சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்

தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது.

முதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது உண்மை. அதிஷாவின் இந்த விமரிசனமும் படம் ஏமாற்றம் தருவதாகச் சுட்டிக்காட்டியது. இருப்பினும் இன்று தியேட்டருக்குச் சென்றதன் காரணம், இயக்குநரின் முந்தைய படங்கள் என்னைச் சற்றும் ஏமாற்றியதில்லை என்பதுதான்.

மொழி அளவுக்கு அபியும் நானும் தரமான படமல்ல என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அதன் மிகுநாடகத் தன்மை குறித்த பலத்த விமரிசனங்கள் இருந்தாலும் அந்தப் படம் எனக்குப் பிடித்ததற்குச் சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அது இங்கே அநாவசியம். ஆனால் ராதாமோகன் நிச்சயமாக இடது கையால் நிராகரிக்கப்படவேண்டிய இயக்குநரல்ல. தமிழின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் கண்டிப்பாக அவருக்கு ஓர் இடம் உண்டு. பயணம் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கிற படம். துரதிருஷ்டவசமாகப் போலி அறிவுஜீவிகள் முதலில் பார்த்து கிழிகிழியென்று கிழித்துவிட்டபடியால் பின்னால் வருகிற கருத்துக்குக் காதுகள் கிடைப்பது கஷ்டம்.

பிரச்னையில்லை. இது பயணம் படத்தின் விமரிசனமல்ல. ஒரு வெகுஜன சினிமாவை எப்படிப் பார்க்கவேண்டும் என்று சினிமா பார்க்கத் தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற கட்டுரை. என் கெட்டநேரம், இப்படியெல்லாமும் ஒரு கட்டுரை எழுதும்படியாக என் நண்பர்களே என்னைத் தூண்டியிருப்பது.

வர்த்தக சினிமா என்பது பணத்தைப் போட்டு, பணத்தை எடுக்கிற தொழில். இதில் அரசியல், மதம் உள்ளிட்ட எந்தக் கருத்துத் திணிப்பு நோக்கமும் பொதுவாக இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. அப்படி ஏதாவது கண்ணுக்குத் தென்படுமானால் அது முற்றிலும் தற்செயலானதே. அல்லது, அந்தக் குறிப்பிட்ட கருத்துத் திணிப்பு படத்தின் ஓட்டத்துக்கு உதவும் என்று அவர் நம்பியிருக்கலாம்.

பிரசன்னாவின் வாதம், இதில் ராதாமோகன் கிறித்தவத்தைத் தூக்கிப் பிடிப்பதாகச் சொல்கிறது. அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. படத்தில் வரும் கிறித்தவப் பாதிரியார் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறார், பேசுகிறார். இறந்த உடலைக் கண்டதும் போலீஸ்காரர்கள் தொப்பியைக் கழட்டுவது போன்றதுதான் பாதிரியார்கள் உடலின் அருகே அமர்ந்து ஜபிப்பதும்.

தீவிரவாதிகள் ஒரு பயணியைச் சுட்டுக்கொன்று விடுகிறார்கள். கொடூரத்தை நேரில் பார்த்து அதிர்ந்த பாதிரியார் அவர்களில் ஒருவனிடம் பேசுகிறார். விமானத்தில் உள்ள மற்றவர்களுக்குக் குடும்பம், குழந்தை குட்டி இருக்கும். நான் ஒண்டிக்கட்டை. அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது? ஒரு நெருக்கடி நேரத்தில், மூத்த குடிமகன் ஒருவர் மிகச் சரியாக யோசித்துப் பேசும் வசனமல்லவா இது? அது பாதிரியாராக அல்லாமல் வேறு யாராவது பொதுவான கட்டை பிரம்மச்சாரி வயசாளியாக இருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பார். இதற்கு மதம் தேவையில்லை. மனிதாபிமானம் போதும்.

அதெல்லாம் சரி, இன்னொரு பிரம்மச்சாரி கதையில் இருந்திருக்கலாமே என்று பிரசன்னா கேட்கமாட்டார் என்று நம்புகிறேன். அப்படி இருந்தே தீரவேண்டுமென்றால் அது அவரது விருப்பம். அவர்தான் அப்படியொரு கதை எழுதிப் படமெடுக்க வேண்டும். இன்னொருத்தர் திரைக்கதையில் இது ஏன் இப்படி இருக்கக்கூடாது என்று கேட்பது விமரிசனமல்ல. இது சரி, சரியில்லை என்று சொல்ல மட்டுமே பார்வையாளனுக்கு அனுமதி.

தோழர் மருதன், தமது விமரிசனத்தில் தீவிரவாதிகளின் குரலுக்கு வலு சேர்க்க விடாமல் அடிக்கும் காரணிகளைச் சுட்டிக்காட்டி தன் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.  தீவிரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டியது பற்றி எத்தனை வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் காஷ்மீர், குஜராத், பாபர் மசூதி குறித்துப் பேசினால் கொய்ங் என்று சத்தம் வந்துவிடுகிறது என்று தன் அறச் சீற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

ரொம்ப நியாயம். விமானத்தைக் கடத்துவது, பயணிகளைக் கொல்வது, பேரம் பேசி, இன்னொரு தீவிரவாதியை விடுவிக்கச் சொல்வது நூறு கோடி ரூபாய் பணமும் கேட்பது, பிறகு அதை மட்டும் வேண்டாம் என்று திடீர் ஞானோதயம் ஏற்பட்டு [அப்படிப் பணம் கேட்பது புனிதப் போர் சித்தாந்தத்துக்கு விரோதம் என்று ஜே.கே.எல்.எஃப் அறிக்கை விட்டிருப்பதாக டிவி நியூஸ் சொல்கிறது – படத்தில். அதைப் பார்த்து மனம் மாறியதாக எடுத்துக்கொள்ளலாம்.] ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைப்பது, வெளியேறும் தருணத்திலும் சிறு குழந்தையின் பையில் பாம் வைப்பது என்று, புனிதப் பணியில் ஈடுபடுவோரின் குரலுக்கு இயக்குநர் வலு சேர்க்கத் தவறியது மருதனுக்குப் பிரச்னையாகிவிடுகிறது.

என்ன செய்யலாம்? காஷ்மீர் தீவிரவாதிகளை உலக உத்தமர்களாக அறிவித்து மெரினாவில் சிலை வைத்துவிடலாமா?

மருதன் எதிர்பார்ப்பது, பாபர் மசூதியை இடித்தது தவறு, குஜராத்தில் மோடி முன்னின்று நடத்திய மதக்கலவரம் தவறு, காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தவறு என்று மைக் வைத்துப் பேசும் பொதுக்கூட்டம்தான் என்றால், ஒரு த்ரில்லர் சினிமாவில் அது சாத்தியமில்லை.

வெகு ஜனங்களுக்காக எடுக்கப்படும் திரைப்படங்களில் நல்ல சக்தி எது, கெட்ட சக்தி எது என்று பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க ஒரு காட்சி கூட அவசியமில்லை. ஒரு ஷாட் போதும். ஒரு கண் அசைவு போதும். நியாயங்கள், ஒவ்வொருவர் மனத்திலும் எப்போதும் இருப்பது. அதனோடு இயக்குநர் ஒத்துப் போனால் படம் வெல்லும். முரண்பட்டால் தோற்கும். அவ்வளவுதான்.

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்தானா என்ற அதிஷாவின் அறச் சீற்றத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். கண்டிப்பாகப் படத்தில் அப்படியொரு சித்திரிப்பு எந்த இடத்திலும் இல்லை – என் புரிதலுக்கு உட்பட்ட வரை. ஆனால் தமிழ் சினிமா அல்லது எந்த ஒரு இந்திய சினிமாவும் தீவிரவாதிகளை முஸ்லிம்களாக மட்டுமே காட்டுவதற்கான எளிய நியாயம், இந்தியாவில் இம்மாதிரியான காரியங்களை அவர்கள் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என்பதுதான்.

உடனே குஜராத்தில் ஹிந்துக்கள் செய்யவில்லையா, மாலேகானில் சாமியார் சம்மந்தப்படவில்லையா என்று மைக் பிடிக்கப்போய்விடுவார் மருதன். உண்மை. மறுக்க முடியாது. ஆனால் விமானக்கடத்தலில் ஈடுபடக்கூடிய ஹிந்து தீவிரவாத இயக்கம் என்ற ஒன்று இதுநாள் வரை இல்லை என்பதையும் மறுக்க முடியாது. [இந்தியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களும் இதைச் செய்ததில்லை. அதனால்தான் இயக்குநர் கவனமாக பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களாக அவர்களைக் காட்டுகிறார்.] பிரச்னையில்லாத கனவுப் பாடல் காட்சிகளையும், கதைக்குத் தேவையில்லாவிட்டாலும், உற்சாகம் தரக்கூடிய அடிதடி ஆக்‌ஷன் காட்சிகளையும் கற்பனையாக வைக்கும்போது ரசிப்பது பாமர ரசிக மனம். அதுவே, ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியான விஷயத்தைக் கற்பனையாக புனைந்து உருவாக்கும்போது உடனடியாக முரண்பட்டு எழுந்து போய்விடுவது இயல்பான விஷயம். படத்தில் ஏன் விமானம் கடத்துபவர்கள் முஸ்லிம்களாகக் காட்டப்படவேண்டுமென்றால், வேறு யாரும் இந்தியாவில் விமானம் கடத்தியதில்லை என்பதுதான் பதில்.

தோழர், தீவிரவாதிகள் இஸ்லாமியர்களுக்கேகூட எதிரானவர்களாக [முஸ்லிம் சிறுமியின் பையில் பாம் வைப்பது] சித்திரிக்கப்படுவது பற்றியும் கவலைப்பட்டிருக்கிறார். கொஞ்சம் சரித்திரம் தெரிந்துகொள்வது நல்லது.

பிப்ரவரி 23, 1998ம் ஆண்டு அல் காயிதா ஒரு ஃபத்வா வெளியிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான ஃபத்வா.

‘இஸ்லாத்துக்கு எதிரானவர்களின் மீது போர்தொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. வளைகுடா பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலுமாக விரட்டியடிப்பது அவசியம்.’ என்பதுதான் அந்த ஃபத்வாவின் சாரம். இந்த ஃபத்வாவை மே மாதம் 7ம் தேதி, அல் காயிதாவின் அப்போதைய தளபதியான முகம்மது அடஃப், லண்டனிலுள்ள அல் காயிதா அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் செய்தார். லண்டனிலிருந்து வெளியாகும் அரபு செய்தித்தாளான அல் – கத்ஸ் – அல் அரபி (Al quds al Arabi) அந்த ஃபத்வாவைப் பிரசுரித்தது [மே 8ம் தேதி.]

இதன் தொடர்ச்சியாக ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒசாமா பின்லேடனின் பேச்சு அடங்கிய வீடியோ டேப் ஒன்று அனுப்பப்பட்டு, ஒளிபரப்பானது. இந்த ஃபத்வா வரிகளை மீண்டும் அதில் உறுதிப்படுத்திவிட்டு, “ராணுவ வீரர்கள், சிவிலியன்கள் என்று நாங்கள் பார்க்கமாட்டோம். எதிரிகள் எதிரிகள்தான். அமெரிக்க அரசுக்கு வரி செலுத்தும் அத்தனை பேருமே எங்கள் இலக்கு” என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7ம் தேதி நைரோபியிலும் [கென்யா] தர் ஏ சலேமிலும் [தான்சானியா] உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்மீது அல் காயிதா தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியது. நைரோபியில் சுமார் இருநூறு பேர் இந்தத் தாக்குதலில் இறந்தார்கள் என்று நினைவு. தர் ஏ சலேமில் பதினொரு பேர் இறந்தார்கள். அத்தனை பேரும் முஸ்லிம்கள்.

இது குறித்துப் பிறகு ஒசாமா பின்லேடன் வெளியிட்ட அறிக்கை இப்படி இருந்தது: “அமெரிக்கர்களைக் கொல்வதுதான் எங்கள் நோக்கம். அமெரிக்கர் அல்லாதோரையும் சேர்த்துக் கொன்றால்தான் அமெரிக்கர்களையும் கொல்லமுடியும் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். தாக்குதலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை. அதுவும் அனுமதிக்கப்பட்டதே.”

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. இராக்கில், பாலஸ்தீனத்தில் இன்னபிற மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதலில் அமெரிக்கர்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது அப்பாவி மக்கள்தாம். அவர்களும் முஸ்லிம் அல்லவா என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை.

சிறுமியின் பையில் தீவிரவாதி பாம் வைத்தது பற்றி தோழர் மருதனின் பதற்றம் சற்று அதிகம் என்று தோன்றியதால் இந்த விளக்கம்.

அடிப்படையில் ஒரு விஷயம். இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னும் பதம் தவறானது. தீவிரவாதிகளில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் சரியான புரிதல். ஹிந்து மதம், கிறித்தவ மதம், யூத மதம் இன்ன பிற மதங்கள் எதிலிருந்தும் தீவிரவாதிகள் உருவாகலாம். அவரவருக்கான நியாயங்கள், நோக்கங்கள், அவரவருடையவை. இந்திய கிரிமினல் சட்டங்களைப் பொருத்தவரை தீவிரவாதிகளுக்கான தீர்ப்பு அல்லது தண்டனை என்பது ஒரே விதமானதுதான். அது மதங்களைக் காண்பதில்லை. இது மக்களுக்குப் புரியாததும் இல்லை. ஹிந்து என்பதால் நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிடாமலும் இல்லை. முஸ்லிம் என்பதால் அப்துல் கலாமை நாம் ஜனாதிபதி ஆக்காமலும் இல்லை,

ஒரு தீவிரவாதியை முஸ்லிமாகக் காட்டுவதாலேயே முஸ்லிம் விரோத மனப்பான்மை வளர்ந்துவிடும் என்று அறிவுஜீவிகள் பதற்றப்படுவது தமாஷாகத்தான் இருக்கிறது. மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்.

மற்றபடி இந்தப் படம் ஒரு தெளிவான, சுவாரசியமான த்ரில்லர். மசாலாவுக்கு நிறைய சாத்தியங்கள் இருந்தும் கூடுமானவரை மையக் கருவை விட்டு நகராமல், எதையுமே மிகைப்படுத்தாமல் மிக இயல்பாக ஒரு கடத்தல் சம்பவத்தை விவரிக்கிறது. அத்தனை பதற்றத்தில் ஜோக்கடிப்பார்களா, மிமிக்ரி செய்வார்களா என்றெல்லாம் நமது உன்னத விமரிசகர்கள் கேட்கிறார்கள். பயம் மட்டுமல்ல; மகிழ்ச்சியும் துக்கமும் கோபமும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மாறக்கூடிய உணர்ச்சிகளே. சாவு வீட்டில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்துபோய் காப்பி போட்டு சாப்பிடுவதில்லையா? இறந்தவருக்காக வருந்தி இருப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதமா இருக்கிறார்கள்?

அறிவுஜீவி விமரிசகர்களுக்கு இயல்பாக இருப்பது சிரமமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக.

படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.

Share

50 comments

  • //துரதிருஷ்டவசமாகப் போலி அறிவுஜீவிகள் முதலில் பார்த்து கிழிகிழியென்று கிழித்துவிட்டபடியால் பின்னால் வருகிற கருத்துக்குக் காதுகள் கிடைப்பது கஷ்டம்.//

    மிலாடிநபித் திருநாளில் எங்கள் “சமத்துவ அத்வானி” ஹரன்பிரசன்னாவை போலி அறிவுஜீவி என விளித்ததை கடுமையாக கண்டிக்கிறேன்.. ண்டிக்கிறேன்.. டிக்கிறேன்.. க்கிறேன்.. கிறேன்.. றேன்.. ன்!

  • //அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது? ஒரு நெருக்கடி நேரத்தில், மூத்த குடிமகன் ஒருவர் மிகச் சரியாக யோசித்துப் பேசும் வசனமல்லவா இது?
    //
    Yes, Yes. You are absolutely correct in your assessment 🙂

  • பொதுவாக, அறிவுஜீவித்தனத்துடன் தமிழ் சினிமா பார்ப்பது என்பதே ஒரு ஆக்ஸிமோரான் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்!

  • >>மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்>>

    அருமை. நானும் படம் பார்த்தேன். முற்றிலும் உடன் படுகிறேன் உங்களுடன். விடலைகளை திருத்த நீங்களாவது முயற்சி எடுக்குறீர்களே 😆

  • Perfect writeup Para. When I read all the 3 reviews I felt exactly the same. They were Overreacting for the sake of over reacting.

    Glad to know that you are not one of those Jeevis.. 🙂

  • பாரா,
    மேற்படி விமரிசனங்களைப் படித்தபோது நான் நினைத்ததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்! நன்றி!!
    அறிவுஜீவித்தனம் ஓர் அகம்பாவம், விமரிசனம்தான் என்றில்லை.. எதைச் செய்தாலும் இயல்பை விலக்கிக்கொண்டு, அது தன்னைத் துருத்திக்கொண்டு முன்னே வந்து நிற்கும். எதையும் ரசிக்க விடாது! அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல அறிவுஜீவித்தனம் எதையும் சந்தேகத்தோடும் கேலிச்சிரிப்போடும்தான் பார்க்க வைக்கும். இருக்கும்போது இரு என்ற ஜென்னியத் தத்துவம்தான் படைப்புகளை ரசிக்கவைக்கும். சினிமா பார்க்கும்போது வெறும் ரசிகனாக மட்டுமே இருக்கப் பழக வேண்டும்.

  • மேற்படி எனது பின்னூட்டம் தமிழ் பேப்பரில் நான் படித்த சினிமா விமரிசனம் என்ற பொதுத்தலைப்பில் வெளியாகியுள்ள மீட்பரின் புதிய சீடர் வருகை என்ற கட்டுரை பற்றியதுதான். நீங்கள் இரண்டாவதாகக் குறிப்பிட்ட அதிஷாவின் விமரிசனத்தை இன்னும் நான் படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன்.

  • Have not watched the film, so couldn’t comment on your take on your peers. Loved your closing note “படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.

    😀

  • அதிஷாவின் விமரிசனத்தையும் படித்துவிட்டேன். படம் பார்க்கும்போது பல இடங்களில் ‘அச்சச்சோ! மிஸ் பண்ணிட்டாங்களே! இப்படிப் பண்ணியிருக்கலாமே!’ என வருந்திக்கொண்டேன். அந்த வருத்தங்களையெல்லாம் ஒன்று திரட்டி – பிரம்ம ராட்சஸனாகப் பாவித்து பொளந்து கட்டியிருக்கிறார் அதிஷா. ராதா மோகனைக் கட்டி வைத்து அடிக்காத குறைதான்! முடிவாக.. ‘இப்படம் குப்பை’ என தீர்ப்பளித்திருப்பதெல்லாம் ரொம்பத் தப்பு. எனக்கு அதிஷாவின் எழுத்துக்களைப் பிடிக்கும், வாய்ப்புக் கிடைக்கையில் படித்து வந்திருக்கிறேன். பலமுறை ரசித்திருக்கிறேன். பயணம் படம் பார்ப்பதற்கு முன்பு அதிஷாவின் இந்த விமரிசனத்தைப் படித்திருந்தால் படத்தைப் பார்க்கத்தான் வேண்டுமா என நிச்சயம் யோசித்திருப்பேன். காரணம்.. படிக்கும்போது நான் அதிஷாவின் வாசகன் மட்டுமே! எழுத்துக்கும் எழுத்தின் மூலம் சொல்லும் கருத்துக்கும் வலிமை இருப்பதை இளைய சமுதாயம் நிச்சயம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் – நான் சினிமா விமரிசனங்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை! நட்புடனும் நம்பிக்கையுடனும்.. ஜி.கௌதம்.

  • முதன் முறையாக உங்கள் கருத்துக்கு எழுந்து நின்று கைதட்ட வேண்டும்போல இருந்தது…
    சத்தியமாக இங்கு போலி அறிவுஜீவிதனமும் போலி மதச்சார்பின்மையும் ஒழிக்கப்பட வேண்டும் . அறிவுஜீவி என்ற முகமூடி மிக எளிதாக மனிதத்தையும் அதன் உணர்வுகளையும் கொள்கிறது.

  • பாரா,

    நானும் இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது – ‘சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.’

    ராதா மோகன் இடது கையால் புறம்தள்ளவேண்டிய இயக்குநர் அல்ல என்பதைப் போலவே தமிழின் முக்கியமான இயக்குநரும் அல்ல. அவரது படங்கள் எதுவுமே கொண்டாடத் தகுந்தவை அல்ல. ஆயிரம் விமர்சனங்களைத் தாண்டியும், மொழி மட்டுமே கொஞ்சம் சுமாரான படம்.

    படத்தில் வருவது எல்லாமே சும்மாதான் என்று நீங்கள் மருதனுக்கும், எனக்கும் அதிஷாவுக்கும் கிளாஸ் எடுப்பதைப் படித்துப் பார்த்தால், எனக்கென்னவோ நாங்கள் சேர்ந்துதான் உங்களுக்கு கிளாஸ் எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை சப்பையாக ஒரு திரைப்படத்தைப் பார்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு பார்த்தால் மட்டுமே உங்களால் படம் பார்க்கமுடியும். இது ஒரு கொடுப்பினை.

    போலி அறிவுஜீவிகள் என்று எங்களைச் சொல்லியிருப்பதும் அநியாயம். யார் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறார்களோ அவர்களைத்தான் நீங்கள் போலி அறிவுஜீவிகள் என்று சொல்லமுடியும். 🙂

    மூன்று பேர் விமர்சனம் எழுதிவிட்ட நிலையில், எதாவது புதியதாக எழுதவேண்டும் என்கிற பரபரப்பு அன்றி, எதுவும் இல்லை இதில். அடுத்தமுறை முதல்நாளே பார்த்து, அன்றே எழுதிவிடுவது நல்லது.

  • சில மாதங்களுக்கு முன் எழுதியது விமர்சனங்களை விமர்சிப்பவர்களை விமர்சித்தொரு விமர்சனம் !!

    இங்கும் பொருந்துகிறது என்று தோன்றுவதால் சுட்டி தருகிறேன் http://www.payanangal.in/2009/10/blog-post.html

  • சார்,

    இதுதான் உண்மையான அறச்சீற்றம். உங்கள் வயதும் அனுபவமும் பேசுகிறது.

  • பாரா அவர்களுக்கு, வணக்கம். உங்கள் தீவிரவாசகியான நான் பின்னூட்டம் இடுவது இதுவே முதல் தடவை. பயணம் படத்தை நான் இரண்டுமுறை பார்த்தேன். நிச்சயமாய் நீங்கள் சொல்லியிருப்பதே சரியானது. அரசியல் உள்நோக்கத்தினுடன் இப்படத்திற்கு மதச்சாயம் பூசுவது தவறேயாகும். உங்கள் பதிவில் இருந்த சுட்டிகளின் வழியே தான் திரு மருதன் மற்றும் திரு ஹரபிரசன்னா ஆகியோரின் விமர்சனங்களைப் படித்தேன். என்னால் ஒரு திரைப்படத்தினை இப்படிபட்ட பார்வையில் பார்க்க முட்யுமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல், கனவு காட்சிகள் இல்லாமல், ஒரு ஹீரோயின்கூட இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசமாகவோ, குத்துபாட்டுகள் இல்லாமல் ரசமாகவும் எடுத்திருக்கிறார். மிஷ்கின் படங்கள்கூட அறிவுஜீவிதனமாக இருந்தாலும் வியாபார தந்திரத்துக்காக ஒரு குத்துபாட்டு வைத்திருப்பார்கள். இந்த இயகுநர் படத்தில் அப்படி ஏதும் இல்லை என்பதையும் நீங்கள் சொல்லியிருக்கலாம். பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் ஒரு தரமான த்ரில்லர் படம் வந்திருக்கிறது. பாராட்ட மனமில்லாவிட்டாலும் “அறிவுஜீவிகள்” வயிறு எரியாமல் இருக்கலாம்!

  • //ஹிந்து என்பதால் நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிடாமலும் இல்லை. முஸ்லிம் என்பதால் அப்துல் கலாமை நாம் ஜனாதிபதி ஆக்காமலும் இல்லை//

    //கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக//

    அருமையான விமர்சனம்.திரைப்படத்துறையிலும் உங்கள் பங்கு இருப்பதை சொல்லிக்காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

  • another point of view for payanam movie…. good one

    // படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள். //

    Para punch…. 🙂

  • After received a comment from a friend I don’t want to see it. But Now I changed my mind, ’cause of your writing. Got a weekend plan.

    Thanks
    Gokul

  • //haranprasanna says:
    February 17, 2011 at 6:22 AM
    ராதா மோகன் இடது கையால் புறம்தள்ளவேண்டிய இயக்குநர் அல்ல என்பதைப் போலவே தமிழின் முக்கியமான இயக்குநரும் அல்ல. அவரது படங்கள் எதுவுமே கொண்டாடத் தகுந்தவை அல்ல. ஆயிரம் விமர்சனங்களைத் தாண்டியும், மொழி மட்டுமே கொஞ்சம் சுமாரான படம்//

    ஹரன்பிரசன்னா! இது ரொம்ப ஓவர் 🙂 உங்கள் வழியிலேயே வைத்துக்கொள்வோம் சுமாரான படம் என்றாலும் மோசமான படமில்லை. குறைந்த பட்சம் வழக்கமான குப்பைகளில் இருந்து கொஞ்சம் வெளியேறி எடுக்கப்பட்ட படம் தான் அபியும் நானும் மற்றும் மொழியும்.

    இதைப்போல படங்களை பாராட்டவில்லை என்றாலும் தயவு செய்து முடக்காதீர்கள். திட்ட ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இப்படி புதிய முயற்சிகளை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டு இருந்தால் வேறு எவரும் முயற்சித்து பார்க்கக்கூட மாட்டார்கள். அப்புறம் குத்துப்பாட்டு மசாலா என்று வழக்கமான படங்களையே விதியே என்று பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

    நல்ல படம் வித்யாசமான படம் வரவில்லை என்று புலம்புகிறோம் ஆனால் அப்படி வந்தால் இதைப்போல குறைகூறி வேறு எவரும் மறந்து கூட எடுக்க துணியாத அளவிற்கு அதை நாறடித்து விடுகிறோம்.

    என்னமோ போங்க!

    //படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.//

    சார்! 😀 இந்த ரணகளத்திளையும் ஒரு கிளுகிளுப்பா! ரொம்ப ரசித்தேன்.

  • //அறிவுஜீவி விமரிசகர்களுக்கு இயல்பாக இருப்பது சிரமமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக.//இந்த வரிகளின் வலிமையே போதும்

    மிகவும் அற்புதமான கட்டுரை. நன்றி

  • yetho sila kazhisadai naaykal seykinra seyalkalukkaka naam yen ottumottha muslim enru antha inatthaiye koora vendum? antha arakkankal avarkal iyakkatthirkkenru oru peyar vaitthu irukkum pothu antha peyaraik kondu azhaikkalaame inthiyavil ulla sila inthu amaippuakal thavaru seyyum pothu naam inthu theeviravaathi enra ezhuthukirom? pajrangthal, RSS ,sivasena enrallava ezhuthukirom athupola avarkalaiyum antha iyakkatthin peyaraal ezhuthinaal veenaha aduthavar manam punpadamal irukkumallava? neenkal kuruppitahu pola abdul kalam ponra nallavarkalum muslimkalil ullaarkalthaane.

  • நிச்சயமாக இது வித்தியாசமான படம் இல்லை. நாகார்ஜூனாவின் ஹீரோயிசம் அதற்கு ஓர் உதாரணம்.(இதில் ஹீரோயிசம் இல்லையென்று சப்பைக்கட்ட ஒரு கேரக்டர்) இரண்டாவது இது த்ரில்லர் படமும் அல்ல. ஏனென்றால் படம் பார்க்கும் போது ஏதோ மைலாப்பூர் அமெச்சூர் டிராமா கம்பெனியாரின் மேடை நாடகம் பார்க்கிற உணர்வே மிஞ்சியது. அதிலும் பணயக்கைதிகளின் உணர்வு படம் முழுக்க பிக்னிக் வந்தவர்களைப்போல மிகச்சாதரணமாகவே இருந்தது. படம் பார்ப்பவருக்கு அந்த பாத்திரங்களின் பதட்டம் தொற்றிக்கொள்ள வேண்டாமா? இந்தப்படத்தை நாரதகானசபாவிலோ அல்லது வேறேதாவது சபாவிலோ(மைலாப்பூரில் மட்டும்) மேடைநாடகமாக போட்டால் நன்றாக ஓடும்!

  • தாங்கள் 2008ல் ஒரு கேள்விக்கு கூறிய பதில்

    ”தமிழில் யாருக்கும் சினிமா அப்ரிஸியேஷன் பயிற்சி இல்லை என்பது என் அபிப்பிராயம்.”

    தங்கள் கருத்தில் மாற்றம் இருக்காது என நினைக்கின்றேன். பிறகு எதற்கு இது?

  • //
    மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்
    //

    மக்களுக்கு அது தெரியும், ஆனால் மாங்காய்களுக்கு அது தெரியாது.

    அனானிமஸ் வலைப்பதிவர் சொன்ன கருத்து இது. அறிவு இல்லாமல் ஜீவிப்பவன் தான் அறிவு ஜீவி.

  • //ஒரு தீவிரவாதியை முஸ்லிமாகக் காட்டுவதாலேயே முஸ்லிம் விரோத மனப்பான்மை வளர்ந்துவிடும் என்று அறிவுஜீவிகள் பதற்றப்படுவது தமாஷாகத்தான் இருக்கிறது. மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்..//

    ஏனோ.. அந்நியனின் ‘அஞ்சு பைசா திருடினா தப்பா’ நினைவு வருகிறது.

  • உண்மை நிகழ்வுகளை பின்னனியாக கொண்ட படம் ஆகையால் பாதரியார்க்கு பதில் ஒரு முல்லாவை காட்டியிருந்தால் பிரசன்னா போன்ற்றொர் விமர்சனம் எடுபடாது

  • //அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது?// கிறிஸ்தவ பிரச்சாரம் வரவில்லை தான். ஆனால் ஒரு கருணை உள்ளதுறவியைக் காட்ட வேண்டுமென்றால் பாதிரியார் தான் வரவேண்டுமா என்ன? அன்பே சிவம் என்று படம் எடுத்து விட்டு சிவனைக் கும்பிடுபவனை வில்லனாகவும் கன்னியாஸ்திரியை அன்பொழுகும் கருணைக்கடலாகவும் காண்பித்த கமலஹாசனின் செய்க்யூலரிச மனப்பான்மைக்கு இந்த இயக்குனரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது. ஏன் ஒரு காவித்துறவி என்னுயிரை எடுத்துக்கொள் என்று கூறும்படி காண்பித்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன? காவி உடையில் போலிச்சாமியாரை காட்சிப்படுத்தவும் கேலிபண்ணவும் ஆளாய்ப்பறக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் கருணையுள்ளவராக காட்ட கஞ்சப்படுவது ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் செக்யூலரிசம் போல?

    // இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னும் பதம் தவறானது// ஏன் தவறானது. இஸ்லாத்திற்காக, அல்லாவிற்காக என்று கூறிக்கொண்டும், உலகெங்கிலும் தம் மதத்தை நிறுவ இஸ்லாம் அல்லாதவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறிக்கொண்டும் கொலை பாதகத்தில் அவர்கள் ஈடுபடும் வரை அவர்கள் இஸ்லாமியத்தீவிரவாதிகள் என்று அழைக்க்ப்படுவதற்கு முழு தகுதியும் உள்ளவர்களே!

  • பாதிரியார் பற்றிச் சொல்லும் போது ஒன்று மறந்து விட்டேன். ஏசுவிற்கும் முன்னால் ரந்திதேவன் என்கிற பாத்திரத்தை பற்றி கேள்விப்பட்டதில்லையா?

    http://hayyram.blogspot.com/2010/03/blog-post_09.html

  • எனக்கு பிரசன்னாவின் விமர்சனத்தைப் படித்த போது மனதில் உடனே நினைவுக்கு வந்தது இது தான்.

    ஒரு பழைய காமெடி காட்சி. அடிக்கடி தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்படும்.
    கவுண்டமணியிடம் பாடு கற்றுக் கொள்ள ஒரு கறிக்கடை பாய் வருவார்.
    அவர் பாடுவது நாராசமாக இருக்க ஒரு கறிக்கடைக் காரனுக்கெல்லாம் பாட்டு சொல்லி தரும் விதியை நொந்து கொள்ளவார் கவுண்டமணி.

    இன்னொரு காமடி
    பார்த்திபன் வடிவேலு துபாய் ….

    இத மாதிரி எல்லாம் இப்போ யாரும் படம் எடுத்து விட முடியாது. துபாயில் வடிவேலு செய்ததாக பார்த்திபனால் மிரட்டப்படும் கிண்டலடிக்கப்படும் அதே வேலை இந்தியாவில் என்று காட்டப்பட்டு இருந்தால் ஒரு வேளை அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருக்கும்.
    இப்போ communal உணர்வுகள் திரும்பத் திரும்பத் தூண்டப் படுகிறது. சினிமாவோ ஒரு இலக்கியமோ அதன் வட்டத்துக்கு வெளியில் அதன் படைப்பாளியின் மனோபாவத்தை பிரதிபலிப்பதாகவே சமீபகாலமாக பலராலும் முன் வைக்கப்படுகிறது.

  • //நைரோபியிலும் [கென்யா] தர் ஏ சலேமிலும் [தான்சானியா] உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்மீது அல் காயிதா தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியது. நைரோபியில் சுமார் இருநூறு பேர் இந்தத் தாக்குதலில் இறந்தார்கள் என்று நினைவு. தர் ஏ சலேமில் பதினொரு பேர் இறந்தார்கள். அத்தனை பேரும் முஸ்லிம்கள்.//

    வரலாற்று உதாரணங்களுக்கு அவ்வளோ தூரம் போகணுமா? 26/11 மும்பை தாக்குதலில் பல அப்பாவி மக்கள் இறந்தனர். அதில் நம் அப்பாவி முஸ்லிம்களும் உண்டு.

  • உங்கள் கட்டுரை மிக மிக மிக தவறு அன்பு சகோதரரே! இந்தியாவில் நடக்கும் அனைத்து தீவிரவாத காரியங்கள் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு இருப்பது. இதில் இருந்து தெரிகிறது உங்களுக்கு செய்தி தாள்கள் பார்க்கும் பழக்கம் இல்லை என்று, மாலேகான் ,அஜ்மீர், தென்காசி இன்னும் பல சம்பவங்கள் இருக்கிறது இவை அனைத்தும் சன்பரிவார கூட்டம் அதாவது இந்து மதத்தில் இருக்கும் ஆரிய வந்திரிகள் . நாம் எல்லாம் இந்தியர்கள் ஆக நியாயம் அடிப்படயுள் பார்த்தால் முஸ்லிம்களுக்கு எந்த சம்மத்தமும் இல்லை .இன்னு சொல்ல போனால் பாபர் பள்ளிவாசலை இழந்து, குஜராத்தில் உயிர்களை இழந்து இருப்பவர்கள் முஸ்லிம்கள். விரிவாக பார்க்க http://www.tamilislam.com

  • உங்களுக்கு அப்படி முஸ்லிம்கள் பற்றியான தவறான செய்திகள் வந்து இருக்கிறது . ஒரு உயிரை வாழ வைத்தவன் எல்லா மனிதனையும் வாழவைத்தவன் என்று கூறும் ஒரே வேதம் குரான். உலக நாட்டில் நடந்த அனைத்து பயங்கரவாத சம்பவங்கள் யூத ,இந்து துவ தீவிரவாதிகளால் பரப்பப்பட்டு உள்ளது . இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறத என்ற புத்தகத்தை படிங்கள் உங்களுக்கும் கடவுள் மனசு வைத்து படைத்து வைத்து இருக்கிறன் . ப்ளீஸ் இனிமேல் நண்பர்களே முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று கூற வேண்டாம்.

  • காவி உடையில் போலிச்சாமியாரை காட்சிப்படுத்தவும் கேலிபண்ணவும் ஆளாய்ப்பறக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் கருணையுள்ள
    வராக காட்ட கஞ்சப்படுவது ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் செக்யூலரிசம் போல? //

    காவி உடை சாமியார்கள் தான் மிக அதிகமாக கொலை,கொள்ளை,பெண்களை கேவலபடுத்துதல் ஆகியவற்றை செய்திருக்கின்றனர் மிக சமிபகாலமாக, comparing with கிருத்துவ பாதிரியார்களைவிடவும்

  • //வர்த்தக சினிமா என்பது பணத்தைப் போட்டு, பணத்தை எடுக்கிற தொழில். இதில் அரசியல், மதம் உள்ளிட்ட எந்தக் கருத்துத் திணிப்பு நோக்கமும் பொதுவாக இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. ///

    கமலஹாசன் பிரகாஷ்ராஜ் போன்றவர்களுக்கு அப்படி எந்த உள்நோக்கமும் இல்லை என்று நம்பும் அளவுக்கு நீங்கள் விபரம் தெரியாதவர் இல்லை என்று எல்லோருக்குமே தெரியும்.

  • //காவி உடை சாமியார்கள் தான் மிக அதிகமாக கொலை,கொள்ளை,பெண்களை கேவலபடுத்துதல் ஆகியவற்றை செய்திருக்கின்றனர் மிக சமிபகாலமாக, comparing with கிருத்துவ பாதிரியார்களைவிடவும்// comparing என்று சொல்லும் போதே ஊடகங்கள் எதை அதிகப்படுத்தி காண்பிக்கிறதோ அந்த எண்ணிக்கையை வைத்து தான் நீங்கள் முடிவு செய்வீர்கள். இந்து சாமியார்களைப் பற்றிய செய்திகளை மிகைப்படுத்தியும் பாதிரியார் பற்றிய செய்தியை இருட்டடிப்பும் செய்யும் மீடியாக்களின் செய்திகளைக் கொண்டு நீங்கள் இதனை முடிவு செய்யக்கூடாது. எல்லா பாதிரியார்களின் மற்றும் பாஸ்டர்களின் பள்ளியரையிலும் ரகசிய காமிரா வைத்துப்பாருங்கள்.அப்போது உங்கள் எண்ணிக்கையின் சாயம் வெளுத்தாலும் வெளுக்கலாம்!

  • “//சாவு வீட்டில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்துபோய் காப்பி போட்டு சாப்பிடுவதில்லையா? இறந்தவருக்காக வருந்தி இருப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதமா இருக்கிறார்கள்//”

    சரியா சொன்னீங்க….

  • Hello Writer Pa.Ra.

    Well said…. you have reflected the same thoughts which i had in my mind…since i have no blogs writing practice…i use your place to tell them that our tamil films are only for entertaining and not for teaching…….

  • Brilliant article Para.
    Our pseudointellectuals will never be happy with any type of portrayal of the terrorists unless they are of ‘saffron’kind who are their favorite whipping boys for any problems in India.The screenplay seems to have been adapted from today’s headlines.That is the truth and you have to live with it.Dont try to find ulterior motives of the director where there is none.Enjoy the film for what it is.

  • thanks pa.ra. we cant say to the world like this ….. thanks to you, for said,what we are try to saying. hats off to RADHA MOHAN and you

  • //அல்லது, அந்தக் குறிப்பிட்ட கருத்துத் திணிப்பு படத்தின் ஓட்டத்துக்கு உதவும் என்று அவர் நம்பியிருக்கலாம்.//
    அத்தகைய நம்பிக்கை ஒரு சாராரைச் சாடுவதாக மட்டுமே இருப்பதுவும், கருத்துத் திணிப்பு ஒரு சாராரைச் சாடுவதாகவும் மட்டுமே இருப்பதுவே பிரச்சினைகளுக்குக் காரணம். காசு போட்டுக் காசு பார்க்கும் கலை லாபகரமாக நடக்க ஒருதலைப்பட்சமான அறிவுஜீவித்தனமிக்க கருத்துத்திணிப்பு அவசியம் வேண்டும் என்கிறீர்களா?

  • அன்புள்ள பா.ரா.

    ஒரு உண்மையான நேர்மையான விமரிசனத்திற்கு எனது நன்றி

    இதைப்போல அருமையான விமரிசனம் பரிசல்காரன் எழுதியுள்ளார்.அவருக்கும் நன்றி.

    நேற்று என் தாயார், மனைவி, மகள், சகிதம் இந்த திரைப்படத்தை கண்டு ரசித்தேன்.
    இம்மாதிரி குடும்பததோடு தைரியமாக பார்க்கக்கூடிய ஒரு படத்தை உருவாக்கிய ராதா மோகனுக்கு கோடானு கோடி நன்றிகள்.

    மற்றபடி பிரசன்னா மற்றும் ஏனையோரின் விமரிசனம் துவேஷமும் பொய்யும் நிறைந்தது.
    அவற்றை ஒதுக்கிவிடலாம்

    படத்தில் சில குறைகள் இருக்கலாம் இருக்கிறது ஆனால் படமே குறை என்று எழுதினால் நாம் ஜன்ம ஜென்மத்திற்கு குருவி,போக்கிரி,தசாவதாரம், பாபா போன்ற காவியங்களை கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான்

    நன்றி

  • அப்பட்டமான கிறிஸ்தவ பிரச்சாரத்தை ஹரன் பிரசன்னா வெளிக்காட்டியுள்ளார். அவருக்கு நன்றிகள். அதனை புரியும் அளவுக்கு பாரா தனது போலி-மதச்சார்பின்மை மனநிலையிலிருந்து வெளியே வரவில்லை போலும். அவருக்கு அனுதாபங்கள்.

  • பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஆர்.எஸ்.எஸ் பற்றி புத்தகம் எழுதி பாதி வெளியே தெரிந்த பூனைக்குட்டி, இந்த கட்டுரை மூலம் முழுவதும் வெளியே தெரிந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டன்களோ ஹரன் பிரசன்னாக்களோ இனி கவலைப்படத் தேவையில்லை. பாரா இப்போது முழுமையான “தேசபக்தராகி” விட்டார். ஒரு அசீமானந்தா இயக்கத்தை விட்டு போனாலென்ன. புதுப்புது அசீமானந்தாக்கள் உருவாக்கலாம்.

  • நானும் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

    \\மற்றபடி இந்தப் படம் ஒரு தெளிவான, சுவாரசியமான த்ரில்லர். \\

    அது சரி.

    சமயமிருந்தால் இதையும் படியுங்கள். நன்றி.

    http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_05.html

  • பொதுவாகவே ஒரு விமர்சனம் வெளியான பிறகு படம் பார்க்கப்போனால், அதன் விமர்சிக்கப்பட்ட குறைகள் நமக்கு கண்ணுக்குத்தெரிவதில்லை. நம்முடைய பார்வையே மாறிப்போகிறது. பலமுறை நம்முடைய விமர்சனங்கள் நண்பர்களோடு மாறுபடுவதற்கு, யார் படத்தை முதலில் பார்த்தார்கள் என்பதே காரணமாயிருந்திருக்கிறது. எனக்கென்னவோ பிரசன்னாவின் பின்னூட்டம் சரி என்றே தோன்றுகிறது. ஒருவர் விமர்சனத்தை மற்றவர் படிக்காது தனித்தனியே விமர்சனம் எழுதப்பட்டிருந்தால், இது வேறு மாதிரி ஆகியிருந்திருக்கும்.

  • I read your view on this movie, everything you mentioned till above the last line is good. but the last line u told just for final touch only eventhen u r seeing all things as positive manner and u should nt say that terrorist are speaking tamil language better that us. If they are ready to everything then we need to accept them they have the capability to speak regional language too.

    still have some usual logic…..rest everything is fine…good movie.

  • i read that during the killing of hitler period a priest told a man who was to be killed next in the line that in his place he would die and the priest was killed by nazis.

  • A terrorist can only be an abdullah. How can he be an Appalachari? Have you seen “Pava Mannippu”? Mulla Nagiah & Father S.V Subbiah are paragan of all virtues. But Hindu M.R Radha is Devil Incarnate. This is Tamil Cinema. Hurrah! Raghavan, you have spoken the truth.

  • பொதுவாகவே ஒரு விமர்சனம் வெளியான பிறகு படம் பார்க்கப்போனால், அதன் விமர்சிக்கப்பட்ட குறைகள் நமக்கு கண்ணுக்குத்தெரிவதில்லை. நம்முடைய பார்வையே மாறிப்போகிறது. பலமுறை நம்முடைய விமர்சனங்கள் நண்பர்களோடு மாறுபடுவதற்கு, யார் படத்தை முதலில் பார்த்தார்கள் என்பதே காரணமாயிருந்திருக்கிறது. எனக்கென்னவோ பிரசன்னாவின் பின்னூட்டம் சரி என்றே தோன்றுகிறது. ஒருவர் விமர்சனத்தை மற்றவர் படிக்காது தனித்தனியே விமர்சனம் எழுதப்பட்டிருந்தால், இது வேறு மாதிரி ஆகியிருந்திருக்கும்.

  • Pseudo-secularists are more dangerous then terrorists. Did they raise their little finger when Taslima Nasreen was driven from pillar to post and was attacked by MLA’s on the dais in Hyderabad? Ironically a police case was filed against her. What were the intellegentia doing when a Christian college Professor’s Palm was chopped off by a fanatic? Was it not a human rights violation? Where are the Human Rights activists? Did they write a single line of protest? They justify Mumbai serial blasts as a reaction to Babar Masjid demolition. But when Modi spoke of Newton’s Third law referring to Gandhra massacre and Gujarat carnage, people called him Merchant of Death. Quite funny!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி