கனிமொழியைத் தூற்றாதீர்கள்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சுட்டிக்காட்டப்பட்டு, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இருவார கால நீதிமன்ற விசாரணைக்காக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுநாள்வரை வேறு எந்தக் கைது நடவடிக்கைக்கும் இல்லாத அளவு, இந்தச் செய்தி வெளியானது முதல் இணையத்திலும் வெளியிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆவேசத்தையும் ஒருங்கே பார்க்கிறேன். தமிழகப் பொதுத் தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாகியிருந்தால் இன்று இச்சம்பவம் நடைபெற்றிருக்குமா என்று தொலைபேசியில் இது குறித்து உரையாடிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். தெய்வமும் இப்போதெல்லாம் உடனுக்குடன் கணக்குகளை பைசல் செய்துவிடுகிறது என்று ஒருவர் சொன்னார். சென்ற வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தன, இந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஏதாவது அவசியம் நடக்கும் பாருங்கள் என்று இன்னொரு நண்பர் கலைஞரின் புதிய வெள்ளிக்கிழமை ராசி குறித்து அறிவித்தார். அவரே. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆ. ராசா திகார் சிறையில் இருக்கிறார், கலைஞர் எப்படி அம்போவென்று அவரைக் கழற்றிவிட்டுவிட்டார் பாருங்கள்! அந்தப் பாவத்துக்கு இது சரியான தண்டனை என்றும் சொன்னார்.

நிச்சயமாக ஒரு பெரிய முறைகேடு / மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆ. ராசாவில் ஆரம்பித்து கனிமொழியில் முடிகிற விஷயம் இல்லை இது. எத்தனை காலம் விசாரணை நீளப்போகிறதோ தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஏராளமான பெரும்புள்ளிகள் உள்பட இந்த அலையில் அடித்துவரப்போகிற அழுக்குகள் அதிகமாகத்தான் இருக்கப்போகிறது. தேசிய அளவில், சாதி-இன-மத-மொழி-கட்சி பேதங்கள் கடந்து பலபேர் இணைந்து புரிந்திருக்கும் ஊழல் இது. ஏற்கெனவே டைம் பத்திரிகை வரை புகழ்பெற்றுவிட்டது. சுதந்தர பாரதத்தின் ஊழல் வரலாறில் தனிச்சிறப்பிடம் பெறப்போகிற முறைகேடு என்பது தெளிவாகிவிட்டது.

இதில் கனிமொழியின் பங்கேற்பும் கைதும் அத்தனை பெரிதா? மிக நிச்சயமாக, அவரைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பங்களிப்பு’ வேறு பலரால் செய்யப்பட்டிருக்கிறது. காலக்கிரமத்தில் அவையும் வெளிவரத்தான் போகின்றன. ஆனால் இந்தக் கைது சம்பவத்தைக் குறித்து குதூகலமாகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாகப் பாதகமான விளைவுகளையே உண்டாக்கும் என்று நினைக்கிறேன்.

கனிமொழி செய்தது என்ன?

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த டிபி ரியாலிடி குழுமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் [சினியுக்] மூலமாகக் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கிடைத்தது. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்களுள் ஒருவர் என்பதும் ஆ. ராசாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு இந்தச் சதிப்பின்னலில் ஒரு கண்ணியாக இருந்திருக்கிறார் என்பதும் அவர்மீதான குற்றச்சாட்டு. ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவையே. பிழை புரிந்தார், கைதானார். தீர்ந்தது விஷயம்.

இதை எதற்காகக் கொண்டாடவேண்டும்?

கருணாநிதி சந்திக்காத வழக்குகளா? அவர் கைதானதில்லையா? ஜெயலலிதா ஏறாத நீதிமன்றப் படிகளா? இந்த தேசத்தின் பிரதமராக இருந்தவர்கள் முதல் அரசியல் பெருங்கடலின் அலை வந்து கால் தொடும் தூரத்தில் மட்டுமே வசித்து மறைந்தோர் வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டோரையும் அவர்களது கைதுகளையும் விடுதலைகளையும் வழக்கு மறக்கடிப்புகளையும் மற்றவையையும் பார்த்து வந்திருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் ஊழலுக்கு ஓர் நிரந்தர இட ஒதுக்கீடு உண்டென்பது நேரு காலம் முதலே நிரூபணமான விஷயம்.

விசாரணைக்காகக் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கும் இத்தருணத்தை ஒரு கொண்டாட்டக் களமாக்கிக்கொள்வது – உண்மையில் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களிலும் நாளிதழ்களின் மின் பதிப்பில் வெளியாகும் வாசகர் கருத்துகளும் பொதுவெளியில் பேசப்படும் பேச்சுகளும் பயங்கரமாக இருக்கின்றன.

கருணாநிதியின் மகள் கைது என்றில்லை; யாருடைய தவறுகளுக்கும் வழங்கப்படும் நியாயமான நீதி உள்ளார்ந்த மகிழ்ச்சியளிப்பது இயற்கையே. ஆனால் கொண்டாடப்பட வேண்டியதா இது? அவமானமல்லவா? சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா? இந்த வழக்கின் தலைகுனிவு கனிமொழிக்கு மட்டுமா? நமக்கில்லையா? நல்லவர்கள் என்று நாம் பார்த்து நியமித்தவர்கள் செய்த காரியமல்லவா இது?

திமுகவின் தேர்தல் தோல்வி என்பது, ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை. கனிமொழி கைது, சம்பந்தப்பட்ட வழக்கில் அவரது தொடர்பு ஊர்ஜிதமாகிக்கொண்டிருப்பதற்கான அறிவிப்பு. திமுக ஜெயித்திருந்தால் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பதெல்லாம் ஊகங்கள். நீதித்துறையைக் கேலிக்கூத்தாக்கும் முயற்சி. ஒருவேளை கைது நடவடிக்கை சற்று தள்ளிப்போயிருக்கலாமே தவிர, முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்பில்லை.

யோசித்துப் பார்த்தால், பத்திரிகையாளராக இருந்தபோது குறிப்பிடத்தக்க விதத்தில் அவர் ஏதும் செய்யவில்லை. கவிஞராகக் கனிமொழியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நாள்களில் ஈழப் போர்க்களத்தில் இருந்த முக்கியமான சிலர் அவருக்கு எழுதிய கடிதங்கள் என்று சிலவற்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு செல்ல மகளாகத் தந்தையை இன்ஃப்ளுயன்ஸ் செய்தோ, பொறுப்புள்ள உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அப்பிரச்னையை அழுத்தமாக எழுப்பியோ இழப்புகளைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் செய்யவில்லை. ஒரு சராசரி அரசியல்வாதிக்குரிய அனைத்துக் கல்யாண குணங்களுடன் ஒரு பெரும் ஊழலின் ஒரு கண்ணியாக இன்று கைதாகிச் சிறைக்குச் சென்றிருக்கிறார். கருணாநிதியின் மகள் என்பது இக்கெட்ட வெளிச்சத்தின் வீரியத்தைக் கூட்டிக்காட்டுகிறது.

தூற்றத் தோன்றுவது இயற்கையே. ஆனால் பிரச்னையின் ஆழத்தை நோக்காமல், சம்பவம் விளைவித்த உடனடிக் கிளர்ச்சியின் விளைவாக மட்டுமே வெளிப்பாடுகள் அமைவது அவரை மேலும் பிரபலப்படுத்தி, அனுதாபக் கோட்டின் விளிம்புக்கு மட்டுமே இட்டுச்செல்லும். பிரச்னையை திசை திருப்பி, நீர்க்கச் செய்யும்.

நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் சிறு கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. மண் சுமக்கும் இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். ஜெயலலிதா முதல்வர் ஆனார். சென்றமுறை கருணாநிதியைக் கைது செய்தார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆனார். இந்த முறை கனிமொழியைக் கைது செய்தார்கள்!

அனுதாபம் ஆபத்தானது. தூற்றல்களைக் காட்டிலும்.

Share

36 comments

  • மன்னிக்கவும் திரு பா ரா,

    மக்களின் மனது என்ன என்றால், குறைந்த பட்சமாக சட்டதினால் இந்த கைதை மட்டுமாக செய்ய முடிந்ததே என்றுதான். குற்றம் நிருபிக்க படுமா, அல்லது சட்டத்தின் ஓட்டைகள் கை கொடுக்குமா என்பது எல்லாம் வேறு விசயம். இது அவமானம் இல்லை. நமது பிரதிநிகள் தவறு செய்தால், கேள்வியாவது கேட்கப்படும் என்பதுதான் செய்தி.

    இது ஊழல் இல்லை முறைகேடு தான் என்று சொன்ன திரு பத்ரி எங்கே ?

    அன்புடன்
    ராமசந்திரன்
    அபு தாபி

  • நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான்…மக்களுக்கு சந்தோசம் வரக் காரணம்
    தப்பிச்சிருக்க வேண்டியவங்க மாட்டிக்கிட்டாங்களேன்னு தான்!…

  • Ithu vanjap puhazhchchi maathiri thonudhu. Eppudiyo naalu perukku (naan, yen wife, yen ponnu & yen paiyan) nalladhu nadandha sari, appadinnu yellarum ninaikkira kali kaalam. Kalilla deivam annaikkey kollum. Kollattum.

  • சார் நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும்.. இது தவிர்க்க முடியாதது.

  • உங்களின் எழுத்து என்னை உங்கள் ரசிகனாக்கியது உங்களின் பார்வை என்னை ஆச்சரியகுறியாகி சிந்திக்க வைக்கிறது!
    அது பாக் பூகம்பம்-ஆக இருக்கட்டும்…
    பின்லேடன் கொலை-ஆக இருக்கட்டும்…
    இல்லை கனிமொழி கைது ஆக இருக்கட்டும்…!
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • Dear Para

    This is a small time pleasure only. People want Mr.Mu Ka shoud be punished as he had done a lot against the wishes of people. Here people think that what ever done by father will go to his child. People think that way only. As a father he should have done lots of good things. Here he and his family had earned a lot still they want. People need a permanent solution to end all corruption and other charges against the politicians. But in india it is not possible. So people end with small time pleasure like this

  • //கருணாநிதி சந்திக்காத வழக்குகளா? அவர் கைதானதில்லையா? ஜெயலலிதா ஏறாத நீதிமன்றப் படிகளா? இந்த தேசத்தின் பிரதமராக இருந்தவர்கள் முதல் அரசியல் பெருங்கடலின் அலை வந்து கால் தொடும் தூரத்தில் மட்டுமே வசித்து மறைந்தோர் வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டோரையும் அவர்களது கைதுகளையும் விடுதலைகளையும் வழக்கு மறக்கடிப்புகளையும் மற்றவையையும் பார்த்து வந்திருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் ஊழலுக்கு ஓர் நிரந்தர இட ஒதுக்கீடு உண்டென்பது நேரு காலம் முதலே நிரூபணமான விஷயம்.//

    மிக்க சரி. இதையே தான் நான் அவர் ஒரு வீரிய மிக்க தலைவலியாக திரும்பி வந்து நாமே முடி சூட்டி நேரடி ஒளிபரப்பு காணப்போகிறோம் என்று எனது பதிவில் எழுதி இருக்கிறேன்

  • நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரி,ராகவன்ஜி, ஆனால் மக்கள் கனிமொழியை கருணாவின் ஒரு பிம்பமாக பார்க்கிறார்கள் எனவே இந்த தண்டனை அவருக்கே கிடைத்தது என்று எண்ணி மகிழ்கிறார்கள்.நிச்சயமாக கனிமொழி மேல் அனுதாபம் வரப்போவது உறுதி.Matter is very much overblown!

  • திரு.பா.ராகவன் அவர்களுக்கு,

    நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. இந்திய மக்களைப் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்றுமே பரபரப்பு தேவை போல!

    முக்கிய வரிகள்

    1) தேசிய அளவில், சாதி-இன-மத-மொழி-கட்சி பேதங்கள் கடந்து பலபேர் இணைந்து புரிந்திருக்கும் ஊழல் இது.

    2) சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா? இந்த வழக்கின் தலைகுனிவு கனிமொழிக்கு மட்டுமா? நமக்கில்லையா? நல்லவர்கள் என்று நாம் பார்த்து நியமித்தவர்கள் செய்த காரியமல்லவா இது?

    3) தூற்றத் தோன்றுவது இயற்கையே. ஆனால் பிரச்னையின் ஆழத்தை நோக்காமல், சம்பவம் விளைவித்த உடனடிக் கிளர்ச்சியின் விளைவாக மட்டுமே வெளிப்பாடுகள் அமைவது அவரை மேலும் பிரபலப்படுத்தி,
    அனுதாபக் கோட்டின் விளிம்புக்கு மட்டுமே இட்டுச்செல்லும். பிரச்னையை திசை திருப்பி, நீர்க்கச் செய்யும்.

    இப்படிக்கு
    பா.மாரியப்பன்

  • **** ஜெயலலிதா முதல்வர் ஆனார். சென்றமுறை கருணாநிதியைக் கைது செய்தார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆனார். இந்த முறை கனிமொழியைக் கைது செய்தார்கள்!

    அனுதாபம் ஆபத்தானது. தூற்றல்களைக் காட்டிலும். ****

    கட்டுரை நெடுக அதன் நோக்கம் தெளிவின்றி கொஞ்சம் குழப்பியது.(எனக்கு)
    இறுதியில் வந்த வார்த்தைகள் நோக்கத்தை தெளிவாக்கின.
    தவறு செய்த யாருக்கும் இதுபோன்ற அனுதாபப்பார்வைகள் கிடைக்க கூடாது
    என்பதில் நீங்கள் தெளிவாகவே இருக்கிறீர்கள்.முழுதும் உடன்படுகிறேன்.

    இது போன்ற அனுதாபம் பாமர மக்களிடமிருந்து மட்டுமே கிடைக்கும்
    எதிர்வினை.துரதிஷ்டவசமாக அவர்களே பெரும்பான்மையினர்.

    அனுதாபப்படும் இவர்களே ஆட்சிமாற்றத்திற்கும்
    காரணம் ஆனார்கள் என்பது என்ன ஒரு நகைமுரண்?

  • >பிழை புரிந்தார், கைதானார். தீர்ந்தது விஷயம்.

    Then why did not she surrender? Please understand, she was not arrested, rather she was “captured”. Due credit should be given to the CBI. Dont minify the system.

    >கால் தொடும் தூரத்தில் மட்டுமே வசித்து மறைந்தோர் வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டோரையும் அவர்களது கைதுகளையும் விடுதலைகளையும் வழக்கு மறக்கடிப்புகளையும் மற்றவையையும் பார்த்து வந்திருக்கிறோம்

    So do you mean to say we should forget this scam also?

    How can this be an excuse? People were celebrating the arrests all the time. Now you are able to see the celebration through twitter, blogs, and facebook. That is the difference!

  • //கருணாநிதி சந்திக்காத வழக்குகளா? அவர் கைதானதில்லையா? ஜெயலலிதா ஏறாத நீதிமன்றப் படிகளா? …
    … விசாரணைக்காகக் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கும் இத்தருணத்தை ஒரு கொண்டாட்டக் களமாக்கிக்கொள்வது – உண்மையில் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது.//

    People celebrated then too! It just appears, more visible, better documented, and highly amplified, now with the internet.

    I too am surprised by this, but I think it augers well for our society as these are unadulterated and spontaneous reactions, and point to people feeling, in some sense, empowered.

  • எல்லோருக்கும் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஊடக வசதி அதிகரித்துள்ளதால் அதிகமான தூற்றலுக்கு ஆளாகிறார். ஊடகங்கள் நம்மை உச்சாணிக்கும் கொண்டு செல்லும். கீழே போட்டு ஒரேயடியாக மிதிக்கவும் செய்யும். இது எல்லோருக்கும் நடக்கிறது. அதுவே கனிமொழிக்கும் நடந்துள்ளது.

  • ஸாரி.. இது தலைப்புக்காக எழுதப்பட்ட கட்டுரை போலவே எனக்குத் தோன்றுகிறது! நீங்களும் நானும் அதிகம் மேயும் இணையத்தில் மட்டும்தான் இந்தக் கொண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.. அவர்கள் நடந்ததையெல்லாம் நன்கு தெரிந்திருக்கிறார்கள் (இது ஊழல் இல்லை முறைகேடு தான் என்று பத்ரி போன்றவர்கள் சொல்லியிருந்ததைக் கேட்டிருந்தாலும்கூட!).. அதுதான் விசில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இனி தவறு செய்ய நினைப்பவர்களை நிச்சயம் தடுமாற வைக்கும்! வைக்கட்டும்! இணையத்தில் இருப்பவர்கள் படிப்பாளிகள்தான்.. வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள்தான்.. நிச்சயம் நீங்கள் கவலைப்படுவதுபோல அனுதாபம் உருவாகும்வரை கொண்டாட்டங்களைக் கொண்டுபோக மாட்டார்கள் என நம்புகிறேன். தவிர, கோர்ட் குரலுக்கு முன்பே மக்கள் தீர்ப்பு வெளியாகிவிட்டதால் தலைக்குனிவு மக்களுக்கு இல்லை!

  • //இது ஊழல் இல்லை முறைகேடு தான் என்று சொன்ன திரு பத்ரி எங்கே ?//

    அதானே!!!!!!!!!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • It calls for a celebration for the simple reason that she, daughter of MK is finally is in Tihar.Law is catching up with crooks like her.Not all crooks may end in Tihar but when some like her end up there it sends a strong message that nobody is above law and Special Court is not lenient towards VIPS and treats them like any other accused.What is your take-
    do you want her to be left off as such arrests would create sympathy or
    do you want to think that the case against her will fizzle out.

  • ANOTHER HUNDREDS OF RUPEES VALUE OF ALL THE PRINTED SAMASEER KALVI BOOKS ARE GOING TO BE DESTROYED AND NEW EFFORTS ARE BING DONE TO PRINT NEW SET OF BOOKS WITH OLD CELLUBUS BY USING FURTHER PAPER ROLLS OF TONES OF TONNES. FURTHER IT IS VERY DOUBTFUL WHETHER CAN BE RELEASED WITH THE PRESENT CAPACITY OF PRINTING AND BINDING WITHIN THE STIPULATED TIME BEFORE SCHOOL OPENING ARE GOING ON; AS A PERSON KNOWING THE FULL INVOLVMENT IN THIS PROCESS I WOULD LIKE TO STATE THIS HAS TO BE STOPPED IMMEDIATELY; OTHERWISE UNREPAIRABLE DAMAGED WOULD BE DONE TO SCHOOL STUDENTS AND ALSO EXCHEQUER LOSS TO SEVERAL HUNDRED OF CRORES WOULD BE CREATED; WITHOUT ANY KNOWLEDGE OR SUFFICIENT EXPERIENCE AND WITOUT PROPER GUDANCE THE SCHOOL EDUCATION MINISTER IS TAKING THE DECISIONS AND FOR WHICH HE WOULD BE FELT ON A LATTER DATE

  • மிகவும் குழப்படியான கட்டுரை. கனிமொழியை அதிகமாகத் தூற்றினால அவருக்கு அனுதாபம் மேலிட்டுவிடக்கூடுமென்கிற ஒற்றை வரி மேட்டரைப் பலுக்கிப் பலுக்கிப் பத்திகளாக்கி இருக்கிறீர்கள்.

    இதற்கும் ஜால்ரா போடும் கூட்டம் இருக்கத்தான் இருக்கிறது! என்னத்தைச் சொல்ல!

  • இதற்கு முன்பு கலைஞர் / ஜெயலலிதா மீது நடவடிக்கை / கைது எல்லாம் நடந்துதான் இருக்கின்றன. ஆனால் அவை மாநில அரசால் செய்யப்பட்டவை. இது மத்திய அரசு தொடர்பான விஷயம். பிறகு தொகையும் மிக மிக அதிகம். நீங்களே குறிப்பிட்டுள்ள மாதிரி டைம் பத்திரிகை அளவுக்கு போனால், அதற்கான எதிர்வினைகளும் அதிகமாகத்தானே இருக்கும்?

  • நல்ல பதிவு
    நன்றி பாரா.
    ஆமாம்,
    பத்ரி எங்கே ?
    நன்றி
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  • Following lines quoted from the article are the core of this Article. Others are just warppers to make it sound like “neutral”

    //ஆனால் கொண்டாடப்பட வேண்டியதா இது? அவமானமல்லவா? சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா? இந்த வழக்கின் தலைகுனிவு கனிமொழிக்கு மட்டுமா? நமக்கில்லையா? நல்லவர்கள் என்று நாம் பார்த்து நியமித்தவர்கள் செய்த காரியமல்லவா இது?

    யோசித்துப் பார்த்தால், பத்திரிகையாளராக இருந்தபோது குறிப்பிடத்தக்க விதத்தில் அவர் ஏதும் செய்யவில்லை. கவிஞராகக் கனிமொழியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நாள்களில் ஈழப் போர்க்களத்தில் இருந்த முக்கியமான சிலர் அவருக்கு எழுதிய கடிதங்கள் என்று சிலவற்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு செல்ல மகளாகத் தந்தையை இன்ஃப்ளுயன்ஸ் செய்தோ, பொறுப்புள்ள உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அப்பிரச்னையை அழுத்தமாக எழுப்பியோ இழப்புகளைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் செய்யவில்லை. ஒரு சராசரி அரசியல்வாதிக்குரிய அனைத்துக் கல்யாண குணங்களுடன் ஒரு பெரும் ஊழலின் ஒரு கண்ணியாக இன்று கைதாகிச் சிறைக்குச் சென்றிருக்கிறார்

    தூற்றத் தோன்றுவது இயற்கையே. ஆனால் பிரச்னையின் ஆழத்தை நோக்காமல், சம்பவம் விளைவித்த உடனடிக் கிளர்ச்சியின் விளைவாக மட்டுமே வெளிப்பாடுகள் அமைவது அவரை மேலும் பிரபலப்படுத்தி, அனுதாபக் கோட்டின் விளிம்புக்கு மட்டுமே இட்டுச்செல்லும். பிரச்னையை திசை திருப்பி, நீர்க்கச் செய்யும்//

    :-). நன்றி பாரா. நல்ல கட்டுரை 🙂

  • i am confident that she would get bail sooner in higher courts.people who are rejoicing do not know that there was political interference in the order rejecting her bail or else there was no reason for rejecting it.in india it is the political clout which decides the fate of a corrupt person.remember how jaya was let off by the supreme court with the observation that she should question her conscience.that happened during the time when central govt was in her favour.therefore it is obvious that the relationship between d m k and cong is strained and that is why mk is leaving for delhi to make bargains.once that is done,cbi will not object the bail seriously.on merits she is entitled to mail because charge sheet was already filed and investigation was also over.further her part is restricted to just 200 crores for which she has explanation which could be gone into at the time of trial only.

  • Dear Rajasekaran,

    JUST RS.200/- CRORES ????????????????…..as it Rs.200/-(Rs.Two Hundred only) Is it so small amount for you?

    If I remember correct, already, sometimes back the supreme told any oher to interfere in the CBI cout judgements in this affairs:

  • ஊழல் வழக்குகளில் முக்கிய பிரமுகர்கள் கைதாவது அவமானமல்ல, நல்லது தான். தவறுகளை நீதியின் முன் நிறுத்துவதே நல்ல நாட்டுக்கு அழகு, அதை அவமானம் கருதி மறைப்பது அல்ல.

    பொதுவாழ்க்கையில இருப்பவர்கள் தவறு செய்யும்பொழுது நாட்டுமல்லக் கோபம் கொள்வது ஒரு ஜனநாயக செயல்பாடுதான்.

  • vanakkam para

    nalla alasal. oolal miguntha malivana porulagi vitadu. seitha tavarukkana thandanai sariye. 1996-2001 varai jayalalitha oolal seithigal dmk oodahangalil katappattu evaru avaruku anuthabamum iruthiel aatchi adigaramum kidaithado adu pola inda valakilum nadakkalam. kalam badil sollum
    elan

  • Paaraa Saar!
    In your opinion,is the charge – that the loan obtained from DB realty is the quid pro pro for illegal awarding of licence – a valid charge?(based on evidence that have been submitted by CBI).
    Does the charge look very far fetched?
    Please give your opinion

  • மாறுபட்ட சிந்தனை நண்பரே. எனக்கென்னவோ இந்த அளவுக்கு சிபிஐயும் நீதி மன்றமும் செயல்பட்டதே பெரிய விஷயம் தான் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த ஊழலின் பங்கு சோனியா மற்றும் மன்மோகன் வரை போய் இருப்பதால் இது வரை மூடாமல் இருப்பதே பெரிய விஷயம். மக்களுக்கு இந்த அளவுக்காவது சந்தோசம் கிடைக்கட்டுமே!

  • dear suppamani,
    even 2 lakhs is too big for me,however 200 crores is small in front of 1,73,000 crores.only in that context i said so.thank you for your feedback.

  • //ஆனால் கொண்டாடப்பட வேண்டியதா இது? அவமானமல்லவா? சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா?//

    இது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் செயல் என்றும் பார்க்கலாமல்லவா?

  • விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள்.

    • Bhakat, போதுமான அளவு ஊழலெதிர்ப்புப் பிரசாரம் செய்துவிட்டீர்கள் இங்கே. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள்.

  • From what the Congress spokesman says, it is clear that but for the direct ‘take over’ of this case by the Supreme Court, many people who have been caught now would have escaped. That CBI is the handmaiden of the party in power is very worrisome.

    Sooner the CBI is made independent like the Election Commission, such mega-scandals would continue to proliferate.

  • மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

    ஜனாதிபதி தகுதி :
    முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.(true ??) குற்ற பின்னணி உடையவர்.

    பிரதமர் :
    முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் …

    1) 2G ஊழலா .. தெரியாது

    2) commonwealth games ஊழலா .. தெரியாது

    3) adarsh ஊழலா .. தெரியாது

    4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

    5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

    நிதி அமைச்சர்:

    மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

    உள்துறை அமைச்சர் :
    வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

    முன்னாள் உள்துறை அமைச்சர் :
    தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

    தொலைதொடர்பு துறை :

    முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
    இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G “ஜீரோ லாஸ்” என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

    மத்திய வேளாண் அமைச்சர்:
    இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவர்களின் தலைவர் :
    என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

    முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
    பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
    இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

    கருப்பு பணம் தலைவர் :
    இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

    பாண்டிசேரி ஆளுனர் :
    மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

    தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

    எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

    தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி