நான் கடவுள்

தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது.

வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட வீணாக்கப்படவில்லை. ஒரு துண்டு வசனம் கூட, அது உண்டாக்கவேண்டிய நியாயமான அதிர்வினை உண்டாக்காமல் இல்லை. தமிழ் சினிமாவின் அத்தியாவசியங்கள் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் அபத்த காமெடி, காதல் கசுமாலங்கள், கனவுக்காட்சிகள், போலி செண்டிமெண்ட்கள், உப்பில்லாக் கண்ணீர் என்று அனைத்தையும் பெருக்கித் தள்ளிவிட்டு ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநரை உண்மையில் பாராட்டவேண்டும்.

ஆனால் இந்த கம்பீரங்கள் அனைத்தும் அர்த்தம் பெறுவது, படம் ஒரு சரியான குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்வதன்மூலம் மட்டுமே. பாலாவின் நான் கடவுள், அடிதடிக்கு ஆன்மிக ஜிப்பா போட்டுப்பார்ப்பதுடன் திருப்தியடைந்துவிடுகிறது. இதனைச் சற்று விளக்குகிறேன்.

அஹம் ப்ரம்மாஸ்மி – நான் கடவுள் என்பது மிக நேரடியாகத் தருகிற பொருள், அதன் உண்மையான பொருளல்ல. நான் என்பதை முற்றிலும் எரித்த பிறகு எஞ்சக்கூடியதைத்தான் பிரம்மம் என்பது வழக்கம். அப்போது என்ன எஞ்சும் என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. கண்டவர் விண்டிலர். அத்வைதம் சொல்வது அதனைத்தான். ஆனால் படத்தின் கதாநாயகன் வெளிப்படுத்தும் ‘நான்’ முற்றிலும் தன் அகங்காரம் மற்றும் ஆளுமை சார்ந்து உருவாவது. பிணத்தை எரித்த சாம்பலை மேனி முழுதும் பூசிக்கொள்வதனால் மட்டுமே தன்னகங்காரம் இல்லாது போய்விடுமா. ஆர்யாவின் பாத்திரப்படைப்பு அப்படிச் செய்யும்போதெல்லாம் ஒரு குழந்தை, தானே குளிக்கிறேன் என்று அடம் பிடித்து சோப்பு பூசிக்கொள்வது போன்ற உணர்வே உண்டாகிறது.

காசியில் அகோரி சன்னியாசிகள் மத்தியில் வளரும் கதாநாயகனைத் தேடி, சிறு வயதில் அவனை விட்டுவிட்டுப் போய்விட்ட அப்பா வருகிறார். மகனைத் திரும்ப வீட்டுக்கு அழைத்துச் செல்வது நோக்கம்.

மிகச் சிறு வயதில், ‘வேண்டாம்’ என்று விட்டுவிட்டுப் போகிறவருக்குப் பல வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்த மாத்திரத்தில் [நமக்கே ஆர்யாவை அடையாளம் காண்பது சிரமமாயிருக்க!] நான் பெத்தவன எனக்குத் தெரியாதா என்று கண்டுபிடிக்க முடிந்துவிடுகிறது. ஆனால் காலமும் சூழலும் அவனை என்னவாக உருமாற்றியிருக்கிறது என்பதை ஓர் அனுமானமாகக் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை.

உனக்கு உறவில்லை, தொடர்பில்லை. போய் அறுத்துவிட்டு வா என்று ருத்ரனின் [ஆர்யா] குரு சொல்லி அனுப்புகிறார். ஏன் வரவேண்டும்? உறவு என்பது பெற்றோர் மட்டுமா? குரு அந்த வகையில் சேர்த்தியில்லையா? ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லைதான். முற்றும் துறப்பதென்பது இருக்கும் நிலையைத் தக்கவைத்துக்கொண்டு பிறவற்றை ஒதுக்கித் தள்ளுவதா? புரியவில்லை.

ஆக, தந்தையுடன் ஊருக்குத் திரும்புகிறான் ருத்ரன். வீடு சரிப்படவில்லை. அம்மா, தங்கை, பாசம், கண்ணீர் எதுவும் உவப்பாக இல்லை. எனவே மலைக்கோயிலடி பிச்சைக்காரர்கள் மத்தியில் போய் உட்கார்கிறான். எப்பப்பார் கஞ்சா அடித்துவிட்டு வவ்வால் மாதிரி தலைகீழாக யோகாசனம் செய்கிறான். ஒன்றும் பேசப்படாது. ஒரு சில லோ ஆங்கிள் ரவுண்ட் டிராலி ஷாட்டுகளில் இது ஓர் உக்கிரமான தவமாகக் காட்டப்பட்டாலும் மிகச் சில காட்சி நகர்வுகளில் நமக்கு அதன்மீதான அதிசய உணர்வு போய்விடுகிறது. காரணம், அதைவிட நேர்த்தியாகப் படத்தில் காட்டப்படும் கழைக்கூத்தாடி கயிற்றின்மீது அந்தரத்தில் மிக அநாயாசமாக நடந்து செல்வதுதான்.

இந்த இடத்தில் கதையின் உயிர்நாடி தெரிய ஆரம்பிக்கிறது. பிச்சைக்காரர்களின் உலகம். அவர்கள் படும் பாடுகள். அவர்களை வைத்து வியாபாரம் செய்யும் கயவர்கள். அண்டா அண்டாவாகச் சேரும் சில்லறைக் காசுகளைத் தராசில் நிறுத்து அளந்து கொட்டுகிற காட்சி குலைநடுங்கச் செய்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் காட்டிலும் இந்தக் காசு நிறுக்கும் ஒற்றைக்காட்சி மிகுந்த வன்முறையாக மனத்தில் இறங்குகிறது. தம் மீது திணிக்கப்படும் வலி மிகுந்த வாழ்வின் இடையே அவர்கள் ரசித்துச் சிரிக்கவும் பேசி மகிழவும் கண்டுபிடிக்கும் சில கணங்கள் நெகிழ்ச்சியூட்டுகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சை நிறைக்கின்றன. கவிஞர் விக்கிரமாதித்தன் ஒரு பிச்சைக்காரக் கிழவனாக வருகிறார். வலுக்கட்டாயமாகத் தன்னிடமிருந்து குழந்தையை பிச்சைக்கார ஏஜெண்ட் பிடுங்கிக்கொண்டு போகிற காட்சியில் காலைப் பிடித்துக்கொண்டு கதறுகிற கதறலில் பிரமாதப்படுத்திவிடுகிறார்.

இந்த கோஷ்டியால் கடத்திவரப்பட்டு பிச்சையெடுக்க வைக்கப்படும் இன்னொரு கோஷ்டி குருட்டுப் பிச்சைக்காரியாக பூஜா. நம்பமுடியாத அளவுக்கு நிறைவான நடிப்பு. அவரை முன்னிட்டு ருத்ரன் மேற்கொள்ளும் இரண்டு கொலைகளும் இறுதியில் வாழமுடியாதவர்களுக்குத் தருகிற மரணம், வரம் என்று சொல்லிவிட்டுக் குருட்டுப் பிச்சைக்காரிக்கு மோட்சமளிப்பதும்தான் நமக்குப் பிரச்னையான விஷயங்கள்.

வாழ்வுக்கு உதவாத எந்த மதமும் தத்துவமும் சொல்லப்பட்ட பிற சொற்குப்பைகளும் உபயோகமற்றவை. மண்ணில் இல்லாத சொர்க்கம் என்று விண்ணில் ஒன்றுமில்லை. சொர்க்கம் என்று மதங்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் கூட உள்ளர்த்தம் கொண்டவை. பூடகமானவை. உடைத்துப் பார்க்கப்படவேண்டியவை. என் கஷ்டம் தீராதா என்று கதறும் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, மோட்சமளித்ததாகப் புறப்பட்டுப் போகும் கதாநாயகன் நிச்சயமாகத் தன்னை உணர்ந்த ஒருவனாக இருக்கமுடியாது. அது ஆன்மிகமல்ல. ஒரு சைக்கோவால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். இதனைத்தான் அவனது குரு அத்தனை ஆண்டு காலம் போதித்திருந்தார் என்றால் அவரும் டாக்டர் ருத்ரனையோ ஷாலினியையோ சந்திக்கவேண்டியவர்தான். அதற்குமுன்னால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

முற்றிலும் தவறான, மோசமாகப் புரிந்துகொள்ளப்படும்போது ஆன்மிகம்கூட அபத்தமாகிவிடுகின்றது. நான் கடவுள் என்று கருதுவது சரி. கடவுள் வழங்கும் மானுட விடுதலை என்பது மரணத்தால் நேர்வது மட்டும்தானா? தன் மகள் வயதுக்கு வந்திருக்கிறாள். தலைக்குத் தண்ணீர் ஊற்றவேண்டும். பிச்சைக்காரக் கூட்டத்தின் நடுவே கஞ்சா அடித்துக்கொண்டு மயங்கிக்கிடக்கும் மகனை வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார் அம்மா. அவன் அவளைத் திட்டி அனுப்பிவிடுகிறான். நேரே வீட்டுக்கு வந்து கடகடவென்று அடுத்த காரியத்தைப் பார்க்கிற அம்மாவிடம் மகள் கேட்கிறாள்: அண்ணன் வரலியாம்மா? அவன் வரமாட்டான் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிற அந்தப் பெண் கதாபாத்திரம் எய்தியிருக்கிற ஞானத்தைக் கூட அகோரி சன்னியாசி ருத்ரன் அடையவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

மிகவும் பிற்போக்கான, சமூக விரோதமான, அபத்தமான ஒரு கருத்தை ஆன்மிக பெயிண்ட் அடித்து அளித்திருக்கிறார் பாலா. இந்த வகையில் வழக்கமான தமிழ் மசாலா திரைப்படங்கள் இதனைக்காட்டிலும் மிக மேலானவை, கையெடுத்துக் கும்பிடத்தக்கவை. ஏனெனில் அவை எந்தக் கெடுதலான தாக்கத்தையும் உண்டுபண்ணாதவை. பார்த்த கணத்தில் நினைவை விட்டுப் போய்விடக்கூடியவை.

இந்தப் படத்தின் ஆகப்பெரிய சிறப்பு, இளையராஜா. அந்த வல்லமையை சொற்களால் விவரிக்க நினைத்தால் அது நேர விரயம். பாடல், பின்னணி இசை என்று தனித்தனியே சொல்ல ஒன்றுமில்லை. பிரம்மமாகப் படம் முழுதும் வியாபித்திருக்கிறார். வணங்க மட்டுமே தோன்றுகிறது.

மற்றபடி, இது ஒரு தவறான படம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.  ராஜாவுக்கும் பூஜாவுக்கும் தேசிய விருதே கிடைத்தாலும்கூட.

* ஆசாத்தின் பார்வை

* லக்கிலுக் விமர்சனம்

* அதிஷாவின் விமர்சனம்

Share

49 comments

  • ரொம்ப நன்றி ராகவா..
    இன்னொரு அசுத்த கமர்ஷியல் மசாலா என்று சொல்லவே பலர் அஞ்சுகிறார்கள். அதற்கும்மேல் இது தவறான படம் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி. அதீத பிரம்மிப்பில், உண்மை மறைந்துபோய்விடுகிறது.

  • மிகவும் துணிச்சலான, நேர்மையான விமர்சனம். படம் பார்த்து நான் உணர்ந்ததை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  • 😉
    \\
    இதனைத்தான் அவனது குரு அத்தனை ஆண்டு காலம் போதித்திருந்தார் என்றால் அவரும் டாக்டர் ருத்ரனையோ ஷாலினியையோ சந்திக்கவேண்டியவர்தான் \\

    முதலில் பாலாவை கூட்டிக்கொண்டு போய் காட்டவேண்டும்..

  • \\இதனைத்தான் அவனது குரு அத்தனை ஆண்டு காலம் போதித்திருந்தார் என்றால் அவரும் டாக்டர் ருத்ரனையோ ஷாலினியையோ சந்திக்கவேண்டியவர்தான் \\

    🙂

  • நான் கடவுள்-பா.ராகவன் விமரிசனம்….

    மிகவும் பிற்போக்கான, சமூக விரோதமான, அபத்தமான ஒரு கருத்தை ஆன்மிக பெயிண்ட் அடித்து அளித்திருக்…

  • //அஹம் ப்ரம்மாஸ்மி – நான் கடவுள் என்பது மிக நேரடியாகத் தருகிற பொருள், அதன் உண்மையான பொருளல்ல. நான் என்பதை முற்றிலும் எரித்த பிறகு எஞ்சக்கூடியதைத்தான் பிரம்மம் என்பது வழக்கம். அப்போது என்ன எஞ்சும் என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.//

    advaitam, nowhere states that one cant find brahmam, after eliminating “I”. Rather it paves the way to realise that paramathma and jeevathma are one and the same. Advaitam also states that we all are fraction who are on a journey towards totality.

    // கண்டவர் விண்டிலர். அத்வைதம் சொல்வது அதனைத்தான்//

    Handful examples can be given about those who realised god and also explained to others and made others to realise the god. To name a few, Ramakrishna paramahamsar, Vallalar, Vethathiri Maharishi.. Dont u remember the famous incident of vivekananda’s meeting with Paramahamsar, when Vivekananda had a rendezvous with the universal divine power. Recently, Vethathiri maharishi explained the concept of god in a scientific way and also helped others to realise the god i.e., a universal divine power which has no shape and no sex. All the above yogis propagated the same Advaita, but in different tones. Advaitam has been revisited.

    // உறவு என்பது பெற்றோர் மட்டுமா? குரு அந்த வகையில் சேர்த்தியில்லையா? ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லைதான். முற்றும் துறப்பதென்பது இருக்கும் நிலையைத் தக்கவைத்துக்கொண்டு பிறவற்றை ஒதுக்கித் தள்ளுவதா? புரியவில்லை.//

    To attain salvation , to know oneself, to come out of the ignorance, one needs the help of a Guru. After realising oneself, he/she sees himself/herself in everything. Therefore the concept of ‘relationship’ whether it is parents, guru or wife.. finds no relevance here. But to attain this state, one needs the help of guru. Having a guru, doesnt mean that you havent abandoned the earthly relationships which stands in the way of salvation. Rather you are not supposed to abandon anyone. That is what the core of Advaitam, to my knowledge. Wont you accept Swami Vivekananda as a saint, just because he had a guru till his last breathe.//

  • நல்ல அலசல் தல.. I didn’t expect that you will watch this mv so early. Thanx a lot.

    படம் பார்க்கவில்லை. இதுவும் ஒரு வகை ஆன்மிக மசாலாதான் என நினைக்க்கிறேன்.

    RV… அதீத பிரமிப்பு என்று ஒன்றும் இல்லை.. ஷங்கர் படம் போன்று அதீத ஹைப்தான் வேறன்ன..???

    அதிஷா… you are absolutely right…

  • //I didn’t expect that you will watch this mv so early.//

    சூர்யா, நாளை முதல் அலுவலகம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஒரு வெள்ளோட்டமாக எங்காவது வெளீயே போய்வர நினைத்ததன் பலன், நான் கடவுள். நாகராஜன் டிக்கெட் வாங்கிக்கொடுத்தார். உதயத்தில் நைட் ஷோ. மனைவி உதவியதால் முடிந்தது. பரவாயில்லை நல்ல கூட்டம் இருந்தது. நடிக, நடிகையருக்கு அல்லாமல் ஓர் இயக்குநருக்கு டைட்டில் கார்டின்போது கைதட்டல் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாலா அதனைத் தக்கவைத்துக்கொள்ள இனி முயற்சி செய்யவேண்டும்.

  • I have not seen the film. But it seems that the script is ill-conceived and lacks coherence. Ramakrishna Mission and Chinmaya Mission preach Advaita and do social service. They see no contradiction in this. Compassion and affection are the hallmarks of Ma Amirthandananmayee who supports so many social service initiatives.Perhaps Bala’s understanding of spirituality is flawed to the core. Perhaps he chose an interesting theme but failed in making a film based on his
    theme and scences and sequences from Ezhavathu Ulagam.
    Technical brillance cannot salvage a film based on a weak
    film script.Better thinking next time, Bala .

  • பாலாவுக்கும் தாண்டவனுக்கும் பெரிய வித்யாசமில்லை. இருவரும் பிச்சைக்காரர்களை வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள்.

  • Hello sir. I saw this film. It’s really nice compared over the films with double meaning dialogues, commercial movies. Hats off to Bala ji.

  • “This particular comments about NAN-KADAVUL…CINEMA”… entirely differs with others…ofcourse, all the authors, commented on this film, are well recognized film critics…Hence, the opinion difference will always there for a much expected,different film…(taken by a group of experienced, technically intelligent people in the film industry)…Fine Article…

  • Dear Ragavan ,

    I saw this movie this evening. I’m not agreeing with your points what you have stated in your analysis.
    I have gone through your analysis and other readers’ comments. While some peoples are not agreeing, most of the people are agreed with you. However I wish to say my opinion about this movie.
    First of all I would like to say that, the thing what have been told in this movie is actually happening in the society. There is no doubt that, Bala talks about the truth events. As we all know we can see Aghori is Varnasi. Also the child abuse is happening all over the world including India.

    I would like to ask about your state, ” இந்த வகையில் வழக்கமான தமிழ் மசாலா திரைப்படங்கள் இதனைக்காட்டிலும் மிக மேலானவை, கையெடுத்துக் கும்பிடத்தக்கவை.” So here you meant to say that, the ordinary tamil masala Movies are great than this isnt it? If you dont Mind can I ask you some thing?
    “Don’t you see the murder seens that would carried out by the Hero of the movie. I can say lot of examples for these kind of things.

    More over, I would say that, rather than suffering from the illnesses it is better to die. If you take the case of “POOJA” in this flim, she doesn’t have the eye sight. The points what she was mentioning in the climax is absolutely correct. Can any body give an assurance/ secure to her life even though he(hero) killed the main villans? As she is crying in the movie, some body will come again. That is the fact. Also it is impossible to kill every body who is doing such illegal activities. So there is no wrong to murder the heroine. Even law is accept the “Mercy Murder” in some cases. So can you say that this is wrong?

    You said that “ஏனெனில் அவை எந்தக் கெடுதலான தாக்கத்தையும் உண்டுபண்ணாதவை” Could you please tell me that, are the all cinema doesn’t make any bad scene to the society? As like ‘Mysuse’ said, this flim is much much better than the ordinary tamil film which has the double meaning statements and sexual seen.

    Anyway the things what I said is my opinion. Every body would have an own opinion about this film. So please share your ideas here.
    Thank you.

  • திரு. பா.ரா
    முந்தைய படங்களை விடவும் பால வின் நேர்த்தியன திரைப்படம் இது என்றே கருதுகிறேன்.
    சரியாக புரிந்துகொள்ளப்படாத ஆன்மீகம் பயங்கரமானது தான், ஆனல் ஆன்மீகம் அவர் அவர் தத்துவார்த்த புரிதலுக்கு உட்பட்டது என்பதும் உண்மை தானே? ஒருவருக்கு 108 தேங்காய் உடைத்தால் தான் பிள்ளையர் கண் திறப்பர். ஒருவருக்கு அங்க ப்ரதக்ஷனம் செய்யாமல் அம்மன் கூழ் வார்ப்பதில்லை. ஒருவருக்கு, “யெவன் செத்தா என்ன” கோயில் கட்டியே தீர வேண்டும். இவையெல்லாம் சரியான ஆன்மீக புரிதல்கள் தானா??
    ருத்ரன் மற்றும் அவன் குருவின் ஆன்மீகம் அடிப்படையிலேயே தவரானதாகவே இருக்கலாம். அது சரி என்று பாலா குறிப்பிடுவதாக தோன்றவில்லை. மாறாக அதை ஒரு விவாத பொருள் ஆக்கியதன் மூலமே அவர் வெற்றி அடைந்திருப்பதாகப்படுகிறது. அகோரிகள் அகங்காரம் பிடித்தவர்களாகவே இருந்தாலும் அவர்கள் அவர்களின் உலகத்தில் இருக்கின்றவரை வரமோ தண்டனையோ தருவதில்லை. சக மனுஷ வாழ்வில் அவர்கள் நுழைவதின் மூலமே குழப்பங்கள் ஏற்படலாம் என்பதை இந்த படத்தின் பேசு பொருளாக கொள்ளலாமே!
    பொது வாழ்வில் இருந்து விலகி சாமியார் ஆவது கூட ஒரு “escapist” psychological issue தானே?
    எத்தனையோ முறை கோவிலிலோ, ரோட்டிலோ பிச்சை யெடுப்பவரின் முகத்தை பார்க்கமலே “சில்லரை இல்லை” என்று சொல்லியிருப்போம். ஒரு முறையாவது அவர்களின் முகத்தை அவர்களின் வாழ்வாதாரத்தை யோசித்திருப்போமா? இவர்களுக்கு வீடு எங்கிருக்கும்? இவர்களும் தாய் வயிற்றில் தானே பிறந்திருப்பார்கள், தாயமுது படைத்த அவள் எந்த கனத்தில் இவர்களை தெருவுக்கு தாரை வார்த்திருப்பாள். இவர்கள் சேகரிக்கும் சில்லரை இவர்கள் வயிற்றுக்கு தானா? இவர்கள் இருண்ட வாழ்வின் ரகசியங்கள் என்ன என்பதை யோசித்திருப்போமா?
    இன்று ஒவ்வொருவரையும் கடக்கும்பொது அவர்களின் வாழ்க்கையை நோக்கி ஒடுகிறேன், பதற்றத்துடன்!!!
    இதை உங்கால் மேலான commercial cinema க்கள் எத்தனை செய்திருக்கிறது?
    தப்பி தவறி நாமே சில்லரை தேடி எடுத்தாலும் உடன் இருப்பவன், நீ beggersa encourage பண்ற” என சில்லரை வார்க்க திராணி இல்லாத ஒரு விளக்கம். நம்முடைய ஒவ்வொரு ஒழுங்கீனமும் இன்னொரு ஒழுங்கீனத்தை வளர்த்து எடுக்கிறது. அப்படி ஒரு சமூக ஒழுங்கீனதின் தோல்வி முகம் இவர்கள்.
    ஒரு கண் அசைவில் சுற்றி 10 car பறப்பது, “அம்மா அப்பா விளையாட்டு விளையாடலம் வா” என அழைக்கும் படல்கள் கொண்ட திரைப்படங்களும் உங்களுக்கு மேலானவைய்யா அய்யா?
    சாதாரண நாயகன் கொலை செய்யாலாம் ஆனால் தனிமையின் வன்முறையில், மயான ஆழ் கசப்பில் வளர்ந்த ஒரு அகோரி கொலை புரிவது வித்தியாசமாகப்படுகிறதா?
    psychical பிரச்சினை கொண்ட ஒரு அகோரி, வாழ்வதற்கு வழி யாசிக்கும் ஒருத்தியை, கருணையின் அடிப்படையில் கூட நீங்களோ நானோ செய்திர முடியாத ஒரு கொலை புரிந்து விடுவிக்கிறான்.
    ஆன்மீக விளக்கத்தை இதில் தேடுவது விமர்சன பார்வை மட்டுமே.அதிலும் பிச்சைகாரங்களை வைத்து பாலா பணம் பண்ணியிருகிறார் என்பது, அகோரி யின் psyche பிரச்சினையில் சில % நம்மிடையேயும் உள்ளதை குறிக்கிறது!
    நரேன்

  • நரேன், பா.ராவிற்கு நீங்கள் தந்த விளக்கமே மிக சரி.
    படத்தை அதன் நோக்கம் தெரியாமல் பார்த்தது,
    பா.ராவின் குற்றமே தவிர
    பாலாவின் குற்றம் அல்ல
    பாராவை போன்றவர்களை திருத்த இன்னும் எத்தனை பாலாக்கள் தோன்ற வேண்டுமோ?.

    பாலா இந்தபடத்தில் எந்த கருத்தையும் வலியுறுத்தவில்லை
    ஒரு பார்வையாளனாக சமூதாயத்தில் நடைபெறும் பல அவலமான நிகழ்வுகளை நம் கண்முன்னே மிகமிக தத்ரூபமாக தந்திருக்கிறார்.
    அகோரி அரைகுறை ஆன்மீகவாதிகள் என்றால் அவர்களை போன்றவர்கள் இந்தநாட்டில் அதிகார பலத்துடன் திரிகிறார்கள் என்பதைதான் பாலா இப்படத்தில் மிக தெளிவாக காட்டயிருக்கிறார்.

    இன்னெருமுறை அறிவை தூங்கவிடமால் பாருங்கள்.
    விருப்பு வெருப்புன்றி விமர்சனம் எழுதுங்கள்.
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு
    மாடசாமி

  • உடல் நலம் பெற்று அலுவலகம் திரும்புவது அறிந்தது மிகவும் சந்தோஷமே..

    “மாயவிலை” Copies வந்துவிட்டதா..??

    பத்ரிக்கு ஜி மெயிலிட்டேன். பதிலில்லை..

    வாழ்த்துக்கள்.

  • அன்பு பா.ரா.,

    தவறாக புரிந்து கொள்ளப்படும் சினிமா, சரியாக புரிந்து கொள்ளப்படும் வாழ்க்கையை விட அபாயகரமானது! ருத்ரனின் ஆன்மிக கருத்துக்ககளை பாலாவின் மீது ஏற்றி பார்க்கும் சினிமா பார்வையை எங்கிருந்து பயின்றிர்கள் என்பதை தெளிவுபடுத்தவும். பாலா ஒரு ‘filmmaker’ அவ்வளவே. அவர் எடுக்கும் சினிமாக்கள் சாதாரணர்களை விடுத்து வேற்று மனிதர்களை பற்றி பேசுவது. வாழ்க்கையிலிருந்தே தன் கதை மாந்தர்களை தேர்ந்தெடுத்தாலும் அவர் அதில் அதிதங்களை நோக்கி நகர்பவர். இந்த படம் பேசுவது ‘வாழ்க்கை அவலமாய் இருக்கும் ஒருத்திக்கும், வாழ்க்கையை தனகங்காரத்தால் வென்றெடுத்த ஒருவனுக்கும்’ நேரும் பரிமாற்றம் பற்றி.

    சரி அப்படியே ஆன்மிக புரிதலோடுதான் படம் எடுக்க வேண்டும் என்றால் எந்த புரிதலோடு துவங்குவது? த்வைதம், அத்வைதம், சாங்கியம், மிமாம்சம், சமணம், இஸ்லாம், பௌத்தம், கிருத்துவம்… என நீ..ளு..ம்.. இந்த பட்டியலிலிருந்து எதை தேர்வு செய்வது? மற்றெல்லா ஆன்மிக புரிதலுமே ஒன்றை மட்டும் புரிந்தவர்க்கு தவறு தானே? ஆப்படியாயின் ருத்ரனின் (அல்லது பாலாவின் – உங்கள் பார்வையில்) புரிதல் தவறு என்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

    இந்த படம் என்ன வகையான மன பிம்பங்களை நம்முள்ளே தோற்றுவிக்கிறது அல்லது கட்டமைக்கிறது என்பதை மட்டும் பார்க்க வேண்டும். என்னுடன் வந்து நண்பன் சொன்னான் ‘ருத்ரன் அந்த வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியை இன்னும் பிரமாதமாக எடுத்து இருக்கலாம் என்று’. நான் கேட்டேன் ‘எப்படி ‘பாட்சா’ ‘சாமி’ போன்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமா உருவேத்திகிட்டே போயி நச்சுன்னு அடிப்பாங்களே அந்த மாதிரியா’ என்று? ‘Exactly’ என்றான் அவன். ‘As a film maker Bala has succeeded in alienating yourself from ‘Rudran’, as alienated ‘Rudran’ is from the mainstream society’ . பிதாமகன்’இல் இருந்த சித்தனுடனான அந்த ’emotional connection’ஐ அறுத்து எறிந்து அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார் என்றேன். அடுத்து என்ன செய்வார் பாலா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    மற்றபடி நமக்கெல்லாம் ‘பேரரசு’ படம்தாங்க பெஸ்ட்டு. குத்து பாட்டு, தொப்புள் டான்ஸ், தொடை தட்றது, பன்ச் டயலாக்குன்னு களை கட்டும்ள்ள. ‘நான் கடவுள்’ காமிக்கிற உலகத்த விட்டு, ‘திருவண்ணாமலை’ ஆக்ஷன் ஜோதில கலந்து கூத்தடிக்கலாம் வாங்க.

    தோழமையுடன்,
    புலிகேசி

  • // வாழ்வுக்கு உதவாத எந்த மதமும் தத்துவமும் சொல்லப்பட்ட பிற சொற்குப்பைகளும் உபயோகமற்றவை. மண்ணில் இல்லாத சொர்க்கம் என்று விண்ணில் ஒன்றுமில்லை.//

    good shot 🙂

  • //நான் பெத்தவன எனக்குத் தெரியாதா என்று கண்டுபிடிக்க முடிந்துவிடுகிறது//

    இது எனக்கும் ஏமாற்றம் தான்.

    //இந்த வகையில் வழக்கமான தமிழ் மசாலா திரைப்படங்கள் இதனைக்காட்டிலும் மிக மேலானவை, கையெடுத்துக் கும்பிடத்தக்கவை//

    கடுமையாக உள்ளது. இந்த காட்சி சரி இல்லை என்று கூறுங்கள், அதற்காக இப்படி இந்த படங்களுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம்.

    //ஏனெனில் அவை எந்தக் கெடுதலான தாக்கத்தையும் உண்டுபண்ணாதவை. பார்த்த கணத்தில் நினைவை விட்டுப் போய்விடக்கூடியவை//

    நேர்மையாக தான் கூறுகிறீர்களா!!!!

    என் விமர்சனம் இங்கு நேரமிருந்தால் படிக்கவும்

    http://girirajnet.blogspot.com/2009/02/blog-post_09.html

  • பாலாவின் படங்களில் morbidity அதிகம் இருக்கும். இதில் அதன் உச்சத்தை பார்க்கலாம்.வெகு நாள் கழித்து என்னை மிகவும் அலைக்கழித்த தமிழ்த் திரைப்படம் ‘நான் கடவுள்’. திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் மனம் மிக பாரமாகி செலுத்தப்பட்டவள் போல் வீடு வந்து விழுந்தேன். கடுமையான தலைவலி சொல்லொண்ணா துயருடன் அன்றைய இரவு ஊர்ந்து எப்படியோ விடிந்தபின் கொஞ்சம் தூங்கி நேரம் தப்பி அலுவலகம் வந்து சேர்ந்தும் மனதைவிட்டகலாமல் விடாப்பிடியாக ‘நான் கடவுள்’ – ஓம்சிவஹோம் என்று மனதிற்குள்ளும் மண்டைக்குள்ளும் ராஜா விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறார். Clarity இல்லாததால் படம் சரியாக வெளிவரவில்லை.

  • பா.ராகவனுக்கு,

    படங்களில் ஏது சார் நல்ல படம், தவறான படம் அதை தீர்மானிக்க நாம் யார்?? இல்லை படங்களுக்கு மசாலா, காரம், இனிப்பு என அறுசுவை உள்ளதாக யார் உங்களுக்கு கூறியது??

    படங்களை இவ்வாறு பிரிக்கலாமே 1. மக்கள் ரசிக்கும் படம் 2. மக்கள் ரசிக்காத படம் இவ்விரண்டினுள்ளும் 1. ஓடும் படம் 2. ஓடாத படம். இத்தகைய உட்பிரிவு வரக்காரணம் சமீபத்திய மீடியா (குறிப்பாக சன் டி.வி மற்றும் இணையதளம்) மற்றும் நம்முடைய கருத்தை பிறர் மீது திணிப்பது.

    நீங்கள் கூறியது போல மசாலா படங்கள் என்ன அவ்வளவு கேவலமானதா??? இல்லை நீங்கள் எந்த ஒரு மசாலா படத்தையோ அல்லது அதிலுள்ள காட்சிகளையோ ரசித்தது இல்லையா??? அவ்வாறு ரசிக்க முடியாவிட்டால்………… டாக்டர் ருத்ரனையோ, ஷாலினியையோ முதலில் பார்க்க வேண்டியது நீங்கள் தான்.

    நான் கடவுளுக்கு வருகிறேன்……..

    படத்தின் முதல் நோக்கம் இதுவரை நாம் அறியாத பிச்சைக்காரர்களின் உலகத்தை காட்டுவது (இதுதான் படத்தின் உயிர், உடல் எல்லாமும்), அதில் பாலா வெற்றி பெற்று மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டார். இதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருக்கிறதா???

    உறவை துறந்த எந்த ஒரு முனிவருக்கும் சாமியாருக்கும் குரு இருந்ததில்லையா???? என்ன பிதற்றல் இது???? என்ன எழுதிகிறோம் என்று புரிந்துதான் எழுதுகிறீர்களா???????

    இப்படத்திற்கு தவறான ஆண்மீக சட்டையை பாலா அணிவித்துள்ளார் என்பது தானே உங்கள் வாதம். பாலா அணிவித்தது ஆண்மீக சட்டையை அல்ல “அகோரி” சட்டையை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    கிளைமாக்ஸின் அடிநாதம் ” கருணைக்கொலை”
    இது இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் விஷயம், கால காலமாக நம் நாட்டில் பின்பற்றி வருகிற விஷயம் (சாககிடப்பவர்களுக்கு பால்லூற்றுவது முதல் கள்ளிப்பால் கொடுத்து சாகடிப்பது வரை). அவ்வாறு கருணைக்கொலை செய்ய பாலா அழைத்து வரும் கதாபாத்திரம்தான் “அகோரி” . அந்த அகோரி போகிற போக்கில் இரண்டு வாழவக்கத்தவர்களையும் பதம் பார்த்துவிட்டு போகிறான் இது சினிமா என்பதற்காக.

    கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி………..
    நான் கடவுள் என கூறிக்கொண்டு திரியும் “அகோரிகள்” நாட்டில் இருக்கிறார்களா? இல்லையா? அவர்களை திரையில் காட்டியது தவறா? இத்தகைய அகோரிகளை சாதாரண மசாலா (நீங்கள் கூறியது தான்) சினிமா பார்க்கும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதிலும் பாலாவிற்கு வெற்றியே…….

    தயவு செய்து உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள்.

    இது மக்கள் ரசிக்க கூடிய படம் மட்டுமல்ல ஓடவேண்டிய படமும் கூட ( பெங்களுரில் தமிழ் மொழி தெரியாதவர்களும் ரசித்து பார்த்தார்கள் என்பதால் கூறுகிறேன்).

    பாலா என்னும் படைப்பாளியை திண்ணும் அகோரியாக நாம் இருக்க கூடதல்லவா????????

  • //படங்களை இவ்வாறு பிரிக்கலாமே 1. மக்கள் ரசிக்கும் படம் 2. மக்கள் ரசிக்காத படம் இவ்விரண்டினுள்ளும் 1. ஓடும் படம் 2. ஓடாத படம். இத்தகைய உட்பிரிவு வரக்காரணம் சமீபத்திய மீடியா (குறிப்பாக சன் டி.வி மற்றும் இணையதளம்) மற்றும் நம்முடைய கருத்தை பிறர் மீது திணிப்பது.//

    ஓடும் படம், ஓடாத படம் என்பது எளிதாக புரிகிறது. ஆனால் மக்கள் ரசிக்காத படம் எப்படி ஓடும் என்று புரியவில்லை.

    எனவே
    ஓடும் படம் என்றால் – பெரும்பாண்மையான மக்கள் ரசிக்கும் படம்
    ஓடாத படம் என்றால் – பெரும்பாண்மையான மக்கள் ரசிக்காத படம்
    என்று தான் கூறவேண்டும்

    எனவே

    இந்த 1. மக்கள் ரசிக்கும் படம், 2. மக்கள் ரசிக்காத படம் என்பதை
    1. மக்களில் சிலர் மட்டும் ரசிக்கும் படம் 2. மக்களில் சிலர் மட்டும் ரசிக்காத படம் என்று கூறுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்

  • //படங்களை இவ்வாறு பிரிக்கலாமே 1. மக்கள் ரசிக்கும் படம் 2. மக்கள் ரசிக்காத படம் இவ்விரண்டினுள்ளும் 1. ஓடும் படம் 2. ஓடாத படம். இத்தகைய உட்பிரிவு வரக்காரணம் சமீபத்திய மீடியா (குறிப்பாக சன் டி.வி மற்றும் இணையதளம்) மற்றும் நம்முடைய கருத்தை பிறர் மீது திணிப்பது.//

    சரி

    இப்பொழுது சொல்லுங்கள்

    நான் கடவுள்

    ஓடும் படமா (அதாவது அனைத்து மக்களும் ரசிக்கும் படம்
    அல்லது மக்களில் பெரும்பாண்மையோர் ரசிக்கும் படம்) அல்லது ஓடாத படமா – மக்களில் சிலர் ரசிக்கும் – பலர் ரசிக்காத படமா

  • //இது மக்கள் ரசிக்க கூடிய படம் மட்டுமல்ல ஓடவேண்டிய படமும் கூட//

    அனைத்து மக்கள் ரசிக்கக்கூடிய படம் என்றாலோ அல்லது பெரும்பாண்மையோர் ரசிக்கக்கூடிய படம் என்றாலோ அது ஓடும் படம்

    ஓட வேண்டிய படம் என்றால் அது சிலர் மட்டுமே ரசிக்கக்கூடியதாக இருக்கிறது என்று அர்த்தம்

    சரி

    இப்பொழுது சொல்லுங்கள்

    நான் கடவுள்

    ஓடும் படமா (அதாவது அனைத்து மக்களும் ரசிக்கும் படம்
    அல்லது மக்களில் பெரும்பாண்மையோர் ரசிக்கும் படம்) அல்லது ஓட வேண்டிய படமா – மக்களில் சிலர் ரசிக்கும் – பலர் ரசிக்காத படமா

  • நல்ல விமர்சனம். ஆனால் எனக்கு நீங்கள் எழுதிய பலவற்றில் உடன்பாடில்லை எனினும், ‘அட. இவரு சொல்றதும் சரிதானே’ என்று நினைக்க வைக்கிறீர்களே.. தேர் யு ஆர்!

  • புருனோவிற்கு

    நான் சொல்ல வந்த கருத்து என்னவென்றால் சில ரசிக்க தகுந்த – பார்கவேண்டிய படங்களை தங்களது சுய விருப்பு வெருப்புகளுக்காக ஓடவிடாமல் செய்யும் போக்கு (மாஸ் மீடியாக்களால்) தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பதுதான் எனது ஆதங்கம்.

    உதாரணம் 1: சன் பிக்சர் படவிநியோகத்தால் பூ, பொம்மலாட்டம் போன்ற படங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் (பணம்) கிடைக்காமல் போனது

    உதாரணம் 2: சிவா மனசுல சக்தி படம் இந்த வாரம் வெளிவருவதால், நான் கடவுள் படத்தை விகடன் கண்டிப்பாக காவு வாங்கவே முயலுமென தோன்றுகிறது. விகடன் பா.சீனிவாசன் பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்து விட்டார் என்பதை நீண்டகால விகடன் வாசகர்கள் நன்கு அறிவார்கள் (சீனிவாசனின் முயற்சியை ரா.கண்ணன் போன்ற பாலாவிற்கு நெருக்கமானவர்கள் தடுத்து நிறுத்தலாம்). எது எப்படியோ சிவா மனசுல சக்தி படத்திற்கு அவர்கள் அளிக்கும் மதிப்பெண்கள் விகடனின் நடுநிலைமைக்கு ஓர் உரைகல்லாக எடுத்துக்கொள்ளலாம்.

  • பாரா,கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டீர்களா?
    பாலா ஆன்மீகம்(பை த வே,தமிழறிவு குறைந்த எழுத்துப் பயிற்சி இல்லாதவர்களிலிருந்து,பொழுது விடிந்து பொழுது போனால் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் எழுத்தாளரான நீங்கள் வரை ஏன் ஆன்மீகத்தை குறுக்கி ஆன்மி’கமாக்குகிறீர்கள் என்று புரியவில்லை!) பற்றி விளக்குவதற்காகவா படம் எடுத்திருக்கிறார்?

    சாதாரண அடிதடிக் குப்பைகள் இதற்குப் பரவாயில்லை என்று எழுதும் அளவிற்கு உங்களுக்கு எதன் மீது அல்லது யார் மீது கோபம்?

    • அறிவன்: ஆன்மிகம் என்பதே சரி என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள் சொன்னார்கள். உங்களுக்காக ஒருமுறை எனது தமிழ்க் கையேடான என் சரித்திரம் எடுத்துப் பார்த்ததில் உ.வே. சாமிநாதய்யரும் அப்படியேதான் கையாண்டிருக்கிறார். ஆன்மீகம் அல்ல. ஆன்மிகம்.

  • ப்ருனோ சார், எங்க ஊருல வில்லு மட்டும் தான் ரிலீஸ் ஆகுது. நான் கடவுள் ரிலீஸ் ஆகமாட்டேங்குது ! இத எப்படி உங்க பிரிவுகள்ல கொண்டு வருவீங்க. ஓட வேண்டிய, மக்களிடம் சென்றடையாத படம்னா ? எனக்கு கொஞ்சம் போர் அடிக்குது. அது தான் அறிவார்த்தமான கேள்விகள் கேக்கறேன். பா ரா சார், உங்களுக்கு இது பிடிக்கலனா சொல்லிடுங்க !

  • இதைவிட சிறந்த, சரியான விமர்சனத்தை இந்தப் படத்துக்கு ஒருவர் எழுதிவிட முடியுமா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது பாரா. அற்புதம்.

    வியப்புடன்
    ரூமி

  • May be Bala is a wrong person for your taste, next time try not to goto his movies. But, let everyone infer from their own experience. You don’t need to prevent them from seeing Bala’s movies just because you say so.

    I am not a supporter of Bala, but the tone in your review sounds not quite what it is meant for. It borders on threatening anyone makes such movies. You should accept characters with all their fault, if you need perfection you can publish a guide about what they do or don’t.

  • பா ரா, அறிவன் அவர்களுக்கு தாங்கள் எழுதிய பதில் சுயம் சார்ந்ததாகவும் அதற்கே முக்கியத்துவம் தருபவர் போலவும்
    சித்தரிக்கிறது. கருத்தை விட்டு விட்டு வார்த்தையை பிடித்துக்கொண்டீரே?

    ஜெகதீசன்.

    • ஜெகதீசன்: நான் கடவுள் பற்றிய பலதரப்பட்ட வாசகர் கருத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. பிரசுரிக்கமுடியாத அருவருப்பான சொற்களை ஏந்திவரும் எதிர்வினைகளைத் தவிர்த்து பிற அனைத்தையும் பிரசுரிக்கிறேன். இவற்றுக்கு பதில் சொல்வது தேவையா என்று யோசிக்கிறேன். என் கருத்தைச் சொல்ல எனக்கு உள்ள உரிமை போலவே மற்றவர்களுக்கு அவரவர் உரிமைகள். நான் முன்வைத்த வினா, வாழமுடியாதவர்களுக்கு மரணம் தான் விடுதலை என்று சொல்வதற்கு ஆன்மிகம் எதற்கு என்பதுதான். அதற்கு நீங்கள் அகோரி பவுடர் வேண்டுமானாலும் பூசுங்கள், வேறு எந்த பெயிண்ட் வேண்டுமானாலும் அடியுங்கள். சொல்லவந்த செய்தி தவறு, அவ்வளவே. கலை நேர்த்தியோடும் அதிபுத்திசாலித்தனத்துடனும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுவதன்மூலமே சொன்னது சரியாகிவிடாது. இந்த என் கருத்தில் மாற்றமில்லை. இதுவரை வந்த எந்த எதிர்வினையும் இதனை மாற்றக்கூடியதாக இல்லை.

  • அன்பு பா.ரா.,

    நான் கடவுள் திரைப்படம், நான் இருமுறை பார்க்க நேரிட்டது.
    பாலா இந்த படத்தில், கடவுள் உண்டு! இல்லை!
    இதில் எதையும் அவர் சொல்லவில்லை அவரும் நம்மை போல் ஒரு பார்வையாளர் போலவே வந்து செல்கிறார். இங்கு நம் கண்னில் படாத சில சம்பவங்கள் சிலவற்றை திரையில் கொண்டுவந்துள்ளார்.
    சித்ரவதையோடு உயிருக்கு போராடும் ஆட்டுக்கு மரணத்தை கொடுக்கலாம் என்று நாம் ஏற்பதை போல் இந்த பட முடிவு உள்ளது.
    ஆனால் அது மானுடற்கும் பொருந்துமா என்பதுதான் நம் கேள்வி, அப்படி அது பொருந்துமானால் அவர்களை ஏன் கடவுள் படைக்க வேண்டும், அல்லது தவறு செய்யும் யாரும் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என்றால் ஏன் தாமதம்.
    காலம் கடந்த நீதி அநீதிக்கு ஒப்பானது என்பது யாராவது மறுக்க இயலுமா!

    அன்புடன்
    JAMES RAJENDRAN / COIMBATORE

  • நண்பர் பாரா,
    ஆன்மிகம்-ஆன்மீகம்:எனக்கும் சந்தேகம் வந்து கையில் கிடைத்த அகராதியைப் புரட்டினேன்.இரண்டு வார்த்தைகளும் போட்டிருக்கிறார்கள்.
    சென்னைத் பல்கலை வெளியிட்ட தமிழ் லெக்சிகனைத் தேட கொஞ்சம் தூரம் அதிகமுள்ள நூலகம் போக வேண்டியிருக்கிறது.ஆனாலும் எனக்கும் இப்போது சுவாரசியம் கூடிவிட்டது;நான் சொன்னதும் தவறாக இருக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதும் சரி.
    வாழ்வில் தெரிந்து கொள்ள விதயங்களுக்கு குறைவே இருப்பதில்லை !

    நான் கடவுள் பற்றி:இக்கால திரைப்படங்கள் ஒரு கருத்தைச் சுமந்த வருகின்றன என்ற நிலையில் இருந்தே படத்தை அணுகுகிறீர்கள் இல்லையா?அது சரியான பார்வையா என்பதையே முன்வைக்க விரும்பினேன்.அந்தப் பார்வையின்படி பார்த்தால் தசாவதாரம் கூட ஒரு குப்பைக் கருத்தைத்தான் முக்கிய இழையாகக் கொண்டிருந்தது.படத்தின் ஆக்கத்திலும் கூட பல குறைகள்.ஆயினும் எல்லோரும் சொல்லிவைத்துக் கொண்ட மாதிரி ஆகா என்றார்கள் !

    இந்திய ஆன்மீ(மி?)கம் பல செறிவான நல் முத்துக்களைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பலர் ஏற்றிவிட்ட குப்பைகளையும் கூட தன்னகத்தே கொண்டது.கருத்தைப் பொறுத்தவரை அது போன்ற ஒரு குப்பையை மையமாகக் கொண்டதாக நான் கடவுள் இருக்கலாம்.ஆனால் இருக்கும் குப்பைகளில் எது கொஞ்சம் பார்க்கத் தகுந்த குப்பை என்று பார்க்கும் நிலைதான் இருக்கிறது !

    மற்றபடி பாலா என்ற தனிமனிதனின் சிந்தனை சார்ந்த பிறழ்வுகள் அவரது எல்லாப் படங்களின் நாயகர்கள் மூலமாகவும் வெளிப்ப்படுகிறது என்பது உண்மை.

  • நண்பர் பாரா,
    எனக்கும் சந்தேகம் வந்து அகராதியைப் பார்த்தேன்.ஆன்மிகம்,ஆன்மீகம் இரண்டும் போட்டிருக்கிறார்கள் 🙁
    சென்னைப்பல்கலை வெளியிட்ட தமிழ் லெக்சிகன் பார்க்க அங் மோ கியோ போக வேண்டும்.கட்டாயம் பார்த்து தேவையெனில் என்னைத் திருத்திக் கொள்வேன்;எந்த நிலையிலும் தெரிந்து கொள்ள விதயங்களை உலகம் வைத்திருக்கிறது !

    நான் கடவுள் பற்றி: நான் பார்க்கும் கோணம் இக்காலத்தில் கருத்தைக் கற்றுக் கொள்ள யாரும் படம் பார்ப்பது இல்லை;மற்று வருகின்ற குப்பைகள் எவ்வளவோ தேவலாம் என்ற நோக்கில் நீங்கள் எழுதியருப்பதுதான் சிறிது ஒத்துக் கொள்ள இயலாத் தன்மையுடன் இருப்பாதகத் தோன்றுகிறது.

    பாலா என்ற மனிதனின் நாயக பாவங்கள் பற்றிய அலசல்களுக்கு நான் நிச்சயம் வரவில்லை;அவை அவரது எல்லாப் படங்களிலும் மூர்க்கம் சார்ந்த,பின்னப்பட்ட,சிறிது மனப்பிறழ்வு கொண்ட அல்லது சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்ட மனிதர்களாகவே தோன்றுகின்றன.இவ்வகையான மனிதர்களின்(அல்லது ஆக்கியோனின்)மனப்பிறழ்வு குறைபாடுகள் நிச்சயம் இந்தப் பாத்திரப்படைப்புகளில் இருக்கும்.
    என் கேள்வி,அவற்றிலிருந்து நீங்களை வாழ்வின் ஆக்கங்களை ஏன் தேடுகிறீர்கள்? அவை வாழ்வின் வீழ்ச்சிக் கூறுகளையும் முன்வைக்கலாமில்லையா?

    இந்தியாவின் இறை சார்ந்த தத்துவங்களில் பல நல் முத்துக்களுடன்,சில கசட்டுக் கற்பிதங்களும் கூட இருக்கின்றன.

    அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஊடகமா இன்றைய சினிமா?

  • ஏனோ சில பின்னுரைகள் நான் இங்கு இட்டவை,வரவில்லை.நான்கைந்து முறை முயற்சி செய்து விட்டேன்…

    • அறிவன், திரும்ப அளியுங்கள். ஒரு நாள் மட்டும் இந்தப் பிரச்னை இருந்திருக்கும். தளப்பராமரிப்பு.

  • Dear Mr.para

    I dont think that people have the knowledge about the meaning of Aham Bhramasmi. People r appreciating this film
    only because of the new conents in the film.Only few people
    like u know the real meaning, other people don’t know anything. Thanks for writing the real meaning of Aham Bhramasmi which clears the doubts of people like me.

    If u have time, please kindly eloborate more about the meaning of Aham Bhramasmi with proper examples.

  • கமல், பாலசந்தர் போன்ற பிரமணர்கள் இயக்கிய படமென்றால் இவாளுக்கு இனிக்கும். பாலா போன்ற சத்திரியர் இயாக்கிய படமென்றால் இவாளுக்கு கசக்கிறது.காசக்கிறது. பா.ராகவனின் நான் கடவுள் விமர்சனம் சாதீய வெளிப்பாடேவன்றி வேறுன்றுமில்லை.

  • என் வலைப்பதிவின் நான் கடவுள் விமர்சனத்திலிருந்து தங்கள் எண்ணம் சார்ந்தவற்றை மட்டும் பகிர்ந்திருக்கிறேன்

    “இப்படத்தை பிடிக்காதவர்களுக்கு ஒன்று அகோரிகளின் செயல்பாடுகளோ அல்லது ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் உருவ‌ அருவருப்போ மட்டுமே பிடிக்காமல் (அல்லது தாங்கமுடியாமல்) போயிருக்கும். படைப்பை அல்ல. பாலா ஒரு படைப்பாளி, அவ்வளவே. ஆன்மிகவாதியோ, அகோரியோ அல்ல. நரமாமிசம் உண்ணும் அகோரிகளின் செயல்களிலும், உருப்படிகளின் வாழ்விலும் இதை விட உக்கிரமும் உண்மையும் இருக்கும். மறுக்க முடியாது. படம் முடிந்த பிறகும் நம் கண்முன் வியாபித்திருப்பது நாகரிக உலகத்தின் மற்றுமொரு மனசாட்சி.”

    கற்றது தமிழ், சுப்ரம‌ணியபுரம் போன்ற திரைப்படங்களின் வன்முறைகளையும் கொலைகளையும் எதை கொண்டு நியாயப்படுத்துவீர்கள்? முடிவைக் கொண்டு என்று உங்களிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டேன். விவாதமாக்க முயலவில்லை. தங்கள் நேர குறைவும் புரிகிறது, இதற்கு பதிலளிக்கவோ அல்லது பிரசுரிக்கவோ கூட அவசியமில்லை. என் எண்ணங்களை பகிர விருப்பம், அவ்வளவே.

  • ராகவன், உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் முழுவதும் படித்தேன். மிக நேர்மையான விமர்சனம். படத்தை பார்த்த உடன் எனது கருத்துகளையும் பதிவு செய்தேன். எனக்கும் ஏமாற்றம்தான் அதிகம் இருந்தது.
    (உங்கள் அதை மகன் ராஜன் உடன் பணி புரிந்த பொது குரோம்பேட்டையில் உங்களை நான் சந்தித்து இருக்கிறேன். அப்போது கல்கியில் இருந்தீர்கள்.)
    நான் கடவுள் பற்றிய எனது பதிவினை முடிந்தால் வாசியுங்கள்.
    http://aganaazhigai.blogspot.com/2009/02/blog-post.html

  • @ ஜெகதீசன்

    கண்ணால் பார்க்கப் படுபவை அனைத்துக்கும் சாதிச் சாயம் பூச முயலும் நீங்கள் தான் பிற்போக்குவாதி. சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை அதன் போக்கிலயே பார்க்கும் மனப்பக்குவத்தை கடவுள்/இயற்கை/ அல்லது எது வேண்டுமானாலும் உங்களுக்கு குடுக்க நான் பிரார்த்திக்கிறேன்.
    இனிமேலாவது இந்த பெயிண்ட் அடிக்கும் வேலையே விடவும்.

  • http://www.jeyamohan.in/?p=1892
    *குரு என்னும் உறவு*

    தமிழில் சிந்திக்க ஆரம்பிக்கும் ஒருவன் குறைந்தபட்சம் குறளையாவது படித்துப்பார்க்க வேண்டும். துறவு என்ற தலைப்பில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார் வள்ளுவர். கடைசிக்குறள் இது

    பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு

    ”பற்றை விடவேண்டுமென்றால் பற்றறவவன் மீதான பற்றை பற்றிக்கொள்ளுக” என்று வள்ளுவர் சொல்கிறார். இங்கே பற்றற்றான் என்ற சொல்லுக்கு இறைவன் என்றே பரிமேலழகர் போன்றோர் உரை கூறுகின்றனர். ஆனால் பற்றறுத்த ஞானாசிரியன் என்ற பொருளும் பொருந்துவதே. பற்றற்றவனை பற்றுதல் என்பது பற்றறுக்கும் வழியேதான் என்பதற்கு மேல் உங்கள் கேள்விக்கு ஓர் ஆணித்தரமான பதில் தேவையா என்ன?

    ஆனால் ஆன்மீகப் பயணத்தின் இறுதிப்படிகளில் குரு நம்மை விட்டுவிடுவார். நடக்க ஆரம்பித்த குழந்தையை அம்மா விட்டுவிடுவதுபோல. அதன் பின் சீடன் அவனது மெய்ஞானத்தையும் மீட்பையும் அவனே கண்டடைய வேண்டியதுதான். அந்தப்பயணம் முற்றிலும் தனியானது. அங்கே குரு என்றல்ல இறைவனும்கூட இல்லை.

  • your thought is really upset me. Your way of understanding a movies is very poor even worst.First you see some good movies from Iran,Brazil , china and Bengal then u criticize about Indian cinemas. you dont have any vision about a cinema first.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி