தேன். அன்னாரின் நண்பேண்டாவானாலும் திரு அதிஷா போன்றவர்கள் ஓரளவுக்கு சென்சிபிலாக பேசுவார்கள் என்பது என் நினைப்பு!! ஆனால் திரு லக்கி என்ற பொய் பேசும் அறிவாளியின் நட்பு உண்மைகளைவிட அவருக்கு பெரிதாக படுகிறது! தப்பில்லை அது அவரின் இஷ்டம்! ஆனால் அதற்காக இங்கே வந்து திரு லக்கியின் திருவாய் மொழிகளை கொட்ட வேண்டாம்!
    அதான் திரு லக்கி அவர்கள் ஒரு பதிவு போடுகிறாரே அங்கே பொய் கும்மாளம் அடித்தால் நன்பெண்டாவுக்கு நன்பெண்டாவாச்ச்சு நமக்கும் தொல்லை போச்சு!!

    திரு லக்கி அவர்கள் புத்தகங்கள் எழுதியது பழையகதை! ஏதோ கட்டுரைஎல்லாம் எழுதுகிறாராம்!!! அவர் பதிவுகளை, அதாவது ஒரு பிரபலத்தை பற்றி புத்தகம் எழுதும் நிலையில் உள்ள ஒருவரின் அரசியல் சார்ந்த பதிவுகளை மட்டும் ஒரு மாதமாக படித்து பார்த்தேன் (அவரின் கதைகளை எல்லாம் படித்து பார்த்து ரசிக்கும் ஞானமோ மூளையோ எனக்கு இல்லாததனால் அதை எல்லாம் நாம் படிப்பதில்லை) !! புதிய தலைமுறை என்ற பெயருள்ள பத்திரிக்கைகளில் எல்லாம் அவர் கட்டுரை எழுதுவதாக புரிந்து கொண்டேன்!!! ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், “பாவம் புதிய தலைமுறை”!!

    The collective intellect of a society is certainly not defined just by a aprodigious output of articulate imbeciles.Such articulation is only akin to a claim by a drunkard of having a daily systematic bowel movement. Such an effort offers nothing to a society except for the purpose of pushing out unwanted things and finding a place to do so!!
    When such innanity is put on a pedestal and rewarded the status of that society sinks and the intellect that sustains the culture of that society corrupts. While such nonsense that projects and self propels itself exist in every society, the culture rich society “defines” itself by identifying such and showing them where they belong which is the garbage dump!! I feel கிழக்கு team are in that position to be a part of those that “define”!! However, having already seen திரு மருதன், i am not sure if you want to in the first place!!!!

    (திரு லக்கி பற்றி எதற்கு என் பதிவில் என்று நீங்கள் கேட்பது புரிகிறது! ஆனால் என் ஸ்டைல் என்பது, நேரம் கிடைக்கும்பொழுது, பார்க்கும் இடத்தில் connection இருந்தால் எழுதிவிடுவேன். போடுவதும் போடாததும் உங்கள் இஷ்டம்!)

  • வெளியிட்ட உடனே வந்து படித்து விட்டு சென்றேன். நிச்சயம் மப்பில் வந்து குத்தி குதறப்போகிறார்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

    அழித்த 30 விமர்சனங்களை யோசித்துப் பார்க்கின்றேன். நிறைய விசயங்களை எழுதலாம் .

    ஒரே ஒரு விசயம் மட்டும் கலைஞர் குறித்து எப்போதும் உறுதியாக என் மனதில் எப்போதும் உண்டு.

    கலைஞர் தொடக்கத்தில் கட்சி என்று வட்டத்திற்குள் வந்தது முதல் இப்போது கும்மாங்குத்து வாங்கியது வரைக்கும், மகள் செல்வி தான் வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வந்து கொடுத்த போது புகைப்படத்திற்கு சிரிக்கக்கூட வலுவில்லாமல் தேமே என்று பார்த்துக் கொண்டிருந்த வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மற்றவர்களின் பலவீனத்தை வைத்தே வளர்ந்தவருக்கு சாகும் தருவாயில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது ஒன்றே போதும்.

    மக்கள் மாக்கள் அல்ல என்பதை உணர்ந்து இருப்பார். நலத்திட்டம் நலத்திட்டம் என்று சொன்னது எல்லாமே எந்த மக்களின் நலத்திட்டம் என்று அவர் கொடுத்த தொலைக்காட்சி பெட்டி வாயிலாகவே பார்க்க வைத்து விட்டார்.

    மொத்தத்தில் இராணுவ மரியாதை போயே போச்சு. பத்தோடு ஒன்று. அத்தோடு இவரும் ஒன்று. இன்னும் 2014 பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் இந்தம்மா கொஞ்சம் பக்குவமா செயல்பட்டால் திமுக கட்சியில் மிச்சம் மீதியும் பணால். உபிக்கள் உடனே சிலிர்த்து வரும் சீறும் சிங்கமாய் வரும் காமெடி செய்ய வரப்போகிறார்கள்.

    ஆனால் இந்த விமர்சனத்தில் நான் ரொம்பவே மனம் விட்டு சிரித்த விமர்சனம்.

    பாசக் கிளிகள் படத்தைப் பார்த்து எத்தனை பேர் கதறினார்கள்…..கலைஞர் கொஞ்சமாவது செவி மடுத்தாரா?….அடுத்து பெண் சிங்கம் என்றார்!…..சினிமாவையே விடாதவர் பதவியை எப்படி விடுவார்!…..

    கட்டுரையில் நிறைய மகிழ்ச்சி. அப்புறம் நிறைய ஒற்றுமை. யோசிப்பதில் கூட. குறிப்பாக சங்கு ஊதி இறுதிப் பாலூலூ ஊத்திய தங்கபால் குறித்து…………..

    சீமானைப் பற்றி இதுவரையிலும் எதுவும் உங்கள் எழுத்தில் வரவில்லையே?

  • திரு.நோ..

    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி..எனக்குத் தோன்றியதும் கிட்டத்தட்ட அதுதான்.
    சமூகத்தின் தரம் என்பது பல துறைகளில் இவ்வாறான கருத்துளறல்களால் நீர்த்துப் போகிறது என்பது உண்மை.
    ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை தமிழில் எழுதியிருக்கலாம்….
    🙂

  • பாராட்டுக்கு மிக்க நன்றி ஜோதிஜி………….

  • May17 9:43pm நான் கீழ்கண்ட பின்னூட்டம் இட்டிருந்தேன்:
    4.”க” “க” முறையாக அவருடைய பிரம்மாஸ்திரத்தை எடுப்பார்.(கூடிய விரைவில்)அதற்கு “வீ ” மிகவும் துணை போவார்.
    4 நாட்களுக்குள் இது பலித்து விட்டது
    நேற்று அளித்த பேட்டியில் அவர் கீழ் கண்டவாறு சொல்லியிருக்கிறார்:
    //என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர்.//
    (தினமலர் செய்தி)
    ஆச்சு சாமி சொல்லியிடுச்சு இனி பூசாரி (வீரமணி)ஆட ஆரம்பிச்சுடும்!
    Shame on you x CM! தேர்தலில் மரண அடி வாங்கியும் புத்தி வரலையே!Do not become xxx CM

  • “ஒரு மக்குப்பையன் பரீட்சை எழுதி பூஜ்ஜியம் பெறுவதற்கு ஒப்பான தோல்வி.”

    “அடுத்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத செயல்திட்டமாக, தேமுதிகவை காலி பண்ணுவதே இருக்கும் என்று தோன்றுகிறது.

    “ஐந்தாண்டுக் காலம் கொசுத்தொல்லை இல்லாமல் மக்கள் வாழலாம்.”

    “தங்கபாலு போன்ற அரசியல்வாதிகளுக்கும் அவர்களது வழிகாட்டலில் வளரும் கட்சிகளுக்கும் இனி தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

    -கிளாசிக்..

  • நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –

    ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

    chennai.iac@gmail.com
    iacchennai.org

    சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222

    சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
    9710201043

    சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168

    சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079

    பகத்சிங்

  • தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –

    ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

    chennai.iac@gmail.com
    iacchennai.org

    சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222

    சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
    9710201043

    சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168

    சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079

  • don’t press your ideas in tamil community still now. J or Karunananithi not thing any thing in tamils of srilanka. Actually Tamil nadu publics ealier to voting Karunanithi during the period of war in north. So don’t make lies in your surroundings. Jey to Jey’s Victory

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி