கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 23)

கடந்த சில அத்தியாயங்களாகக் கதைக்களம் நேரியலாகவும், புனைவுகள் அதிகம் இல்லாமலும் நகர்ந்து கொண்டிருந்தது. அதற்கெல்லாம் ஈடு செய்வது போல, இந்த அத்தியாயம் மிகு புனைவைக் கையிலெடுத்து விறுவிறுப்பாய் பயணிக்கிறது.

மனிதனுக்கோ, சூனியனுக்கோ ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம் கலந்த மரியாதை வேண்டி இருக்கிறது. மனிதனுக்கு கடவுளைப் போல, சூனியர்களுக்கு ஹிக்லியோனஸ் மலைச் சிகரத்தில் இருக்கும் சகட விருட்சம். அதன் ஓசைக்கு ஒரு விதமான நறுமணம் இருக்கிறது. அதன் ஓசையின் நறுமணத்தை உணர்ந்தால், ஈரேழுலகங்களை ஆளும் மாசூனியர்களாக அடுத்த பிறப்பில் அவதரிப்பர்.

அதிலும் அந்த மரத்தின் மஞ்சள் மற்றும் பச்சை நிற பழங்களை உண்ணலாம் அனால் சாம்பல் நிற பழங்கள் ஆபத்தானவை. சூனிய நகர கைதிகளுக்குத் தண்டனைக்காகவும் இந்தச் சாம்பல் நிற பழங்களை உபயோகிக்கின்றனர். அப்படி கொடுக்கப்பட்ட சில பழங்களைச் சூனியன் மறைத்து வைத்து நீல நகரத்திற்கு கொண்டு வந்து விட்டான்.

இப்போது இன்னும் விஷம் ஏறிய சகடக் கனிகளை ஜிங்கோ பிலோபாவின் வேர்களுடன் சேர்த்து புதிய பாஷாணத்தை உருவாக்கத் திட்டம் தீட்டுகிறான் சூனியன்.

இதற்கிடையில், சூனியன், நீல நகர வாசிகளைப் பற்றிக் கொஞ்ச நேரம் புலம்புகிறான். அவர்களின் ரசனை, சிறு சிறு விடயங்களுக்கு உணர்ச்சி மிகுந்த பதிவுகளை எழுதும் பழக்கம், கவனம் சிதறும் மனப்பான்மையென வெகுவாய் எரிச்சலடைகிறான். மேலும் ஸபோடில்லா என்னும் சர்க்கரை அதிகமுள்ள பழ வகை ஒன்று நீல நகரத்தில் கிடக்கிறது என்றும் தெரிந்து கொள்கிறோம். பின்னால் இதற்குக் கதையில் பெரிய இடம் உண்டு எனத் தோன்றுகிறது. பார்ப்போம்.

போகரை மனதில் கொண்டு தனது பாஷாணத்திற்கான வேலைகளைத் தொடங்குகிறான் சூனியன்.

கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி