எப்படி இருக்கலாம், கல்வி? 2

பாடப்புத்தகங்களின் அச்சமூட்டும் தன்மை குறித்து சென்ற பகுதியில் சொன்னேன். அதற்கு நிகரான இன்னொரு பிரச்னையாக நான் உணர்ந்தது, அவற்றின் முழுமையின்மை. பாடங்கள்தாம் என்றில்லை. புனைவு நீங்கலாக, எழுதப்படும் எந்த ஒரு விஷயமும் தான் சொல்ல வருவதை முழுமையாக வெளிப்படுத்தாத பட்சத்தில் அது ஓர் இறந்த பிரதியே என்பதில் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை.

ஆனால் இந்த முழுமை என்பது ஓர் அரூபமான விஷயம். அதை விளக்குவது கடினம். நேரடியாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு ‘ட்ரிகராக’வாவது அது அமையவேண்டியது அவசியம். வாசிக்கும் மாணவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் தனக்கு இது தேவை, தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களில் பலவோ, ஒன்றோ இதன் தொடர்ச்சிதான், இதனைத் தெரிந்துகொள்ளவேண்டியது தனக்கு அவசியம், புரிந்துகொள்ளாமல் விட்டால் பின்னால் அவஸ்தைப்பட நேரிடலாம் என்று எப்போதாவதாவது உணரும்படியாக இருப்பது இன்றியமையாதது. பாடத்தின் முழுமை என்பது அந்த சப்ஜெக்ட் சார்ந்த பூரண முழுமையை நோக்கி மாணவரை இட்டுச்செல்வதாக அமையவேண்டும்.

பள்ளி வயதுகளில் அனைத்தும் புரிந்துவிடும் அல்லது புரிந்துவிட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அவசியமானவற்றை ஓர் எளிய அறிமுகக் குறிப்புடன் – அவற்றின் முக்கியத்துவத்துடன் வழங்காத பாடங்களை வெறுமனே உருப்போட்டு அல்லது தலையெழுத்தே என்று படித்துத்தான் மாணவர்கள் தேறுகிறார்கள்.

என் பள்ளி நாள்களில் கணக்கு எனக்குப் பிடிக்காத பாடம். ஒரு வகுப்பில் பெரும்பாலான மாணவர்களுக்குப் பிடிக்காத பாடம் எதுவென்று கேட்டால் அப்போது கண்டிப்பாகக் கணக்கைத்தான் சொல்லுவார்கள். இதற்கு சோம்பேறித்தனம் காரணம், மூளையைப் பயன்படுத்த விரும்பாத குணம் காரணம் என்று கணக்கில் ஆர்வமுள்ளவர்கள் சொல்லிவிடுவார்கள். அதில் தவறில்லை. சோம்பல்தான் காரணம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தச் சோம்பல் இயல்பானதல்ல. வலிந்து வரவழைத்துக்கொள்ளும் மனச் சோர்வு என்பதை இப்போது யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது.

அல்ஜீப்ரா, திரிகோணமிதி, கால்குலஸ் போன்ற கணிதப் பிரிவுகளை எண்ணில் ஆர்வமுள்ள பிள்ளைகள் ஒரு விளையாட்டாகப் படித்துப் புரிந்துகொண்டுவிடுவதோ, பரீட்சையில் நூறு வாங்குவதோ பெரிய விஷயமில்லை. நம் தேசம் பெரும்பாலும் சராசரிகளால் ஆனது. அவர்களுக்கு இந்தப் பாடத்தின் தன்மையை, அவசியத்தை, இன்றியமையாமையை எந்தக் கணக்குப் புத்தகம் முன்னதாக எடுத்துக் காட்டியிருக்கிறது?

இந்த அல்ஜீப்ராவால் வாழ்க்கைக்கு என்ன பயன், திரிகோணமிதி எந்தத் துறையில் வேலை பார்க்கப் போனால் பயன்படும் என்று நான் ஒன்பது, பத்தாம் வகுப்பில் இருந்தபோது என் ஆசிரியர்களிடம் கேட்டிருக்கிறேன். யாரும் பதில் சொன்னதில்லை. ஒழுங்கா படிச்சி பாஸ் பண்ணப் பாருடா. கேள்வி கேட்டு, கேள்வி கேட்டே சாவடிக்காத என்றுதான் சொன்னார்கள்.

கணிதத்தின் ஒவ்வொரு துளியும் ஓர் அற்புதம் என்பதையும், நம்மையறியாமல் நம் வாழ்வெங்கும் ஊடுருவியிருக்கும் சக்தி என்பதையும் கணிதத்தில் தெளிவு உண்டாகிவிட்டால், பிற அனைத்துப் பாடங்களிலும் அத்தெளிவு இயல்பாகப் பரவி வியாபிக்குமென்பதையும் மிக மிகப் பின்னால் பத்ரி சில சந்தர்ப்பங்களில் எனக்கு ஒரு சில உதாரணங்கள்மூலம் விளக்கியபோதுதான் புரிந்துகொள்ள நேர்ந்தது. அவரும் என்னைப் போல் பஞ்சாயத்துப் பள்ளி, அரசினர் பள்ளியில் படித்து வந்தவர்தான். ஆனால் மைனாரிடி ‘படிக்கற புள்ள’ சமூகத்தைச் சேர்ந்தவர். நிச்சயமாக அவரது ஆசிரியர்களும் திரிகோணமிதியின் அவசியத்தை விளக்கிவிட்டுப் பாடங்களை எடுத்திருக்கமாட்டார்கள். அவர்தம் சொந்த ஆர்வத்தில்தான் மேற்கொண்டு படித்து, கேட்டு, அறிந்துகொண்டிருப்பார். தொழில்நுட்பம் வளராத, சாடிலைட்டுகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேச வரைபடங்களை எப்படி எழுதினார்கள் என்று ஒருநாள் எனக்குப் படம் வரைந்து சுமார் ஒரு மணி நேரம் விளக்கிச் சொன்னார். உண்மையில், நான் மிகவும் விரும்பும் எம்டி ராமநாதனின் சங்கீதத்தைக் காட்டிலும் அர்த்தபுஷ்டியும் ஆர்வம் தூண்டக்கூடிய இயல்பும், கற்பனையை விரிவடையச் செய்யக்கூடிய தன்மையும் பொருந்தியதாக இருந்தது அந்தக் கணித வகுப்பு.

கணிதத்தைக்கூட கதையாகச் சொல்லலாம் என்று நான் தெரிந்துகொண்டது அப்போதுதான். பிறகு ஒரு சமயம், என் மதிப்புக்குரிய நண்பர் ரமணன், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை முதல் முதலில் அளந்த பிரிட்டிஷ் சர்வேயர் ஒருவரின் கதையைத் தற்செயலாக எனக்குச் சொன்னார். [அவர் பெயர் ஆண்ட்ரூ வாஹ். அவர் தம் பெயரையே சிகரத்துக்குச் சூட்ட வாய்ப்பிருந்தும் தம் குருவுக்குச் சமர்ப்பணமாக அவரது பெயரையே சிகரத்துக்கு வைத்தார்.] அதே கணக்குதான். ஆனால் கதையாக, இன்னும் ஒரு படி மேலே சரித்திரமாக அது விரிவுகொண்டுவிடும்போது பாடம் என்பது விருப்பத்துக்குரிய ஓர் அம்சமாகப் பரிமாணம் பெற்று விடுகிறது.

நான் சொல்ல வருவது இதைத்தான். உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று போதித்த எனது எந்தப் புவியியல் புத்தகமும் ஆண்ட்ரூ வாவின் பெயரை எனக்குச் சொன்னதில்லை. எவரெஸ்ட் என்பது அவரது சீனியர் சர்வேயர் ஒருவரின் பெயர் என்று தெரிவித்ததில்லை. தன் பெயரை, புவி உள்ள அளவும் ஏந்தியிருக்கப் போகிற ஒரு பிரதேசத்துக்குத் தனது சீடன் சூட்டியிருக்கிறான், அந்த இடத்துக்கு ஒருநடை போய்த்தான் பார்ப்போமே என்றுகூட அந்த குருவுக்குத் தோன்றவில்லை, இறுதிவரை தன் பெயரை ஏந்திய சிகரத்துக்கு அவர் வர மறுத்துவிட்டார் என்ற கதையை எனக்குச் சொன்னதில்லை. உலகின் மிக உயர்ந்த ஒரு பரப்பில் ஒரு குருபக்திக் கதை பனிப் பாறைகளுக்கடியில் புதைந்திருப்பதை என் பாடங்கள் எனக்கு எடுத்துக் காட்டியிருக்குமானால் நானும் ஒரு ‘படிக்கிற பிள்ளை’யாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டது? ஒரு புவியியல் வல்லுநராகக்கூட வந்திருப்பேன்.

இன்று கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துவிட்டது என்று சொல்வோரைப் பார்த்தால் எனக்குச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. புள்ளி விவரங்கள் சொல்லுவதற்கும் பள்ளி விவரங்கள் சொல்லுவதற்கும் அதே பழைய வித்தியாசம் இப்போதும் இருக்கவே செய்கிறது. மதிப்பெண்கள் அல்ல; ஒரு பாடத்திட்டம், அது உருவாக்கப்பட்ட நோக்கத்தைச் சென்று அடைந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டியதே கல்வித்துறையின் ஆதார இலக்காயிருக்க வேண்டும். ஏராளமான நோட்ஸ்களைப் படித்து, திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்து தூக்கத்தில் தட்டியெழுப்பினால்கூடச் சரியான பதிலளிக்குமளவு மனித மூளையை ஒரு கணிப்பொறியாக மாற்றி அமைப்பதில் என்ன பெருமை இருந்துவிட முடியும்?

என் ஆசிரியர் இளங்கோவன் [தற்போது குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர்] ஒரு சமயம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிழைப்பதே பெரிய விஷயம் என்றார்கள். அவர் நாத்திகர் என்றாலும் அவரை அன்று பிழைக்கச் செய்தது எம்பெருமான் திருவருள்தான் என்பதில் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. பிழைத்து எழுந்தவருக்கு அப்போது இன்னும் பேச்சு திரும்பியிருக்கவில்லை. நினைவு மட்டும்தான் திரும்பியிருந்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வலது கை விரல்களை எழுதுவதுபோல் சைகை செய்து காண்பித்தார். ஒரு துண்டுச் சீட்டை அவர் கையருகே நீட்டியபடி பேனாவை அவர் விரல்களுக்கிடையே வைத்தேன். சிரமப்பட்டு இரண்டு சொற்கள் எழுதினார். ‘மூச்சுத் திணறல்.’

நான் புன்னகை செய்தேன். அந்த நெருக்கடிச் சூழலிலும் மூச்சுத் திணறலுக்கு ஒற்று உண்டு என்று அவர் யோசித்தா எழுதியிருப்பார்? அது அவர் ரத்தத்தோடு கலந்துவிட்ட ஒன்று. புத்தியின் ஆதாரப் படியில் அமைக்கப்பட்டுவிட்ட கட்டுமானம்.

ஆனால் அது இலக்கணம். என்றால், விதி. ஒற்று அங்கே ஏன் மிகும் என்ற கேள்வியைக் காட்டிலும் ஒற்று மிகுவதை உருப்போட்டாவது ஏற்றிக்கொள்வது அவசியம். மனித முகம் என்ற ஒன்று இருக்குமானால் அதில் இரண்டு கண்கள், ஒரு மூக்கு, அதில் இரு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய் இருக்கவேண்டியது எப்படி அவசியமோ, அப்படி ஒரு மொழிக்கு அதன் இலக்கணங்கள் அவசியம். ஆனால் கணிதம் அப்படியல்ல. விஞ்ஞானம் அப்படியல்ல. புவியியல் அப்படியல்ல. விதிகளை விளைவுகளின் பொருட்டு உருவாக்கும் துறைகளில் பாடத்திட்டம் வகுப்பவர்கள், அவற்றின் நோக்கத்தை, இலக்கை மிகத் தெளிவாக மாணவர்களுக்குப் புரியவைக்கவேண்டியது முக்கியம் அல்லவா?

ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் பொதுத்தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களில் எத்தனைப்பேர் இன்று கணிதத் துறையில் சாதிக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்று யாராவது ஒரு களப்பணி செய்து ரிசல்ட் வெளியிட்டால் நான் சொல்ல வருவது புரிந்துவிடும். பரீட்சைக்காகப் படிப்பது, மார்க் வாங்குவது என்பது வேறு. ஒரு பாடத்திட்டம் உண்மையிலேயே ஒரு மாணவனில் நிகழ்த்தவேண்டிய ரசாயன மாற்றம் என்பது முற்றிலும் வேறு.

[இன்னும் தொடரும்]
Share

29 comments

  • ஆக கற்பிக்கும் திறன் மாறினால் கற்க்கும் திறனும் மாறும்…!!!!…பாராட்டுக்கள்..

    • யதுபாலா: அத்தனை அழுத்தமாகக் கற்க்கும் திறன் இருக்கவேண்டிய அவசியமில்லை. கற்கும் திறனிருந்தால் போதும்.

  • மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்களே ‘சாமி’. :>

  • //ஏராளமான நோட்ஸ்களைப் படித்து, திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்து தூக்கத்தில் தட்டியெழுப்பினால்கூடச் சரியான பதிலளிக்குமளவு மனித மூளையை ஒரு கணிப்பொறியாக மாற்றி அமைப்பதில் என்ன பெருமை இருந்துவிட முடியும்?//

    //பரீட்சைக்காகப் படிப்பது, மார்க் வாங்குவது என்பது வேறு. ஒரு பாடத்திட்டம் உண்மையிலேயே ஒரு மாணவனில் நிகழ்த்தவேண்டிய ரசாயன மாற்றம் என்பது முற்றிலும் வேறு.//

    கலக்கல்…….
    அடுத்த பார்ட்(3) எப்போ சார்?
    சும்மா பொளந்துகட்டரிங்க…

  • ஆக பாடத் திட்டமானது வெறும் மதிப்பெண்கள் வாங்க மட்டுமே. கற்கும் திறன் மாணவர்களின் தனி மனித மனநிலைக்கு ஏற்ப மாறுபடத்தான் செய்யும் அது மதிப்பெண் வாங்க உதவாதே.
    இன்னும் எதிர்பார்க்கிறோம்.

  • பை தி வே இது இன்னும் எத்தனை கட்டுரைகள் நீளும். இதை புத்தகமாக்கினாலும் நன்றாக இருக்குமே! குட்டிபுத்தகம்?

  • பாண்டிச்சேரியில் ஆசிரியராக இருக்கும் நண்பர் சொன்ன தகவல். ஒரு குழந்தையிடம் ‘பால் எதிலிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு, ஆவினிடம் இருந்து கிடைக்கிறது என்றும், அரிசி எப்படி வருகிறது என்ற கேள்விக்கு பொன்னி மளிகைக் கடையிலிருந்து கிடைக்கிறது என்றும் பதில் வந்தது’ என்று சொன்னார். நகரத்தை விட்டுத் தாண்டிச் சென்றால் மாட்டையும், நெல் வயல்களையும் குழந்தைகளுக்கு நேரடியாகவே காட்டி விட முடியும். கடைக்குப் பாலோ, அரிசியோ எப்படி வந்தது என்று யோசிக்க விடாமல் தடுத்து விடுகிறது நம் பாடத்திட்டம்.

    நீங்கள் புத்திசாலி மாணவர் (மதிப்பெண்களை வைத்து சொல்லவில்லை) என்பதால் முகலாயர்களை நல்லவர்களாகவும் பிரிட்டிஷ்காரர்களைக் கெட்டவர்களாகவும் ஏன் காட்டுகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அவற்றை எல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை என்பதுதான் இங்கு யதார்த்தம். புத்தகமும் ஆசிரியரும் சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைகிறது என்று சொன்னால் அதை மட்டும் எழுதினால் போதும். சூரியன் ஒருபோதும் மறைவதில்லை என்ற உண்மை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இங்கில்லை.

  • சமச்சீர் பத்திய உங்கள் பத்திகளை படித்தேன் ..மிக அருமை .. இதை சொன்னால் எங்கே கேட்கப் போகிறார்கள்.??
    .நீ பாப்பான் ..
    அம்மாவுக்கு தான் பரிந்துரை செய்வாய் என்று பலர் கூறத்தான் செய்கிறார்கள் .
    இது எங்கே சென்று முடியும் …??
    இவர்களை திருத்த முடியாது ..

    .

  • பரீட்சைக்காகப் படிப்பது, மார்க் வாங்குவது என்பது வேறு. ஒரு பாடத்திட்டம் உண்மையிலேயே ஒரு மாணவனில் நிகழ்த்தவேண்டிய ரசாயன மாற்றம் என்பது முற்றிலும் வேறு.It is very true. i fully agree with you sir.

  • தெரிவிக்க வேண்டியதை சுருக்கமாக,தெளிவாக எழுதுவதற்கு உங்களுக்கு பயிற்சி தேவை.சொந்தக் கதை,சோககதைகளை சொல்லாமலே சொல்ல வேண்டியதை சொல்லவே தெரியாதா.
    ‘ஆனால் கணிதம் அப்படியல்ல. விஞ்ஞானம் அப்படியல்ல. புவியியல் அப்படியல்ல. விதிகளை விளைவுகளின் பொருட்டு உருவாக்கும் துறைகளில் பாடத்திட்டம் வகுப்பவர்கள், அவற்றின் நோக்கத்தை, இலக்கை மிகத் தெளிவாக மாணவர்களுக்குப் புரியவைக்கவேண்டியது முக்கியம் அல்லவா?’

    கணிதத்தின் நோக்கம் என்று சொல்வீர்களா.கணிதம் என்பது சிலருக்கு தூய அறிவு, சிலருக்கு புதிர்களை விடுவிக்க உதவும் அறிவு,சிலருக்கு ஆய்வுத்துறை.
    10 வகுப்பில் கணிதம் கற்பிப்பத்தன் நோக்கம் என்னவென்று கேட்டால், இவற்றை மாணவர் இந்த அளவில் அறிந்திருக்க வேண்டும், அதைக் கொண்டு அவர் சிலவற்றை புரிந்து கொள்ளலாம்,சில கேள்விகளுக்கு விடை காணலாம், கணிதம் சார் கேள்விகள் சிலவறிற்கு விடை காண
    வழிவகையை புரிந்து கொண்டிருக்கலாம் என்று வரையரை செய்ய முடியும்.
    பாடத்திட்டங்களுக்கு சில குறிக்கோள்கள் உண்டு. நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஆர்வமூட்டுவது என்பது தேவை, ஆனால் கல்வி என்ப்து அது மட்டுமல்ல.உங்களைப் போன்றவர்கள் தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புகிறீர்கள்.

  • ’உலகின் மிக உயர்ந்த ஒரு பரப்பில் ஒரு குருபக்திக் கதை பனிப் பாறைகளுக்கடியில் புதைந்திருப்பதை என் பாடங்கள் எனக்கு எடுத்துக் காட்டியிருக்குமானால் நானும் ஒரு ‘படிக்கிற பிள்ளை’யாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டது? ஒரு புவியியல் வல்லுநராகக்கூட வந்திருப்பேன்.

    You might have written a story based on that and might have failed in that subject (geograph) . I read so many interesting books as a student but I knew pretty well that i would not be able to pursue everything that i found interesting. What was interesting when you were 15 years old would not have been of interest to you at the age of 20.
    What might be interesting to you might not be interesting to others. Schools can kindle interest and trigger questions in a curious mind but education is not just that. You are getting trained in many skills and education cannot be reduced to making things interesting to students.

  • ‘கடைக்குப் பாலோ, அரிசியோ எப்படி வந்தது என்று யோசிக்க விடாமல் தடுத்து விடுகிறது நம் பாடத்திட்டம். ‘
    அப்படியா. பாடத்திட்டம் தவிர வேறு எதுவும் குழந்தைகளிடம் எந்தத் தாக்கமும் ஏற்படுத்துவதில்லையா.

  • /யார் கண்டது? ஒரு புவியியல் வல்லுநராகக்கூட வந்திருப்பேன்/
    அப்போதும் வரலாறுக்கு பதிலாக புவியியல் எழுதிக்கொண்டு இருந்து இருப்பீர்கள் !!!

  • hey,

    there is a green color email icon at right side bar in your blog. it says it is for subscribe via email…in it u haven’t placed link for email subscription. what u placed is url of feedburner feed for your blog. go to feedburner.com. enable email subscription. there is a link for email subscription there.(2 choices r there. leave the first choice. choose the second type of email subscription there)..copy it and paste it here for green color email icon in your blog…

    for rss icon paste this http://feeds.feedburner.com/writerpara/xfwA

    for rss dont paste http://writerpara.com/paper/?feed=rss2

    bcoz google chrome users cannot subscribe using it….letters cannot e seen in google chrome in http://writerpara.com/paper/?feed=rss2

    …d…

  • came to twitter link! very good article. எனது மாமா மகனுக்கு 10 வது கணக்கு பாடம் சொல்லிகொடுத்தேன். trigonometry -ஐ, நிறைய எடுத்துகாட்டுகளுடன், சொல்லிகொடுதபோது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு (நிம்மதிக்கு!) அளவே இல்லை. திருப்பரங்குன்றம் மலையின் உயரத்தை அளப்பதை பற்றி சொல்லிகொண்டிருந்தேன்! i taught him about volume calc, taking him to terrace water tank. Told him without this formula(LxBxH) how difficult to calculate volume!. teaching without applications, how it wud benefit generations to come! நன்றி

  • தற்போதைய கல்வி முறையும், கல்வி நிறுவனங்களும் சேர்ந்து மதிப்பெண்களை வாங்கும் ( துரத்தும் !) இயந்திரங்களாகதான் மாணவர்களை உருவாக்குகின்றனர் என்பது என் கருத்து.

  • வாத்தியாரே உங்க பொண்ணு படிக்கிறது தமிழ் மீடியமா? அல்லது இங்கிலிபீஸ் மீடியமா? 🙂

    இவன்

    கோயிஞ்சாமி
    கொ.ப.செ
    பாட்டாளி ராமதாஸ் பேரவை

    • என் மகள் சிபிஎஸ்ஸி சிலபஸில் படிக்கிறாள். ஆங்கில மீடியம்தான். தமிழ் அவளுக்கு இரண்டாவது பாடம். ஆனால் அவள் வயது தமிழ் மீடியம் மாணவர்களைவிட சுத்தமாகத் தமிழில் படிக்கவும் எழுதவும் அறிவாள்.

  • மென்மையான நகைச்சுவையில் அருமையான விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள், காத்திருக்கிறோம்.

  • அன்புள்ள எ.கொ.ச,

    இதுபோன்றதொரு பொது விஷயத்தை எழுதுகையில் தனது அனுபவ மண்டலத்திலிருந்து ஒன்றை சொன்னால் வாசிப்பவர்களும் சட்டென்று அதற்கிணையான தனது அனுபவத்தை மீட்டிப்பார்த்து ஒட்டியோ வெட்டியோ விவாதிப்பது சுலபம். இதற்கெல்லாம் சொந்தக்கதை சோகக்கதை என்று ஏன் எரிச்சல் படுகிறீர்கள் ?

    இக்கட்டுரையின் ஆதார நோக்கம், நமது கல்வித்திட்டமானது மாணவர்களை மிரட்டாமல் வெருட்டாமல் கல்வி என்பது ஒரு ஆர்வமூட்டும் நிகழ்வாக – மகிழ்வான அனுபவமாக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று சொல்வதே. (Making learning an interesting and pleasure giving experience) இதில் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை தொங்கிக்கொண்டிடிருந்தால் “வெளங்கிடும்”

    மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ குறித்து சுஜாதா இவ்வாறு சொல்லியிருந்தார் :

    “இதுபோல பள்ளியில் எனக்கு போதித்திருந்தால் நான் சரித்திரத்தில் அதிக மதிப்பெண் வாங்கியிருந்திருப்பேன்”

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  • முதலில் வாழ்த்துக்கள் இந்த தலைப்பில் விரிவாக எழுதுவதற்காக.

    அமெரிக்காவின் ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஒரு அருமையான விஷயம் பார்த்தேன். கணிதத்தில் தூரம் என்பதை சொல்லித் தரும் போது அது புரிவதற்காக அமெரிக்க வரைபடத்தில் ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்குமான தூரத்தை வரைபடம் மூலமாகவே வெளிப்படுத்தி இருந்தார்கள். இது பார்த்த மாத்திரத்தில் தான் படிக்கும் விஷயத்தின் உபயோகத்தை கணித புத்தகத்துக்கு வெளியில் நடைமுறை அனுபவமாக விளக்கும் யுக்தி.

    ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் தகுந்த உதாரணங்களோடு விளக்கி சொல்லி பாடம் நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய அவகாசம் (நேரம்) கொடுக்கப்பட வேண்டும். பாடங்கள் குறைவாக இருக்க வேண்டும்.

    ஆனால் இப்போது நம் பிள்ளைகள் படிப்பது LKG யில் இருந்தே crash course தான். பெரும்பான்மை பெற்றோரும் அதைத் தான் விரும்புகிறார்கள். எனது இளைய மகனின் பள்ளியோடு இதற்காக நான் பெரும் போராட்டமே நடத்தி இருக்கிறேன். matric போர்டு உடனும் போராடி இருக்கிறேன். பெரிதாக ஒன்றும் பிரயோசனம் இல்லை. பள்ளி மாற்றி போர்டு மாற்றி CBSE யில் சேர்த்து விட்டு அந்த லட்சணம் எப்படி இருக்கும் என்று இனிமேல் தான் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    (நர்சரி குழந்தைகளின் மேல் அரங்கேறும் கல்வி வன்முறை)
    http://www.virutcham.com/2010/10/நர்சரி-குழந்தைகளின்-மேல்/

  • //அவள் வயது தமிழ் மீடியம் மாணவர்களைவிட சுத்தமாகத் தமிழில் படிக்கவும் எழுதவும் அறிவாள்.

    சுத்தமாக என்னும் இடத்தில் திருத்தமாக என்னும் சொல் பொருத்தமாய் இருக்கும்.

  • பா ரா அவர்களுக்கு,
    இந்திய சுதந்திரம் வாங்கும் முன்பு (before 1947 ) , எத்தனை பிரிடிஷார் இந்தியாவில் இருந்தார்கள் ?

    எத்தனை இந்தியர்கள் சுதந்தர போராட்டத்தில் இருந்தார்கள் ?

    நன்றி : கணியன்

  • அவர் நாத்திகர் என்றாலும் அவரை அன்று பிழைக்கச் செய்தது எம்பெருமான் திருவருள்தான் என்பதில் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை.
    கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் நம்ம நம்பிக்கையை/கருத்தை திணிக்கிறோம் பாருங்க இது தான் எந்த ஆசிரியருக்கும் இருக்க கூடாத ஒன்று.புத்தகத்தில் இருப்பதை அப்படியே சொல்லி கொடுத்து பாரபட்சமில்லாமல் தவறு செய்தால் /சரியாக படிக்கவில்லை என்றால் தண்டிக்கும் ஆசிரியர் இவர்களை விட பல மடங்கு மேல்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி