மகாத்மா காந்தி கொலை வழக்கு

மகாத்மா காந்தி கொலையைப் பற்றி கோட்சேவின் பார்வையில் சொல்லப்பட்ட ‘கோட்சே’ என்ற புத்தகத்தைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். [ஹிம்சாகர் என்பவர் எழுதியது.] அது கோட்சேவைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் காந்தியைக் கொல்லாத பட்சத்தில் கோட்சேவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் ஏது? அவன் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக். ஹிந்து வெறியன். அடிப்படைவாதி. அவனுடைய படிப்பு, அறிவு, அனுபவம், தேசபக்தி அனைத்தும் அவனைக் கொலையாளியாக்கத்தான் பயன்பட்டதென்பது ஒரு சரித்திர அவலம். காந்தியின் உடலை மட்டும் அழித்துவிட்டு அவனும் போய்ச் சேர்ந்தான்.

ஆனால் இந்த கோட்சே, அவனைப் போல் அல்லது அவனது சிந்தனைப் போக்கை ஒட்டி காந்தியை விமரிசிக்கிறவர்கள் பற்றி அடிக்கடி யோசிப்பேன். காந்தியின்மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளின் வலுவின்மை, அறிவுஜீவிகளைக் காட்டிலும் எளிய பாமரர்களுக்கே எளிதில் விளங்கக்கூடியது. சித்தாந்தங்களல்ல; அமைதியான, மோதல்களற்ற சகவாழ்வே மனித குலம் எக்காலத்திலும் விரும்புவது. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பரப்புதான். ஆனால், இந்தியா ஏன் பாகிஸ்தானைப் போல் இல்லை என்பதற்கான சுருக்கமான பதில், அரசியலில் மதம் இங்கே இரண்டாம்பட்சமாக இருப்பதுதான்.

நமக்கு ஜாதிகள் முக்கியம். ஜாதி அரசியல் முக்கியம். ஜாதி ஓட்டுகள் அனைத்திலும் முக்கியம். அதில் சந்தேகமில்லை. மதமும்கூட சிறுபான்மை மக்கள் ஓட்டு விஷயத்தில் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் தன்னை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்துக்கொண்டு செயல்படத் தொடங்கிய பாகிஸ்தான் இன்றுவரை க்ரோட்டன்ஸ் செடியைப் போல் நிற்பதையும் இந்தியா அடைந்துள்ள உயரங்களையும் எண்ணிப் பார்க்கலாம்.

போலி மதச்சார்பின்மை என்று ஒரு சௌகரியத்துக்கு மதவாதிகள் விமரிசிக்கலாமே ஒழிய, அதுதான் அடிப்படைக் கவசம். அந்த சௌகரியம்தான் இந்த விமரிசனங்களுக்கான சுதந்தரத்தையும் பெற்றுத்தருகிறது.

ஆனால் காந்தி தன் எழுத்தில் ஓரிடத்தில்கூட மதச்சார்பின்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தியதில்லை என்று ஒரு சமயம் அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டார். அவரது முழு எழுத்துத் தொகுதிகளில் தேடிப் பார்த்தபோது அது உண்மை என்று தெரிந்தது. கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தாலும் பிறகு வேறு விதமான பொருளை எனக்குத் தந்தது.

‘மதச்சார்பின்மை’ என்பது காந்தியின் விருப்பமாக நிச்சயமாக இருக்கமுடியாது. அவர் ஒரு ஹிந்து. அப்படித் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்ன பிரச்னை? நானும்கூட ஒரு ஹிந்துதான். ஒரு கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ வேறு மதம் சாராதவராகவோ உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஹிந்துக்கள்தாம். இதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நம்வாழ்வில் நாம் மதத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த அடையாளம் நீக்க முடியாதது. மச்சம், ரேகை போன்றது.

ஆனால் மதத்தை முன்வைத்து மாற்று மதத்தின்மீது துவேஷம் பாராட்டுவதும் வன்மம் வளர்ப்பதும் அரசியல் புரிவதும் ஆகாத காரியங்கள். காந்தி ஏன் மதச்சார்பின்மை என்னும் சொல்லை உபயோகிக்கவில்லை என்றால், அதற்கான எளிய பதில் அவர் எல்லா மதங்களையும் அரவணைக்கிறவராக இருந்தார் என்பதுதான். எல்லா மதங்களும் முக்கியம் என்று கருதுகிற ஒருவர், எந்த மதத்தையும் சாரமாட்டேன் என்று எப்படிச் சொல்வார்? தவிர, தன் மத அடையாளத்தைத் துறந்துதான் பிற மதங்களின்மீது அன்பு செலுத்தவேண்டும் என்பது என்ன கட்டாயம்?

இந்தியாவில் இன்று பேசப்படும் மதச்சார்பின்மையுடன் இதனைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. இது வெறும் அரசியல். அபத்த அரசியல். ரம்ஜானுக்கு நோன்புக் கஞ்சி குடித்து, கிறித்துமஸ் தின வாழ்த்து சொல்லி, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் விடுமுறை தின சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பும் கேவல அரசியல். காந்தியின் மத நல்லிணக்கம் இதனோடு எந்தத் தொடர்பும் இல்லாதது. மிக உயர்ந்த லட்சியங்களைத் தன்னகத்தே கொண்டது. முஸ்லிம்கள்மீது அவர் காட்டிய அன்பு அவர் உயிரைக் குடித்தது. ஆனால், அந்தப் பண்பு இந்த மண்ணின் இயல்பானதன் விளைவுதான் இன்றுவரை இந்தியா மிகப்பெரிய மதக்கலவரங்களை, அதன் பொருட்டான உயிரிழப்புகளைப் பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கிறது. மதம் முக்கியமென்று நினைக்கும் கட்சி ஆட்சி புரியும் இடங்களில் மட்டுமே அதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்படுவதையும் நீங்கள் கவனிக்கலாம் [கல்யாண் சிங் இருந்தபோது அயோத்தியில் மசூதி இடிப்பு, மோடி இருந்ததனால் குஜராத்தில் கலவரங்கள்].

நிற்க. மகாத்மா காந்தி கொலை வழக்கு குறித்து எழுதவந்தேன். மதத்தைத் தொடாமல் அதை எப்படிச் சொல்வது? இந்த வருடம் சொக்கன் எழுதி, கிழக்கு வெளியிடவிருக்கும் இந்தப் புத்தகம் அநேகமாகக் கிழக்கு உருவான தினம் தொடங்கி யோசனையிலும் முயற்சியிலும் இருந்து வந்த ஒன்று. என்றோ நடந்து முடிந்த கொலைச் சம்பவம், எல்லா சரித்திர ஆவணங்களும் இன்று பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கின்றன, தொகுத்து எழுதுவது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று தோன்றலாம்.

அத்தனை எளிதல்ல. வழக்கு விசாரணை முடிந்து அறுபது வருடங்கள் கடந்துவிட்டாலும், குற்றவாளிகள் யாரும் இன்று உயிருடன் இல்லை என்றாலும் தேடத்தேடப் புதிது புதிதாக உண்மைகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் விஷயம் இது.

நான் என்னுடைய ஆர்.எஸ்.எஸ். புத்தகத்துக்கான ஆய்வில் இருந்தபோது இப்படித்தான் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவின் பேட்டி ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அது, ஃப்ரண்ட்லைன் பத்திரிகையில் 1994ம் ஆண்டு ஜனவரியில் வெளியான பேட்டி. சரியாகச் சொல்வதென்றால், மகாத்மா காந்தி படுகொலைச் சம்பவம் முடிந்து, வழக்கு விசாரணைகள் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, எல்லா களேபரமும் ஓய்ந்து 45 வருடங்களுக்குப் பிறகு வெளியான பேட்டி. இந்த பேட்டியின் அடிப்படையில் திரும்பவும் விஷயத்தைக் கையிலெடுத்திருந்தாலும் குற்றம் சாட்ட யாரும் உயிருடன் கிடையாது. கோபால் கோட்சேகூட அப்போது தள்ளாத வயதுக்காரர் [இவரும் இப்போது உயிருடன் இல்லை.].

இந்தப் பேட்டியில் கோபால் கோட்சே பேசிய விஷயங்களுள் ஒன்று மிக முக்கியமானது. அது நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குமான தொடர்பு பற்றியது.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸில் வளர்ந்தவன். ஆனால் விசாரணையின்போது, அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சொல்லப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, அவனுடைய ஹிந்து மகாசபை தொடர்பை மட்டும் ஊர்ஜிதப்படுத்தி கேஸை முடித்தார்கள்.

ஆனால் 45 வருடங்களுக்குப் பிறகு பழையவற்றை நினைவுகூரும் கோபால் கோட்சே, தன் சகோதரனின் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகளைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:

‘நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த். எல்லோரும். எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்ஸில் வளர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். ஆர்.எஸ்.எஸ்.தான் எங்கள் குடும்பம். நாதுராம் அதில் பவுத்திக் காரியவாஹாகப் (சிந்தனையாளர், அறிவுத்தளச் செயல்பாட்டாளர் என்று பொருள்.) பணியாற்றினார். தன் வாக்குமூலத்தில் நாதுராம், தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட்டு வெளியேறிவிட்டதாகச் சொன்னார். காரணம், கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு மிகுந்த நெருக்கடிக்கு உட்பட்டிருந்ததுதான். உண்மையில் நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட்டு விலகவில்லை.’

ஆர்.எஸ்.எஸ். இதை மறுக்கலாம். இல்லை என்று வாதிடலாம். நிரூபிக்கவும் செய்யலாம். அதுவல்ல விஷயம். ஒரு கொலைச்சம்பவம் நடந்து நாற்பத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் ஒரு சர்ச்சையை உருவாக்கத் தேவையான அம்சங்களைத் தன்னகத்தே ஒளித்துவைத்திருக்கிறதென்றால், இந்தியாவில் அது காந்தி கொலை மட்டும்தான்.

மதம், அரசியல் என்னும் இரு அச்சுகளில் சுழலுவது, மகாத்மா காந்தி கொலை வழக்கு. கரணம் தப்பினால் மரணம் என்னுமளவுக்கு சிக்கல்களும் சிடுக்குகளும் கொண்ட வழக்கு இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மூவருடைய கொலை வழக்கு விசாரணை விவரங்களையும் நூல்களாகக் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் தொடக்கத்திலிருந்தே யோசித்து வந்தோம். ராஜிவ் காந்தி கொலை வழக்கு நூலைக் கொண்டுவருவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. அதன் விசாரணை அதிகாரியே முன்வந்தபடியால் நூல் வெளியிடுவது சுலபமாக இருந்தது. இந்திரா காந்தி கொலை வழக்கு குறித்த புத்தகத்துக்குச் சில வருடங்களாக வேலை நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக அடுத்த வருடம் அது வந்துவிடக்கூடும்.

என். சொக்கன்

ஆனால் இந்த மகாத்மா காந்தி விஷயம்தான் சற்று வினோதமானது. முன்பே சொன்னதுபோல் இதை எழுதுவது எளிது. ஆதாரங்கள், ஆவணங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், தீர்ப்பு அனைத்துமே எளிதாகக் கிடைக்கக்கூடியவை. தவிரவும் பல புத்தகங்கள் ஏற்கெனவே ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. சுலபமாகச் செய்ய முடியும்.

ஆனாலும் இதற்கு நாங்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. என் ஞாபகம் சரியென்றால் அநேகமாகப் பதிமூன்று பேர் எழுத முயற்சி செய்து தோற்ற சப்ஜெக்ட் இது. காரணம், இதன் ஆழம் மற்றும் நூற்றுக்கணக்கான சிக்கல் முடிச்சுகள். அதை உள்வாங்கி, வடிவம் தருவது என்பது உள்ளபடியே சிரமமான பணி. காந்தி என்னும் ஆளுமையை எழுத்தில் மறுகட்டுமானம் செய்து, அதற்கு நேரெதிரே கோட்சே என்னும் ஆளுமையற்ற ஆளுமையை நிற்கவைத்து, நடந்த சம்பவங்களை ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்று சேர்த்து ஒரு சுவாரசியமான புத்தக வடிவம் தரவேண்டும்.

கடந்த சில வருடங்களாக என்னிடம் யார் புத்தகம் எழுத ஆர்வம் தெரிவித்து வந்தாலும் அதிக அலைச்சல் இல்லாமல் எழுதக்கூடிய இந்த சப்ஜெக்டைத்தான் முதலில் சிபாரிசு செய்துவந்தேன். எத்தனை பேருக்கு இதே சப்ஜெக்டைத் தருவீர்கள் என்று அலுவலகத்தில் என்னைக் கேட்காதவர்கள் கிடையாது. நான் இதை எழுதச் சொல்லாத ஒரே ஆள் சொக்கன். அவனிடம் இதைத் தருவதில் உண்மையில் எனக்கு விருப்பமே இல்லை. ஒவ்வொரு முறையும் முந்தையதை விஞ்சக்கூடிய அளவு கஷ்டமான, சவால்கள் மிக்க புத்தகங்களைத்தான் அவன் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, மகாத்மா காந்தி கொலை வழக்கு நூலை எழுதுகிறேன் என்று ஏற்றுச் சென்ற யாருமே என்னைத் திருப்திப்படுத்தவில்லை. ஒருவருடைய முயற்சியும் ஒழுங்காக அமையவில்லை. எல்லாம் அரைகுறை. எல்லாமே சொதப்பல். வேறு வழியே இல்லாமல்தான் சொக்கனிடம் எழுதச் சொல்லிக் கேட்டேன். பதிலே பேசாமல் எடுத்துக்கொண்டு, ஒழுங்காக எழுதி முடித்தான். படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட திருப்தியையும் நிம்மதியையும் எளிதில் விவரிக்க முடியாது. சாப்ளினுக்குப் பிறகு என்னை மிகவும் கவர்ந்த சொக்கனுடைய புத்தகம் இதுவே. கொலைச்சதிக்கான காரணங்களில் ஆரம்பித்து, அதன் வரலாற்றுப் பின்னணியின் வழியே தோல்வியுற்ற முந்தைய கொலை முயற்சிகளைப் பரபரவென்று சொல்லி முடித்து, வெற்றியடைந்த முயற்சிக்கு விரைந்து, வழக்கு விசாரணை நடந்த விதம், அதை தேசமும் கொலையாளிகளும் அமைப்பு மற்றும் நிறுவன ரீதியில் இயங்குவோரும் எதிர்கொண்ட விதம் – தீர்ப்பு வழங்கப்பட்டது வரையிலான விவரங்கள் வெறும் தகவல்களாக அல்லாமல் சம்பவங்களின் மீது அணிவகுத்து வந்திருக்கின்றன, இந்நூலில். முக்கால் மணி நேரத்தில் படித்துவிடலாம். ஆனால் இந்நூல் உருவாக்கும் பாதிப்பிலிருந்து விடுபடக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

இந்த வருடம் என்னைக் கவர்ந்த புத்தகங்களின் வரிசையில் சொக்கனின் இந்நூலுக்கு முக்கிய இடமுண்டு. படித்தால், உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

Share

24 comments

  • அன்புள்ள ராகவன், உங்களை எது மீண்டும், மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.என்ற தேசபக்தி இயக்கத்திற்கு எதிராக சேற்றை வாரி பூசவைப்பது? மிகப் பெருமையாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடந்த விஷயங்களை மட்டும் கூறிச் செல்லும் நீங்கள் சீக்கியர்களுக்கு எதிராக ரத்தவெறியாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எனவும் சொல்லியிருக்கலாம். உங்கள் மதச்சார்பின்மை மற்றும் முற்போக்குவாதி மகுடத்திற்கு மேலும் ஒரு சிறகு கிடைத்திருக்கும்.

    • ஜெயக்குமார்: ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசபக்தி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என் புத்தகத்திலேயே அதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, அவன் ரொம்ப யோக்கியமா என்று இதை விட்டுவிட்டு இன்னொன்றைப் பிடிப்பது மிகப் புராதனமான குழந்தை விளையாட்டு.

  • தனிப்பட்ட முறையில் நீங்க கூகுள் பஸ்ஸில் பயணம் செய்வது என்னை ஆத்மாக்களுக்கு பேரூதவி செய்தது போல் உள்ளது.

  • சொக்கனின் உண்மையான புகைப்படத்திற்கு இதில் வந்துள்ள வரைபடத்திற்கும் கொஞ்சம் கூட பொருந்தவில்லையே. ஆனால் உங்க வரைபடம் எவ்வளவு அழகாக இருந்தது தெரியுமா?

  • //நானும்கூட ஒரு ஹிந்துதான். ஒரு கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ வேறு மதம் சாராதவராகவோ உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஹிந்துக்கள்தாம்.//

    இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத கருத்து, ஆனாலும் மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியத்தை முழுமையாக நிராகரிக்கிறேன். நான் ஹிந்து அல்ல. எனது தமிழ் பண்பாடு, நாகரீகம், தெய்வ வழிபாடு, பழக்க வழக்கம் எல்லாமே ஹிந்து இசத்திடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஹிந்து என்கிற அடையாளம் என் மேல் திணிக்க பட்ட ஒன்று!

  • அன்புள்ள பாரா, உங்கள் கட்டுரையை படித்தபொழுது ஜெயக்குமாரின் கேள்வி எனக்கும் எழுகிறது. நீங்கள் குஜராத் மற்றும் அயோத்தி பற்றி குறிப்பிட்டது மதச்சார்பின்மையை பற்றி விளக்கியபொழுது; RSS பற்றியல்ல. மேலும் ”மதச்சார்பின்மை“ என்கிற வார்த்தையை பெரும்பாலும் பயன்படுத்துவது non-BJP கட்சிகள்தான். காந்தியின் co-existence கொள்கையின் (உங்கள்) விளக்கம் அருமை.

  • பாரா,

    ஜெயக்குமார் கூறியது புராதன விளையாட்டல்ல. இந்தியாவில் மதக்கலவரங்கள் அல்லது மதப்பிளவுக்கான சாத்தியங்கள் மதச்சார்புடையதாக நீங்கள் கருதும் பாஜக ஆட்சியில் மட்டுமே உருவாக்கப்பட்டதாக இரு எடுத்துக்காட்டுகளை முன்வைத்தீர்கள். இது தவறு என நிரூபிக்கும் ஒரு நிகழ்வை ஜெயக்குமார் முன்வைக்கிறார். அவன் மட்டும் யோக்கியமா என்று அவர் கேட்கவில்லை. பாஜகவின் மதச்சார்பு பாப்ரி கும்மட்ட இடிப்புக்கு காரணம் என்றால் இந்தியாவில் நிகழ்ந்த ஒரே இனப்படுகொலையான (2002 குஜராத் இனப்படுகொலை அல்ல அது கலவரம் ஹிந்துக்களின் கை ஓங்கியிருந்த கலவரம்) 1984 படுகொலைக்கு காரணம் என்ன என்பது அவருடைய கேள்வி… உங்கள் லாஜிக்கின் படி அதற்கு காரணம் மதச்சார்பின்மையாகத்தான் இருக்கவேண்டும். இரண்டாவதாக கோட்ஸே ஒரு அடிப்படைவாதி என்பது தவறு அவன் ஒரு அதி-தேசியவாதி என்றோ அல்லது சாவ்னிஸ்ட் என்றோ தேசிய வெறியன் என்றோ சொல்லலாம். ஆனால் அவனை அடிப்படைவாதி என சொல்ல முடியாது. தயவு தாட்சண்யமின்றி தர்க்க நியாயத்துடன் மிகச்சரியான வரையறைகளைப் பொருத்திப் பார்க்கலாம். அப்படி செய்தால் கோட்ஸே நவீன இந்திய மதச்சார்பற்ற அரசின் லாஜிக்கிஇலும் காந்தி சனாதன ஹிந்து லாஜிக்கிலும் பேசிக்கொண்டிருப்பதாக வகை செய்ய இடமுண்டு. கொயன்ராட் எல்ஸ்ட் எழுதிய ‘Gandhi and Godse Review and a Critique’ இந்த விஷயங்களை விளக்குகிறது. எல்ஸ்ட் முன்வைக்கும் அதே தரவுகளின் அடிப்படையில் ஆஷிஷ் நந்தியும் எழுதியிருக்கிறார். இருவருமே நவீன மதச்சார்பற்ற அரசு இயந்திர யுகத்தினை சார்ந்தவனாக (எல்ஸ்ட் நேர்மறையாகவும் நந்தி எதிர்மறையாகவும்)கோட்ஸேயை முன்வைக்கிறார்கள்.

    ப்ரண்ட்லைன் மார்க்சிய ஆதரவு பத்திரிகை. கோபால் கோட்ஸே என்ன சொன்னாரோ அவர்கள் என்ன வெளியிட்டார்களோ! நாதுராம் கோட்ஸே காந்தி கொலை அவரது மனதில் ஒரு எண்ணமாகத் தோன்றுவதற்கும் சில ஆண்டுகள் முன்னரே ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து பிரிந்து ஹிந்து மகாசபையிலிருந்தும் பிரிந்து ஹிந்து ராஷ்ட்ர தள் எனும் அமைப்பினை உருவாக்கினார். அதற்காக ஒரு பத்திரிகையையும் நடத்தினார். மிகத்தீவிரமாக அதில் ஆர்.எஸ்.எஸ்ஸை தாக்கினார். அவர்களை காங்கிரஸ் அடிவருடிகள் என்றார். சாவர்க்கர் தனக்கு நிதி உதவி செய்யவில்லை என அவர் வருந்தி கடிதம் எழுதியிருக்கிறார். பின்னாட்களில் கோபால் கோட்சே சொன்னது ஆதங்கத்தில் இருக்கலாம். அல்லது ப்ரண்ட்லைனின் திரிபாகவும் இருக்கலாம்.

    உண்மையில் கோட்ஸேயின் செயலினால் நிம்மதி பெருமூச்சு விட்டது நேருவின் மதச்சார்பற்ற சர்க்காராக இருந்திருக்கக் கூடும்.

    • /ப்ரண்ட்லைன் மார்க்சிய ஆதரவு பத்திரிகை. கோபால் கோட்ஸே என்ன சொன்னாரோ அவர்கள் என்ன வெளியிட்டார்களோ! / அதானே பார்த்தேன்.

  • ஜெயகுமார், குழந்தைத்தனமாக விளையாடவில்லை. இரண்டு கலவரங்களை முன்வைத்து, மதம் ஒன்றே முக்கியம் என்று ஆட்சி செய்யும் இடத்தில் கலவரம் நடக்கும் என்று நீங்கள் சொன்னதற்கு கேள்வி கேட்டிருக்கிறார். சீக்கியக் கலவரம் நடந்தபோது யார் ஆட்சி என்ன நடந்தது? இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றால், சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு ஆழமான காரணங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஆனால் குஜராத், மசூதி இடிப்பிற்கு ஒரு காரணம் போதும் – பாஜக. இது உங்கள் பிரச்சினையே அன்றி ஜெயகுமாரின் பிரச்சினை அல்ல.

    ஃபிரண்ட் லைன் பத்திரிகையில் வந்த பேட்டி எல்லாம் ஆதாரம் என்றால், நாம் என்னவேண்டுமானாலும் எழுதிவிடலாம். காந்தி தற்கொலைதான் செய்துகொண்டிருக்கவேண்டும் என்று யாராவது எங்காவது பேட்டி கொடுக்காமல் இருந்தது நல்லதாகப் போனது!

  • //பின்னாட்களில் கோபால் கோட்சே ஆதங்கத்தில் இருக்கலாம்// இதுக்கு மட்டும் பாரா அதுக்கு மட்டும் பார்த்தேனா …என்ன இரட்டை டம்ளர் பார்வை இது சரவணன்! ஐ மீன் பாரா!

  • Gandhi did not think of building a wall of china between faith and politics.He had no problem in identifying himself as a Hindu in public.That was possible because he had no ill-will against other faiths. Secularism has different meanings.A secular state is what the constitution envisages.Interpreting that has been controversial.In fact one can even criticise the nehruvian version of secularism without supporting communal politics.Similarly one can find faults with secularism as practice while upholding it as a governing principle of post-1947 Indian state.These issues cannot be discussed easily in Tamil because Tamil lacks the vocublary for that.

    RSS was not party to the conspiracy to kill Gandhi.Nor did it have that as an undeclared agenda.If some workers of RSS hatch a conspiracy and execute it on their own in their personal capacities how can you blame RSS for that.Even if Gopal Godse is 100% right that does not implicate RSS as a co-conspirator.Cant you understand this simple fact.
    RSS is an organization and it cannot be held responsible for what the members do in their personal capacities or as members of other bodies. RSS was banned in the wake
    of Gandhi’s assasination and the ban was revoked later. You can oppose RSS but invoking Godse and Gandhi’s assasination for that is silly.

  • //இரண்டாவதாக கோட்ஸே ஒரு அடிப்படைவாதி என்பது தவறு அவன் ஒரு அதி-தேசியவாதி என்றோ அல்லது சாவ்னிஸ்ட் என்றோ தேசிய வெறியன் என்றோ சொல்லலாம்//
    wow…superb description on godse

    எனக்கு தெரிஞ்ச வர கோட்சே ரொம்ப நல்லவரு. யாரோ காந்தி நு ஒருத்தர மட்டும் தான் சுட்டராமே

  • மசூதி இடிப்பிற்கு மிக முக்கிய காரணம் அந்தச் செயல் நிகழலாம் என எச்சரிக்கைகள் இருந்தும், அதை (வழக்கம் போல்) கண்டும் காணாமல் இருந்த நரசிம்மராவ் தான். பாஜக மட்டுமல்ல; காங்கிரஸிற்கும் இதில் மிக முக்கிய பங்குண்டு. குற்றம் செய்தவர்கள் மட்டுமல்ல; அதைக் கண்டும் காணாமல் இருப்பவர்களும், இருந்தவர்களும் குற்றவாளிகளே, குற்றத்திற்கு உறுதுணையானவர்களே! இதை வசதியாக போலி மதச்சார்பின்மை வாதிகள் மறப்பது ஏன் என்பதுதான் தெரியவில்லை.

  • ஆஹா அருமை மிக…. மிக…. அருமை பாரா, அரவிந்தன் நீலகண்டன், ஜெயகுமார் ஆகிய மூவரின் முக்கோன விளையாட்டு சூப்பர்.

    ஹிந்து என்றால் யார் என்றே தெரியாமல் நான் ஒரு ஹிந்து என்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேச பக்தி(?) மீது தனக்கு நம்பிக்கை இருக்கு என்று கூறும் பாரா ஏன் தன் ஹிந்துத்துவ அடையாலத்தை வெளிகாட்ட மருக்கிறார் என்று தெரியவில்லை

    இந்தியாவில் இஸ்லாம் எழுச்சி பெற உதவும் ஹிந்துத் திவிரவாதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • //எனது தமிழ் பண்பாடு, நாகரீகம், தெய்வ வழிபாடு, பழக்க வழக்கம் எல்லாமே ஹிந்து இசத்திடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஹிந்து என்கிற அடையாளம் என் மேல் திணிக்க பட்ட ஒன்று//

    எச்சூஸ்மீ.. ஆ,வூன்னா ரொம்பப் பேரு இதே டயலாக்கு சொல்லிட்டுருக்காங்கய்யா!

    இந்த தமிழ் பண்பாடு, நாகரீகம் (?!) எல்லாம் மட்டும் திணிக்கப்பட்டதில்லையாக்கும்? தானா விரும்பி உதித்ததா உங்களுக்கு?

    தமிழ்நாட்டுலே பிறக்காம ஆப்பிரிக்காவிலே பொறந்திருந்தா ஆப்பிரிக்க பண்பாடு வந்திருக்காதா?!

    #இதுவும்_டவுட்டு_தான்

  • பழந்தமிழன் பண்பாடு எதுன்னு கேட்டா ‘நான்மறை முற்றிய நலம்புரிக்கொள்கை’ அப்படீம்பாரு இளங்கோ அடிகள். இமயத்திலேந்து கண்ணகிக்கு கல்கொண்டாரும் போது வடதிசையில் வேதங்களை பாதுகாக்கும் அந்தணர் வேள்விக்குண்ட நெருப்பை பாதுகாக்குறதுதான் தமிழர் கடமைன்னு நான் சொல்லலை. செங்குட்டுவன் சேரன் சொன்னானாம். இதுவும் இளங்கோதான் சொல்லுதாரு: “வடதிசை மருங்கின் மறை காத்தோம்புனர் தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை” அப்படீன்னு. ஹிந்துத்துவம் அய்யா உலகின் முதல் ஹிந்துத்துவ காப்பியம்னு சிலப்பதிகாரத்தைதான் சொல்லோணும். ஹிந்துத்துவத்தை காப்பாத்தி வளர்த்ததே தென் தமிழகம்தான்.

  • @பாரா, அநீ

    இந்துத்துவா – இதை ஒரு அடிப்படைவாதிகளைக் குறிக்கும் வார்த்தையாக உபயோகப் படுத்தப் படுவதற்கு என்ன காரணம் ? இந்து என்றாலே இந்துத்துவா என்று முத்திரை குத்த முயற்சிப்பதற்கு என்ன காரணம்?

    இந்து என்பது ஒரு கெட்ட வார்த்தையாகவே ஆகி விட்டதோ?

  • //இந்துத்துவா – இதை ஒரு அடிப்படைவாதிகளைக் குறிக்கும் வார்த்தையாக உபயோகப் படுத்தப் படுவதற்கு என்ன காரணம் ? இந்து என்றாலே இந்துத்துவா என்று முத்திரை குத்த முயற்சிப்பதற்கு என்ன காரணம்?//

    இரண்டே காரணங்கள்:
    அறியாமை அல்லது (அத்துடன்) மனச்சாட்சியற்ற அரசியல்

    காந்தியும் அம்பேத்கரும் பாரதியும் இன்று இருந்திருந்தால் அவர்களையும் வலதுசாரி என்றும் ஹிந்துத்துவவாதிகள் என்றும் முத்திரை குத்தியிருப்பார்கள்

  • ஹிந்துன்னா என்னப்பா?????

    ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில் அறியப்பட்டது.அது பின்னர் சமஸ்கிருததில் அந்த வார்த்தைக்கு உச்சரிப்பில் ஒப்பான சிந்து,எனும் வார்த்தையை கொண்டு,அப்பகுதி மக்களை குறிக்க ஹிந்து எனும் சொல்லாடலாக உருவானது.சிந்து என்பது இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்கெ பாயும் பழமை வாய்ந்த சிந்து நதியை குறிக்கிறது.
    பாரசீக இலக்கியங்களில் “ஹிந்து ஈ ஃபலக்” எனும் வார்த்தை காணப்பட்டது.பின்னர் ஹிந்து எனும் வார்த்தை பயன் பாடு பிரபலமானது சிந்து நதியின் அருகில் வாழும் மக்களை குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்ட “அல்ஹிந்த்” எனும் வார்த்தை கொண்டே.
    13 ஆம் நூற்றாண்டில் தான் ஹிந்துஸ்தான் எனும் வார்த்தை இந்திய துணைக்கண்டத்தினை குறிக்க பிரபலமான மாற்று பெயராக பயன்படுத்த பட்டது.சிந்து சமவெளியை சூழ வாழ்ந்த மக்களின் நிலம் என பொருள்பட அது சொல்லப்பட்டது.
    ஹிந்து எனும் வார்த்தை முக்கியமாக புவியியல் ரீதியாக ஒரு பகுதியில் வாழும் மக்களை குறிக்க சொல்லப்பட்டதே அன்றி,ஒரு மதம் சார்ந்த சொல்லாடலாக உருவாக்கப் படவில்லை.
    அது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பிய வணிகர்கள் மற்றும் காலனியாதிக்க குழுக்களால் இந்தியாவில் வேத தர்மத்தை பின்பற்றும் மக்களை,குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதியில் வாழும் மக்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த துவங்கப்பட்டது,
    இது மேலும் குறிப்பாக மத அடையாளம் கொண்டு,மக்களை அதாவது இஸ்லாம்,கிருத்தவம், ஜைனமதம்,புத்தமதம்,சீக்கிய மதம் என இவை சாராத மக்களை குறிக்க ஹிந்து எனும் வார்த்தை முதன்முதலாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப் பட்டது.
    ஹிந்து எனும் வார்த்தை சமஸ்கிருதமோ,அல்லது திராவிட மொழியிலோ,என எந்த இந்திய மொழியையும் சார்ந்து உருவானதல்ல.பாரதம் என்பதே,இந்திய மொழியில் இந்திய துணைக்கண்டத்தை குறிக்க சொல்லப் பட்ட வார்த்தை.
    17ஆம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்று நூல்களிலோ,அல்லது இந்திய குறிப்புகளிலோ,ஹிந்து எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லை.ஹிந்து எனும் வார்த்தை பொதுப்படையாக இந்தியாவில் வாழும் மக்களை குறிக்கவே பயன்படுத்தப் பட்டாலும்,குறிப்பாக மதம் குலம் சார்ந்த வார்த்தையாக மாற்றப்பட்டது ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் தான்.
    ஹிந்து எனும் சொல்லாடல் வேதத்தை பின்பற்றும் உயர்சாதி பிராமணர்களை குறிப்பாக உணர்த்த 1830களில் ஹிந்துயிஸம் என திரிபு பெற்றது.
    ஆதாரம்:
    1. The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd. ISBN 1-4051-3251-5.
    2. Radhakrishnan, S.;Moore, CA (1967). A Sourcebook in Indian Philosophy. Princeton. ISBN 0-691-01958-4.
    3. Tattwananda, Swami (1984). Vaisnava Sects, Saiva Sects, Mother Worship. Calcutta: Firma KLM Private Ltd.. First revised edition.

  • உண்மையில் அரசியல் சாசனம் சொன்னது என்ன என்பதையும் பார்க்கலாம்:
    (a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
    (b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
    (c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion

    (a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
    (b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
    (c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion.

    இது ஒன்றும் இந்துக்களல்லாதவரை இந்து தருமத்துக்குள் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியல்ல. இது குறித்து எழும்பிய கேள்விக்கு விடையளித்த அண்ணல் அம்பேத்கர் கூறினார்: ” புத்தர் வைதீக பிராம்மணர்களிலிருந்து மாறுபட்ட போது தத்துவங்களில் மட்டுமே மாறுபட்டாரேயன்றி இந்து சட்ட அமைப்பினை தொடவில்லை. தம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் புதிய சட்ட அமைப்பினை அளித்திடவில்லை. மகாவீரர் மற்றும் சீக்கிய குருக்களுக்கும் இது பொருந்தும்.” (Times of India, 7-2-1951)

    மட்டுமல்ல ஏதோ இருநூறு ஆண்டுகளாகத்தான் இந்து தருமம் என்பது உருவானது இந்து – உணர்வு உருவானது என்பதும் தவறான கருதலாகும். இந்தியவியலாளரும் நிச்சயமாக இந்துத்துவ ஆதரவாளரல்லாதவருமான டேவிட் லாரன்ஸென் இந்து தருமம் உருவானதைக் குறித்து கூறுகையில் ‘இது இந்து தேசிய வாதிகளுக்கு ஆதரவாகிவிடும் என்றாலும் கூட இதனை நாம் சொல்ல வேண்டியுள்ளது’ என பீடிகையுடன் சொல்கிறார்: “இந்துயிசம் என்பதனை ஒரு கட்டமைப்பாகவோ அல்லது கண்டுபிடிப்பாகவோ கருதித்தான் ஆக வேண்டும் என்றால் அது நிச்சயம் காலனிய கட்டமைப்பல்ல,அது ஐரோப்பிய கட்டமைப்பல்ல அது இந்திய கட்டமைப்பு கூட அல்ல. …அது பெரும் வரலாற்று நிகழ்வுகளாலும், முடிவற்றதும் சிக்கலாக அமைந்ததுமான சமூக-நம்பிக்கைகளும் சடங்குகளும், தனிமனித மற்றும் சிறுக்குழுக்களென அவர்களின் தினசரி வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளும் சில அடிப்படையான கருத்தாக்கங்களுடன் தொடர்ந்து நிகழ்த்திய இயக்கங்களிலிருந்து உருவானதாகும்.” (Who invented Hinduism, Yoda Press, 2006, p.36)

  • “இந்தியாவில் இஸ்லாம் எழுச்சி பெற உதவும் ஹிந்துத் திவிரவாதிகளுக்கு எனது வாழ்த்துக்கள”

    இப்படியொருவர் சொல்கிறார்; எங்கே இஸ்லாம் எழுச்சி பெற்றது; 15 ஆம் நூற்றாண்டில் துவங்கி வாள் கொண்டு முயன்று இன்று வெடிகுண்டு கொண்டு முயன்று முக்குச் சக்கரம் போடுகிறார்கள்; எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு ஆயுதங்கள், எத்தனை கோயில் அழிப்புக்கள், எத்தனை கொள்ளைகள்,எத்தனை குண்டு வெடிப்புக்கள்,ரத்த பலிகள் ஆனால் அடைந்த பலன் என்ன? இதைத்தான் எழுச்சி என்று சொல்கிறீர்களா! வெட்டினால் வெட்டு, இடித்தால் இடி, வெடித்தால் வெடி – சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே! வேண்டுமானால் இன்னொரு பானிபட் யுத்தம் நடத்துவோம் என்று பட்டேல் சொன்னாராமே! அழிவுக்கலை எழுச்சி பெற்றுள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்; இஸ்லாமிய ஆன்மீகம் என்ற ஒன்று ஏதாவதொரு தோற்றமாவது கொள்ளட்டும்! எழுச்சியெல்லாம் பிறகு பார்க்கலாம்.

  • Gandhi was good human being,but NOT a person to represent HINDUS, He did REPRESNT HINDUS, he expected everyone is like him that was big mistake and great injustice to INDIAN HINDUS.

    Recenly I saw an article linked 2G with Pakisthan Telecom — These politcians even send their own mother for prostitution. This day this is happening because of GANDHI — Gandhi treated every other human being same as him including muslims — No wonder INDIA will become a Muslim country in another 20-30 years. Already they are one decides who to rule India, it is so unfortunate — But everyone realise this is because of Gandhi — Even now so people would not like this comment — but that is the truth — you can not buy land in Kashmir, Lashadeep, and another small town near Vellure, just because you not a muslim. Every balme should goto Gandhi and his congress — RSS should come back

    Arvindhan Neelakandna Ideas and explanations — Great — Glad there are such people in India.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி