இளங்கோவன் ஒரு நாத்திகர் என்று ரங்கராஜன் சொன்னது எனக்கு மிகவும் வியப்பான விஷயமாக இருந்தது. அவர் குருகுல வாசம் செய்த இரு இடங்களுமே சாமிநாதய்யார் தமது என் சரித்திரத்தில் விவரிக்கும் சைவ மடாலயங்களுக்கு நிகரானவை. ஆசார அனுஷ்டானங்கள் மிக்க, கடும் நியம நிஷ்டைகள் கடைப்பிடிக்க வேண்டிய இடங்கள். முதலாவது கி.வா. ஜகந்நாதன் பள்ளி. அடுத்தது ஏ.என். சிவராமன் பள்ளி.
இந்த இரண்டு பத்திரிகை உலகப் பெரியவர்களையும் நான் அதிர்ஷ்டவசமாக ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். வணக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால் பழக வாய்ப்புக் கிடைத்ததில்லை. ஏ.என்.எஸ். அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, யார் மூலமாவது அறிமுகம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தேடிக்கொண்டிருந்த நாள்களில் அவர் மிகவும் முதுமை எய்தியிருந்தார். பத்திரிகைத் துறையிலிருந்து விலகியுமிருந்தார். ஆனால் தள்ளாத வயதிலும் குர்ஆனைப் படிக்கவேண்டுமென்பதற்காக அரபி கற்றுக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன்.
கி.வா. ஜகந்நாதனை எனக்குத்தான் தெரியாதே தவிர என் அப்பா, பெரியப்பாவுக்கெல்லாம் வெகு நன்றாகத் தெரியும். சைதாப்பேட்டையில் என் பெரியப்பா நடத்திவந்த பாரதி கலைக்கழகக் கூட்டங்களுக்கெல்லாம் வந்திருக்கிறார். ஒடுங்கிச் சுருங்கிய குறுந்தேகம். கதராடைக்கு மேலே கத்திரிப்பூ நிறத்தில் மேல் துண்டு அணிந்திருப்பார். குரலெழுப்பாமல் பேசுவார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஒரு தவளை பேசுவது போலிருக்கும். அவர் யார், எத்தனை பெரிய மனிதர் என்றெல்லாம் சற்றும் அறியாத வயதில் ஒரு சில சமயங்களில் அவரது சொற்பொழிவுகளை மட்டும் கேட்டிருக்கிறேன். நான் வளர்ந்த சூழலன்றி அதற்கு வேறு காரணங்கள் கிடையாது.
இளங்கோவன் இந்த இருவரிடமும் தமிழ் படித்தவர். பத்திரிகைத் துறையின் அடிப்படைகளைப் பயின்றவர். இந்த விவரத்தை அவர் எனக்கு அப்போது சொன்னதில்லை. ஆனால் கி.ராஜேந்திரன் ஒரு சமயம் சொன்னார். ‘தப்பில்லாம எழுத அவருகிட்ட கத்துக்கங்க சார். தமிழ் சுத்தமா இருக்கும்.’
எனக்கு அப்போதெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது. சுத்தமான தமிழ் என்பது போரடிக்கக்கூடியது. சுவாரசியம் என்பது சுத்தம் விலக்கினால்தான் வரும்.Read More »சுகம் பிரம்மாஸ்மி – 7