எது? ஏன்? எதனால்?

கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் நிறைய விற்கின்றன, மக்கள் எவற்றின் அடிப்படையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வாங்கும் விதத்தில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்பதை தினசரி சில மணி நேரங்கள் கவனித்து வந்தேன்.

எல்லா அரங்குகளிலும் நின்று பார்ப்பது எனக்கு சாத்தியமில்லை. கவனிக்கவேண்டும் என்று நான் நினைத்த அரங்குகளில் மட்டும் இதற்காக நேரம் செலவிட்டேன். அதன் அடிப்படையில் சில விவரங்கள் எனக்குக் கிடைத்தன. இவை, என் பார்வையில் பட்ட வரையில் மட்டுமே. இதுதான் மிகச் சரியான தகவல் என்று கண்டிப்பாகச் சொல்ல மாட்டேன். ஆனால் பொதுவான ஒரு Trend புரிவதற்கு இந்தத் தகவல்கள் உபயோகப்படலாம்.

* புத்தகங்களின் விலை அதிகரிப்பது குறித்து கடந்த ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் எப்போதும் வாசகர் தரப்பில் ஒரு பொதுவான அதிருப்தி இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வருடம் அத்தகைய அதிருப்தி மனநிலை பெரும்பாலும் இருப்பதாகத் தெரியவில்லை. தனக்கொரு நூல் வேண்டுமென்று ஒரு வாசகர் முடிவு செய்துவிட்டால், அதன் விலை என்னவாக இருந்தாலும் கண்டிப்பாக வாங்கிவிடுகிறார். வாங்கலாமா, வேண்டாமா என்று புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு குழம்பி நிற்கிற காட்சி எங்குமே இம்முறை இல்லை. இருபது ரூபாய் நூலானாலும் சரி. ஆயிரம் ரூபாய் நூலானாலும் சரி. ஒரு கணத்துக்குமேல் ஒரு புத்தகத்தின் அருகே வாசகர் நிற்பதில்லை. சட்டென்று வந்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இந்த மாற்றத்தை இந்த ஆண்டுதான் தெளிவாகப் பார்க்கிறேன். தவிரவும் முன்பெல்லாம் அதிக விலை உள்ள புத்தகங்களுக்கு, அல்லது நிறையப் புத்தகங்கள் வாங்கும்போது கூடுதலாகத் தள்ளுபடி கேட்கிற வழக்கம் இருந்தது. இம்முறை அதுவும் இல்லை.

* சரித்திரம் மிக அதிகம் விற்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சரித்திர நூல்கள் மட்டுமல்ல. பல அரங்குகளில் சரித்திரம் மட்டும் விறுவிறுவென்று விற்பனையாகிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. பழனியப்பா பிரதர்ஸில் சாணக்கியரும் சந்திரகுப்தரும் என்றொரு தடிமனான புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். அமோகமாக விற்கிறது. தமிழினியில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு என்ற புத்தகம் நன்றாக விற்பதைக் காண முடிந்தது. [இதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். நூலைப் படித்துவிட்டேன். இந்த ஆண்டின் மிகச் சிறப்பான ஆய்வுநூல் என்று தயங்காமல் சொல்லலாம். கண்காட்சி இன்னும் மூன்று நாள்களுக்கு இருக்கின்றன. தவறவிட்டவர்கள் உடனே வாங்கிவிடவும்.] பண்டைய சரித்திரம் முதல் சமகால சரித்திரம் வரை இதில் வேறுபாடுகள் இல்லை. மொழிபெயர்ப்பு சரித்திரங்களும் கூட. ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு, சில ராணுவத் தளபதிகளின் தன் வரலாறுகள், பிரபாகரன் பற்றிய புத்தகங்கள் [கணக்கு வழக்கே இல்லை. நக்கீரனில் ‘பிரபாகரன் புத்தகங்கள்’ என்றே தனியே ஒரு பேனர் வைத்திருக்கிறார்கள்.], புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ இரண்டாம் பதிப்பு, சந்தியாவின் யுவான் சுவாங் மொழிபெயர்ப்பு, நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாறு [என்.சி.பி.எச்] போன்ற நூல்களெல்லாம் இதற்குமுன் காணாத வேகத்தில் இம்முறை விற்கின்றன. கிழக்கில் குஹாவின் இந்திய வரலாறும் முகலாயர்களும் அகம் புறம் அந்தப்புரமும் யூதர்களும் விற்பனை முன்னனியில் இருக்கும் சரித்திர நூல்கள்.

* கணக்கே பண்ண முடியாத அளவுக்கு அரசியல் புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழகம் தொடர்பான புத்தகங்கள் அவ்வளவாக விற்பதில்லை. கச்சத்தீவு, மண்டைக்காடு கலவரம், கீழவெண்மணி, இட ஒதுக்கீடு அரசியல் என்று பல்வேறு தரப்பட்ட தீவிரமான அரசியல் நூல்களைப் பல அரங்குகளில் காணமுடிந்தது. ஆனால் மக்கள் கிட்டே போகவே பயப்படுகிறார்கள். ஆனால் உலக அரசியல் நன்கு விற்கிறது. கிழக்கில் நாங்கள் கொண்டு வந்திருக்கும் பல தலைப்புகளுக்கு ஈயடிச்சான் நூல்கள் வந்திருக்கின்றன. அவையும் விற்கின்றன. சில இடதுசாரி அரங்குகளில் நிறைய புதிய அரசியல் புத்தகங்கள் மொழிபெயர்ப்புகளாக வந்திருக்கின்றன. அவற்றின் கனம், விலை மீறி அவை நன்றாக விற்பதைக் காண முடிந்தது. ஆழியில் சீனாவைப் பற்றிய ஒரு குண்டு புத்தகம் வந்திருக்கிறது. நன்றாக இருக்கிறது. நன்றாகவும் விற்கிறது.

* முழு இரண்டரை மணிநேரம் செலவிட்டு ஆன்மிக / பக்தி நூல்களின் டிரெண்ட் அறிய முயற்சி செய்தேன். கார்ப்பரேட் சாமியார்களைப் பொருத்தவரை இன்றைக்கும் ரஜனீஷ் மட்டும்தான் விற்கிறார். பழைய ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் புதிய இளம் சாமியார்கள் வரை கடை விரித்திருந்தாலும் விற்பனையில் வேகமில்லை. இவர்களில் வாரப்பத்திரிகைகளில் தொடர் எழுதியவர்கள் மட்டும் தப்பித்துவிடுகிறார்கள். அந்தத் தொடர்களின் புத்தக வடிவம் மட்டும் விற்றுவிடுகிறது. அதே சாமியார், தொடராக அல்லாமல் நேரடிப் புத்தகம் என்றால் மக்கள் கண்டிப்பாக நிராகரித்துவிடுகிறார்கள். இஸ்கான்காரர்கள் மிரட்டல் மார்க்கெடிங் செய்தாலும் உள்ளே போகிறவர்கள் சந்தன பாக்கெட்தான் வாங்கிவருகிறார்களே தவிர புத்தகங்களை அல்ல. பகவத்கீதை உரைதான் அங்கே ஓரளவு விற்கும் புத்தகமாக உள்ளது. கோரக்பூர் கீதா பிரஸ் பகவத்கீதையும் அதன் விலைக்காகவே அமோகமாக விற்கிறது. பக்தி புத்தகங்களைப் பொருத்தவரை மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பா. ராகவன், கணேஷ் சந்திரா, இலவசக் கொத்தனார், டைனோபாய் என்றெல்லாம் ஆசிரியர் பெயர் இருந்தால் தொடுவதுகூட இல்லை. பெயருக்கு முன்பாராவாக பிரம்மஸ்ரீ அல்லது ஸ்ரீலஸ்ரீ அல்லது உபயவேதாந்தி என்று என்னவாவது ஒன்று இருந்தாக வேண்டும். பின்பாராவாக சர்மாவோ சாஸ்திரிகளோ இருக்கவேண்டும். அப்படி இருந்தால் எந்தப் புத்தகத்தையும் தயங்காமல் வாங்குகிறார்கள். [ஏ.எம். ராஜகோபாலன் மட்டும் விதிவிலக்கு.] விகடன் அரங்கிலும் வானதியிலும் வேறு சில பதிப்பகங்களிலும் மக்களின் இந்தப் போக்கை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. இப்படி முன்பாரா பின்பாரா பார்த்து வாங்குகிறவர்கள் கண்டிப்பாக மாமிகளாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அதனால் திரும்பவும் அதே அரங்குகளுக்குச் சென்று வாங்குபவர்களையும் சிறிதுநேரம் கவனித்தேன். அப்படியொன்றும் இல்லை. பக்தி புத்தகம் வாங்குகிற அத்தனை பேரும் இதே மாதிரிதான் சிந்திக்கிறார்கள் என்று எனக்கு மீண்டும் உறுதியாகத் தோன்றியது.

* சிறுகதைத் தொகுப்புகள் இம்முறை அதிகம் கண்ணில் படவில்லை. வம்சி புக்ஸில் பாஸ்கர் சக்தியின் முழுச் சிறுகதைகள் தொகுப்பு ஒன்று அழகாக வெளிவந்திருக்கிறது. பலபேர் எடுத்துப் பார்ப்பதைப் பார்த்தேன். எத்தனை பேர் வாங்கினார்கள் என்று பவாவைக் கேட்கவேண்டும். ஒன்றிரண்டு குண்டு நாவல்கள் வந்திருந்தாலும், பேசப்பட்டாலும் பெரிய அளவில் விற்பதாகத் தெரியவில்லை. இலக்கிய அரங்குகளிலேயே பிரபல எழுத்தாளர்களின் கட்டுரை நூல்கள் அளவுக்கு அவர்களுடைய நாவல்கள், சிறுகதைகள் விற்பதில்லை என்று தோன்றியது. விலக்கு, சுஜாதா. பேய் மாதிரி பறக்கிறது. வெறும் ஐந்தே புத்தகங்களைக் கொண்டு வந்து நாங்கள் வைத்தோம். அச்சமூட்டும் விற்பனை வேகம்.

* சமையல் புத்தகங்கள் எப்போதும்போல் சிறப்பாக விற்பனையாகின்றன. இந்த முறை எங்களுடைய மினிமேக்ஸ் சமையல் நூல்கள் சந்தைக்குப் புதிய போட்டி. யார் எழுதினார்கள், என்ன கம்பெனி, என்ன விலை – ம்ஹும். அட்டையில் சமையல் புத்தகம் என்று தெளிவாகத் தெரிகிறதா? எடுத்துக்கோ ஏழெட்டு.

* கவிதைத் தொகுப்புகள் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. புதிய பகைவர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இந்த குருப்பெயர்ச்சிக்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எனக்குச் சொல்லியிருக்கிறார்.

Share

20 comments

  • >>கணேஷ் சந்திரா, இலவசக் கொத்தனார், டைனோபாய் என்றெல்லாம் ஆசிரியர் பெயர்<<

    நாங்கெல்லாம் புத்தகம் எழுதினா மாமா மாமி கூட சீந்த மாட்டாங்கன்னு சொல்றீங்க… புரியுது! நான் வேணா டைனோம்பாள்ர பேருல காப்பியங்களில் கசமுசான்னு ஒரு புக்கு போடாட்டா? :))

  • /– கவிதைத் தொகுப்புகள் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. புதிய பகைவர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இந்த குருப்பெயர்ச்சிக்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எனக்குச் சொல்லியிருக்கிறார். –/

    ஹ ஹ ஹா

  • எப்டி, எப்டி, எப்டி ?! ‘முன்பாரா பின்பாரா பார்த்து வாங்குகிறவர்கள் கண்டிப்பாக மாமிகளாகத்தான் இருப்பார்கள்’!
    பாரா, நடக்கட்டும், நடக்கட்டும்! நன்றாக இரும்!

  • இந்தக் கட்டுரையில் இருந்து கிடைக்கப்பெறும் நீதி என்னவெனில் “மாய்ந்து மாய்ந்து கவிதையும் கதையும் எழுதுவதை விட சமையல் குறிப்பு எழுதினால் புத்தகம் அதிகம் விற்கும்”

  • KVR,
    ///“மாய்ந்து மாய்ந்து கவிதையும் கதையும் எழுதுவதை விட சமையல் குறிப்பு…///
    சமையல் குறிப்பு எழுதுவது கதை கவிதை எழுதுவதைவிட சுலபம் என்று யார் சொன்னார்கள்? கொஞ்சம் அறிவியல், பொருள்களின் கூட்டு, சுவை கலாசாரம், தனிநபர் விருப்பு வெறுப்பு, ஆரோக்கியம் இன்னும் சாதியம் அதன் பிரிவுகளும்கூட உள்ளடங்கியது. எதையாவ்து கிறுக்கிவிட்டு, அதுதன்னைத் தானே எழுதிக்கொண்டதாக பம்மாத்துவது இங்கே சாத்தியம் இல்லை மவனே.
    ///… எழுதுவதை விட சமையல் குறிப்பு எழுதினால் புத்தகம் அதிகம் விற்கும்///
    எனில் கதை கவிதையைவிட அன்றாட வாழ்க்கைக்கு சமையல் புத்தகம் உபயோகமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நல்ல சப்பாடு அன்றாட வாழ்வை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது என்றும் அர்த்தம். (ஸ்மைலி எல்லாம் தேவையா?)
    பெண்கள் பார்ப்பதாலேயே டிவி சீரியல்களை மட்டப்படுத்தி எழுதுவதுபோல் பெண்கள் செய்துவருவதாலேயே சமையல் கீழிறக்கிப் பார்க்கப்படுகிறதோ? (நோ ஸ்மைலி)

  • நம்ம ஊர்ல ஒருகாலத்துல ஆனந்த விகடன், குமுதம் வீட்டிற்கு வாங்கி வருபவர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தார்கள். பொட்டலத்துக்கு மடிக்கிற பேப்பரில் கூட ஓரெழுத்தை வாசிக்காமல் தூக்கி போடும் மகாஜனங்கள் இன்று ஓரளவு மாறி இத்தனை டீவி தொல்லைகளுக்கு இடையில் எதோ புத்தகம் அது சமையல் புத்தகமாவது வாங்குகிறார்களே என்று ஆச்சரியமாக தான் இருக்கிறது.
     

  • பாரா,
    பணம் அதிகமாக தெரிந்ததால், சில புத்தகங்களை நான் வாங்காமல் வந்துவிட்டேன்…
    ஆன்மீக / பக்தி நூல்கள் பெரும்பாலும் விற்பனை சுமார் தான். இஸ்கான், மரம் நட்டவர், ஜன்னலை திறந்தவர் நூல்கள் பெரும்பாலும் போனியாகவில்லை.

  • தங்களின் டாலர் தேசம் புத்தகத்தை இரண்டு நாட்களாக தேடினேன், கிடைக்கவில்லை. நான் கண்காட்சிக்கு ஒருவாரம் முன்னதாக கிழக்குபதிப்பகத்திற்கு நேரில் சென்று விசாரித்தேன் அவர்களிடமும் ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்த புத்தகத்தை நான் கடந்த 6 மாதமாக வாங்க முயற்சி செய்கிறேன் முடியவில்லை.

    • டாலர் தேசம் அச்சில் இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் கிடைக்கும்.

  • நேரடியாக ஜெயஸ்ரீயுடன் மோதல்:-) (இது ஸ்மைலியேதான்)

    பதார்த்தங்களின் யதார்த்தம்தான் என்ன? சமையலறை விபத்துகளை அருகில் உள்ள சோதனைச் சுண்டெலியை உபயோகித்து விஷமல்ல என உணர்ந்தபின்னே எழுதப்படுபவைதானே சமையல் கவிதைகள்? கவிதை மட்டுமா தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது?

    /கதை கவிதையைவிட அன்றாட வாழ்க்கைக்கு சமையல் புத்தகம் உபயோகமாக இருக்கிறது/ ரயில்வே டைம்டேபிள் அளவுக்கு அதிகமாக விற்பதும், அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும் வேறெதும் இல்லை. அதை கதை கவிதைகளுடன் ஒப்பிடுவீர்களா?

    /பெண்கள் செய்துவருவதாலேயே சமையல் கீழிறக்கிப் பார்க்கப்படுகிறதோ?/ பெண்கள் மட்டுமே சமையல் செய்துவருவதாய்க் கூறப்படுவதின் உள்ளே உள்ள நுகபிநி சமையல் குறிப்பிலேயே செய்து முடித்து வாணலியை அடுப்பில் இருந்து கீழிறக்கி வைக்கவும் எனச் சொல்லும் பொழுது இல்லாத தார்மீகக் கோபம் இப்பொழுது தலையாட்டுவது ஆச்சரியம்தான்

    ஸ்மைலி: தேவையான அளவு

  • தமிழ் நாட்டில் ஆண்டுதோறும் விற்கும் புத்தகங்களில் இந்தக் கண்காட்சியில் விற்ற நூல்களின் எண்ணிக்கை எத்தனை % இருக்கும், மொத்த விற்பனைத் தொகையில் எத்தனை %, நூலக ஆர்டர்களையும் கழித்து விட்டால் மேற்படி புள்ளிவிபரத்தில் என்ன மாற்றம் இருக்கும்.
    நான் பார்த்த அளவில் லாண்டுமார்க்கில் இருக்கும் கூட்டத்தில் 10% ந்யு புக்லேண்ட்ஸில் இருக்கிறாதா இல்லையா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். சென்னையில் எந்தக் கண்காட்சிக்கும் கூட்டம் வரும், புத்தக
    கண்காட்சியும் அப்படித்தான். மீதி நாட்களில் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களில் எத்தனை பேர் புத்தக கடைகளுக்கு சென்று வாங்குகிறார்கள்.
    ’விலக்கு, சுஜாதா. பேய் மாதிரி பறக்கிறது. வெறும் ஐந்தே புத்தகங்களைக் கொண்டு வந்து நாங்கள் வைத்தோம். அச்சமூட்டும் விற்பனை வேகம்.’
    அந்த ஐந்தும் ஏற்கனவே நன்றாக அறியப்பட்ட, நன்றாக விற்றவைதானே. உயிர்மையோ அல்லது சந்தியாவோ வெளியிட்டிருந்தாலும் அவை அப்படி விற்கக்கூடிய நூல்கள்தான். கிழக்கின் மார்க்கெட்டிங் காரணமாக கூடுதலாக விற்பனையாகும்.
    ’ஒரு நல்ல சப்பாடு அன்றாட வாழ்வை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது என்றும் அர்த்தம்’
    ஆம் நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு படுத்தால் வரும் தூக்கம்.அதில் வரும் கனவுகள் வாழ்க்கையை அதிக அர்த்தமுள்ளதாக்குகிறது.ஆனால் நல்ல சாப்பாடு கிடைப்பது பிரச்ச்னையாக உள்ள என் போன்ற அண்டர்டாக்குகள் என்ன செய்வது.

  • 'கவிதைத் தொகுப்புகள் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. புதிய பகைவர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இந்த குருப்பெயர்ச்சிக்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எனக்குச் சொல்லியிருக்கிறார்'
    சரிதான் பழைய ‘பகைவர்’தான் கிழக்கிலேயே சேர்ந்திருக்கும் போது புதுசு தேவையா 🙂

  • நல்ல தீர்க்கமான கவனிப்பை சொல்லியிருக்கீங்க!
    நிறைய நேரம் எங்களுடன் (பதிவர்கள், நண்பர்கள்) இருந்தாலும் சைடில் இப்படி ஒரு சிறப்பான வேலையையும் செஞ்சிருக்கீங்க!  
    நன்றி சார்!

  • நல்ல ஆராய்ச்சி.  சமையல் புத்தகத்தின் மீது மக்களுக்கு இவ்வளவு மையலா? எழுதிருவோம்:-)
    ரொம்பநாளா கிடப்புலே கிடக்குது.  தலைப்பு கூட வச்சுட்டேன்.
    ஈஸி பீஸி இண்டியன் குக்கிங்
    அது இருக்கட்டும்  துளஸி நியூஸின்னா  நல்லா இருக்கா?  உங்க ஆஸ்தான ஜோசியரிடம்தான் கேக்கணும்:-)

  • இந்த சமையல் புத்தகங்களின் விற்பனை மந்திரம் எனக்கும் இன்று வரை புரியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலுமே கூட, உலக அளவில் சமையல் நிகழ்ச்சிகள் ஏகப் பிரபலம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஆயினும், என் சிற்றறிவுக்கு எட்டியவரை யாரும் புத்தகத்தைப் படித்துச் சமைத்து,  நல்லா இருக்கா என்று கேட்டதே இல்லை.
    (ஏனோ இப்போது, விகடனில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த பருப்புத் துவையலும் பூல் பூல் சன்னாவும் என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது.)
    அதிசயமாக நான் சமைத்தாலும் சந்தேகம் வரும்போது, மனைவிக்கு ISD போட்டுக் கேட்டாலும் கேட்பேனே தவிர, மீனாட்சியம்மா புத்தகத்தைப் புரட்டியதே இல்லை.
    பாரா, உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது. இதுபோன்ற கட்டுரைகளையே ஒரு தொகுப்பாகப் போட்டால் ஜோராக இருக்கும்.  🙂
     
     

  • சுரேஷ்:
    ///ரயில்வே டைம்டேபிள் அளவுக்கு அதிகமாக விற்பதும், அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும் வேறெதும் இல்லை. அதை கதை கவிதைகளுடன் ஒப்பிடுவீர்களா?////
    அதை ஒப்பிட்டது நான் இல்லை; கேவிஆர். என்னை எழுதத் தூண்டியதும் அதுதான். (நான் நிறைய புனைவுகள் கிழக்கிலேயே வாங்கியிருக்கிறேன் என்பதும் இதுவரை வாழ்நாளில் ஒரு சமையல்குறிப்பு புத்தகத்தைக் கூட காசுகொடுத்து வாங்கியதில்லை, இனியும் வாங்குவதாக இல்லை என்பதும் ஒரு தகவலுக்காக..) 
    ////பெண்கள் மட்டுமே சமையல் செய்துவருவதாய்க் கூறப்படுவதின் உள்ளே உள்ள நுகபிநி///
    அப்படியா?? இந்தியா வந்திருக்கும்போது எத்தனை பேர் வீட்டுக்குப் போயிருந்தீர்கள்? எத்தனை வீட்டில் பெண் உங்களுடன் பேசிக்கொண்டிருக்க அல்லது தன் சொந்த வேலைகளைச் செய்துகொண்டிருக்க, அந்த வீட்டின் ஆண் உங்களுக்கு விருந்துபசாரம் செய்தார்? நான் ஒரு குக்கிராமத்தில் இருப்பதால் இதெல்லாம் எனக்குச் சரியாகத் தெரிவதில்லை.
    //…சமையல் குறிப்பிலேயே செய்து முடித்து வாணலியை அடுப்பில் இருந்து கீழிறக்கி வைக்கவும் எனச் சொல்லும் பொழுது இல்லாத தார்மீகக் கோபம் இப்பொழுது தலையாட்டுவது ஆச்சரியம்தான்…//
    அதேதான். வாணலியை இறக்கிவைக்கும்போது எனக்கு எந்தக் கோபமும் வருவதில்லை. என் வலைப்பதிவில்கூட அப்படி எந்த சலிப்பையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஆனால் சமையல் செய்வதற்காக எனக்கு அந்த மாதிரி உணர்வு வரவேண்டும், சமையல்குறிப்புக்கு புத்தகம் வாங்கினால் அது கதை கவிதையைவிட மட்டமான ரசனையின் அல்லது அவளது அறிவின்மையின் வெளிப்பாடு என்றெல்லாம் கருத்துகள் உலவுவது ஏன் என்பதுதான் என் கேள்வியே. என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது என்றால் அவசியம் ரயில்வே டைம்டேபிள்தான் வாங்குவேன். எனக்காக தேவையை அதுதான் தீர்த்துவைக்கும் என்றால் அதை வாங்குவதே புத்திசாலித்தனம். 
    இது தாண்டியும் சமையல்குறிப்பு புத்தகம் மட்டுமே பெண்கள் ஏன் அதிகம் வாங்குகிறார்கள் அல்லது பெண்களுக்கு அதுவே ஏன் அதிகம் வாங்கித்தரப் படுகிறது என்று என்னால் முழுநீளக் கட்டுரை எழுதமுடியும். ஆனால் அது இங்கே பல அறிவுஜீவிகள் முற்போக்கு ஆண்களின் ஹிப்போகிரசியைக் கிழிப்பதாக இருக்கும் என்பதால் அப்படியே விட்டுவிடலாம். இணையத்தை அதன் அத்தனை பாவனைகளுடன் வேடிக்கைபார்ப்பதே என் பிடித்தமான பொழுதுபோக்காகி விட்டது. 🙂
    ///ஸ்மைலி: தேவையான அளவு///
    தேவையான அளவு இதுகுறித்து வேறு எங்காவது பேசலாம். ஆனால் பாவம் பாராவை விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்சிங் சரியாக வராது. 😉

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி